Wednesday 22 May 2013

காலச்சுவடு 150-தொடரும் பயணங்கள் : காற்றின் பிரகாசம்

- அனார்
------------------------------------------------------------------------------------------------------------

1990களின் நடுப்பகுதியில் என் கவிதைமுயற்சிகளைத் திருட்டுக் காரியம் பண்ணும் பிரயத்தனங்களோடும், எனக்கிருந்தசவால்களோடும், இயலாமைகளோடும் எழுதத் தொடங்கியிருந்தேன். எனக்குள் சென்று என் ஆன்மா பேசியதை உற்றுக்கேட்பதற்கு எவரும் தயாராக இல்லாத சமயத்தில், நானே அதைக்கேட்க விரும்பினேன். மிக உன்னிப்பாக, கொஞ்சம் ஆதரவாக. என்னை நான் வளர்த்தெடுக்கும்கனவுகளோடு, கவிதையுடன் ஆழ்ந்த உடன்பாட்டிற்கு வந்தேன். யுத்தம் காதலைப் போலவும், காதல் யுத்தத்தைப் போலவும் வீட்டிற்குள்ளும் வெளியேயும் அவ்வப்போதுவெடித்துக் கொண்டிருந்தன.

திணறிக்கொண்டிருந்த அன்றைய காலச்சூழலுக்கு ‘மூன்றாவது மனிதன்’ சஞ்சிகையும், மிகஅரிதாகவே கிடைக்கும் ‘சரிநிகர்’பத்திரிகையும் அமைதி சேர்த்தன. அவற்றில் இடம்பெற்ற கட்டுரைகள், கவிதைகள்,எதிர்வினைகள் அவற்றை எழுதியவர்களுடைய, நான் கண்டும், கேள்விப்பட்டுமிராத பெயர்களும்விடயங்களும் அதிசய உலகத்தைக் காண்பித்தன. கனவிலும் அந்தப் பெயர்கள் ஒவ்வொரு உருவம்எடுத்து வந்து, என்னை அவ்வுலகிற்கு அழைத்துக் கொண்டிருந்தன. அந்தச்சந்தர்ப்பத்தில் 2001ஆம் ஆண்டு, கணவர் அஸீமுடன் சவூதி அரேபியாவில் வசிப்பதற்காகஆயத்தமாகிக் கொண்டிருந்தேன். சிறுகதை ஆசிரியராக அறியப்பட்ட என்னுடைய மாமனார் யூ. எல்.ஆதம்பாவா அவர்கள், அங்கே சென்று வாசிப்பதற்குக் சில காலச்சுவடின் பழைய இதழ்கள் சிலவற்றை எனக்குகொடுத்தார். அவற்றில் 1999க்கு முற்பட்ட சில இதழ்களும் அதன் பிறகான சிலவும் இருந்தன. அவற்றை அத்தனை தூரத்திற்குக் கொண்டுசென்றேன். காலச்சுவடு இழ்களின்முதல் பரிச்சயம் இவ்விதம்தான் தொடங்கியது. காலச்சுவடு இதழ் 47-பெண்கள் சிறப்பிதழாகவும், இன்னொரு இதழ்ஈழப்பெண்கள் கவிதைகளைக் கொண்ட தொகுப்பாகவும் வெளிவந்தது. அந்நேரத்தில் யார் கண்ணிலும் படாமல், எவருடைய மனதையும் உலுக்காமல் நானும் எழுதிக் கொண்டுதான் இருந்தேன்.

அவ்விதழை வாசித்தபோது சிறிய ஏமாற்றமும்துக்கமும் ஏற்பட்டன. அதற்கு காரணம் அந்நாட்களில் காலச்சுவடில் யாருடையகவிதையாவது இடம்பெற்றால் அவர் சந்தேகத்திற்கிடமில்லாமல் கவிஞராகப் போற்றப்பட்டுக்கொண்டிருந்தார். SLS முத்திரை குத்தப்பட்டதொரு மதிப்புமிக்க பொதிபோல அவரைப் பார்த்தார்கள். இன்னும் எனக்கு அவ்வளவு உயரமான கொம்புகள் வளரவில்லை என்று நான் நினைத்தேன். கொம்புகள் வளர என்ன செய்ய வேண்டும்? அல்லது எதைச் சாப்பிடவேண்டும்? என்ற கேள்விகளைஅப்போது யாரிடம் கேட்பதென எனக்குத் தெரியவில்லை.

காலச்சுவடு இதழ்களின் மூலம்தான் தலித்மக்களின் வாழ்வியல் அவை சம்மந்தமான விவாதங்களைத் தெரிந்து கொண்டேன். திருநங்கைகள்பற்றிய பெண்ணிய நோக்குகளையும் அவற்றை எழுதும் எழுத்தாளர்களைப் பற்றியும் கூடுதலாகவேறொரு தளத்தில் தெரிந்து கொள்ள முடிந்தது. மனித வதைகள், வன்முறைகள், அழிவுகள்தொடர்பான பதிவுகளைக் கவனமெடுத்து வெளியிட்டது. மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், சிறுகதை,கவிதைகள், ஓவியங்கள், இசை பற்றிய கட்டுரைகள் என காலச்சுவடு இதழ்கள் வாசிப்பதற்கு உகந்தனவாகஇருந்தன.

2004 இல் சவூதி அரேபியாவிலிருந்துவந்ததும், என் முதல் கவிதைத் தொகுப்பை “ஓவியம் வரையாத தூரிகை“ யை மூன்றாவது மனிதன்பதிப்பகம் வெளியிட்டது. இரண்டாம் தொகுப்பிற்கான கவிதைகள் எழுதப்பட்ட மூன்று வருடகாலத்தில், கொம்புகள் முளைக்கும்தருவாயில் இருந்த மான்போல, வசீகரமான மொழியுடன், மிடுக்குடன், பயமற்றுத் துள்ளித்துள்ளி எழுதிக் கொண்டிருந்தேன். காதலில், வாழ்க்கையில், அனுபவத்தில் விழுந்துகொண்டிருந்தேன். கொம்புகள் வளர்வதற்காக எதைச் சாப்பிட வேண்டுமோ அதைச் சாப்பிடத்தொடங்கியிருந்தேன்.

‘எனக்குக் கவிதை முகம்’ தொகுப்பை ‘ஊடறு’ அமைப்பு வெளியிடுவதற்கு கேட்டிருந்தது. சேரனிடம் முன்னுரை பெற்று,தொகுப்பைக் கொண்டுவரவேண்டும் என்பது எனக்கிருந்த நீண்ட நாள் ஆசை. அது ‘சரிநிகர்’ ஊடாகவும் ‘மரணத்தினுள்வாழ்வோம்’ தொகுப்பினூடகவும் கொழுந்துவிட்டு எரிந்தநெருப்பு. எனவே ஊடறு றஞ்சியி தன் அன்றைய அரசியல் நிலைப்பாட்டால் சேரனிடம் முன்னுரைவாங்கினால் என்னுடைய புத்தகத்தை அவர்கள் கொண்டுவரமுடியாது எனத் தெரிவித்தார். இந்தக் கட்டளையைமீறினால், ஊடறுவிலிருந்து என்றைக்குமாக என்னைத் தள்ளி வைப்பதாக றஞ்சி அன்பாகமிரட்டினார். நானும் அன்பாக விலகிக் கொண்டேன். அதன் பிறகு சேரனின் முழுமனதானமுன்னுரையோடு முழுமையான முயற்சிகளோடு (இலங்கை முஸ்லீம் பெண்களின் வரலாற்றிலேயேமுதல் முறையாக !) என் கவிதைத் தொகுப்பு காலச்சுவடு பதிப்பாக 2007இல்கொண்டுவரப்பட்டது. என் கவிதைத் தொகுப்பை ஒரு நல்ல நாளில், சேரன் என்னுடையவீட்டிற்கே கொண்டு வந்து தந்தார். அன்று என் புத்தகத்தின் அட்டை நிறமும்என் ஆடையின் நிறமும் ஒன்றாக இருந்தன. நான் அன்றெல்லாம் அதே நிறத்திலேயே சிரித்துக் கொண்டிருந்தேன்.. என்னுடைய உறக்கமும் அந்த நிறத்திற்கே மாறியிருந்தது.

2001 இலிருந்து காலச்சுவடு வாசகியாகஇருந்த என் கவிதைத் தொகுப்பை 2007இல் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டு, பொற்காலத்தை தொடங்கி வைத்தது. என்றும்நீடித்திருக்கும் வகையில் அக்கறையும் உணர்வும் மிகுந்த நட்பு சேரனுடன் உருவாயிற்று.

ஒரு பெண்ணாக இருந்து காலச்சுவடு பதிப்பகத்தின் மூலம் கவிதைத் தொகுப்பொன்றைக் கொண்டுவந்ததால் என்னைச் சுற்றி வீசப்பட்டிருந்த பலத்தசந்தேகங்களும் அவதூறுகளும் நாயின் வாந்தியைப்போலக் கிடந்த பாதையைக் கடந்து சென்றேன்.

ஆனால் அடுத்த வருடம் 2008 இல் ஒரு அழகியஇலக்கியப் பயணத்திற்கான ஒரு வாய்ப்பைப் பெற்றேன். தெற்காசிய நாடுகளின்இளம்கவிஞர்கள் மாநாட்டுக்காக ஒரிசா சென்றேன். அங்கிருந்து சென்னை திரும்பியதும் எழுத்தாள நண்பர்களுடன் ஒரு சந்திப்பையும், கலந்துரையாடலையும் கண்ணன் ஏற்பாடுசெய்திருந்தார். மறக்க முடியாத நிகழ்வாக அது இன்றும் சந்தோசத்தைத் தருகிறது. நண்பர் ரவிக்குமார் என் கவிதைகளைப்பற்றி பேசினார்.சல்மாவை முதல் முறையாகப் பார்த்துப் பேசினேன். சுகிர்தராணியைத் தழுவினேன். கவிதாமுரளிதரன், சேரன், ரேவதி, பாரதிமணி, குவளைக் கண்ணன், ஐயப்பமாதவன், யுவன்,இப்படிப்பல எழுத்தாளர்கள் மத்தியில் உரையாடியதும் கவிதை வாசித்ததும் அற்புதமானஅனுபவம்.

ஒரு பதிப்பாளராகக் கண்ணனிடம் உள்ள திறமை, கண்ணியம், நேர்மை அனைத்தையும் கருத்தில் கொண்டே எனது மூன்றாம் கவிதைத் தொகுப்பான ‘உடல் பச்சை வானம்’ தொகுப்பை 2009இல் காலச்சுவடுக்கு வெளியிடக் கொடுத்தேன். ‘எனக்குக் கவிதை முகம்’ இரண்டாம் பதிப்பும் வெளிவந்திருக்கிறது.

காலச்சுவடும் நானும் என்ன்னுடைய தனித் தன்மைமீது பற்றும் நம்பிக்கையும் கொண்டிருந்தோம். என் மொழியின், ஆற்றலின் தனித் தன்மையைக் கொம்புகளாக அல்ல மாதுளைமரமாக வளர்த்தெடுக்கவே முயன்று செயல்பட்டுவருகிறேன்.

ஒருவருக்குப் பிரபலமும் புகழும் கிடைக்கவேண்டுமென்றால் முதலாவதாகக் காலச்சுவடு பதிப்பகத்தின் மூலம் புத்தகம் கொண்டு வரவேண்டும்.அடுத்ததாகத் தமிழ்நாட்டிற்கு இலக்கியத்தின் பெயரில் ஒரு பயணம் போகவேண்டும். இலகுவாகக் கவிஞராகிவிட இவைதாம் வழியெனவும் நினைத்து முனைந்தவர்களினதும் குறைவாகமதிப்பிட்டவர்களின் பலவிதமான தப்பான அபிப்பிராயங்களையும் காலச்சுவடு நீக்கியிருக்கிறது. 

காலச்சுவடு பதிப்பகம் முன்பைவிடவும்அதிகமான புதிய இலங்கைத் தமிழ், முஸ்லிம் ஆண் பெண் கவிஞர்கள் எழுத்தாளர்களுக்குவாய்ப்பளிக்கிறது. வடக்கு- கிழக்கிலிருந்தும் பிற மாகாணங்களிலிருந்தும்படைப்புகளைப் பெற்று வெளியிடுகிறது. இவ்வருடம் இலங்கை அரசின் சாஹித்திய விருதைப்பெற்ற அதிகமான தமிழ்நூல்கள் காலச்சுவடுவெளியீடுகளே.

காலச்சுவடு என்னும் இலக்கிய இதழை என்னுடையவாசிப்பு அனுபவத்தை விரிந்துபோகச் செய்யவும், நுண்மையான அர்த்தங்களைக் கண்டெடுப்பதற்காகவுமே வாசிக்கிறேன். பொறுப்பாசிரியர் தேவிபாரதியின் உழைப்புசிறப்பானதும் மதிக்கத் தகுந்ததுமாகும்.

என்னிடம் 1988, 1989 இல் வெளியான காலச்சுவடுஇதழ்களின் இரு முழுத் தொகுப்புகளும் உள்ளன. சு.ரா. என்னும் ஆளுமை அந்த இதழை மிகுந்த படைப்பூக்கம்நிறைந்த பல்வகைமையான இலக்கியப் பங்களிப்புகளைத் தேர்ந்து பதிவு செய்திருக்கிறார்.சு.ரா இன்னும் அத்தொகுப்பினுள்ளே எழுதிக் கொண்டிருக்கிறார்.

என்னைப் பாதித்த காலச்சுவடு இதழ்கள்சிலவற்றையும் படைப்புக்களையும் நினவூட்ட விரும்புகிறேன். இதழ் 34இல் ஆனந்த் எழுதிய குறுநாவல் ‘நான்காவதுஆணி’, இதழ் 37இல் நிர்மல்வர்மாவின் நேர்காணல், இதழ்28இல் பா.வெங்கடேசன் எழுதிய ‘மழையின் குரல்தனிமை’ சிறுகதை, இதழ் 87இல் ‘சந்திரலேகாவின் மரணம் குறித்த பதிவுகளும் கண்ணுக்குள்விட்டுவிலாகாதிருக்கும் அவரது அரிதான புகைப்படங்களும்’,இதழ் 139இல் சுகுமாரன் மொழிபெயர்ப்பில் ‘மிகயீலின்இதயம் நின்றுவிட்டது’ சிறுகதை, அம்பையின் ‘வெப்பக்காற்றுஉன்மேல் வீசாதிருக்கட்டும்’, இதழ் 44இல் மலையாளக் கவிஞர் சுகதகுமாரி நேர்காணல், சு.ராவின் “வானகமே இளவெயிலே மரச்செறிவே“ பகுதி, இதழ் 132இல் ‘நீதியின் பெண்குரல், அருந்ததிராய் பற்றிய ’ மாலதி மைத்திரி கட்டுரை. இதழ் 117இல் அயல் இலக்கியம் விஸ்லா வாசிம்போர்காவின்‘உரையும் கவிதைகளும்,இதழ் 99இல் வைக்கம் முகம்மது பஷீர் நூற்றாண்டுச் சிறப்புப்பகுதி, இதழ் 153 இல் எம்.ஏ. நுஃமான் அவர்களின் நேர்காணல் என மிகச் சிலவற்றையே இங்கு குறிப்பிட முடியும்.

சென்ற ஜனவரி 2012இல் காலச்சுவடு பதிப்பித்த கவிஞர்.சேரனின் “காடாற்று“ கவிதை நூலை வெளியிட என்னை அழைத்ததின் பெயரில் மீண்டும் சென்னைசெல்லும் வாய்ப்புக் கிடைத்தது.

New Woodland Hotel இல் கண்ணன்எங்களை வரவேற்றார். காலச்சுவடுடன் தொடர்பு ஏற்பட்டு சுமார் ஆறு வருடங்களுக்குப்பிறகு முதன் முதலாக அவரைச்சந்திக்கக் கிடைத்ததில் நானும் அஸீமும் மகிழ்ச்சியடைந்திருந்தோம்.அருந்ததிராய்க்கும், நவயானா ஆனந்த் அவர்களுக்கும் கண்ணன் என்னை அறிமுகம் செய்துவைத்தார்.

சென்னைப் புத்தகக் கண்காட்சி, வேறு சிலநூல் வெளியீட்டு நிகழ்வுகள், ஆர்.எம். நௌசாத், உமாஷக்தியின் புத்தக வெளியீட்டுவிழா ஆகியவற்றில் கலந்துகொண்டோம். எழுத்தாளர் அசோகமித்திரன், கவிஞர். சுகுமாரன்,நெய்தல்கிருஷ்ணன், தேவிபாரதி, பெருந்தேவி, கோணங்கி, ஷாஜி எனப் பல எழுத்தாளர்களையும் என் அன்பிற்கும்மதிப்பிற்கும் உரியவர்களையும் சந்தித்தேன். ஒவ்வொன்றும் தனித் தனியான அர்த்தமுள்ளசந்திப்புகள்.

முதல் இலக்கியப் பயணத்தில் யாருக்கும் வாய்க்க முடியாத ஒரு சந்திப்புநேர்ந்தது. மாபெரும் ஒரியக் கவிஞரான சீதாகாந் மஹாபத்ரா அவர்களுடன் இரு நாள்கள்ரயிலில் பயணம் செய்யக் கிடைத்த ஒரு அதிஸ்டவசமான அனுபவத்துடன் திரும்பியிருந்தேன்.அடுத்த பயணத்தில் சின்ன விசயங்களின் கடவுள் எழுதிய பறவையைப் போன்ற மென்மையானபெண்ணான தன் அரசியல் கருத்துக்கள் செயற்பாடுகளால் தீப்பொறியைப்போல கனன்று கொண்டிருப்பவருமானஅருந்ததிராயைச் சந்தித்தேன். அவருடன் ஒரே மேடையைப் பகிர்ந்து கொண்டதும் அவருடன்உணவருந்தி உரையாடியதும் வாழ்வின் முக்கியமான தருணங்கள். விவரித்தால் எங்கேதீர்ந்து போய்விடுமோ என கனவைப்போல் இந்த அனுபவங்களைப் பூட்டி வைத்திருக்கிறேன்.

என் கவிதைகள் ஊடாகக் கிடைத்த வெற்றிகள்,சந்தோசங்கள் நினைவுகளில் காலச்சுவடு சேர்ந்தே பயணிக்கிறது.

இந்தக் கைகோர்த்தல்... இந்த நடை... மிகஅழகானது... வலிமையானது... ஒரு கவிதையைப்போல !

-----------------------------------------------------------------------------------------------------------

காலச்சுவடு இதழ் - 161, மே 2013


No comments: