Monday 5 September 2011

ஆதியில் விடுபட்ட கனவு, அனாரின் கவிதைகள் - ஒரு பார்வை



- தேன்மொழி (இந்தியா)
-------------------------------------------------------------------------------------------------------------

ஈழம் என்ற சொல் சங்க காலத்திலிருந்து தொடர்வது.  இன்று அதன் பொருள் திரிபடைந்து நிற்கிறது. ஈழம் என்றாலே போர்க்களம் என அர்த்தம் கொள்ளக் கூடியதாக அந்தச் சொல் ஆக்கப்பட்டுவிட்டது. வீரம் என்று அதைக் கொண்டாடுபவர்களும் சரி; துயரம் என்று அதைப்பற்றிப் புலம்புவர்களும் சரி அந்தச் சொல்லின் பொருளை ஒற்றைத் தன்மை கொண்டதாகத் தட்டையானதாகச் சுருக்கிக் கொச்சைப்படுத்திவிட்டார்கள்.அதனால்தான் ஈழப்போரின் இறுதிக்கணங்களில் கைக்குழந்தைகளோடு தவித்தப் பெண்களைப் பார்த்தபோது அவர்களின் முகம் சுளித்தது.’ இந்தச் சூழலிலும் எப்படி இவர்களால் பிள்ளை பெற்றுக்கொள்ள முடிகிறது? ‘ என அருவெறுப்போடு அந்தக் குரல்கள் வெளிப்பட்டன.

போர் விளையும் நிலங்களில் பெண்களின் இருப்புப் பன்முகத் தாக்குதலுக்கு உள்ளாகிறது.  போர் நிலத்தில் வாழும் பெண்கள் அதனால் சீரழிக்கப்பட்டதற்கு மட்டுமின்றி , போரைக் கண்டு நடுங்கி ஒடுங்கிவிடாமல் அதை எதிர்கொண்டார்கள் என்பதற்கும்  எழுது கோல் தாங்கிய விரல்களே சாட்சிகளாக இருக்கின்றன.போரின் உறைவாள் போர் மறந்து உறங்க, வெற்றிக் கொள்ளப்பட்ட மண் தேவைப்படுவதுபோலவே, அடிமைகொள்ளப்பட்ட பெண் உடல்களும்  தேவைப்பட்டன.  போரும் விடுதலையும் சமதள இணைக்கோடுகளாக பயணிக்கும் வேளையில், பெண்கள் போரிலிருந்தும், மரபின் ஒடுக்குதலிலிருந்தும், சுயக் கட்டுப்பாடுகளிலிருந்தும், ஆணின் அதிகாரப்பிடியிலிருந்தும், சமூகச் சிக்கல்களிலிருந்தும் விடுபட அவர்களுக்குக் கிடைத்த எதிராயுதம் எழுத்து மட்டுந்தான்.தம்மைத் தற்காத்துக்கொள்ளவும், தாம் பட்டக் காயங்களுக்கு மருந்திட்டுக்கொள்ளவுமான சூட்சுமத்தை எழுத்துக்குள் இருந்துதான் அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள்.  போர் நிலத்திலும், அடிமைத் தனத்திலும் புரண்டழும் மனது, மழைக்கு வளைந்து நிற்கும் தாவரம். மழையின் நீரை இலை வடிய விடுவது போல் சோகங்களையும், துக்கங்களையும் வடியவிட்டு நிமிர்ந்த திடத்துடன் அது எழுந்து நிற்கிறது.  தன் மீதே தனக்கு அபரிமிதமான நம்பிக்கை எழும்போது மட்டும்தான் வழுக்கு நிலத்தில் காலூன்றல் சாத்தியமாகிறது.ஈழப் பெண் எழுத்துக்கள் போரின் அவலங்களையும்,அடிமையாய்ப் பூட்டப்படும் அருவெறுப்புகளையும் எழுதும் அதே நேரத்தில் சுயம் சார்ந்த விடுதலை மொழிகளையும் பதிவுசெய்துள்ளன.அவர்கள் ஒரே சமயத்தில் இருவிதமானப் போரை நடத்தியிருக்கிறார்கள். இன விடுதலைக்கான போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டிருந்தது மட்டுமின்றி தமது சுயத்தை மீட்பதற்கான இன்னொரு விடுதலைப் போராட்டத்தையும் அவர்கள் ஒருசேர நடத்தினார்கள். ஆயுதம் ஏந்திப் போரிட்ட யுத்தகளத்தில் பல பெண் போராளிகள் தமது உயிர்களை இழந்தனர். அதுபோலவே தமது அடையாளத்தை மீட்பதற்கான போரில் செல்வி, சிவரமணி முதலிய கவிஞர்கள் உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள்.உணர்தலுக்கும், எதிர்த்தலுக்கும் இடையேயான கால இடைவெளியை ஈழத்துப் பெண் கவிஞர்களின் எழுத்துக்களில் நாம் காண முடியவில்லை. புலம்பலும், போராட்டமும் ஈழப் பெண் எழுத்துக்களில் ஒரே கால கட்டத்தில் நிகழ்ந்துள்ளன.இந்தப் பண்பை நாம் ஈழத்து ஆண் கவிஞர்களிடம் பார்க்க முடியவில்லை.எவ்வளவுதான் கவித்துவ ஆற்றல் பெற்றிருந்தாலும் ஈழத்து ஆண் கவிஞர்கள் இன்னொரு நிலையில் ஆணாதிக்கம் என்னும் ஒடுக்குமுறை மனோபாவத்தின் தாங்கிகளாகவே செயல்பட்டார்கள் என்று சொல்வது குற்றச்சாட்டு அல்ல.

1986-ல் வெளியான “சொல்லாத சேதிகள்” (பெண்கள் ஆய்வு வட்டம், யாழ்ப்பாணம்) அன்றைய பெண் கவிஞர்களின் சில கவிதைகளைத் தொகுத்து முன்வைத்தது.  அ .சங்கரி, சி.சிவரமணி, சன்மார்க்கா, உ.ஒளவை, செல்வி, மசுறா ஏ.மஜீட், பிரேமி, ஊர்வசி, மைத்ரேயி போன்றவர்களின் தோந்தெடுக்கப்பட்ட இருபத்து  நான்கு கவிதைகள் அத்தொகுப்பில் பிரசுரமாகியுள்ளன.  ” அவர்களின் பார்வையில் இரண்டு மார்புகள் நீண்ட கூந்தல் சிறிய இடை பருத்த தொடை இவைகளே உள்ளன” என்று கோபத்தோடு ஆணாதிக்க மனோபாவத்தைச் சாடும் அ.சங்கரியின் கவிதையோடு ஆரம்பிக்கும் அந்தத் தொகுப்பு, ‘ ' ' மனிதகுலத்தின் அரைப்பகுதியனராகியத் தம்மை மனிதம் அற்ப வெறும் இயந்திரங்களாகவும்,கருவிகளாகவும் கருதும் நிலை மாறவேண்டும்’என்ற நோக்கத்தோடு முன்வைக்கப்பட்டது.ஆனாலும் அதில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கவிதைகள் பொதுவான பெண்ணியக் கவிதைகளின் தன்மையையே கொண்டிருந்தன . உ.ஒளவையும்,சன்மார்ககாவும் போர் குறித்த கொடுமைகளைத் துயரத்தில் நனைந்த சொற்களால் அதில் வரைந்துள்ளனர்.வேறுசிலர் நாட்டின், இனத்தின் விடுதலையை முன்னிலைப்படுத்தி எழுதியுள்ளார்கள்.ஒருசில கவிதைகளில் நாம் பெண்களின் தனித்துவத்தைத் தரிசிக்கமுடிகிறது.  ஊர்வசியின் இன்னும் வராதா சேதியில் ( பக்கம் 41)போர் நிகழும் காலத்திலும்கூடக் காதல் மனம் விழித்திருப்பதைப் பார்க்கிறோம்:

       

”புதிதாகப் பெயர்ந்த சோளகத்தில்

தெற்கிருந்து பூவாசம்

உன் வீட்டுப் பக்கம் தான்

எங்கேனும்

கோடை மழைக்கு காட்டுமல்லி

பூத்திருக்கும் ….”


இந்த வரிகள் ஈழப் பெண் எழுத்துக்களின் செழுமை மற்றும் வளர்ச்சியின் முன்னோடிக் குரலாக விளங்குகின்றன.  

அ.சங்கரியின், இடைவெளி என்ற தலைப்பில் எழுதப்பட்ட கவிதையில்:



”அக் காதலை,

முத்தமிட்டும்

நெற்றியை வருடியும்

உன்னிரு கைகளை

இறுகப் பற்றியும்

உணர்த்த விரும்பினேன் ” (பக்கம் 6)

என்ற வரிகளைப் படிக்கும்போது ஒரு முதிர்ச்சி தெரிகிறது. தனது காதலைத் தோழிக்கு மட்டுமே எடுத்துக் கூறி நின்ற சங்ககாலத் தலைவியிலிருந்து வேறுபட்டு இக்கவிதையின் ஊடாக வெளிப்படும் பெண், சமூகத்தின் முன்னால் சுய உணர்வோடு கூடிய மொழியில் காதலைத் துணிவோடுப் பேசுகிறாள்.

1983ஜூலைக் கலவரத்துக்குப் பிறகு வீரத்தையும், காதலையும், புலம்பலையும் ஒரு சேரப்  பேசிய ஈழத்துப்பெண் குரல்களின் தொடர்ச்சியாகத்தான் 2004 ல் “ஒவியம் வரையாத தூரிகை”  என்ற தொகுப்பில் வெளிப்பட்ட அனாரின் குரலைக் கேட்க முடிகிறது.  தன் விளக்கங்களாகவும், சுய இரக்க மொழியாகவும்,புலம்பல்களாகவும் அந்தத் தொகுப்பில் வெளிப்படும் அனாரை அன்றையக் காலக்கட்டத்தின் பொதுத் தளத்தில் வைத்துத்தான் பதிவு செய்ய முடிகிறது. சமகால ஈழத்துப் பெண் எழுத்துக்களின் உட்பிரிவுகளில் ஒன்றாக வகைப்படுத்தப்படும் ஒரு தொகுப்பாகத்தான் இருக்கிறது ஓவியம் வரையாத தூரிகை.

சூரியனைப் பற்ற வைக்க
உன்னால் முடியாது … (பக்கம் 17)

உனது பணிப்பின் பேரில்
நான் பிறக்கவில்லை … (பக்கம் 54)



இறகுகளால் நெய்த
உன் பஞ்சுக் கூட்டுக்குள்
இந்த நெருப்பை வரவேற்காதே
……………………………..
பனித்துளிக் கோலம் போட
சூரியனால் முடியாது (பக்கம் 49)

என அந்தத் தொகுப்பில் வெளிப்படும் அனார்,

கல்லாய் மாறிய பூ
பாறையாய் இறுகிய காற்று
பனியாய் உறைந்த நீர்
என்ன செய்வது
நான்
விடுதலை அடைந்தவள்
உன்னால்
அந்த உச்சிக்கு
வர முடியாதே

(சொல்லாத சேதிகள் பக்கம் 8)

எனப் பகிரங்கப்படுத்தும் அ.சங்கரியின் தொடர்ச்சியாகத் தான் தென்படுகிறார்.

இயலாமை என்பது உனக்கும் உள்ளது, ஆளுமை என்பது எனக்கும் உரியது என அதிகாரத்தோடு உரத்து முழக்கமிடும் குரலைக் கீழ்க்கண்ட வரிகளில் நாம் காணும்போதுதான் அவரைப்பற்றிய நம்பிக்கைத் துளிர்விடுகிறது:



யாருமற்றதோர்

பாழ்வீட்டில் கண்ணீர் இழை எடுத்து

………………………………………

கனவுகள் சுரந்து

உறக்கத்தை மீறி வழிகிற

இரவுகள் என்னுடையவை (பக்கம் 51)




தழும்புகளைச் செதுக்கிடும்

உளிகளின் சப்தங்களும்

கரு நீல இருளிற் தெறித்து விழுகின்றது (பக்கம் 48)

எதார்த்தச் சிக்கலிலோ, எழுத்துச் சிக்கலிலோ, கருத்துச் சிக்கலிலோ தளைபடாமல், வெடித்துக்கிளம்பும் ஒரு புதிய குரலை அனாரின் அடுத்தத் தொகுப்பு நமக்குக் காட்டுகிறது. ’ஒவியம் வரையாத தூரிகை’யில் வெளிப்படாத அந்தக் குரல் அவரது இரண்டாவது தொகுப்பில் வெளிப்படுகிறது. விதைக்குள் உறைந்திருக்கும் விருட்சம் போல் வெளி வரக் காத்திருக்கும் ஒரு கவிதை மனத்தை இந்தத் தொகுப்பில் நாம் பார்க்கிறோம்.இத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் புனைவுகளற்ற அனாரின் எழுத்துக்கள் அவரது சாத்தியப்பாடுகள் குறித்தான எதிர்பார்ப்புகளைக் கூட்டுகின்றன.




சாபங்கள்

என் பூமியில் கொட்டும் மழை

சோகங்கள்

என் வானில் பரவும் வெயில் ( பக்கம் 38)

என்று, சோக மொழியில் அவர் சொன்ன போதும்,மழையானாலும், வெயிலானாலும் கூடு தேடாத பறவையைப் போன்றவள்தான் தானென்பதைச் சொல்லாமல் சொல்லிவிடுகிறார் அனார் .


இரு விழிகளைக் கொழுத்தி
உயிரூற்றி எழுதுகிறேன்
உயிரைக் கொழுத்தி வைத்து
நீ விழிகளால் வாசி
…………………………
சாமத்தின் பனித்தூவலில்
கவிதை கிடந்து
சுருளட்டும் புரளட்டும் விடு (வருந்(த்)துதல்)



ஓர் முத்தத்ததைப் பற்ற வை

எரிந்து போகட்டும் என் உயிர்க்காடு (தணல் நதி )


இந்தக் குரல் தமிழ்ச்சூழலில் முற்றிலும் புதுக்குரல் என்பதை ஒத்துக் கொள்வதில் நமக்குத் தயக்கம் இருக்கலாம்.  வேட்கையில் பூத்துக்கிடந்த சங்ககாலப் பெண் கவிகளின் தொடர்ச்சியான குரல்தான் இது என்று நம் புத்தி உரைக்கலாம்.ஆனால், வேட்கையும், மன்றாட்டமும், எதிர்பார்ப்பும், ஏக்கமும் கொண்ட சங்க காலப் பெண் மொழி வேட்கை மொழி மட்டுமே.  ஆனால் அனாரின் “ எனக்குக் கவிதை முகம்”  காட்டுவது ஆளுமையின் மொழிப்பரப்பில் எழுந்து நிற்கும் வேட்டை மொழி.

பாணணின் இசை உரக்க ஒலிக்க வேண்டுமா என்ன?  பாடுவதின் சுதந்திரம் பாணணின் கைகளில் இருக்கிறது.  அனாரின் படைப்புக்குள் தகித்துக் கொண்டிருக்கும் எழுத்துக்களின் சுதந்திரம்,  நம் எண்ணங்களைப் பின் தள்ளிவிட்டுக் காலத்தின் முன்போய் நிற்கிறது.  வேட்கை குறித்தத் தனது உணர்வுகளையும், தனது தேவைகளையும் முன் வைத்து மொழியப்பட்டது சங்கக்காலப் பெண் குரல்.   ஆனால் அனாரின் குரல் வேட்கையில் ஊறித் திளைத்து, வெற்றியின் பின் எழுந்து நிற்கும் மொழிதல்.மறைக்க விரும்பாத வேட்கையின் சித்திரங்களை மென்மையான மொழிகளால் எழுதிச் செல்லும் அனார் தற்காலப் பெண் கவிஞர்களில் முதலிடத்தில் நிற்கிறார்.


”உன் குரலுக்கு இன்று நீ
புரவிகளைப் பூட்ட வில்லையா
………………………………
அகோரப் பசி எடுக்கையில்
அந்தப்புரத்தின் அரசி
ஆர்வத்துடன் பருகும்
அனைத்து ருசிகளும் உள்ளதுதான்
உன்குரல் என்ற திராட்சை ரசம் ” (குரல் என்ற நதி)


அந்தப்புரத்தின் அரசிக்கு அரியணை அடங்கிக்கிடந்தது  வரலாறு.அகோரப் பசி எடுக்கையில் ஆதிவனத்தின் கனிகளைப் புசித்தவளாக ஆரம்பித்து அனைத்து ருசிகளும் உள்ளது தான் உன் குரல் என்ற திராட்சை ரசம் என்ற வார்ததைகளில் முடிக்கும்போது, தீராத வாழ்க்கையின் மெல்லியல்புகளை வெவ்வேறு சாயல்களில் நம்மோடு அனார்  பகிர்ந்து கொள்கிறார்.

'' வண்ணத்துப் பூச்சிகளின் பிரம்மாண்டமான,
கனாக்கால கவிதை நானென்பதில் ,
உனக்குச் சந்தேகமிருக்கிறதா இனியும் , ''


ஒரு துண்டு வானத்தைக் கைகளில் தருவது போல் சந்தேகம் மறுத்த தன் சுதந்திரத்ததை எழுதிச் செல்லும் இந்த வரிகள் கேள்விகளுக்குள் அடங்க மறுப்பவை.  ஆதியில் விடுபட்டக் கனவை, நிகழ்காலக் கவிதையாக்கிக் காலத்தில் நிரப்புவதென்பது பருவ காலங்களைச் சூடித்திரியும் இந்தக் கடற்கன்னிக்குச் சாத்தியப்பட்டிருக்கிறது.

“ என் தனிமையின் பெரும்பாரம்
ரத்தமாய் கசிகின்றது”


“ஓநாயின் வடிவத்திலிருக்கிறது தனிமை”

''வேட்டையாட்டப்பட இரையை
 சத்தமின்றி புசித்தபடியிருக்கும் அரூப மிருகம்”


போன்ற  படிமங்கள் தனிமையை , அதன் கொடுமையை நம்மிடம் தெரிவிக்கின்றன. தனிமையின் முகம் கொடூரமானது.  தனித்திருக்க விரும்புபவர்கள் உண்டு.  தனிமையில் இருக்க யாரும் விரும்புவதில்லை.  ஏனெனில் உயிர்களுக்கு அது இயலாதது.  தனிமையின் கோர முகம் பல வடிவங்களில் தன்னைத் திறந்து கொள்ளும்.  அதை எதிர் கொள்ள அசாத்திய உணர்வு வேண்டும்.  தனிமையின் பள்ளம் நிரப்பப்பட முடியாதது.  தனிமை அனாரின் மொழிகளில் வேட்டையாடப்பட்ட இரையை சத்தமின்றிப் புசித்தபடியிருக்கும் அரூப மிருகமாகிறது.  தனிமையின் அகோரத்தை வார்த்தைகளில் வடித்துக்காட்டிய அனார், அதிலிருந்து விடுபட்டப் பெண்ணாய்:

“ சாபத்தை உடைத்துப் பூத்திருக்கிறேன்”.
 “என் மீது கனவு போல் பெய்கின்றது உன் மழை”

என்னும் போது தனிமையின் போர்வை விலகிக் கொள்கிறது. பின்பு,

”மேகங்களுக்கு மேலேறிச் சென்று
நிலவின் கதவைத் திறந்து
எடுத்துக் கொள்
கொஞ்சமும் குறையாத என்னை ”(பூக்க விரும்புகின்ற கவிதை)

என்னும் வரிகளில் ஆளுமையின் இறுமாந்த குரலாக அது வெளிப்படுகிறது.

“  அவன் நிறங்களின் கடல் குடித்த பறவை நான்”.  என்ற உணர்வில், பக்தி மார்க்கத்தில் நின்று கடவுளைக் காதலால் கைது செய்து கட்டளைகள் பிறப்பித்துக் தன்னாளுகைக்குள் நிறுத்தி உன் ஆதியந்தம் எனதாகும் என்ற ஆண்டாளின் குரலைக் கேட்க முடிகிறது.


அனாரின் காதல் உணர்வுகள் பொதுப்படையானவை, ஆனால் அவரது காதல் மொழிகள் தனித்துவமானவை . நம் ஒவ்வொருவருக்குள்ளும் காதலை ஊற்றி எரிய விடுகிறார். அவருடைய காதல் ஓர் உயிருக்கானது என்பது பட்டாம் பூச்சிகளின் உலகத்தை உள்ளங்கைக்குள் மூடி வைப்பது போன்றதாகும்.  காதல் விரிந்து பரவும் விருட்ச நிழல்.  யார் வேண்டுமானாலும் அதற்குள் தன்னை அடைக்கலப்படுத்திக் கொள்ளலாம் என்கிறார் அனார்.

“ காற்றைத் தின்ன விடுகிறேன் என்னை “  (காற்றின் பிரவாகம்) என்ற அனாரின் ஆளுமைக் குரல்,”நான் பாடல் எனக்கு கவிதை முகம்” உடல் பச்சை வானம் “ என்று அறிமுக படுத்திக்கொள்ளும் இத் தொகுப்பில் சற்று அடங்கித் திரும்பவும் எதார்த்தத்துக்குத் திரும்புவதாக உள்ளது.  தாய்மை, கோரிக்கை,  சுய அடையாளம் என்பன போன்ற மொழிகளால் நிரம்பியுள்ளது “உடல் பச்சை வானம்” என்ற அவரது தொகுப்பு.  எனினும்,


“ பெண் உடல் பூண்ட முழு இயற்கை நான்
காற்றில் வசிப்பவன்
காலத்தை தோன்றச் செய்பவன்
இன்று என்னைத் தீண்டலாம் …..   (பக்கம் 27)
எனும் போது அனாரின் குறையாத ஆளுமையைக் காணமுடிகிறது.
            
’ திரும்பத் திரும்பக் கேட்கும் குரல்’எனவும், ’வெற்றுப் புலம்பல்கள் தான் பெண்ணியம்’ என்றும் பெண் கவிஞர்களின் எழுத்துகளை நிராகரிப்பவர்களிடத்தில் அனாரை முன்னிறுத்தி நாம் கேள்விகளைத் தொடுக்கலாம்.  காதல், அன்பு,  வாஞ்சை, வேட்கை என்பவற்றைக் காத்திரமாக வெளிப்படுத்தும் அனாரின் மொழியில், வலிகளையும், எதிர்ப்புகளையும், தன் இருப்பின் அடையாளத்தையும் இடையிடையே நாம் கேட்க முடிகிறது.  சமூகத்தில் நிராகரிப்பும், அவமதிப்பும், அடக்குமுறையும் இருக்கவே செய்கின்றன. குறிப்பாகப் பெண்களுக்கு அவை தவிர்க்கவே முடியாததாக இருக்கின்றன என்பதை அனாரின் கவிதைகள் எடுத்துக்காட்டுகின்றன.  காதலின் அனுபவத்தை, அதன் இன்பியல்புகளைப் பாடிச் செல்லும் குறிஞ்சியின் தலைவிக்கும்கூட இந்தச் சமூகத்தின் ஒடுக்குதலை எதிர்கொள்ளவேண்டிய நெருக்கடி இருக்கவே செய்கிறது. 

நீ அறுவடை முடித்துத் திரும்புகின்றாய்
இன்னுமிருக்கின்றது விளைச்சல்  (பக்கம் 58)


இவ்வரிகள் காதல் பகிர்வின் வரிகளாகத் தோன்றினாலும், எடுக்க எடுக்கக் குறையாத பெண்ணிய இருப்பைப் பெண் ஆளுமைகளை முன் வைப்பவையாகவும் திகழ்கின்றன.


அனார் தற்காலச் சூழலில் செயல்படும் சக ஆளுமைகளிடமிருந்து தனித்து நிற்பதற்குச் சில காரணங்கள் உள்ளன.  முதலில், அவர் தன் மத அடையாளத்தை முன்னிறுத்திக் கவனத்தை ஈர்க்கவில்லை.  படைப்பின்மீது முழுமையான நம்பிக்கைகொண்டவராக அவர் உள்ளார்.  ஒரு படைப்பாளியின் நம்பிக்கை,  தன் படைப்பு சார்ந்த விஷயமாக மட்டுமே இருப்பதுதான் படைப்பின் உச்சம்.  மத, இன, வர்க்கச் சிக்கல்களையும், அதன் கோரல்களையும் எழுத்துக்களாக வெளிப்படுத்துதல் என்பது வேறு ஆனால் அவற்றையே தன்னை நோக்கிக் கவனத்தை ஈர்ப்பதற்கும், தனக்கான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்குமானத் துருப்புச் சீட்டுகளாகப் பயன்படுத்திக்கொள்வதென்பது வேறு.நமது சூழல் இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்ட தன்னலவாதிகளாலேயே நிரம்பியிருக்கிறது. அவர்களுக்கிடையே படைப்பை மட்டுமே தனது அடையாளமாக முன்வைக்கும் அனார் மகிழ்ச்சியளிக்கிறார்.  


பெண்ணியம் என்பது தன்னை நிறுவுவதாகவும், தன் இருப்பை அடையாளப் படுத்துவதாகவும், சமூக மற்றும் மரபின் வெற்றுக் கட்டுப்பாடுகளைத் தகர்ப்பதாகவும், ஆண்மையநிலைக் கூறுகளை எதிர்பதாகவும் மட்டுமே பலரால் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. “ ஒவியம் வரையாத தூரிகையில்”இந்தச் சூழலுக்குள் ஒன்றிப் போனவராகவே அனார் வெளிப்பட்டார். ஆனால் அதன்பிறகு வெளிவந்த மற்றைய இரண்டு தொகுதிகளிலும்  பெண்ணியம் கடந்து, தன் விடுதலையைத் தானே எழுதுவதாகவும், தன் சுதந்திரத்தைத் தானே நிறுவிக்கொள்வதாகவும், எல்லைகளற்ற ஆளுமையுடன் காதல் என்பதை வாழ்வாக்கி, அதில் திரண்டெழும் ஆற்றலை வெளிப்படுத்துவதாகவும் அனார் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார்.இதைப் பெண்ணிய படைப்புச்செயல்பாட்டின் அடுத்த கட்டம் என்று சொல்வதில் தவறில்லை.


அனாரிடம் அடையாளப்படுத்தவேண்டிய இன்னுமொரு தனித்தன்மை அவர் தனது சூழலிலிருந்து தன்னை எப்படி விலக்கி வைத்துக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறார் என்பதாகும். போரால் சிதைவுண்ட நிலத்தில் காதலைப்பாடவும், இன்னும் போரின் எச்சங்களாக மீந்து கிடக்கும் வாழ்வைக் கொண்டாடவும் வேண்டுமெனில் சூழலால் பாதிக்கப்படாத அதிதீவிர மனத்திட்பம் இருக்கவேண்டும்.அது அனாருக்கு வாய்த்திருக்கிறது. போரின் அவலங்களை எழுதவில்லையே என அவரைக் குற்றம் சாட்டுபவர்கள் இருப்பார்கள். ஆனால் அதுதான் அனாரின் பலமாக இருக்கிறது.வாழ்வின் உணர்வுகளைப் படிமங்களாக உருவாக்கிக்காட்டும் படைப்பாற்றல் அவரிடம் குவிந்துகிடக்கிறது, அது நம்மை வியக்க வைக்கிறது.  சூளையில் இட்டுப் பொசுக்கியபோதும் குளிர் நிலாவை வர்ணித்துக் கொண்டிருந்த திருநாவுக்கரசருக்கு ஈசன் அருள் அந்த மன உறுதியைத் தந்ததென்றால், அனாருக்கு படைப்பு மனமே அந்த ஆற்றலை அளித்திருக்கிறது.  ஆயிரம் போர்கள் நடந்தாலும், அவற்றைப் புறந்தள்ளிக் காதல் பேசும் வீரக்குடியின்  தொன்ம விழுதுகள் நாங்கள் என அனார் நிரூபிக்கிறார்.


சமகாலத் தமிழ் எழுத்துகளில் புதிய பரிமாணம் கொண்டதாகவும், நிராகரிக்கப்பட முடியாததாகவும், முக்கியத்துவும் வாய்ந்ததாகவும் இருக்கும் அனாரின் கவிதை வயலில் நாம் அறுவடை முடித்துத் திரும்பினாலும் இன்னும் மீதமிருக்கும் விளைச்சலே அனாரின் வெற்றி. 


( மணற்கேணி, பெண்ணியம் )
( 27.01.2011 அன்று தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை )
-------------------------------------------------------------------------------------------------------------

No comments: