Thursday 12 October 2017

கவிஞர் ஆத்மாநாம் விருது விழா - 2017

ஏற்புரை : - அனார்
-----------------------------------------------------------------------------------------------------------




// அற்புத மரங்களின் அணைப்பில்
நான் ஒரு காற்றாடி
வேப்பமரக் கிளைகளின் இடையே
நான் ஒரு சூரிய ரேகை

பப்பாளிச் செடிகளின் நடுவே
நான் ஒரு இனிமை
சடை சடையாய்த் தொங்கும் கொடிகளில்
நான் ஒரு நட்சத்திரம் //

இது ஆத்மாநாம் கவிதை.


தன்னிலை அழிந்த பைத்திய வெளியில் இரு எறும்புகள் ஒரே கோட்டில் ஏறு வரிசையாகவும் இறங்கு வரிசையாகவும் பயணிக்கையில் சில இடங்களில் சந்தித்துக்கொள்வதுண்டு. மிகச் சில கணங்களுக்கு நிதானித்து பின்னர் பயணிக்கும் அவ்வெறும்புகளைப் போன்றுதான் ஆத்மாநாம் கவிதைகளுக்குள் நான் பயணிக்கின்ற சந்தர்ப்பங்களில் ஏதோ ஒரு புள்ளியில் ஒத்த உணர்வுகள் சந்தித்துக் கொள்கின்றன. தமிழில் கவிதைகளில் தீவிர ஈடுபாடுகொண்ட யாரும் ஆத்மாநாமை அறியாமல் இருக்க வாய்ப்பில்லை.

சிவரமணியின் மரணம், சில்வியாபிளாத்தின் மரணம் அல்லது தங்கள் மரணத்தை தாங்களே நிகழ்த்திய அனைத்துக் கலைஞர்களின் மரணங்களும் அவ்வாறுதான், அவர்தம் கலைகளுக்குள்ளே அம்மரணம் தொடர்ந்து நிகழ்ந்தவாறே இருப்பது. ஆத்மாநாம் மறுபடி மறுபடி தன் கவிதைகளுக்குள் தன் மரணத்தை நிகழ்த்துகிறார்.... ஒரு அடர்த்தியான சாம்பல் நிறத்தில்.

//என்னை அழித்தாலும், என் எழுத்தை அழிக்க இயலாது // – என ஆத்மாநாம் கூறுகிறார். அவரது கருத்தியல் மனிதாபிமானம்தான். இயற்கையிடமிருந்தே அதற்கான நம்பிக்கையைப் பெறுகிறார். தீவிர மனப்போக்குகளுடன் அவர் கையாண்டுள்ள சொற்கள் மிகைப் பாவனைகள் அற்றவை. தத்துவச் செறிவும் எள்ளலும் சுயம்பற்றிய அதீதமான சிந்தனைகளும் அவருக்குள் இருந்திருக்கின்றது.

வலிமையான கவிதைகள் ஊறிவரும் அந்தமனம் மெல்லிய நூலிழைகளால் பின்னப்பட்டிருக்கிறது. மிகுந்த ஆற்றல் கொண்ட ஆத்மாநாம் எனும் கவிஞரின் பெயரால் வழங்கப்பட்ட இந்த விருதினை பரிபூரணமான முழுமனதுடன் பெற்றிருக்கிறேன். என்னைத் தேர்வு செய்த நடுவர்களுக்கும் ஆத்மாநாம் அறக்கட்டளை குழுவினருக்கும் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவிக்கின்றேன்.

எனது மானசீகக் குருவைப்போன்று மரியாதைக்கும் என் பேரன்பிற்குமுரிய கவிஞர் சச்சிதானந்தன் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவிக்கின்றேன். அவர் கரங்களால் இவ்விருதைப் பெற்றிருப்பது மிக முக்கியமானதும் என்னுடைய கவிதைகளின் ஒவ்வொரு சொற்களும் பூரிப்படைகின்ற தருணமுமாகும். 




இன்று இவ்விடத்தில் நிற்பதற்கான ஏற்பாடுகளை வாழ்க்கை தயவு தாட்சண்யமின்றி எனக்கு வழங்கியிருக்கிறது. என்னுடைய ஒவ்வொரு பருவங்களிலும் நினைவு கூரத்தக்க எதிர்நீச்சலுக்கான சந்தர்ப்பங்கள் பல இருக்கின்றன. அவைதான் பின்னரும் உருவான அக புற நெருக்கீடுகளை எதிர்கொள்வதற்கான வலிமையை ஊட்டின என நான் திடமாக நம்புகின்றேன்.

அந்தப் பருவமே விளையாட்டாக இருந்தது. மதத்தை தொன்மங்களை பண்பாட்டை விளையாட்டாக தெரிந்து கொண்டேன். ஒரு முதிர்ந்த பெண் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடிப்பாடிஎனது ஒரு காதிலும்... முதிர்ந்த ஆலிம் ஒருவர் குர்ஆனை ஓதி ஓதி இன்னொரு காதிலும் சொல்லித் தந்தார்கள். பின்னர்தான் அனைத்து விளையாட்டுக்களும் முடிவுக்கு வரும் வகையில்எங்கள் கிராமங்களை அச்சம் பீடிக்கத் தொடங்கியது. இரவில் பயம் .. பகலில் பதற்றம்... பீதிகொண்டு ஊரே திடீரென தலைகீழாக மாறியது. அவ்வளவு நிரந்தரமின்மையானநாட்களாகவும்.. ஆழமான வடுக்களை தந்த காலம் அதுவாகவும் இருந்தது.



ஊரடங்குச் சட்டம், துப்பாக்கி, கடத்தல், குண்டுவெடிப்பு, கப்பம், கொலை, மரணம், காணாமல் போதல் இப்படிப்பல அந்நியமான அறியப்படாத வார்த்தைகளை தெரிந்து கொள்ளத்தொடங்கினோம். கலவரத்தைக் காண்கிறேன்.... மரணங்களைக் காண்கிறேன்.... இரவும் பகலும் நிசப்தமாக மாறியதைக் காண்கிறேன்.... ஒருநாள் என் ஊருக்குள்ளே சுட்டுக்கொண்டுவரும் சிலரால் துரத்தப்பட்டு நீண்ட தூரம் ஓடுகிறேன். எனது தந்தை இவற்றைக் காரணம் காட்டி பாடசாலை செல்வதிலிருந்தும் என்னை நிறுத்திவிடுகிறார். எனக்கு அப்போது பதினைந்துவயதுஇ 10ஆம் வகுப்பில் இருந்தேன். பிறகென்ன வாழ்வும் பண்பாடும் சமூகக் கட்டுப்பாடுகளும் கலாச்சாரமும் அரசியலும் அறமும் நீதியும் ஒன்றுகூடி மூச்சுமுட்டுமளவிற்கு பாதுகாப்பாகஏற்கனவே பூட்டிவைக்கப்பட்ட பெண்களோடு நானும் மற்றொரு பெண்ணாக சேர்க்கப்பட்டிருந்தேன்.

அன்றைய நாள்களில் இறுகப் பிடித்திருந்த ஒரு வகை கனமான தனிமையை என்ன செய்வதென்றே தெரியவில்லை. கொய்யா மரத்துடன் முறைப்பாடுகளைச் சொல்லிக்கொண்டே ஊஞ்சல்ஆடும் பொழுது காற்றுக்கும் எனக்கும் என்றைக்குமான அபரிமிதமான ஒரு உடன்படிக்கையைச் செய்து கொண்டேன்.

எந்த ஒரு இலக்கியப் பரீட்சயமும் அப்போது இருக்கவில்லை. ஆனால் ஒரு இரவில் என் முதலாவது கவிதையை நானே எதிர்பாராமல் திடீரென எழுதினேன். வீட்டிலிருந்த ஒரேயொரு ஊடகசாதனமான சிறிய ரேடியோவில் நாங்கள் வழமையாகக் கேட்கும் முஸ்லீம் நிகழ்ச்சியில் அக்கவிதை ஒலிபரப்பானது. அக்கவிதையை ஒரு பெண் வாசித்தார். வேறு யாரின் காதிலும்விழமுன்னர் விழுந்தடித்து ஓடிப்போய் றேடியோவின் சத்தத்தைக் குறைத்து கன்னம் வைத்து என் கவிதையினை ரகசியமாகவே கேட்டேன். முதல் பாவத்தை அப்படித்தான் மூடி மறைத்தேன்.

அடுத்தடுத்து எழுதும் கவிதைகளை யாருமறியாமல் எனது தம்பிக்கு லஞ்சம் கொடுத்து தபாலில் அனுப்பிக் கொண்டிருந்தேன். சில வேளைகளில் முத்திரையொட்டுவதற்கு பணமிருக்காதுஇ ஏற்கனவே வந்த கடித உறைகளில் ஒட்டியிருக்கும் முத்திரையை கிழியாமல் பிரித்து சீல் இருக்கும் தடம் தெரியாமல் அழித்து மீண்டும் கடித உறைகளை ஒட்டி அனுப்பியஅனுபவங்களெல்லாம் ஒரு வகை சாகசமாகவே அன்றிருந்தன. போதுமான சிறகுகள் முளைத்துவிட்ட பறவை எப்படி பறக்காமல் இருக்கும்... என்னைப் பொறுத்தவரை மொழி ஒரு வகைச்சிறகு... கவிதை ஒரு வகைச் சுதந்திரம்... இப்படித்தான் நானும் பறக்கத் தொடங்கினேன்.

சமூகம் பலவிதமான இம்சைகளுக்குள் சிக்கியிருந்த கொந்தளிப்பான காலத்தில் நான் கவிதை எழுதத் தொடங்கி இருந்தேன். சொல்வதற்கு அதிகமிருந்தன. ஆனால் சொல்ல முடியாதஇறுக்கம் வெளியிலிருந்தது. இரண்டுக்கும் நடுவில் என்னுடைய இருப்பைக் கவிதையூடாக நிலை நிறுத்தத் தொடங்கினேன். நிராதரவும் அபாயங்களும் அச்சங்களும் பலவிதமாகத் தாக்கின.உயிர்இ உடல்இ மனம்இ இனம்இ அரசியல், மதம், பண்பாடு, நிலம், ஊர் எல்லாம் என்னைச் சுற்றி எரிந்தன. என்னுடைய வாழ்க்கை. அத்தம்விட்ட பெருவிரலுக்கும் பழம் விடுகிற சிறுவிரலுக்கும்இடையே இருந்த சந்தோசங்களிலிருந்தும் விளையாட்டுக்களிலிருந்தும் அன்றாட இயல்புகளிலிருந்தும் விலகி எதிர்பாராத அதிர்ச்சிகளோடு என் எதிர் நின்றது. அந்த பயங்கரமானஉண்மையின் வெம்மை தாளமுடியாது ஒதுங்க நான் சொற்களைத் தேடினேன். சொற்களுக்குள் என்னைப் புதைத்துக்கொள்ள முயன்றேன். யாருமறியாமல் காற்று என்னை எடுத்துச் சென்றுசொற்களின் மீது வைத்தது. நான் என்பது அப்போது ஒரு காயாத கண்ணீர்த் துளி. என் ஆன்மாவின் விழிப்புநிலை உண்மையின் வெம்மைக்கருகே எப்போதும் தவித்தது என்பதற்கானஆதாரமாகவே எனது கவிதைகள் இருக்கின்றன.

பெண் எழுதுவது அல்லது சிந்தனைத் தளத்தில் செயற்படத் தொடங்குவது சமூகத்தின் முன் ஏதோ ஒரு வகையில் அவளது தார்மீகக் குரலை எழுப்புவதெல்லாம் இலகுவான ஒன்றாகஎப்போதுமே இருந்ததில்லை. இங்கு முஸ்லீம் பெண் ஒருவரின் கலைச் செயற்பாடு இரண்டு மடங்கான எதிர்ப்புகளை எதர்நோக்க வேண்டியுள்ளது. அவளுக்கு மற்ற அனைத்தையும் விடஅவளுக்கு கற்பிக்கப்பட்ட மதம் அனுமதிக்கின்ற எல்லை கூடுதலான பொறுப்பாக இருக்கின்றது. ஏனெனில் அது தலைமுடியில் தொடங்கி கால் விரலில் முடிகிறது. எல்லா வகையானகட்டுப்பாடுகளுக்கும் உட்பட்ட நிலையில் கவிதைகள் எழுதுவது, முன்யோசனைகளோடும் கடும் கவனத்தோடும் செயற்பட வேண்டியிருக்கின்றது.

உயிரற்றுப்போவது, இறப்பினூடாக நிகழ்வது மாத்திரமல்ல. வாழும்போதே உயிரில்லாமல், உறைவது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ள, அதாவது வாழ்ந்தபடியே இறப்பதற்கான பல வாய்ப்புகளை சக மனிதர்களும், சமூகமும் வழங்குவார்கள் என்று ஒரு பெண் விரைவில் தெரிந்துகொண்டு விடுகிறாள்....... 

எழுதுவதால் ஒழுக்க ரீதியாக ஒரு பெண் தாக்கப்படுவதுபோல் ஆண்களுக்கு ஏற்படுவதில்லை. நான் பெண்ணாக இருப்பதன் காரணமாகவே சில கவிதைகளை எழுத முடிந்துள்ளது. இன்னும்சில கவிதைகளை எழுதவே முடியாது போயுள்ளது. ஒரு பெண் கவிதையைத் தேர்வு செய்வது தனது அரசியலையும் தேர்வு செய்வதாகும். நுண்ணுர்வுகளுடனும், சரி... தவறுகளுடனும்மறையவும் வெளிப்படவும் தனக்கென ஓர் மாய வெளியை கவிதைக்குள் உருவாக்குகிறாள். இங்கிருந்தபடியேதான் சுலைஹா கவிதையை எழுதினேன். பிளேட் கதையையும் எழுதினேன்.மேலும் சில இரத்தக் குறிப்புகளையும், பிச்சியையும், நான் பெண்ணையும், குறிஞ்சியின் தலைவியையும் எழுதினேன். 

கவிதையானது ஒரு பைத்தியச்சுவை. தெளிவான பாதையில் நேராகப் பயணிப்பவரை கவிதை போதையுறச் செய்கிறது... தடுமாறச் செய்கின்றது.... நான் போதையுற நொதித்துப்பொங்கும் சொற்களையே அருந்துவேன்.... சிறு எரிதணலுடன் புகையும் சொற்களையும் நான் அறிவேன்.

மேலும், கவிதைகளினால் ஒருவர் தனக்குள்ளே உருவாக்கக்கூடிய ரகசியப்புலம் மிக அந்தரங்கமானது.

எந்தவொரு கவிதைமனதிற்கும் கட்டாயங்களில்லை. நம்மை கட்டுப்படுத்தும் சமூகக் கட்டமைப்புக்கள் வரையறைகள் சட்டதிட்டங்களுக்கும், கலைத் தன்மைகளுக்கும் மத்தியில் பெரும்இடைவெளிகள் உள்ளன. இந்த இடைவெளியில்தான் கலையின் படைப்பூக்கம் செயற்படுகின்றது.


கனவை மட்டும் கொண்டதல்ல கவிதை. உண்மையை அல்லது அனுபவத்தை மட்டும் கொண்டதுமல்ல. புத்திக்கூர்மையினாலோ, அறிவுப் புலமையினாலோ, படிமங்களினாலோ, உருவகங்களினாலோ, திட்டமிட்டு தனிச் தனிச் சொற்களில் வெளிப்படுவதுமல்ல. அவரவர் கவிதை அவரவருக்கான மனம்.

நான் உணர்ந்ததெல்லாம் கவிதையில் எட்டிவிட்டேனா என்றால் இல்லை.. எட்டுவேனா என்றும் உறுதியாகச் சொல்வதற்கில்லை. அந்தப் பாதையில் நான் இன்னும் தூரம் பயணிக்கவேண்டும். பயணமே அதன் இலக்காகவும் இருக்கிறது. மறுபடி மறுபடி நான் கவிதையிடம் சென்றடைந்தது என் அக விடுதலையைப் பெற்றெடுக்கத்தான்.


இப்படி எனது எனது என்று பேசுகிறேனே இவ்வளவு எனதுகளுக்குப் பின்னாலும் ஒருவருடைய அர்ப்பணித்தல் மௌனமாக இருக்கின்றது. இதுவரையில் நான் எங்கேயும் அவரைப்பற்றி எழுதியதோ பேசியதோ இல்லை. என் திருமணத்தின் பின் எனது முதல் கவிதைத் தொகுப்பை தனது தனியான முயற்சியினால் ஒரு அன்புப் பரிசாக எனது கணவர் அஸீமே நூலாக்கிக் கொடுத்தார். அக்கவிதை நூல் அரச சாஹித்திய விருதைப்பெற்ற போது அந்த விருதினை கவிதைத் துறைக்கென பெறும் முதல் முஸ்லீம் பெண்ணாக நான் இருந்தேன். என் குடும்பத்தினரிடம் அவ்விருது மிக மாறுதலை ஏற்படுத்தியது. தீமையான செயலையல்ல ஏதோ நான் பெருமை தேடித் தருகின்ற ஒன்றைத் தான் செய்கிறேன் என அவ்விருது அவர்களுக்குச் சொல்லியது. இவ்விதமாகத்தான் அதன் பிறகு கிடைத்த விருதுகள் ஒவ்வொன்றும் எனது அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்திருக்கின்றன. அன்று அஸீம் திருமணம் முடித்த கையோடு அத்தொகுப்பை வெளிக்கொண்டுவராதிருந்தால் நான் தொடர்ந்து எழுதியிருக்க வாய்ப்பே இல்லை. எழுதுவதற்காக தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் வசதியையும் பக்கபலத்தையும் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தார். இந்த நிமிடம் வரை எனக்கு நேரும் சந்தோசங்களைப்போல பளிச்சொற்களையும் நண்பர்களைப்போல எதிரிகளையும் தோல்விகளைப்போல சவால்களையும் கசப்பான எதிர்வினைகளையும் அவரும் இணைந்தே சுமந்திருக்கிறார். 


கவிதை தரும் குழப்பமான மனநிலைகள்... அதன் திளைப்பும் மூட்டமான சோர்வும் உன்மத்தமான வலிகளும் என்னொருத்தியின் அக உலகுடன் சம்மந்தப்பட்டது. வெளிப்படையாக சுமப்பவர்கள் கணவனும் மகனுமே ஆகும்.

எழுதாதிருக்கும் சமயங்களில் என்னிடம் எழுதத் தொடங்கவில்லயைா என அக்கறையாகக் கேட்கின்ற ... இதுவரை எழுதிய ஒவ்வொரு கவிதைகளையும் தன் கைகளால் டைப்செய்து தந்துவிட்டு என் கைகளைக் குலுக்கி முத்தமிடுகின்ற, இரவு 2, 3 மணியானபோதும் குறைந்த வெளிச்சத்தில் வாசிக்கவோ எழுதவோ கூடாதென, பகல் போல் வெளிச்சத்தில் நான் எழுதிக்கொண்டிருக்க முகம் சுளிக்காமல் உறங்குகின்ற அந்த மகத்தான காதலை எப்படி கண்ணியப்படுத்துவது என எனக்குத் தெரியவில்லை. இந்தக் காதலுக்கு சமமான கவிதை ஒன்றையுமே இன்னும் நான் எழுதிவிடவில்லை. தீரா நன்றிக்கடனாக அது எஞ்சி நிற்கின்றது. 

என் கனவு மாளி்கையின் முற்றத்தில் கவிதைப்புறாக்களை வளர்க்கின்றேன். அவை கொறிக்கும் தானியங்களால் என் கூடை நிரம்பியுள்ளன. புறாக்கள் கோதுவதும் கொஞ்சுவதும் குறுகுறுப்பதும் பார்த்துப் பார்த்து அவைகள் மயங்கும்படி இசைக்கின்றேன். புறாக்களின் அரவணைப்பும் நெருக்கமும் மென் இறகுகளின் கதகதப்பும் தனிமையின் நிறங்களுக்குள் என்னைஅடைகாக்கின்றன. என் கனவுகளில் அவை இருக்கிறதென்றும் இல்லையென்றும் தோன்றுகின்றது. புறாக்கள் வேறெங்கும் திசைமாறிச் செல்வதில்லை. என்னுடைய கனவுகளின் ருசிக்குபழக்கப்பட்டிருக்கின்றன. அவை எங்கே எத்திசையில் செல்கின்றன? புதிய புறாக்களுடன் எப்போது திரும்புகின்றன? என்பதை கணிக்க முடியாது. மாயப் புறாக்கள் என்னிடம் வருவதுபோல்ஒருநாள் வராமலும் போகலாம். எதுவும் நிச்சயமில்லாதது....

எல்லையற்ற ஒன்றை எப்படி வரையறை செய்வது? அந்த விதமான அளவுகோலை முழுமையாக செயலிழக்கச் செய்வது கவிதை. இறப்பின் பின்னரும் பிறப்பின் முன்னரும் இருக்கக்கூடியஅரூப உயிராக....வாழ்வைப் போன்ற கேள்விக்கும் மரணத்தைப்போன்ற பதிலுக்குமிடையே கவிதையெனும் மெழுகுநதி குழைந்து அசைகிறது.

எழுதி எழுதி ஒன்றுமற்றுப் போய்விட வேண்டுமென்பதே என் ஆசை.

நிறைவாக மொழிபெயர்ப்புத் துறைக்கென இவ்விருதினைப் பெற்ற திரு. சத்தியமூர்த்தி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். குறிப்பாக சிறீனிவாசன் நடராஜன் அவர்கள் தன்னை சிறிதும் முன்னிலைப் படுத்திக் கொள்ளாமல் எல்லா விடயங்களையும் கரிசனத்துடனும் நேர்த்தியாகவும் கலைத்துவமாகவும் மேற்கொண்டிருந்தார், அவருக்கு என் அன்பையும் நன்றியையும் தெரிவிக்கிறேன். என் நண்பர்களுக்கும் சபையோர் அனைவருக்கும் நன்றியோடு என் கவிதையின் பேரன்பைத் தருகிறேன்.

நன்றி.

---------------------------------------------------------------------------------------------------------------------

Anar speech | அனார் | Poet Atmanam Awards 2017

https://www.youtube.com/watch?v=Mtu8Q9c9gcA
----------------------------------------------------------------------------------------------------------------------

( 30.09.2017 இல் சென்னை கவிக்கோ அரங்கில் நடைபெற்ற கவிஞர் ஆத்மாநாம் விருது விழா ஏற்புரை )







No comments: