Saturday 8 January 2011

அனாரின் மனக்குகை ஓவியங்களை முன்னிறுத்தி சில குறிப்புகள்:





- ஓட்டமாவடி அறபாத் (இலங்கை)

-------------------------------------------------------------------------------------------------------------

கவிதையின் சாசுவதம் அதன் மொழியிலும் பாடும் திறனிலும் நித்யம் பெறுகின்றது. கவிதைக்கு வரைவிலக்கணமொன்றை வகுத்தளித்த பசுவய்யாவின் ஓர் கவிதை என் நிiனைவில் முட்டுகிறது.

'உன் கவிதையை நீ எழுது / எழுது உன் காதல்கள் பற்றி கோபங்கள் பற்றி எழுது உன் ரகசிய ஆசைகள் பற்றி நீ அர்ப்பணித்துக்கொள்ள விரும்புகின்ற புரட்சி பற்றி எழுது / உன்னை ஏமாற்றும் போலிப்புரட்சியாளர்கள் பற்றி எழுது / சொல்லும் செயலும் முயங்கி நிற்கும் அழகு பற்றி எழுது / நீ போடும் இரட்டை வேடம் பற்றி எழுது / எல்லோரிடமும் காட்ட விரும்பும் அன்பைப்பற்றி எழுது / எவரிடமும் அதைக்காட்ட முடியாமலிருக்கும் தத்தளிப்பைப்பற்றி எழுது / எழுது உன் கவிதையை நீ எழுது / அதற்கு உனக்கு வக்கில்லை என்றால் / ஒன்று செய் / என் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று / என்னைக்கேட்கமலேனும் இரு.' பசுவய்யா 107 கவிதைகள் பக் : 94. அனாரின் ஒட்டு மொத்த கவிதைகளையும் படிக்க நேர்கையில் ஏற்படும் மன அதிர்வின் லாகிரி அடங்க நாழிகை எடுக்கிறது. ஒடுங்கி அடங்கிப்புதைந்திருக்கும் பெண் மனத்தின் மனக்குகை ஓவியங்கள் கவிதை என்ற சட்டகத்தினுள் உயிருடன் ததும்பும் அற்புதத்தை அனாரின் கவிதைகள் நிகழ்த்திக்காட்டியிருக்கின்றன.

பெருகிப்பெருகிப்பாய்ந்தோடும் நதியின் சௌந்தர்ய லாவண்யங்கள் அவர் கவிதை என்ற மாயக்கண்ணாடியில் குமிழியிட்டு தெறிக்கின்ற பேரழகே அலாதி!

வரையறுக்கவியலா பிரபஞ்ச நியதிகளை மீறுவதில் அனாரின் கவிதைகள் ஜெயம் பெற்றுள்ளன. அர்த்தம் பொதிந்த வாழ்வின் வசந்தங்களை காவு கொண்ட இருளை வன்மத்துடன் துரத்த எத்தனிக்கும் கவிதை முகத்தில் வர்ணக்கனவுகளும் தீர்க்கமான தன்னம்பிக்கையும் மின்னித்தெறிக்கின்றன. அர்த்தச்செறிவுடனும் மொழியின் அற்புதத்திலும் விபரிக்கவியலா உணர்வோவியங்களை அவர் கவிதைகள் தீட்டுகின்றன.

ஆண்களால் காவு கொள்ளப்பட்ட பெண்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்கும் எத்தனத்தில் அவர் தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் 'மண் புழுவின் இரவில்' புலப்படுகிறது.

'நான் தனித்த மண் புழு / சிறுகச்சிறுக நீளுகிறேன் / தொடந்து நீளமாக வெள்ளை நூல் தெரியும் வரை..' பக்: 17 அனாரின் படிமங்கள் நம்மை திகைப்பூட்டுகின்றன. வெள்ளை நூல் - அதிகாலை, கறுப்பு நூல் - இரவு, இது நோன்பு கால அதிகாலை ஸஹர் உணவின் நேரத்தை கணிப்பிட அல் குர்ஆன் விளக்க விரும்பும் உவமானம். கவிதையின் அடித்தளத்தில் அனாருக்கு இது போன்ற படிமங்கள் எதேச்சையாக பொருந்தி வருவதை அவதானிக்க நேர்கிறது. இது தமிழ் கவிதைக்கு ஒரு புதிய பாய்ச்சலை நகர்த்தியுள்ளது.

'நடுகல்லென முது மரத்து அடி விளங்க / அதனருகே நீளத்துளிர் எறிந்து / காற்றில் சுகித்திருக்கு புதிதொன்று' என திருமாவளவன் பாடுவதைப்போல் மிகுந்த தன்னம்பிக்கையுடன் தனது இலட்சிய வேட்கையை பாடும் கவிதைகள் அனாரின் தொகுப்பில் மிகுந்திருக்கின்றன.

ஓலியை திராட்சை ரசமாய் அருந்தி முத்தங்களால் மாயப்புரங்களை நிருமாணிக்கும் அற்புதங்களை நிகழ்த்துகின்ற அதிசயம் கவிதைக்கு மட்டுமே வலாயப்பட்டது. தஸ்லீமா நஸ்ரின் அழையாத மணியில் உருகுவதைப்போல் அனார் குரல் என்ற நதி அல்லது திராட்சை ரசம் கவிதை ஊடாக வெளிப்படுத்துகின்றார். உலகத்து மகளிரின் உணர்வுகள் ஒரு நேர் கோட்டில் வந்து சந்திப்பதை இங்கு அவதானிக்க முடிகிறது. கடல் திறக்கும் சாவிகள் பத்து விரல்கள் என்ற அனாரின் கற்பனையுள் வானம் பூனைக்குட்டியாகி கடலை நக்கும் அதிசம் நிகழ்கிறது.

அவர் பிச்சியாகி பருவகாலங்களை சூடித்திரியும் கடற்கன்னியாகி கவிதையை பெரும் அட்சய பாத்திரமாக்கி விடுகிறார். அள்ள அள்ளக்குறையா பெண்மனத்தின் மென்னுணர்வுக்கனவுகள் அனாரின் கவிதைகளில் சுதந்திரமாக பறக்கின்றன.

அனாரின் கவிதைகள் அதிகம் அழகியல் உணர்வு சார்ந்த தளத்தில் நின்று கணிப்புப்பெற்றாலும் உள்ளொடுங்கி அவர் பேசும் அரசியலும் ஓர்மம் மிக்கது. மேலும் சில இரத்தக்குறிப்புகள், கோமாளியின் கேலிப்பாத்திரம் போன்ற கவிதைகள் சம கால அரசியல் பம்பாத்துக்களையும் இரத்தம் தோய்ந்த வாழ்வியலையும் அழுத்தமாக பேசுகின்றன. கூத்தாடிகளான அரசியல்வாதிகளின் கேலிப்பாத்திரங்கள் நமது சூழலில் இன்னும் பெருகிக்கொண்டுதான் இருக்கின்றன. பெண்ணின் மாதாந்த உதிரம் குறித்து ஆரம்பிக்கும் கவிதையை ஓர் அவலமான தேசத்தின் இரத்தக்குறிப்புகளுடன் அனார் பொருத்தி முடித்திருக்கின்றார். ஓர் இஸ்லாமியப்பெண் இது குறித்து எழுதலாமா என்ற முட்டையில் மயிர் பிடுங்கும் விமர்சனப்பெருமக்களின் ஐயங்களுக்கு புனித குர்ஆனும் நபிகளாரின் வாழ்வியலும் பெண்ணின் மாதாந்த உதிரம் குறித்து வெளிப்படையாக பேசி ஒரு மருத்துவத்தெளிவை வழங்கியிருப்பதை படித்துப்பார்க்க வேண்டும் என சிபாரிசு செய்கின்றேன்.

அனாரின் கவிதைகள் அதிகம் கணிப்பைப்பெறுவதற்கு காரணம் அவர் கையாளும் கவிதை மொழியும் கவிதைகளின் உட்கிடக்கையில் படிந்திருக்கும் உணர்வுக்கதம்பங்களும்தான். சேரன் குறிப்பிடுவதைப்போல் 'திரும்பத்திரும்ப படிக்கிற போது வேட்கையும் காதலும் மேலெழுகின்றன. தனிமையும் காத்திருப்பும் எரித்தாலும் ஊடல் சுடர் விடுகிறது.'

மொழியின் அழகியலுக்கோர் அணிகலனாக நிறங்களாலானவனைக் காத்திருக்கிறேன், தணல் நதி, எனக்குக் கவிதை முகம், ஒளியில்லாத இடங்கள், பருவ காலங்களைச்சூடித்திரியும் கடற்கன்னி போன்ற கவிதைகளை குறிப்பிடலாம். சல்மாவின் பச்சை தேவதை, குட்டி ரேவதியின் ஓலம் போன்றவை பருவ காலங்களைச்சூடித்திரியும் கடற்கன்னியை நினைவூட்டுகின்றன.

'எமிலி டிக்கின்சனின் கண்ணாடியில் மிதக்கும் மிம்பம் தொகுப்பில் ஒரு கவிதை. வாளேந்திய ஒரு சொல் இருக்கிறது / ஆயுதமேந்திய ஒருவனை தாக்கக்கூடியதாய் / சட்டென ஊமையாகிறது / தனது கூரிய அசைகளை வீசியெறிந்து விட்டு'

அனாரும் எமிலி டிக்கின்சனைப்போல் மொழி என்ற கூரிய ஆயுதத்தால் கவிதையை எறிந்து விட்டு சலனமற்று காத்திருக்கின்றார்.

கனவு - இரவு - நிழல் மூன்று உணர்வுகளின் தளங்களும் மனித வாழ்வின் அர்த்தம் பொதிந்த நிச்சயமற்ற ஆனால் தவிர்க்க முடியாத அம்சங்களாகி விடுகின்றன. அனாரின் கவிதைகளில் மிகுதமாக இவைகளை காணமுடிகிறது. அனாரின் முதற்தொகுதி ஓவியம் வரையாத தூரிகை இலங்கை அரசின் சாஹித்ய மண்டலப்பரிசும், வடக்கு கிழக்கு மாகாண அமைச்சின் இலக்கியப்பரிசும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. எனக்குக் கவிதை முகம் இவரின் இரண்டாவது தொகுதி காலச்சுவடு வெளியிட்டுள்ளது.


( தினகரன் வாரமஞ்சரி - கூராயுதம் ஜன 13, 2008 )


-----------------------------------------------------------------------------------------------------------------------------------

No comments: