சிறுகதை

ப்லேட் (Blade)


- அனார்
-------------------------------------------------------------------------------------------------------------

வாழை மரத்தெச்சுத்தி கால் இறுகிக் கயித்துடன் அவதிப்பட்டுக் கிடந்தது சாவல்கோழி. நானும் தம்பியும் சோறு கறி ஆக்கி விளையாடுகிற இடத்தில கோழியக் கட்டிப்போட்டிருந்தாங்க.

உம்மா பிளிஞ்சதேங்காப்பூவ கோழிக்கு ஒரு தட்டில கொட்டியிருந்தாங்க.

வாளில தண்ணி எடுத்திட்டு பலாமரத்தடிக்குப் போற வாப்பாட கையில கத்திரிக்கி. முண்டுக்கல்லில கத்தி தீட்ற சத்தம் கேட்குது. எனைக்கிண்டா காது கூசுது. ரெண்டு காதயும் பொத்திக்கிட்டென்.

என்ட அல்லாவே ! நான் தான் இண்டைக்கிம் கோழியை அறுக்கிறதுக்கு பிடிக்கணும். தம்பியைப்போல எனக்கு கொஞ்சமும் அது விருப்பமில்ல. ஏனிண்டா கோழியைச் சமைச்சிச் சாப்பிடும்போது அறுக்கிறதுதான் ஞாபகத்தில வரும். என்ன செய்ற இப்பெ அறுக்கக்குள்ள கண்ண மூடிடனும்.

வாப்பா கூப்பிட்டார். நானும் தம்பியும் கோழிர கயித்த அவிழ்த்தோம். நான் சிறகில பிடிச்சி அமுக்கினன். தம்பி கால்களைப் பிடிச்சிருந்தான். அடித்தொண்டையிலரிந்து சாவல்கோழி வழமைக்கு மாறாக் கத்தியது. பாவம் நல்ல இளந்தாரிப் பாணிச் சாவல் என்று வாப்பாவிடம் தம்பி சொன்னான்.

வாப்பா கோழிய மல்லாக்கப் பிடிச்சி அவர்ர பக்கம் இருந்த அதன் சொண்டப் பிரித்து தண்ணீர் பருக்கினார். தொண்டையிலிருந்த சதைய சற்றுக் கிள்ளி உயர்த்திப் பிடித்தவர் கால்கள இறுக்கமாக என்னப் பிடித்துக் கொள்ளச் சொன்னார். இப்ப கோழியின் கழுத்தில் கூரான கத்திய வைத்து தக்பீர் சொல்லியபடி விடாமல் அறுத்தார். ரத்தம் என் சட்டையில தெறித்தது. மரத்தடியில கையை விடாமல் கோழிய கீழ வச்சதும் இறக்கைய சட சடவென அடித்து சாவல் துடித்திச்சி. அறுபட்ட கழுத்தோட பாய்ந்து எம்பி, பக்கத்து வேலியெல்லாம் மோதி ரத்தம் கொட்டி ஈரமண்ணுக்குள்ள கிடந்ததெ பார்ப்பதுக்கு கவலையா இருந்திச்சி.

வப்பாவே கோழிய உரிச்சி கழுவி உம்மாட்ட குடுப்பார். உம்மாவின் கோழிக்கறி ருசியும் மஞ்சச்சோறும் தின்னுவதை நினச்சாலே நாக்கு ஊறுது. நாங்க ரண்டுபேரும் எங்கட விளையாடும் இடத்துக்கு திரும்ப வந்து விளையாடத் தொடங்கினம்.

தம்பி கேட்டான் “ராத்தா கடை வைப்போமா?” சோறு கறி ஆக்குவமா? “நாமளும் இண்டகி சோறாக்கி விளையாடுவம்“ என்றேன். கறி ஆக்குவதற்காக கொச்சிக்காய்த்தூள் இடிச்சி தரச்சொன்னேன். அவன் சிரத்தையுடன் பெரிய செங்கல்லின் நடுவில் சிறிய செங்கல் துண்டொன்றை உரஞ்சி உரஞ்சி தூள் தயார் பண்ணிக்கெணடிருந்தான்.

அந்நேரம்தான் “வெள்ளத்தம்பியர்ர சல்மாட வீடு இதானா?” என்று சத்தமா கேட்டபடி பெத்தா ஒருவ வந்தா. இதுதான் என்றேன். ஆ.. நான் இரண்டு மூணு ஊடுலா தேடிப்போட்டு வாறன் என்று சிரித்தா. பெத்தாட முகம் சதையெல்லாம் சுருங்கி கோடு கோடாய் தொங்கி கிடந்திச்சி. வெத்தல போட்டு சிவந்த நாக்கு வெளிய தெரியும்படி உம்மாவ திருப்பி கூப்பிட்டா.... “உம்மா புதுச் தங்கச்சிக்கு பால் குடுக்காங்க சாப்பறைக்குள்ள போய்ப் பாருங்க“ என்று பெத்தாவ ஊட்டுக்குள்ள அனுப்பிட்டு நான் மற்ற வேலைகள செய்யத் தொடங்கினன்.

வேலி முருங்கை மரத்தில இலை கொஞ்சம் ஆஞ்சேன், விழுந்துகிடந்த விழிமாங்கா பழங்களையும் ஒரு சிரட்டைக்குள் பொறுக்கி எடுத்தேன். வேறொரு சிரட்டைக்குள் கறியக் கூட்டினேன். மண்ணடுப்பில் வச்சி கம்புக்குச்சியால் கிளறிவிட்டு... கிளறிவிட்டு... கறி ஆக்கினேன். நேத்தய பீட்ரூட் கிழங்கிட மிச்சம் மீதிய தண்ணீருக்குள்விட்டு நல்லாக் கழுவி சிவந்த நிறமான நீரை சர்பத்துக்களாக போத்தல் மூடிகளில் ஊத்தினேன். வெள்ளக் குருத்து மணலில் கொஞ்சமா அள்ளி சீனியாம் என்று அதனுள் போட்டு கலந்து வைத்தேன். கறி கொதிச்சிட்டு இருந்திச்சி. தம்பிய கொச்சிக்காய்த்தூள் தரும்படி சொன்னன். அவன் ஒரு பேப்பர்த்துண்டில செங்கல்த்தூளை எடுத்து வந்தான். அத வாங்கி கொதிக்கும் கறிக்குள்ளே கொட்டி கொஞ்சம் தண்ணீரும் ஊத்தினேன். முகத்த சுருக்கிக் கொண்டு “இப்ப கறி உறைக்கப்போகுது ராத்தா... கூடயா தூளைப் போட்டுட்டா“ என்றான்.

“நீ சும்மாகிடவன் நான் சோக்காத்தான் ஆக்கிறன். சரி... சோறு கறியெல்லம் ஆக்கி முடிஞ்சிட்டு.. இனிச் சாப்பிடலாம் வா... வா...“ என்றேன். அவன் சந்தோசமாக சிறிய வாழை இலைத்துண்டுகளை, வாசல்குருத்து மணல் மேல் வடிவா விரிச்சிப்போட்டான். நான் கோபித்துக் கொண்டால் விளையாட்டு இடையில குலைஞ்சு போயிடும் என்டு நினைச்சு தம்பி என்னுடன் இரக்கமாவும் அவதானமாவும் இருந்தான். ரெண்டுபேரும் மண்ணிலேயே இரிந்து சாப்பிட ஆரம்பித்தோம். அவன் களிசனில் பட்டன் இல்லாததால் ஓட்டைக்குள்ளால “குஞ்சு“ எட்டிப்பார்த்தது. எனக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு தம்பிக்கு சாப்பாடு போட்டன். அவன் விரல்களால் மணலயும் செங்கல்தூள்போட்ட புளிமாங்காய்க் கறியையும் பிசைந்து சும்மா சும்மா வாய்க்கருகே கொண்டு போவதும் பின்பு கீழே வைப்பதும் ஸ்... ஸ்... என்று வாயை உறிஞ்சி சாப்பிடுவதுமாக இருந்தான்.

“உரமா ச்சாக்கொட்டிறியே“ “ரசமா இருக்கா“ என்றேன். ம்... ம்... நல்ல ரசம்... உம்மாட கறிபோலயே இருக்கு ராத்தா என்றான். சாடயா உப்புத்தான் கொஞ்சம் காணா லா? என்றுட்டு என்னப் பார்த்தான். அது பரவால்ல, எனக்கு கணக்காத்தான் இருக்கு. கெதியா சர்பத்த குடிச்சிட்டு எடு. “வாப்பா வாறத்துக்கிடையில தண்ணி வாக்கணும் நாம“ எனச் சொல்லிட்டு சர்பத்தை குடிப்பதுபோல பாவனை செய்து வாய்க்கருகில் கொண்டு வந்தேன். ஒரு வித அவிந்த நாத்த வாசமே வந்திச்சி. அத தம்பிக்கு காட்டிக் கொள்ளாமல் சாட்டுக்கு குடிப்பதுபோல நடிச்சன். அவனும் குடிக்கும் வரை காத்திருந்தேன். தம்பியின் முகம் சர்பத்தை எடுத்ததும் “செப்பமில்ல... சீய்“ என்பதுபோல கோணினாலும் ஒன்றுமே சொல்லவில்லை அவன்.

“எஹாய்...“ . என்று இழுத்து ஒரு பென்னாம்பெரிய ஏவுறையை சத்தமாகவிட்டான். அது வாப்பா சாப்பிட்ட பிறகு விடுற சத்தம்போலயே இருந்திச்சி. வயிறு நிரம்பிட்டு போதும் என்று எழுந்துவிட்டான். வெயில் முகத்தைச் சுடத் தொடங்கியதும் இருவரும் விளையாட்டுச் சாமாங்களை ஒழுங்குபடுத்தத் தொடங்கினோம். தம்பியிடம் நீ கிணற்றடிக்கு தண்ணி வாக்கப் போ. நானும் தண்ணி வாக்க வாறன் என்றுட்டு வீட்டுக்குள்ள ஓடினேன். உம்மாவும் அந்தப் பெத்தாவும் முக்காட்டுக்குள்ளால் “குசு... குசு...“ என்று பேசிக் கொண்டிருந்தார்கள். உம்மா எல்லாத்துக்கும் தலையாட்டி கொண்டிருந்தா. நான் தொட்டிலில் உறங்கிய தங்கச்சிய தொட்டுப் பார்த்தன். அவள் குட்டி ரோசப்பூப்போல நித்திரையில் இருந்தாள். ரோஸ் நிறமான சின்ன முகமும் எலிக்குஞ்சைப்போல சுருண்ட விரல்களும் வடிவான மூங்கில்குருத்துப்போல கால்களும் என்ன செப்பம்... தொட்டிலை நான் மெதுவாக ஆட்டிவிட்டேன். மெல்லிய கீறுபோல சிரிப்பொன்று அவள் முகத்தில் தெரிந்தது. “இஞ்ச உம்மா” பிள்ள என்ன வடிவா சிரிக்குது என்றேன். “அது மலக்குகள் பூ கொடுக்காங்க மனே” என்றா பெத்தா. சரி.. “தங்கச்சி படுக்கட்டும்... கதச்சி... கதச்சி... அரட்டவேணா“ போய் தம்பியோட தண்ணிய வாருங்க மகள் என்றா உம்மா.

இந்த பெத்தா யாரு உம்மா ? என்று கேட்டேன். பிள்ளைக்கு ஊதிப்பாக்க வந்திருக்காங்க என்றா. தங்கச்சிக்கு காய்ச்சல் ஒண்டுமே இல்லயே... அப்ப எதுக்கு ஊதிப்பாக்கிற ? எனத் திருப்பிக் கேட்டேன். “கொள்ளயா கதகேட்காம சொன்னத்தச்செய் பார்ப்பம்“ என கோபமாய்ச் சொன்னா.

நானும் தம்பியும் கிணத்தடியில் இருந்த சிறிய தொட்டியில் நிரப்பிய தண்ணீருக்குள் விழுந்து, விளையாடி விளையாடி தண்ணி வாத்தோம். ஆமை ஊர்ந்து ஊர்ந்து விளையாடினோம். பழுத்த பலா இலைகளைப் போட்டு மீன் பிடித்தும் விளையாடினோம்.

வாப்பா சந்தைக்குப்போய் வந்து சாயமணையில் இளைப்பாறுவதற்காக சாய்ந்திருந்தார். நானும் தம்பியும் குளித்து முடித்துவிட்டு ஒரே ஓட்டமாக வீட்டுக்குள் ஓடினோம். தம்பியை கண்ட பெத்தா “குஞ்ச“ காட்டிட்டு ஓடுறான்டா என்ட பேரன் சீ..! என்று சொல்லி முக்காட்டால் முகத்த மூடிச் சிரித்தா. இவனுக்கு “சுன்னத்துக் கல்யாணம்” கெதியா வைக்கணும் பிள்ளேய்.. என்று உம்மாவிடம் கூவினா. தம்பி கோபத்துடன் வந்து என்னிடம் “நான் இப்படியே காட்டிட்டுத்தான் கிடப்பன்“ என்றுட்டு கொடுத்த உடுப்பை மூலையில தூக்கி எறிந்தான்.

உம்மா குட்டிச் தங்கச்சிய கழுவுவதற்கு சுடு தண்ணி எடுத்து வைத்துக் கொண்டிருந்தா. திண்ணயில குளிக்காமல் இண்டைக்கு அறைக்குள்ள தண்ணிவாக்கப் போறிங்களா உம்மா? எனக் கேட்டேன். அதற்கு என்ன கிட்ட ரகசியமான குரலில் கூப்பிட்டு யாருக்கும் கேட்காம காதுக்குள் மெதுவா “நல்ல பிள்ள மாதிரி தம்பிய கூட்டிக்கிட்டு பெரியம்மா வீட்டுக்குப் போயிட்டு வாங்க... இருவருக்கும் காசு தருவன். கொஞ்ச நேரம் ஊஞ்சல் விளையாடிட்டு வாங்க” என்று சொன்னா. “எனக்கு ஏலா” எனக்கேலாம்மா... என்று சிணுங்கினேன். என்ன முதுகில் பிடிச்சி... சொன்னதக் கேளு என்று தள்ளிவிட்டா. வாப்பா இருந்ததால் நான் சத்தம்போடல்ல. திரும்ப திரும்பத் என்ன எதுக்கு உம்மா துரத்தி விடுகிறா என யோசித்த படியே தம்பிய சமாதானம் செய்யப்போனேன். அவன் இப்பவும் கால்கள அகட்டிப்போட்டவனாக முகத்தை நீட்டிக் கொண்டு அழுது கொண்டிருந்தான்.

உம்மா தந்த காசை தம்பியிடம் கொடுத்து உடுப்பையும் அவனுக்கு போட்டுவிட்டேன். தம்பியிடம் கடைக்குப்போய் உனக்குப் விருப்பமான “உதக்காய் விழாங்கா வாங்கிச் சாப்பிடுகிளி... நல்லபிள்ளலா... கொஞ்சநேரம் பெரியம்மா வீட்டபோய் விளையாடு நான் சுணங்கி வாறன் சரியா“ என்று அவனை சமாளித்து அனுப்பி வைத்தேன். நான் சத்தம்போடாம அந்த அறைக்குள்ள கதவைச் சாத்திக்கொண்டு ஒளிஞ்சிருந்தன்.

தங்கச்சி எழும்பி குழர்ற சத்தம் கேட்டிச்சி. வழமையா அவள் குழறினா உம்மா என்னத்தான் கூப்பிடுவா. இல்லாட்டி வாப்பாவத்தான் கூப்பிடுவா... இந்த வாப்பா ஏன் ஒன்றும் தெரியாத மாதிரி இருக்கிறார் என்று யோசனையாக இருந்தது.

பெத்தாவும் உம்மாவும் தங்கச்சியின் அறைக்கதவை பூட்டிக்கொண்டார்கள். தொடர்ந்து அழுதுட்டே இருந்தாள். நேற்று உம்மா சொன்னா “தங்கச்சிட நாற்பதாம் நாளுக்கு உனக்கும் தம்பிக்கும் புது உடுப்புத் தாற. கோழிக் கறியும் கல்யாணச் சோறும் ஆக்கிற“ என்றெல்லாம் சொல்லிட்டு. அதையெல்லாம் செய்யாம கதவ பூட்டிக்கிட்டு என்னான் செய்றாவோ ? தங்கச்சிட குழறுவ கூடிக்கிட்டே போகிறது. விறைச்சி விறைச்சி குழறும் சத்தம் கேட்கயில் எனக்கிண்டா உயிர் போயிடும்போல் கஸ்டமா இருக்கி. உம்மாட குரலைவிட அறையிலிருந்து அந்தக் கிழவியின் குரல்தான் கேட்குது.

வாப்பாவோ வாசலில் போய் நின்றுட்டு சிகெரட்டை அவசர அவசரமாக ஊதுகிறார். கதவுட இடைவெளியால பார்த்துக்கிட்டிருந்தேன். உம்மா திடீரென கதவைத் திறந்து ஓடி வந்தா... வாப்பாவக் கூப்பிட்டு “இஞ்ச... நல்ல புது ப்லேட் ஒன்டு கெதியா தாங்க“ என்று கேட்டா. அவர் உடனே வந்து கிணத்தடி பூக்கல்லுக்குள் கையவிட்டு அவரது சேவிங் பெட்டிக்குள் இருந்து எடுத்துக் கொடுக்க... உம்மா குழறிக்கொண்டு உள்ள திரும்பி ஓடுறா. தங்கச்சிட குரல் வீறிட்டுக் கேட்கிது. உம்மா வெளியே வந்து ஜன்னல் கம்பியில தலையை முட்டி முட்டி குழர்றா. எனக்கும் குழறுவதான் வருகிது. வாயைப் பொத்திக் கொண்டு சத்தம் வராம குழறிட்டே நின்டேன். ஏதோ ஒரு பயத்தில என்ட கால்களும் நடுங்கிது. அந்த நாசமத்துப்போன கிழவிய அல்லாஹ் நரகத்தில்தான் தூக்கி எறிவான் என மனசுக்குள்ளே முனிகிறேன். சிறிது நேரத்தில் கதவைத் திறந்து “முடிஞ்சிட்டு ஒரு பிரச்சினயுமில்ல மகளே” என்றபடி அழுகின்ற என் தங்கச்சியை உம்மாவிடம் கொடுக்கின்றா. ஏங்கி... ஏங்கி... கத்தி குழறினதால தங்கச்சிட குரல் கம்மி தேய்ந்துபோயிட்டு, உம்மாட தோளில் அறுத்த கோழியின் கழுத்துப்போல தங்கச்சிட தலை கெழிஞ்சி கிடக்கு...

“முதல்ல தண்ணிய வாரு புள்ள“ என கிழவி சொல்ல உம்மா சரி மாமி என்று எழுந்து. ஒரு வட்டாவை கொண்டு வருகிறா. அதில வெத்தில பாக்கு பழம் காசு துணி எல்லாம் இருக்கி. அதை கிழவிக்கிட்ட கொடுக்கிறா. எல்லாத்தையும் சுருட்டி வேக்கில்போட்டு எடுத்துக் கொண்டு “அல்லாஹ் ரஃமத்துச் செய்யட்டும்” நான் போய்வாறன் என்றவ முந்தானையால ஒரு நீண்ட முக்காட்டை இழுத்துப்போட்டு வெளியேறிப் போகிறா.

O

( பூவரசி )


-------------------------------------------------------------------------------------------------------------







No comments: