Saturday 8 January 2011

'றபான்' இசைக்கின்ற முதியவரின் கானலோவியம் போன்றது 
அனாரின் கவிதை முகம்


- மாரி மகேந்திரன் (இலங்கை)
-------------------------------------------------------------------------------------------------------------

மண் புழுவின் இரவு, குரல் என்ற நதி அல்லது திராட்சை ரசம், பிச்சி, இல்லாத ஒன்று, வண்ணத்துப்பூச்சியின் கனாக்காலக் கவிதை, மேலும் சில இரத்தக் குறிப்புகள், காற்றின் பிரகாசம், பகிர்ந்துகொள்ளாத மாலை, எட்ட முடியாத அண்மை, பெண்பலி, உரித்தில்லாத காட்டின் அரசன், அரசி, மின்னல்களைப் பரிசளிக்கும் மழை, காதலை கொல்லும் தேவை, வெயிலின் நிறம் தனிமை, மனமந்திரம், இருப்பின் பின்னால் வாழ்வின் வெளி, கோமாளியின் கேலிப்பாத்திரம், நிறங்களானவளைக் காத்திருக்கின்றேன், எனக்கு கவிதை முகம், நான் பெண், தணல் நதி, பூக்க விரும்புகின்ற கவிதை, அறைக்கு வெளியே அலையும் உறக்கம், மாற்ற முடியாத வலி, நிழலின் அலறல், வரு(ந்)துதல், வெறித்தப்படி இருக்கும் கனவு, ஒளியில்லாத இடங்கள், விலகி நிற்பவன், பருவ காலங்களைச் சூடித் திரியும் கடற்கன்னி. இது அனாரின் எனக்குக் கவிதைமுகம் தொகுப்பிலுள்ள 31 கவிதை குழந்தைகளின் கூட்டு மொத்த தலைப்புகள் 54 பக்கங்கள் விரயும் மனித வாழ்வின் நெளிவை மண் புழுவின் மொழியில் கிளறி கிளறி வாழ்வின் ருசியைப் தேடி அலைய செய்கின்றது. அனாரின் தொகுப்பை ஒரே நேரத்தில் அப்படி ஒன்றும் அவசரமாக படிக்க முடியவில்லை. முதல் கவிதை தரும் காட்சி படிமமும் அதன் விசாலமும் இத்தாலி திரை மேதையின் சினிமா பரடையசோவையும் விந்து நூலின் சாமர்த்தின் இருட்டில் விடியும் காமத்தின் தீராத வேதனையையும் ஞாபங்களில் கொப்பளிக்க வைக்கின்றது. மண் புழுவின் இரவில்.

'இந்த பொழுதை ஒரு பூக்கூடையாய் நிரப்பி தூக்கி நடக்கின்றேன்
நீளமான நூலாய் தெரிகின்றது இரவு
நான் தனித்த மண் புழு
சிறுகச் சிறுக நீளுகின்றேன்
தொடர்ந்து நீளமான வெள்ளை நூல் தெரியும் வரை

'அனாரின் மொழி வெறும் வார்த்தைகளோடு நின்று விடுவதில்லை உலக சினிமாவின் மிக உன்னதமான ருஸிய திரை மேதையின் தீராத திரைப்படிமத்தை இன்னும் தேடி திரிய செய்யும் அந்தரே தார்க்கோர்ஸ்கியின் கை வண்ணம் அனார் கவிதைகளை படிக்கப் படிக்க குகை மனநிலையில் ஒரு ஈமப் பிசாசை போல் மனத்தின் உள்ளடுக்கை ஊடுருவில் சென்று தைக்கின்றது. நமக்குள் கவிதைகள் ஊற்றையும் அது தூண்டிவிடுகிறது நல்ல படைப்பு படிப்பாளியையும் படைப்பாளியாக்கி விடும் என்பதுக்கு சினிமா மட்டுமல்ல மிகச் சிறந்த கவிதைகளுக்கும் இது பொருந்தி போவதை அனாரின் எனக்கும் கவிதைமுகம் தெரிவிக்கும் இன்னொரு முக்கியமான செய்தி.

'உனக்குள்ளேயே சுருங்கி கொள்வாயா
அமைதி வெளியே இருக்கிறது
அமைதியான நிழல் தான் உள்ளே இருக்கிறது'

என்ற ஐரீஸ் முர்டாச்சின் வரிகளுடன் அனார் கவிதைகளுடன் பின் தொடரும் போது வெளியும் இயற்கையும், காதலும் வெளியில் இல்லை எல்லாம் உள்ளேதான் ஒழிந்து கிடைக்கிறது. அன்பும் பரிவும் நேசமும் காதலும் தான் உள்ளே படிந்து கிடக்கும் பறவையின் கறுத்த சிறகை பிடித்து இழுத்து வருவது கவிதையின் அன்பு கரங்கள் தான். அமைதியும் சந்தோசத்தையும் மனித இருப்பின் மேல் நம்பிக்கை எனும் உடன்படிக்கையும் மெது மெதுவாக கற்பிதம் செய்வதோடு, இயற்கையும் பற்றிய பார்வையை அனாரின் மிக அற்புதமான படிமங்களையும் குறியீடுகளும் வாழ்க்கையை இவ்வளவு அந்நியோனியமாகவும்; ஏகாந்தமாகவும் காதலாகவும் பருகிவிட எப்படி இந்த அனாருக்கு மட்டும் முடிகின்றது. என்பதற்கான வியப்பும் என்னை விட்டப்பாடில்லை. முதன் முறையாக ஒரு கவிதை தொகுப்புக்கும் எனது மனதின் அமைதியின்மையோடும், நிறம் திரிந்த வண்ணத்தோடும் பகிர்தலின் மூலம் உள்ளே ஆழ்ந்து கிடக்கும் எனது முகத்தையும் தேடி விடலாம் என்பதற்கான உத்தரவாதத்தை 'இந்த எனக்கும் கவிதை முகம்' ஒரு புரிப்படாத மன வலுவை தருகின்றது. இதுவரையும் உயிர் எழுத்து பக்கத்தில் மட்டுமே இவரின் கவிதைகளை எப்போதாவது அவசரமாக படித்து திருப்பிய போது இப்போது தொகுப்பில் படிக்கும் போது நிறைய வித்தியாசம் தெரிகின்றது.

ஒரு பக்கம் நண்பர் ஆத்மாவின் தாளம் லயம் தீராத நேசம் பேசும் கவிதை குரலின் ஐ அலைவரிசையில் சப்தம் என் அடி மனசின் ஞாபங்களை அவரின் சோகம் ததும்பும் கவிதை வாசிப்பு நிஜமாகவே அனாரின் கவிதைகளில் படிக்கும் போது சட்டென்று மின்னியது.... பின்பு ஆத்மாவின் லயிப்பு தரும் குரலில் தேங்கியிருக்கும் பரிவை காதுகளில் ஞாபகங்கள் மனதில் தேக்கி வைத்திருக்கும் மகிழ்வுடன் எனக்குள் அனாரின் அன்பு மொழிகளின் குறிப்புகள் மீண்டும் மீண்டும் வாழ்வை இனி திரும்பி பார்க்க சொல்கின்றது.

'கறிவேப்பிலை பொறித்த எண்ணெய் மனம் பரவ
சினுங்கும் மணிகளின் இசையோடு
மாலையின் ருசியை கூட்டுகின்றான் கடலை வியாபாரி'

வாழ்வை இவ்வளவு நெருக்கமாக தரிசிக்கும் அனாரின் மற்றோரு கவிதையில் இந்த சமையலறையைப் பற்றிய பெண்ணின் மொழியில் கேட்பதற்கு என் அம்மாவின் காலம் தீராத சமையல் அறையில் செத்து தீர்ந்த எத்தனையோ பெண்களின் ஒட்டு மொத்த குரல் தான் நினைவுக்கு வருகின்றது. இந்திய சமையல் முறையை என்பதே ஒரு வகையான நிறைய வேலைப்பாடுகளுடன் பின்னப்பட்ட அவஸ்தை தான். ருசியைப் மட்டும் சுகிக்கும் மனித ருசிக்கு முன்பு காலம் காலமாக பெண்ணின் சவச்சாலை போல நம் சமையல் கூடாரங்கள் வெப்பமும்இ வியர்வையும் இருந்தாலும் அதில் பெண்ணை கட்டி வைக்கும் வகைகளுடன் பின்னப்பட்டதாக இருப்பதன் பிண்ணணியைப் நாம் ஏன் உணர்வதில்லைஇ காய்கறிகள் நறுக்கி சின்ன சின்ன விசயங்களில் ருசியைப் மட்டும் தேடும் நாவுக்கு பின்பு ஒரு ஆத்மாவின் ஓலம் மட்டும் பரிமாறும் போதும் கூட அந்த வெட்கை தெரிவதில்லை என்பது மட்டும் பெண்ணின் நேசபூர்வ அன்பை வெளிப்படுத்தும் ஒரு வகையான கை நேர்த்தி தான்.

'ஆணையிடுகின்றேன் சூரியனுக்கு
ஒரு இனத்தையை விழுங்கி கொண்டிருக்கும்
சமையலறையின் பிளந்தவாயைப் பொசுக்கிவிடுமாறு
பெரும் மலைகளை நகர்த்தி தளர்ந்துவிட்ட
மூதாட்டிகளின் பாரித்த பெரு மூச்சுகளை
வருடிவிடுமாறு பறவைகளை பணிக்கின்றேன்'

இந்த ஏக்கம் எனது அம்மாவின் வலிகளையும், நினைவுகளையும் அவரின் கஸ்டங்களையும் மனிதனாக என்னையும் யோசிக்க செய்வதோடு உண்பதற்கும் ருசிப்பதற்கும் மட்டும் தெரிந்த ஒரு ஆணாக இருப்பதில் தான் எத்தனை வகையான குற்றவுணர்வு எழுகின்றது. ஆணின் கீறல் விழுந்த இசை நாடாவில் இப்போதெல்லாம் நல்ல சங்கீதம் இது போன்ற மனம் தீராத முரண்களினால் முழுமையை தொலைத்துவிட்ட உடைந்த கண்ணாடியாக ஆண் ஆகிவிட்டதன் நூற்றாண்டில்இ கொஞ்சம் பெண்ணின் சமையல் கூடாரத்திலிருந்து அவளின் இதயத்தின் அழும் பக்கத்தையும்இ உழைக்கும் நம் தோட்டத் தொழிலாளி பெண்களின் கறுமை படிந்த உதிர்ந்த விரல்களையும் தேயிலை பறித்து, பறித்து ரத்த சாயத்தின் கொப்பளித்த உழைப்பை மட்டும் இந்த நாட்டுக்கு தந்த எழும்பு கூடுகளாய் போன நம் சகோதரிகளினது வாழ்வையும் நாம் சிறிது நேரம் நின்று நிதானித்து திரும்பி பார்ப்பதோடு, பாசம் அறுந்த வாழ்வின் மீட்டெடுக்கும் காலத்தோடு கை கோர்ப்போம்!

'ஆதி மந்திரமாய் உறைகின்றன
கடல் திறக்கும் கள்ளச் சாவிகளென
பத்து விரல்கள்
நிலவும் நனையும் உயரத்தில்
தெறிக்கின்றது மா கடல்
மரம் முழுக்கக் கனிகள் குலுங்கும்
உச்சாணிக் கொப்பில்
மயங்கி படமெடுத்தாடுகிறாய்
பாரம்பரியம் கொண்டாடும் பாணனின் இசை.......'

பிச்சி என்ற கவிதையின் ஊடறுந்து செல்லும் காதல் சங்கமத்தின் ஒரு பெண்ணின் மொழிகள் மிகவும் சுய தணிக்கையோடு தான் பாலியல் பற்றி பேசுவதற்கு சுவர்களில் முறைக்கும் கறுப்பு விழிகளுக்கு பயந்து அடக்கி வைக்கும் நமது தலைமுறையின் இறுதி நேரத்திலும் அனாரின் முழுமையைப் வெளியே தள்ள முடியாத அவஸ்தையைப் இந்த கவிதையின் சொற்களும் அனுபவமும் நம்மை திகைக்க வைப்பதோடு, தழிழக நவீன எழுத்தாளர் ஜே.பி. சாணக்கியாவின் பாலியல் பற்றிய சூனிய எழுத்தோடு அனாரின் ஓரிரு கவிதைகளும் இணையாக ஒப்பிட முடிவது ஏன் என்று தெரியவில்லை. இவரின் உள் அறைகளில் குவிந்து கிடக்கும் கொத்து கொத்தான அனுபவ மேடுகள் எதிர் காலத்தில் கிழக்கு மாகாணத்தில் போர் சுமையோடு வெடிகுண்டுகளுடனும் அதிர்வை அன்றாடம் வாழ்வாக உடையும் உளவியலோடு ஒரு சிறப்பான நாவலையும் நவீனத்தையும் அனாரினால் மட்டுமே படைக்க முடியும் என தோன்றுகிறது.

நான் முதலில் எழுதியது போல நவீன சினிமாவின் காட்சி படிவங்களில் தேக்கப்பட்ட பிரக்ஞையுடன் அனாரின் கவிதைகளின் காட்சிப் புலப்படும் தன்மையை நினைக்கும் போது இவர் ஏன் நவீன சினிமாவையும் தன் அனுபவத்தையும், ஆழத்தையும் பயன்படுத்தி வெளிப்படுத்த முனைய கூடாது என்பதற்கான கேள்விகளுடன் அனாரின் கவிதைகளை தொடர்ந்து படிக்கும் மனம் தீராத வாசிப்பு மட்டும் அடங்கவில்லை, அவரின் கவித்துவம், குழந்தை போன்ற உரையாடலும், அவரின் முகம் மட்டுமல்ல உணர்வுகளும் இதயமும் வாழ்வும் கூட கவிதை என்று தான் எனக்கு சொல்ல தோன்றுகின்றது. அவரை பற்றி அவர் கூறுவதில் ஒரு உண்மை புலப்படுகினறது.

நாம் சாம்ராஜ்ஜியத்தில் இருந்த படியே
கைகள் இரண்டையும்
மேல் உயர்த்தி கூவுகின்றேன்
நான்
நான் விரும்புகின்ற படியான பெண்
நான் எனக்குள் வசிக்கும் அரசி'

தன்னை பற்றிய உள்ளாந்த அந்த தீர்க்கமான உள்ளம் ஒரு சூபி மகானின் முதிர்ந்த இதயத்தைப்போல அது இன்று நமக்கு கவிதைகளை தந்தப்படி வாழ்வின் பல்வேறு பெண் கொள்ளும் பாத்திரங்களையும் சுமந்துகொண்டு அனாரின் இந்த தனித்துவமான தூரிகை வரையாது ஓவியத்தை போல மனதின் அடுக்களிலும் குழந்தைகளோடு அன்றாடம் வாழ்வில் பெண்கள் பங்கேற்கும் நிர்பந்தங்களோடும் சமையல் மற்றும் நேசபூர்வமான கலையின் உன்னதமான காதலோடும் நாம் அனாரின் கவிதைகளையும் இந்த அவசர யுகத்தில் தரிசிக்க முடிவதில் பேரானந்தம். அனாருக்கு தன் வாழ்வில் மேலும் தன்னை பற்றிய ஏகாந்த இயற்கையின் மீதும்இ சக உயிரின் மீதும் தான் கொண்டிருக்கும் நிறைய காதல்தான் மூலக்காரணம் என்பதை மட்டும் அவர் கவிதைகளின் இலகுவாக தரிசிக்கமுடிகின்றது. இதுதான் அனார் கிழக்கு மாகாணத்தில் மறக்க முடியாத மனசாட்சியானார். அலறி, ஓட்டமாவடி அரபாத் ஆத்மா போல இவரின் தனித்துவம் பெண்கவி என்பதனால் சிறிது மாறுப்பட்டது. அந்த மாறுப்பட்ட வாழ்வின் இருந்துதான் இவரின் நேசம் தமிழ் உலகம் முழுக்க தொடவேண்டும், அது தொட்டப்படி தான் இருக்கின்றது. இவரின் கவிதைகள் பிரெஞ்சு, ஆங்கிலம் சிங்களம் போன்ற மொழிகளில் மொழிபெயர்த்து ஒரு பரந்த தளத்தில் நம் தமிழக கவிதையாக அறிமுகம் செய்யவேண்டியதன் தேவை தீர்க்க முடியாதது. மலையாளத்திலும் அனாரின் கவிதைகள் மொழியாக்கம் செய்யப்படவேண்டும். தமிழில் எங்களுக்கும் இப்படி ஒரு கவி பிறந்திருக்கும் செய்தியை உலகிற்கு சொல்வதற்கு முயல வேண்டும். தமிழோடு மட்டும் அனாரின் கவிதை அனுபவம் தீர்ந்து விடுமா?

வாழ்வு அந்த அன்பு பெண் அனாருக்காக மட்டும் இத்தனை இரகசியங்களை எப்படியெல்லாம் திறந்து வைத்திருக்கின்றது? மொழியின் அழகிய வண்ணத்தை அனாரின் கவிதைகள் தன் வயிற்றில் சுமக்கும் சிசுவை போல சுமந்து எழுதுவதனால் தான் அன்பு பற்றி படரும் ஏக்கங்களையெல்லாம் அனாரின் கவிதை எப்படியோ ஒரு அன்பு மொழி தீராத தாயின் பரிவுடன் நம்மையும் அன்பில் மூழ்க வைக்கின்றது.

( வீரகேசரி - உயிர் எழுத்து மே 18, 2008 )


-----------------------------------------------------------------------------------------------------------------------------------

No comments: