Monday 17 October 2011

அனாரின் “எனக்குக் கவிதை முகமும்“ 

கட்டவிழ்க்கப்பட்ட ஆண்களின் முகமும் 


- திசேரா (இலங்கை) 

------------------------------------------------------------------------------------------------------

“என் உலகமே 

துயர்களைத் தாங்கிய பாலைவனம் 

வாழத் துடிக்கும் நானோ 

விடியலை விழுங்கிய மலட்டு இரவுபோல் 

மௌனமாய் மல்லுக்கட்டுகிறேன்”

( ஊமைக்காவியம் – ஓவியம் வரையாத தூரிகை) 

ஒவ்வொருவருக்கும் ஒரு முகம் மட்டும் இருப்பதாய்த்தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால் உள்ளுணர்வுகளும், நிறைவேறாத இலட்சியங்களும், இலக்குகளும், வெளிப்படுத்த நினைக்கும் மன ஆதங்கங்களும் ஒவ்வொருமுகமாய் பல முகங்களை தோற்றுவித்துக் கொண்டே இருக்கும். இதில் பல சூக்கும உலகில் சஞ்சரிப்பவை. 


மற்றவர் முகங்கள் (உணர்வு வெளிப்பாட்டுத்தளம்-முகம்) நோக்கப்படுதலை, அறிய முனைதலை பெரும்பாலு தவிர்த்துக் கொண்டே வருகிறோம். இதில் சில செளகர்யங்களும் இருக்கின்றன. மன உளைச்சல்களும், தாக்கங்களும் நம்மை பீடித்துவிடக்கூடும் என்ற எச்சரிக்கை உணர்வாகக்சகூட இருக்கலாம். 


உணர்வில் இருந்துவிரியும் கவிதை முகம் பல உளைச்சலை எண்ண வியாபகத்தை இன்னமும் கூடுதலாக ஏற்படுத்திக் கொண்டே இருக்கக் கூடிய பல் படிமங்களைக் கொண்டிருக்கும். வெளிப்பாட்டு மொழி – சொல்லல் முறை பலதிசைப்பட்ட இயக்கத்தை தோற்றுவிக்கும். இத்தகைய மொழி நடையுடைய கவிதைகள் தனி இடத்தை ஆக்கிரமித்துக் கொள்வதுடன் வாசக மன உலகை வசீகரிப்புச் செய்யக் கூடியது. 


அனாரின் கவிதை முகம் தனிமையின் விரக்தியை வெளிக்காட்டி நின்றாலும், அத்தனிமை உணர்வு காலத்தைத் தாண்டிய ஒரு வெளியை உருவாக்கி இருக்கின்றது. இவை உண்டாக்கும் மன அதிர்வுகள் தொடர்ந்தும், ஒன்றிலிருந்து ஒன்றாக நீர்வட்ட அலைகளை உற்பத்தி செய்துகொண்டே செல்லக்கூடிய மொழியை தன்வசம் கொண்டிருப்பது ஈழத் தமிழ்க் கவிதைக்கான வீச்சம் ( சேரன் கூறுவதுபோல ). ஆண்மையச் சமூகம் பெண்களை விளிம்பு நிலைக்கு தள்ளி நிறுத்தி இருக்கின்றது. அவர்களின் இருப்பு-சூழல் உணர்வுகள் மறுவாசிப்புச் செய்யப்படாமல் அதனதன் நிலைகளில் கிடக்கின்றன. தமிழ்ச் சூழலுக்குள் அம்பையின் வருகையும் அதன் பின்னரான மாலதி மைத்ரி, குட்டிரேவதி, சல்மா, உமா மஹேஸ்வரி, லீனா மணிமேகலை, சுகிர்தராணி போன்றோரின் வருகைகள் தம் நிலைப்படுத்தலுக்கான போராட்ட களமாக கவிதை, புனைவுகள் மாறிவந்து கொண்டிருக்கும் நிலையில், ஈழம் அத்தகையதொரு பெண்ணியம் சார் போராட்ட இலக்கியங்களை முற்றாக எதிர்கொள்ளவில்லை. சில அமைப்புகள் மூலம் இவை செயல்வடிவத்துடன் முன்னெடுக்கப்பட்டாலும் பெண் வன்முறைக்கான பல பக்கங்கள் பார்க்கப்படாமலேயே கிடக்கின்றன. இப்பக்கங்கள் அருவருப்பான குரூரமானதாக இருப்பினும் அவர்களுக்கெதிரான ஒடுக்கு முறையும், ஒதுக்குமுறையும் உடைக்கப்பட வேண்டியது. 


சித்திரவதைகளும், சித்திரிப்புகளும், அழகுபடுத்தலும்-அவதானிப்பு, சிதைப்பு என உடல் பலதரப்பட்ட நிலைகளில் பிரதானப்படுத்தப்படுகின்றபோது பெண்ணுடலின் மீதான வன்முறையும், அவமானமும் பேசப்படுவதில் பயம் நிலவிக் கொண்டே இருக்கின்றது. 


அனாரின் “மேலும் சில இரத்தக் குறிப்புகள்” கவிதையில் மாத உதிரம் பற்றி பூடகமாக வரிகள் இடம்பெற்றதற்கே முஸ்லீம் ஆண் கவிஞர்கள் சிலர் வானத்துக்கும் பூமிக்குமாய் குதித்ததை தோழி ஒருத்தி சொன்னபோது அதிரவேண்டி இருந்தது. பிச்சி கவிதை பிரசுரமானபோது “சல்மா மாதிரியே அனாரும்” என்கிற ரீதியில் எத்தனை கதைகள் உலாவின -பெருவெளி. 


தீராநதி- ஏப்ரல் 2005 சுகிர்தராணியின் பேட்டி “நான் எழுதத் தொடங்கிய காலகட்டத்தில் ஏதோ எழுதுகிறது என்று விட்டு விட்டவர்கள், ஊக்கப்படுத்தியவர்கள் இப்போது தடைவிதிக்கிறார்கள். எழுதுவதை நிறுத்திவிடச் சொல்லி தொடர்ந்து என் வீட்டில் வற்புறுத்தி வருகிறார்கள்”. இது தமிழ்ச் சூழலுக்குள் நிகழும் அடக்குமுறை. “ஆண் எழுதினால் அவனுடைய அனுபவமா எனக்கேட்பதில்லை பெண் எழுதினால்... லீனா மணிமேகலையின் பேட்டி.... 


இது புனைவுகளை விளங்காத-உணராத தன்மை. பெண் என்பவளை தோலுரித்துப் பார்க்கும் கூரிய பார்வையை, படைப்பை-உணர்வை புரிய பயன்படுத்துவதில்லை. இவ் அபத்தம் அனாரின் கவிதை முகத்துக்கும் நேர்ந்துவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது. கட்டவிழ்த்தல்-பிரதியை மறுவாசிப்புக்கு உட்படுத்தல் என புறம்பானதொரு தளத்தில் அணுகவும் முடியும். 


தனிமையின் சிந்தனையும் இருப்பை புரியப் பண்ணவேண்டிய தேவையும் சிறந்த வெளிப்பாட்டுத்தியை கொணரும் இத்தனிமை தன் சூழல் மையத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டதினாலும் விளிம்பு நிலைப்படுத்தப்பட்டதினாலும் இருக்கலாம். வேதனை-விரக்தி-புரியப்படாத உணர்வு. காதல் வெடித்து சிதறுகையில் பெருகும் குழம்பு, புறக்கணிக்கப்பட்ட மலையில் வீரியத்தை-வியாபகத்தை புரியச் செய்யும். தான் மட்டும் வளர்வதாய், வளர வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த மரத்தை-மனிதனை வேதனைப்படுத்தும் தனக்குள்ளேயே அவமானம் கொள்ளச் செய்யும். 


தனிமைதான் பலம், தனிமைதான் சிந்தனை, தனிமைதான் குழப்பம், தனிமைதான் எல்லாமும். அறிவின் பலமும் நம்மை-பிறவற்றை உணரப் பண்ணுவதும் அதுதான். இத்தனிமையின் முகம் பல நினைவலைகளை எழுப்பும். அதிலும் பெண்ணுக்கான இத்தன்மை ஆழ்மன உணர்வு தொடர்பிலான பல கற்களை நீருள் எறியும் ஒவ்வொரு கல்லும் எண்ணற்ற அலைகளை உருவாக்கும் தனிமை உயிரிக்கும் வாசகபுலத்துக்கும். இதைத் தான் கண்களும் முகமும் சித்திரிக்கும். 


“எவ்விதமாகவும் 

நான் தோன்றியிருக்கக் கூடும் 

உனக்கெதிரில் 

எவ்வேளையும் பிசகாமல் 

நீ இருக்கிறாய் என்முன் 

எப்போதும் இல்லாத ஒன்றென”


எவ்விதமாகவும் நான் தோன்றியிருக்கக் கூடும். அது அவரவர் உளநிலையை பொறுத்தது. இதையிதை இப்படித்தான் இப்படி மட்டுந்தான் பார்க்க வேண்டுமென்ற வரையறை இல்லை. இப்பார்வைப் புலத்தை அறிவும் எண்ணமும் சிந்தனை அனுபவம் ஒன்றிணைந்து தீர்மானிக்கும். 


பிச்சியும், மேலும் சில இரத்தக் குறிப்புகளும் பெண்ணுடலைப் பேசுதல் குறித்தான அதே பின்னணியில் நோக்கினால் அதைவிடச் சாட வேண்டிய துரும்புகள் தொகுப்பினுள்ளேயே கிடைத்திருக்கும். விலகி நிற்பவன், நிழலின் அலறல், ஒளியில்லாத இடங்கள் தங்கள் உடற் பற்றி பெண்கள் பேசக்கூடாதா ? அல்லது முஸ்லீம் பெண்கள் பேசக்கூடாதா ? புனிதம் பெண்களால் மட்டுந்தான் காப்பாற்றப்பட வேண்டுமா ? 


ஒரு முகம் வெளிப்படுத்தும் விடயங்கள் ஆயிரம். அழகு-காதல்-ஏக்கம்-காமம்-சிந்தனை-கவலை-ரசனை. இம்முக அழகியலை உணர சமாந்தரத் தன்மையுடன் பயணிக்கக்கூடிய அவற்றுடன் ஊடாடக்கூடிய முற் சொன்ன அறிவு-எண்ண-அனுபவ, சிந்தனைக் கூறுகள் பொருந்தியமைய வேண்டும். 


கவிதை முகத்தின் தனிமை எங்கும் அழைத்துச் செல்லும் எதையும் காட்டும் அது தனி உலகாக இங்கும். அங்கு 


“பாட்டம் பாட்டமாய் 

பெண்கள் குலவையிடும் ஓசை 

பெரும் பேரிகைகளாய் கேட்கின்றன 

நான் சாம்ராஜ்ஜியத்திலிருந்தபடியே 

கைகளிரண்டையும் 

மேலுயர்த்திக் கூவுகிறேன் 

நான் 

நான் விரும்புகின்ற படியான பெண் 

நான் எனக்குள் வசிக்கும் அரசி”



( தினக்குரல் – 04 மே 2008 )

------------------------------------------------------------------------------------------------------

No comments: