Saturday 7 April 2012

நாட்டுப்புறப் பாடகி


ஒரு வார்த்தைக்குள் ஒளித்துக்கொண்டேன்
நமது அந்தரங்கத்தை

கனிக்குள் புழுவாகி
அச்சொல் இனிப்பில் ஊறி நெளிகிறது

கனிகளைத் தராத ...... மௌன மரமாகி
நீ மரத்துப் போகத் தொடங்கிய நாளில்
அந்த வார்த்தை
பெரும் மலையாக மாறிவிட்டிருந்தது
இறுகவும் பாழ்படவும் தொடங்கியது

தனியே நாட்டுப்புறப் பாடலைப் பாடிக்கொண்டே
மலையைச் சுற்றத் தொடங்கினேன்

ஆன்மாவின் செவிகளுக்கு கேட்கின்ற
உன் மிருதுவான இசைக்கருவி
மௌனத்தின் உறுப்பாகிவிட்டதா

வனப்பறவைகளது தானியங்களால்
பசி தணிக்கிறேன்
எதிர்ப்படும் அபாய விலங்குகளின் கண்களில்
உன் இசையிலிருந்து மந்திரித்த
பொடிகளைத் தூவுகிறேன்

“பாலாய் கொதிக்கிறேனே ....
பச்சைபோல் வாடுறேனே ....
நெய்யாய் உருகுறேனே ....
உன் நினைவு வந்த நேரமெல்லாம் ....“

என் நாட்டுப்புறப் பாடல்
மலையில் எதிரொலித்து வீழ்கிறது




12 பெப்ரவரி 2012

1 comment:

கவியாழி said...

கனிகளைத் தராத ...... மௌன மரமாகி
நீ மரத்துப் போகத் தொடங்கிய நாளில் ///ஆம் அவசியமில்லாத வாழ்வு?