Wednesday 25 July 2012

கொனாரக் சில நினைவுகள்.......
-------------------------------------------------------------------------------------------------







ஒரிசா சென்றேபோது கொனாரக் எனும் கோயிலை பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார்கள். இந்தப்பயணத்தில் பல முக்கியமான சம்பவங்கள் நிகழ்ந்தன. ஒவ்வொன்றாக எழுதலாம் என நினைக்கிறேன். பெரும் பெண் கவிஞரான மனோரமா பிஷ்வால் அவர்களைச் சந்தித்ததும், பழம் பெரும் கவிஞரான சீதாகாந் மஹாபத்தராவுடன் இருநாள் இரயில் பயணம் செய்ததும் மறக்கமுடியாத நிகழ்வுகளாகும். சார்க் நாடுகளிலிருந்தும் இந்தியாவின் பிற மானிநிலங்களிலிருந்தும் பல கவிஞர்ள் கலந்துகொண்ட சிறப்பான ஒரு கலை நிகழ்வு.






சூரியக் கோயிலைப் பார்த்தபிறகு எழுதிய கவிதை இது:


சூரியக்கோயில்
_______________


முதுகினில் இறக்கை முளைத்த வனதேவதை
மெழுகுபோன்று முளைத்துவருகின்ற
தன் ஒற்றைக் கொம்புடன் தலையை நிமிர்த்திப் பார்க்கிறாள்

‘கொனாரக்’ அதிசயங்கள் விளையும் நிலம்

அளவற்ற வியப்புடன் ஸ்பரிசிக்கின்றாள்
அப்போது தொன்மையான அவளது ஆன்மா
கண்களில் எட்டி எட்டிப் பார்த்தது
சூரியக்கோயிலைத் தழுவி வீசும் ஆதிக்காற்றின் காதுகளுக்குள்
பேருணர்ச்சியைக் கூவினாள்
முதலும் கடைசியுமான வாழ்த்துகளைச்
சிற்பங்களுக்குச் செலுத்தினாள்

வசந்தகாலப் பனியில் உணர்வில் மூழ்கி
இன்னும் இறுகத் தழுவிக்கொண்டிருந்தன
இரண்டு பெண் சிற்பங்கள்

பிணைந்தது பிணைந்தவாறே கற்பனையிலிருக்கும்
திவ்யமான அந்தரங்க ஓசைகளைப் புதிதாய்க் கேட்டு
புலன்கள் பூரித்து நிரம்பிற்று
அமானுஸ்யப் பரிவாரங்கள் ஆட்சி செய்யும்
சுதந்திரசதுக்கத்தில்
கண் கோர்த்து... கைகோர்த்து...
கற்சிலைகள் பூரணத்தில் ததும்புகின்றன

செதுக்கப்பட்ட வடிவங்களில் ஒன்றில் விடுதலை
மற்றொன்றில் நித்யம் இன்னொன்றில் ஆற்றல்
தீர்க்கமாய், தெளிவாய் உயர்ந்து நிற்கிறது
சூரியக்கோயில்

வலப்புறமாக இரு யானைகளின் முதுகினில்
சிம்மங்கள் பூட்டிய தேர்
கம்பீரமாகக் காவல் புரிகின்றது
பனியில் உயிர் குளிர்ந்து
குதூகலத்தை அபிநயித்து
அருகருகே ஆதிச் சம்பாசணைகள் புரிகின்றன சிற்பங்கள்

உவகையும் சல்லாபமும் மிகுந்திருந்த
அபூர்வமான அனுபவம்
புராதனக் கலை மேன்மைகள் பொதிந்த அவ்விடம்
சூரியக் கிரணங்களில் முயங்கிப் பொலிகின்றது
அதி இயற்கையின் மாயக்கம்பளத்தில்
சிற்பங்களின் பொற்காலம் மறைவதேயில்லை

முதுகின் இறக்கையை உயர்த்தி மொய்க்கிறாள்
யாரும் ஏறாத கனவின் உச்சியை
அரூபமான பிரமாண்டத்தினுள்
கண்கூசும் புதையல்களைக் கண்டெடுக்கிறாள்

விலை மதிப்பற்ற அதிர்ஷ்டத்தை
பெரும் வல்லமையை... விடுதலையை...
தனது கனவின் மொழிகளில் விதைக்கின்றாள்

=

(அனார் – உடல் பச்சை வானம், காலச்சுவடு வெளியீடு)

_______________________________________________________________________________










இந்தியாவின் ஒரிஸ்ஸாவில் இருக்கும் சூரியக் கோயில் கொனாரக், இது கங்கைநதி தீரத்தில் அமைந்துள்ளது. இந்தக்கோயில் பலதடவைகள் படையெடுப்பால் சூறையாடப்பட்டு அதன் பல பாகங்கள் சிதிலமடைந்துவிட்டது. தவிர இயற்கையின் சீற்றத்தாலும் கடல் கொந்தளிப்பாலும் பாதிக்கப்பட்டிருந்தது. ஆயினும் இன்றைக்கும் பிரமாண்டமான அதிசயக் கலைவடிவமாக இக்கோயில் காணப்படுகின்றது.










பல வெளி நாட்டவர்களை ஈர்க்கின்ற அதன் கட்டடக்கலை அம்சங்கள் மிகச்சிறப்பு வாய்ந்தது. கலை நுட்பம் மிகுந்த சிற்பங்களும் வியப்படைய வைக்கின்றன. முதலாம் நரசிம்மதேவன் 13ம் நூற்றாண்டில் மிகவும் வித்தியாசமான முறையில் இதைக் கட்டினான். கற்கள் நடுவே இரும்புத்துண்டுகளின் இணைப்புக் கொடுத்துக்கட்டப்பட்டுள்ளது. சூரியன் ஏழு குதிரைகள் கொண்ட தேரில் பவனி வருகிறான். அந்தத் தேரின் 24 சக்கரங்களின் வேலைப்பாடு மனதைக்கவர்கின்றது. இந்த கோயிலில் விலங்குகள், பறவைகளின் சிலைகள் அதைத் தவிர பெண் சிற்பங்கள் எல்லாம் மிக நுணுக்கமாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. இக்கோயிலை யுனெஸ்கோ, உலகப் பாரம்பரியச் சின்னமாகப் பாதுகாத்து வருகின்றது.












No comments: