Friday 7 September 2012

அமைதியான தீச்சுடர் கவிஞர். சுகுமாரன்
--------------------------------------------------------------------------------------------------------

- அனார்



கவிஞர். சுகுமாரன் அவர்கள் மொழிபெயர்த்த அயல்மொழிச் சிறுகதைகள் தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கின்றேன். 'லயோலா என்ற பெரும்பாம்பின் கதை' - இன்நூலின் அட்டை வடிவமைப்பைக் கண்டு ,கடந்த ஜனவரி சென்னை புத்தகச்சந்தையில் காலச்சுவடு அரங்கில் வாங்கியிருந்தேன். மிக நேர்த்தியான, இலக்கிய நூலுக்குரிய அட்டை வடிவமைப்புடன் இச்சிறுகதைத் தொகுப்பு இருந்தது. இவ்வளவு அழகான வடிவமைப்புடன் அமைந்த இந்நூலுக்குள் உள்ள சிறுதைகள்.... தமிழுக்கு அத்தனை புதியதாக எனக்குத் தோன்றுகிறது. 


விருந்து - என்ற கதையைப் படித்தபொழுது ஒரு கணம் முழுதுமாக நொறுங்கிப் போனேன். 

மேஜை மேஜை தான், மிகயீலின் இதயம் நின்றுவிட்டது, கருங்குறிப்புகள்...., இப்படியான கதைகளின் ஆழம்பற்றி சொல்வதற்கு முடியாதுள்ளது. 

உனக்கு விருப்பமென்றால் என்னை அழை - இக்கதையின் இயல்பான மொழி, அந்த மனிதர்கள், காதல், மனம்... கதை நிகழுவதை கண்ணாடியில் பார்ப்பதுபோல இருந்தது. அந்தக் காட்சிகளை மொழியில் வரைந்து தந்துள்ளனர். 

வீடு திரும்புதல் - கதைபோன்றதொரு கதையை எழுத வேண்டும்போல் எனக்குத் தோண்றியது. காலச்சுவடுக்கு நன்றி. 

சுகுமாரன் அவர்களின் இலக்கியப் பணிகள் பரந்து விரிந்த ஒன்று. இவ்விடத்தில் அவரது இலக்கிய வாழ்க்கைப் பணிகள் தொடர்பாக முழுமையாக எழுத இயலாது . இச்சிறுகதை நூலுக்கு முன்பு அவருடைய இன்னொரு மொழி பெயர்ப்பு நூலை நான் பல நூறு முறைகள் வாசித்திருக்கிறேன். என்றும் என்னுடைய மற்றொரு அங்கம் போன்றிருந்த அந்த நூலின் பெயர் 'பாப்போல நெரூதா கவிதைகள்' - உயிர்மை பதிப்பகம் வெளியிட்டிருந்தது. 


சாம்பல் நிற அட்டை வடிவமைப்பில் இருந்த அந்த நூல் என்னுடைய தலையணைக்கருகில் எப்போதும் இருந்தது. சுகுமாரன் அவர்களது மனவெளி கவிதை உலகம் மிக நுண்மையாது. பன்முகம் வாய்ந்ததும், வெளிப்படையானதும் ஆகும். அதிக தடவைகள் அவருடன் பேசியிருந்தாலும் சென்ற ஜனவரியில் தான் நேரில் பேசுவதற்கு பல சந்தர்ப்பங்கள் வாய்த்தன. அந்த உரையாடல்கள் மிகுந்த பயனுள்ளவை. என்னுடைய எழுத்துக்களுக்கு நன்மைகள் சேர்ப்பவை. 

சுகுமாரன் அவர்களது தளும்பாத இலக்கியப் பணிகள்... மௌனத்திலும், அமைதியிலும் உருவாகின்றவை. ஒரு தீச்சுடரைப்போல் சத்தமின்றி ஒளிர்பவை. அந்த உயிர் எரிதல்.... அவருடைய ஒவ்வொரு எழுத்துக்களினதும் வெளிச்சம். 

நவீன இலக்கிய எழுத்து வடிவங்களை, அவருடைய தொகுப்புகள் அடையாளப்படுத்துகின்றன. அவரது கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புக்கள் அனைத்தும் இதற்கு சாட்சியாகும். 

வேறு என்ன சொல்வது? 

நான் எப்படி பாராட்டுவது ? 



No comments: