Monday 17 October 2011

அம்பாரை மாவட்ட சமகாலக் கவிதைகளில் பெண் 

அனாரின் “எனக்குக் கவிதை முகம்" - ஓர் வாசிப்பு 


- எம். எம். சௌதியா 

(தமிழ் விஷேடதுறை, தென்கிழக்குப் பல்கலைக்கழகம், ஒலுவில்) 

---------------------------------------------------------------------------------------------------------

பெண் சமூகத்தின் உளத்துடிப்பு, சமூக அசைவுக்குகம் அவளுக்குமான தொடர்பு ஆழமானது. இருந்த போதிலும் பெண்ணிலை வாதம் ஏன் தோன்றியது, அது நாளுக்கு நாள் தீவிரமடைந்து செல்ல என்ன காரணம் என்ற வினாக்கள் ஒட்டுமொத்த சமூதாயத்தின் முன்னும் தொடர்ந்தும் எழுகின்ற வினாக்கள் இன்று தீவிரமடைந்து செல்லும் இப்பிரச்சினைக்கு பல வழிகளிலும் தீர்வு தேடிக் கொண்டிருக்கிறது, சமூகம். அவ்வழிகளுள் பெறுமதி மிக்க ஒரு வழிமுறையாகவே எழுத்துத் துறை குறிப்பாக கவிதைத் துறை காணப்படுகின்றது. 


பெண்ணை மையப்படுத்திய பல கவிதைத் தொகுதிகள் இக்காலத்தே வெளிவருகின்றன. அந்த அடிப்படையில் அம்பாரை மாவட்டத்தைப்பற்றிய தனியான அலசலில் குறிப்பிடத்தக்க ஒரு கவிஞராக அனார் காணப்படுகிறார். இவரும் ஒரு பெண் என்பது இங்கு சிறப்பான கவனத்திற்குரியதாக அமைகிறது. அனார் எனும் புனைப் பெயர் கொண்ட இவரது இயற்பெயர் இஸ்ஸத் ரீஹானா முஹம்மட் அஸீம். கிழக்கிலங்கையில் சாய்ந்தமருதில் பிறந்தவர். “எனக்குக் கவிதை முகம்"  இவரது இரண்டாவது தொகுதி. 


அம்பாரை மாவட்ட சமகாலக் கவிதைகள், குறிப்பிடக் கூடியளவு பெண் பற்றிப் பேசுகின்றன என்று கருத முடியும். இவற்றுள்ளே ஒரு வித்தியாசமான பார்வையாக அனாரின் கவிதைகள் அமைந்துள்ளன. இவ்வகை வித்தியாசமான உணர்வு நிலைப்பட்ட பல கவிதைகளை இத்தொகுப்பினுள்ளே காணக்கிடக்கிறது. இவர் ஒரு பெண் என்ற ரீதியில் பெண்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் பற்றியும், அவர்களுக்கெதிரான வன்முறைகள் பற்றியும் பேசும் போது இவரது பாடு பொருளும், மொழிக் கையாளுகையும், கவிதை ஏற்படுத்துகின்ற உணர்வு நிலையும், கோர்க்கப்பட்டுள்ள சொற்களும் கூர்மையான அர்த்தத்துடனும், புதுமையான சிந்தனைத் தொனியுடனும் ஓங்கி நிற்பதை இவரது கவிதைகளிற் காண முடிகிறது. 


இத்தொகுப்புள்ளே இடம் பெற்றுள்ள “அரசி" என்ற கவிதையை வாசிக்கும் போது எம்முள்ளே இத்தொனி உயர்ந்து ஒலிப்பதை எம்மால் உணர முடியும். 


“உன் கனவுகளில் 

நீ காண விரும்புகின்றபடியே 

நான் அரசி 

...................... 

அடிபணிய அல்ல 

கட்டளையிடப் பிறந்தவள் 

ஆணையிடுகிறேன் சூரியனுக்கு” 


என்று சூரியனுக்கு கட்டளையிட்டு மூதாட்டிகளின் பாரித்த பெருமூச்சுக்களை வருடி விடுமாறு பறவைகளை பணிக்கும் இப்பெண்ணரசி பெண்களுக்கெதிரான கொடுமைகளுக்கு முடிவு கட்ட தன் வாளை கூர் தீட்டுகிறாள். அப்போதுதான் சுயபலம் பொருந்திய தேவதைகளாக பெண்கள் மாறி பேரிகைகளாய் குலவையிட்டு விடுதலை பெறுகிறார்கள். இனி, 


“நான் 

நான் விரும்புகின்றபடியான பெண் 

நான் எனக்குள் வசிக்கும் அரசி"


என ஆசிரியர் பெண்ணின் சுதந்திரத்தை பெண்ணின் கையிலேயே ஒப்படைத்துவிடுகிறார். 


பொதுவாக எல்லாக் கவிஞர்களினதும் உணர்ச்சி, கற்பனைகளிலிருந்தும் வித்தியாசப்பட்டு நிற்கிறது. “பெண்பலி" என்ற கவிதை கவிஞர்கள் சந்தோசம் இழையோட உணர்ச்சி பூர்வமாக வர்ணிக்கும் ஆண், பெண் உறவுத் தருணத்தில் ஒரு பெண் பலிபீடம் ஏற்றப்படுகிறாள் என்பதாக அனாரின் நோக்கு அமைகிறது. இத்தருணம், ஒவ்வொரு பெண்ணும் ஆசைகளுடன் சேமிக்கும் கனவு என்றுகூட சொல்லலாம். ஆனாலும் சில பெண்களுக்கு அத்தருணம் பலிபீடமாக அமைகின்ற சூழலும் இச்சமூதாயத்தே இல்லாமலில்லை. இதனை மிக நுணுக்கமான முறையில் உரைக்கிறது இக்கவிதை. 


“அது போர்க்களம் 

................................ 

அது பலிபீடம் 

அது பெண்ணுடல் 

............................... 

என் முன்தான் நிகழ்கிறது 

என் மீதான கொலை"


உள்ளக் குமுறல், உளத்துடிப்பு இருபாலாருக்கும் ஒரே விதமானதுதான் என்றாலும் பெண்ணுடையது என்பதால் மரியாதை இருப்பதில்லை என்ற இக்கவிதைக் குரல் சமூகத்தில் காணப்படும் பல பெண்களின் முறைப்பாட்டுக் குரலே. 


இத்தொகுப்பில் இடம்பிடித்துள்ள “நான் பெண்" என்ற கவிதை பெண்ணின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி எடுத்துரைப்பதாக அமைந்துள்ளதை உணர முடிகிறது. ஒரு பெண்ணானவள் உலகத்தின் மனித உயிர்களை தன் மடியேந்திய பின் தான் இந்தப்பூமி ஏந்த வைக்கிறாள். எல்லா மனிதர்களுக்கும் மூலமான பெண்ணின் மகத்துவத்தை பறைசாற்றுவதாக இக்கவிதை அர்த்தமிக்க சொற்கள் கோர்க்கப்பட்டு பின்னப்பட்டுள்ளமை சிறப்பு. 


“ஒரு காட்டாறு 

ஒரு பேரருவி 

ஓர் ஆழக்கடல் 

ஓர் அடை மழை 

நீர் நான்


உடல் காலம், உள்ளம் காற்று, கண்கள் நெருப்பு, நானே ஆகாயம், நானே அண்டம் ஆகையால் எனக்கென்ன எல்லைகள், 


நான் இயற்கை 

நான் பெண்"


என நிமிர்ந்து நிற்கிறாள். பாரதியின் புதுமைப் பெண்ணை ஞாபகப்படுத்திவிடுகிறது இக்கவிதைத்தொனி. வாசிக்கும் ஒவ்வொருவர் உணர்விலும் பெண்ணின் சிறப்பை கொட்டிவிடுவதாக அமையும் இக்கவிதையின் உணர்வுநிலை ஒவ்வொரு பெண்ணுக்கும் நிமிர்வைத் தருவதாக அமைகிறது. 


பெண்ணின் கனவுகள் புறக்கணிக்கப்படும் போதுதான் அவள் தாக்கப்படுகிறாள். கனவுகள் அவளது உரிமை. ஆனால் இன்றைய சமூகச் சூழலில் பல பெண்கள் தங்கள் கனவுகளை அடுப்புச் சாம்பலுக்குள் புதைத்து வாழ்கிறார்கள். இவ்வாறான பெண்களின் உள்ளக் குமுறல்களை இலகுவான மொழிநடையில் தீட்டிக் காட்டுவதாக “ அறைக்கு வெளியே அலையும் உறக்கம்" என்ற கவிதையை உணர முடிகிறது. இரவு, துணிகளை மடித்து அலுமாரியில் அடுக்கி வைத்தாயிற்று, அறை விளக்குகளை குறைத்தாயிற்று, மறக்காமல் இரு தலையணைகளையும் அருகருகே இணைத்தாயிற்று. இனி, 


“விசமேறிய இரவின் பானம் 

என் தாகத்தின் முன் உள்ளது. 

ருசிகள் ஊறிய கனவுகளுடன் 

என் உறக்கம் 

அறைக்கு வெளியே அலைகிறது"


இவ்வாறுதான் இன்று பல பெண்கள் தங்கள் திறமைகளை மறைத்தும் மறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 


சமூகத்தின் சாபக்கேடு சீதனம். அதனது எச்சம் முதிர் கன்னிகள். இச்சமூகப் பிரச்சினை பற்றி உள்ளடங்கிய ரீதியில் என்றாலும் தெளிவாகப் பேசுகிறது “பூக்க விரும்புகின்ற கவிதை" ஒரு கன்னியே “என்னை எடுத்துக்கொள்" என வேண்டுவதாக அமையும் இக்கவிதை முதிர் கன்னிகளின் உச்சக்கட்ட மனக் குமுறல்களின் பிரதிபலிப்பாக அமைகிறது. 


“மேகங்களுக்கு மேலேறிச் சென்று 

நிலவின் கதவைத் திறந்து 

எடுத்துக் கொள் 

கொஞ்சமும் குறையாமல் என்னை"


இவ்வாறு பரந்துபட்ட ரீதியில் அல்ல என்றாலும் முக்கியமான பல பெண்கள் சார் பிரச்சினைகளை பற்றிப் பேசுகின்ற அனைத்துக் கவிதைகளுக்குப் பின்னாலும் ஒரு தீவிர நிலையை உணர முடிகிறது. அனாரும் ஒரு பெண் என்ற ரீதியில் அவரால் உணர்வு ரீதியாக புரிந்து எழுத முடிந்திருக்கலாம். கற்பனை, உயர்ந்த குறிக்கோள், உண்மையான உணர்வுகள் போன்றவற்றை தன்னகத்தே கொண்டுள்ள படைப்பான இக்கவிதைத் தொகுதி அம்பாரை மாவட்ட சமகால வெளியீடுகளில் கவனத்திற்குரியது. அதே நேரம் இவ்வாசிப்பு நேரிய அம்சங்களையே கவனயீர்ப்புச் செய்திருக்கிறது. எதிர் நிலை கருத்துக்களுக்கும் நிறையவே இடமிருக்கிறது. 


( மரங்கொத்தி – தமிழ்ச் சங்கம், தெ.கி.ப. , ஒலுவில், இலங்கை )

---------------------------------------------------------------------------------------------------------

No comments: