Friday 7 January 2011

நான் விரும்புகிறபடியான பெண்



- கௌசல்யா (கனடா)
-------------------------------------------------------------------------------------------------------------

இந்த உணர்தலை, புரிதலை வரலாற்றிலும் நடைமுறையிலும் கண்டடையும் தன்நிலை பெண்ணிடத்தில் பரவலாவது முக்கியமாக இருக்கிறது. இதுவே ஒருத்திக்குள் முனைப்பாகக் கூடிய முதல் விடுதலையுணர்வு. இத்தகைய முத்தாய்ப்புகளும் அறிகுறிகளும் தமிழுலகில் பெண்ணிடத்தில் வெளிப்படத் தொடங்கிவிட்டன. அவள்கள் தாங்கள் விரும்புகிறபடியான பெண்ணாக, அதிகபட்சம் மனிதமாகக்கூட வாழ முடியாமற்போனதும், போகிறதுமே வரலாறு. எல்லா நிலையிலும் யார்யாரே விரும்புகிறபடியான பெண்ணாக இருத்தலே இருப்பாய் தொடர்கிறது. இந்நிலையிலேயே ஒருத்தி தன்னைத் தன்னிலையில் உணர்வதும், தன் உடல், உள இன்பதுன்பம் சார் உணர்வை, மொழியைக் கொண்டாடுவதும் அதைப் பொதுப்பரப்பில் உணர்த்த முற்படுவதும் அவளைப் போன்றவர்களின் விடுதலை நோக்கிய முனைப்பே. இன்று அதிகமாக வெளிவரும் எழுத்துக்களில் இவ்வாறே பெண்ணிலை அடையாளமாகிறது.

ஈழத்தின் (பண்டைய இலங்கைக்கு ஈழம் என்ற பெயர் இருந்திருப்பதால் இதை முழு நாட்டுக்குமான பெயராகவும் கொள்ளலாம்.) கவிதைப் போக்கில் பெண்கவிகளின் வீச்சு அதிகப்பட்டிருக்கும் காலமிது. அவற்றிற்கான முக்கியத்துவமும் பரிமாணங்களும் சூழலைப் போலவே தனித்துவமானவை. அவற்றுள்ளே சமகாலத்தில் எந்தச் சேதிகளையும் பல கோணங்களிலும் பரிணாமங்களிலும் கூறக்கூடிய கவிதைகள் அனாரிடம் கைவந்துள்ளன. 'எனக்குக் கவிதை முகம்' தொகுப்பினது வாசிப்பு கண்ணுக்குப் புலப்படாத காட்சிகளிலும் வெளிகளிலும் மிதக்கின்றது. இவை அண்டங்களையும் பருவகாலங்களையும் தாண்டியும் அமுங்கியும் படிமங்களாய் ஊடுபாய்கின்றன. பழக்கப்பட்ட மொழியும் படிமங்களும் ஆயினும் அவை கோர்பட்ட நேர்த்தி, சேதியின் மையப்புள்ளியை சுற்றி காட்சிகளாய் விரித்துச் செல்லும் கவிதைகள் பலதைத் தந்துள்ளது.

தனியொரு கவிதையுள்ளான வாசிப்பும் தொகுப்புக்குள்ளான வாசிப்புக்கும் தொடர்பு பல இடங்களில் முரணாகலாம். ஆனால் தொகுதியுள்ளான வாசிப்பின் மூலமே பொதுமைப்பாடான கூறுகளைக் கண்டடைய முடிகிறது. இதன்படி கவிஞரின் கனவுச் சூழல்சார் பதிவுகளே படிமங்களாயும், உணர்வுகளாயும் பரவியுள்ளன. அவற்றையும் வலிந்து கூறும் பாசாங்குத் தனம் அற்றவையாய் நிர்ப்பந்தமற்றவையாய் மிக இயல்பாய் 'வண்ணத்துப் பூச்சியின் பிரமாண்டமான கனாக்காலக் கவிதை' களாக்கியிருக்கிறார்.

நாளாந்தம் வன்முறைகளின் நாடாயிருக்கும் கவிஞரின் சூழலில் மானுடம் கனவுக்குமட்டும் உரியதோ? அன்றேல் நிகழ் சூழலின் கொடுந்தகிப்பிலுந்து தப்பும் விருப்பில் பிரக்ஞையற்ற பெரு வெளிகளிலும், காற்றிலும், காமத் தேடலிலும் கவிமனம் சஞ்சரிக்கிறதோ எனத் தோன்றுகிறது. ஏனெனில் நாளாந்த உயிர் வாதைகளின் அலறல்கள் பற்றி ஒரு கவிதை முழுவதுமாகப் பேசுகிறது. இன்றய நிலையில் பரிணாம வளர்ச்சியால் எந்த மாற்றத்தையும் காணாத வன்மம் நிறைந்துள்ளது மானுடவளர்ச்சி. விலங்குத் தனமே வாழ்வை ஏதோ ஓர் உயரத்திற்கு கொண்டு செல்கிறது. நேரடியான மனிதப் போர்களிலும் மறைமுகமான வணிகப் போர்களிலும் இதுவே சாத்தியப்பட்டிக்கிறது. இக்கொடுமைகளை பெண்ணுணர்வில் அணுகியிருக்கிறார் அனார்.

'இரத்தம் அதிகம் சிந்தியவர்கள்
அதிக இரத்தத்தைச் சிந்த வைத்தவர்கள்
தலைவர்களால் கௌரவிக்கப்பட்டும்
பதவி உயர்த்தப்பட்டும் உள்ளார்கள்'

இன்றைய ஈழ அரசியல் இதுவாயிருப்பினும் வேட்டை சமுதாயத்திலிருந்து அரசாட்சிக் காலங்களிலும் நவீன மக்களாட்சியிலும் கூட இதுவே நடைபாதை. ஒடுக்கப்படும் ஒரு மக்கள் கூட்டத்தின் பாதுகாப்பு, நலன், உரிமைகளுக்காக சிந்தப்படும் குருதிக்கு மானுட அறம் கூறும் சிறப்பும், வீரமும் மக்கள் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது. அங்கு சிந்திய குருதி புனிதமாகவும் காட்டப்படுகிறது. கனடாவின் பல பாடசாலைகளுக்கு போர்த் தளபதிகளின் பெயர்கள் இடப்பட்டுள்ளமை நகைமுரண். மறுதலையாக ஒடுக்கும் அதிகார மையங்களின் எந்த வடிவத்திலான குருதி சிந்தலும், சிந்த வைக்கப்படலும் வன்மத்தின் இரத்த வாடையெனவும், வேட்டையின் இரத்த நெடியொடும் தெருக்களிலும் கல்லறைகளிலும் காய்ந்துள்ளன. இத்தொடர்ச்சிகளில் 'இரத்தம் கருணையை, பரிதவிப்பினை,' ஆதரவினை, மானுடத்தை உலகப் பொதுமையில் அவாவுகின்றது. வன்முறைக்குக் கூட அறமுளதோ எனும் கேள்வியைத் தவிர்க்கமுடியவில்லை. போராட்டங்களுக்கும்; புரட்சிகளுக்குமான அறன் என்பதும் பல நுண்ணரசியலை மூடிவிட வல்லதாயுள்ளது. இந்த வாதங்களுக்குள் இடறாமல் கண்ணில் படியும் வலியை அளவு மாறாது மௌனப் பிரார்த்தனையாக உட்கூவுகிறது கவிமனம். அவ்விரத்தம் சாவின் தடயமாய் அதிகார அரசியல்களால் வாதைகளில் பீறிடுவதைக் கடிந்து கொள்கிறது.
'பெண்' அடையாளம் சமூகத்தில் எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகளை இத்தொகுப்பும் பேசியிருக்கிறது. இக்கவிதைகள் ஓங்கிப் பதித்த காத்திரமான படிவுகள்.

பேசப் பேச தீரா முடிவிலியாய் நீண்டு தொடரும் பெண்ணொடுக்குமுறையின் கையறு நிலையின் யதார்த்தமாய்...

'என் முன்தான் நிகழ்கின்றது
என் மீதான கொலை'

நாளாந்தம் எத்தனை கொலைகளைத் தாண்டி நகர்கின்றன 'பெண்' அடையாளம் கொண்ட உயிரியின் பொழுதுகள். உடலால், உணர்வால், மொழியால்... என தன்மீதான தொலையைப் புரிந்தவர்களுக்கே பணிபுரிந்து அவர்களுடனேயே வாழ்வைத் தொலைக்கும் பேறு வேறு எந்த உயிரினங்களுக்கு வாய்த்துள்ளது? இது பற்றிய எந்தச் சுரணையும் மனித உறவுகளில் இல்லை. மனித உரிமை, முதலில் அடிப்படை உறவுத் தளங்களில் பேணப்பட வேண்டியதின் அவசியத்தை வசதியாய்க் கண்டுகொள்ளாது விடுகின்றோம்.;

'எவ்வேளையும் பிசகாமல்
நீ இருக்கிறாய் என்முன்
எப்போதும் இல்லாத ஒன்றென'

தன் இருப்பை நெருக்கலுக்குள்ளாக்கும் அதிகாரத்தை 'நீ இருந்தென்ன இல்லாவிட்டாலென்ன என்ன' என அஃறிணைப் பொருளாக அலட்சியப்படுத்துவதனூடு எதிர்ப்புக்களை பதிவாக்குகிறது இவ்வரிகள். ஒன்றுமே இல்லாத ஒன்றை ஒரேயொரு காரணத்தின் பொருட்டு பல பெண்களில் வாழ்வில் நிறுத்தியுள்ளது யதார்த்தம். என்னதான் சமரசங்களுக்கு உட்பட வாழநேரிடுனும் அலட்சியப்படுத்தல் மூலம் தன்வெளிக்குள் நெருங்கமுடியாதபடி எல்லை போட்டிருத்தலை நடைமுறையில் பல பெண்கள் கைக்கொள்கிறார்கள். உண்மையான புரிதலும் விருப்புமற்ற எந்த உறவுகளும் எல்லாக் காலங்களிலும் இல்லாத ஏதோ ஒன்றே.

உடலோ, உடமையோ, வலிகளோ
'பெண்ணுடையது என்பதனாலேயே
எந்த மரியாதையும் இருப்பதில்லை அதற்கு'

எந்தப் பிரயத்தனங்களும் இல்லாமல் இலகுவாகத் தூக்கியெறியும் இத்துணிச்சலுக்கு அவள் பெண் என்பதைத் தவிர அதிக காரணங்கள் தேவைப்படுவதில்லைப் பலருக்கு.

கணப்பொழுதுகள் ஒவ்வொன்றிலும் உறவுகளையும் அவர்சார் உடமைகளையும் பராமரித்துக் கொண்டிருக்கும் பெண்நிலை இறுதியில் எல்லாம் விலகிவிட்ட தனிமையை பெறுவதும் கூட அவர்களின் இருத்தல்கள் அவர்களுக்கானதல்ல என்பதே. வெளிப்படைக்கு வீடும் உறவுகளும் சூழலும் பெண் வெளிக்குரியனவாக அவளின் பிரசன்னத்தில் நிறைந்திருப்பனவாக காணப்படினும் அவற்றின் மீது உடமையாளராய் அல்லாது ஒரு பராமரிப்பாளருக்கு உள்ள உறவே காணப்படுகிறது. இறுதியில் தன்னிருப்பையும் வாழ்தலையும் தொலைத்த நிலையை இவ்வரிகள் சுட்டுகின்றன.

'தனிமையின் பள்ளத்தாக்கில் நானிருந்தேன்
காலங்களால் கைவிடப்பட்ட
ஒற்றைப் பட்டமரமாக'

அதிகாரம், வரையறுக்கப்பட்ட வெளி, வன்முறை, அவமதிப்பு இன்னபிறவாக தொடர் மனித உரிமை மீறல்களைப் பேசினும் காதலும் காத்திருத்தல்களும் குரலோசையை விதந்துரைத்தலுமான கவிதைகளுமே இத்தொகுப்பில் அதிகம். இது கவிதைச் சுதந்திரம் என்ற பொழுதிலும் கவிஞரின் இரண்டாவது தொகுப்பாயும் இருப்பதனால் பொருண்மைக் குறைவுடன் இன்னமும் வெள்ளி வீதியார், ஆண்டாள் நிலைகளைக் கடக்கவில்லையோ எனும் ஐயத்தைத் தோற்றுவிக்கின்றது. எனினும் ஒரு உயிரியின் வாழ்க்கை அன்றாடங்களில் வன்முறைகளிலும், பயத்திலும், கட்டளைகளுக்குள்ளுமான நிலையில் அதிலிருந்து தன்னை உயிர்ப்பிக்கும் கூறுகளை தன்விருப்பான வெளிகளில் கவிமனம் தேடியலைகிறது போலும்.

எந்தப்படைப்பாளியினதும் முதற்பதிவு அவரின் அண்மியசூழற் தாக்கமாயிருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. அவ்வகையில் பெண்படைப்பாளி அவர் வெளியில் தன்நெருக்கமான உறவினதும் வீடான உடன்சூழலையும் பதிவாக்குகிறார். அதுதான் படைப்பு நேர்மையும் அவசியமும் கூட. தன்நிலை பற்றிய தேடல் அங்கிருந்தே ஆரம்பிக்கிறது. ஆனால் அடுத்த பரப்பில் தேடலை முனைய வேண்டியது படைப்பு வெளியையும் இருப்பின் தேடலையும் கூட்டிச் செல்லும். இந்நிலையின் சாத்தியப்பாடும் தேவையானதே.

ஒவ்வொரு மொழியும் ஒரு இனக்குழுமத்தின் இரகசியங்களின் பூட்டுக்களிற்கான கடவுச்சொற்களாய் இருக்கின்றன. அவ்வழியில் பெண்மொழியும் அக்குழுமத்தின் வெளிப்பாடுகளை தமக்கேயான பார்வையில் பட்டறிவுகளையும் பயன்பாடுகளையும் மொழிகின்றன. ஆனால் அவர்களுலகிற்கு பரிச்சயமில்லாத குழுமம் அம்மொழிப்பயன்பாடும், அதன் தொனிப்பும் கூட எவ்வாறெல்லாம் இருத்தல் சிறப்பென்பதை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் அல்லது புகழ்;தல், இகழ்தல் நிலைகளில் தீர்மானிக்க முற்பட்டிருக்கின்றன. சுகிர்தராணி, குட்டிரேவதி, சல்மா போன்றவர்களின் வெளிப்படையான மொழிப்பாவனை ஏற்படுத்திய எரிச்சலும் அனாரின் 'பிச்சி' போன்ற கவிதைகள் 'மாதந் தவறாது இரத்தத்தைப் பார்த்து...' போன்ற வரிகள் ஏற்படுத்திய கோபங்களும் சாட்சியங்கள். இத்தொகுப்பின் முன்னுரையும் இதை வழிமொழிகிறது. 'உரத்த தொனியும் உயரும் கோபமும் சீற்றமும் இல்லாமல்...' நாசூக்காக வாளுறைக்குள் கனவுகளை நிரப்புவதை கிலாகிக்கிறது ஆண்மனம் (முன்னுரையில் சேரன்). ஆமாம், பெண் தன்னெதிர்ப்பை, ஆற்றாமையை, அழிவை எல்லாம் அமைதியான, கிசுகிசுப்பான தொனிகளில் வெளிக்காட்டினால் ஆண்மனம் எப்போதும் கிளர்ச்சியோடே இருக்கும். வரலாறு முழுவதும் இதுதானே கேட்கப்படுகிறது. தந்திரமான எதிர்ப்புக்கள் விரும்பப்பகின்றபோலும். அனாரின் மொழிக் கையாளுகையின் சிறப்பும் அத்தகையதொரு தளத்தைக் கொண்டுள்ளது. அது அவரின் கவிச்சிறப்பாயும் உள்ளது.

'இருப்பின் பின்னால் வாழ்வின் வெளி' எனும் கவிதை தன்னுரிமையான சுதந்திர வெளியை மொழியின் ஆட்சியால் பிரகடனப்படுத்துகிறது. 'காற்று' றோடு தொடர்புற்று மட்டும் பல முடிச்சுக்கள் இக்கவிதைகளில் விழுந்திருக்கின்றன. கவி காற்றைச் சூறையாடக் குறையாக 'காற்றின் பிரகாசத்தைக் கண்டேன்', 'காற்றைத் தின்னவிடுகிறேன்', 'காற்றில் வெளிப்படுமுன் பிம்பம்', காற்றிலிருந்து நீளும் நீர் விரல்கள்', காற்றின் முழுமயான அகங்காரம் நீ', காற்றின் முடிவற்ற அலட்சியம்' 'காற்றின் கிழிந்த ஓரங்கள்'... என காற்றின் பிரகாசம் பரவியுள்ளது.

மொத்தத்தில் எந்தக் கூறையும் கவிதையாக்கிடும் சூட்சுமம் அனாரின் மொழிக்குண்டு. பல கவிதைகள் சூக்குமத்தில் வெளியை, தனிமையின் இருப்பைக் கொள்ளும்வேளை, அதன் வரலாறு தூலத்தில் சடமாயும், உணர்வாயும் இடைவெளியற்ற எண்ணச் சந்தடிகளோடும் பொதிந்துள்ளது. மானிட உணர்தலை தூரத்தே விரிகின்ற வெளி ஒன்று வெட்டி ஓடுகிறது. கனாக்காலக் கவிதையாய் மட்டுமல்ல.

'நான் பாடல்
எனக்குக் கவிதை முகம்'

என்பது அனாருக்கு மட்டுமல்லாது இருப்பை வராலாற்றில் தேடிக்கொண்டிருக்கும் பல பெண்களுக்கான முகமாகவும் கவிதை உள்ளது.


( காலம் - மே 2009 )


-----------------------------------------------------------------------------------------------------------------------------------

No comments: