Friday 7 January 2011

அனாரின் கவிதை முகம் :
பெண்ணுணர்வு சார் கவிதைகளின் வீச்சம்



- எல். வஸீம் அக்ரம் (இலங்கை)

-------------------------------------------------------------------------------------------------------------

ஈழத்து தமிழின் நவீன கவிதைகளுக்குப் புதிய முகங்களைத் தருபவராக இருக்கிறார், அனார். என்ற கவிஞர் சேரனின் குறிப்புகளில் இருந்து அனாரின் கவிதைகளுக்கான குறிப்பை பகிர முனைவோம்.

வழமைக்கு மாறான கவிதை மொழியை அடையாளம் காணும் போது அது நமக்கு வியப்பையும் கிளர்ச்சியையும் ஏற்படுத்தும். இந்த வியப்பின் அத்திவாரம் ஈழத்து கவிதைப் பகைப்புலத்திற்கு முக்கியமான வளர்ச்சியை நிறுவிகிறது. இந்த நிறுவுகைகளுக்கு அனார் முக்கியத்துவமான படைப்பாளியாக பரிமாணம் தருகிறார். தனது முதலாவது கவிதை நூலுக்கு (ஓவியம் வரையாத தூரிகை) சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றதுடன் தமிழ்க் கவிதைப் புலத்தில் தனக்கான ஒரு கவிதை மொழியை ஓடவிட்டு வலம் வரும் இவர் கிழக்கிழங்கையின் கவிதைப் புலத்தில் முக்கிய விருட்ஷமாக வளர்கிறார். அனாரின் 'எனக்கு கவிதை முகம்' அவரது இரண்டாவது தொகுதியாகும்.

பெண்மொழி என்ற உணர்வுப் பகிர்வுக்கான களம் இன்று ஒரு முக்கிய வளர்ச்சியைக் கண்டு வருகிறது. அதிலும் கவிதை தனக்கான ஒரு தனித்துவமான வாசிப்பை ஏற்படுத்துகிறது. அண்மைக்கால கவிதைப் புலத்தில் சுல்பிகா, அனார், பஹிமா ஜஹான், கெகிராவ சஹானா, பெண்ணியா, கெகிராவ ஸூலைகா என்ற இஸ்லாமிய பெண் படைப்பாளிகளது பெண்ணியல் கருத்தியல்கள் அசாதாரண வீச்சை கொட்டி நிற்கின்றன. இவ்வொவ்வொரு படைப்பாளிகளது படைப்பின் சமூக கலாசார நாகரீக தாக்கங்கள் தொடர்பான நுட்பமான ஆய்வுகள் தனித்தனியாக செய்யப்படுமாயின் அதன் விளைவுகள் அபரீதமானதாக அமையும் என்பது எனது எதிர்வுகூறலாகும்.

இனி அனாரின் கவிதைகள் குறித்த ஒரு குறிப்புக்குள் நுழைவோம். அனாரின் கவிதை மொழி தனித்துவமானது. அவரது கவிதைப் பாடுபொருள்கள் ஏனைய தமிழ்க் கவிஞர்களின் மரபார்ந்த அல்லது தொடர் நிலைத் தாக்கங்களுக்கு அப்பாற்பட்டது. அதாவது நமது சூழில் எதிர்கொள்கின்ற அகப் புறக் காரணிகளுக்கு அப்பால் நின்று இது ஒரு மிகவும் நுண்ணிய உணர்வினதும், மிகவும் குறைந்த பரப்பில் அதீதம் நிறைந்த தன்னுணர்வுத் தன்மையானதுவாக அமைகின்றன.

குறிப்பாக பெண் என்ற அடிப்படைப் பால் கட்டமைப்பில் ஒரு புதுவிதமான உணர்வை மிகவும் வேட்கையும், காதல் நிறைந்ததுமான கவிதைகளைக் கொண்டு நிரப்புகிறார். கவிதைகளின் முதல் வாசிப்புப் புரிதலை இரண்டாவது வாசிப்புப்புரிதலிலிருந்து தனித்துக் காட்டுகிறது இவரது கவிதைகள். அதாவது கவிதையின் பேசுபொருள் விதம் இறுக்கமாக இருப்பதுடன் அதன் உணர்வுச் செறிவும் கவிதை நயமும் கவிதைகளுடன் எம்மை அந்த உணர்வுடன் அழைத்துச் செல்கிறது.

பெண் என்ற ஒரு மனித ஜீவி நீண்ட காலம் ஒரு வரலாற்றுப் போரின் விளைவாக இன்று தனது சுதந்திரத்தை அடைந்துள்ளாள். அது குறிப்பிடத்தக்க விகாரத்தின் விளைவாக இன்று ஒர அரசியலையே கட்டுவித்துவிட்டது என்ற மெய்யியலை அல்லது யதார்த்தைத்தை அனாரின் கவிதை முகம் நமக்குச் சொல்கிறது.

ஒரு பெண்ணுக்கான யதார்த்தம் நிறைந்த கனவுகள், காதல், ஏக்கம், பீதி, தன்நம்பிக்கை போன்ற உணர்வின் அத்தனை அம்சங்களுகம் இவரது கவிதைகளில் துலங்குகின்றன. ஓரிரண்டு கவிதைகள் வாசிப்பின் பொருள்கோடலை செம்மையாக தராவிட்டாலும் அனேக கவிதைகள் வியப்பான வரைவிலக்கணத்தைத் தருகின்றன. கவிதைகளுக்காக கவிதயினி சேமிக்கின்ற வசனங்கள் நமது காட்சிப் புலங்களுக்கு அப்பாலும் நீண்டு செல்வதுடன் இயற்கையின் ஒவ்வொரு அங்க அசைவையும் அதன் கவிதை நயத்துடன் எழுதுவது சிறப்பே. உதாரணமாக – 'பனிப்பாறைகளால் மூடுண்ட குளிர்ந்து விரைக்கச் செய்யுமோர் பெரு நீர்ப்பரப்பு அகோரப் பசி எடுக்கையில் அந்தப்புரத்தின் அரசி ....' என நீளும் கவிதை மொழியழகு இயற்கையின் அற்பங்களை, நுண்மைகளை விஞ்ஞான யுத்தியில் நமக்கு உயிராக்குகிறது கவிதை.

அனாரின் கவிதைகளில் கலவியுணர்வு அதீதமடைந்து தெரிவது அதி நவீனத்தவ சிந்தனையின் வெளிப்படாகிறது. குறிப்பாக சர்ரியலிசத்தின் அதி யதார்த்தவாதத்தின் உணர்வுகளை படம்பிடிக்க முனைகிறது. பிச்சி என்ற அனாரின் கவிதையை முதலில் மூன்றாவது மனிதன் இதழில் வாசித்த போது அதன் விளக்கத்தை அவரிடமே (கவிதையாயினியிடமே) கேட்டக வேண்டும் என்ற உணர்வைக் கோரியிருந்தது. பின்னர் அக்கவிதையை எனக்கு கவிதை முகம் என்ற தொகுதயினுடாக வாசிக்க முனையும் போது அக்கவிதை அந்தரங்கத்தின் மொழியை உரசுவது இயல்பாக்கியது. 'திருடனின் பார்வை, வீரனின் மிடுக்கு, உள்நுழைந்தது பாம்பு, உடல் வாசனை கமழும் அறைக் கண்ணாடியில் பாம்பின் கோடுகள் ...' என்ற கவிதையே இங்கு நான் மேலே சட்டிய விடயமாகிறது.

அனாரின் கவிதைகளில் தென்படும் அந்த வேட்கைசார்ந்த காதல் உணர்வு சாதாரண மனித யதார்த்தம் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் அதன் பிம்பங்களை அனார் வரையும் போது கலாசார ரீதியாக எதிர்கொள்கின்ற சவால்கள் அதிகம். பெண்பலி, தணல் நதி, வெறித்தபடி இருக்கும் கனவு, பிச்சி, உள்ளிட்ட கவிதைகள் கலவி சார்ந்த உணர்வின் அனுபவ வெளிப்பாட்டை அதீத பெண்மொழியில் கவிதைகள் பேசிகின்றன. அனாரின் கவிதைகளில் முக்கியமான ஒரு விடயம் உண்டு. அதாவது பெண் என்ற உணர்வை அல்லது அது கொண்டு எழுகின்ற வீரியத்தைக் கவிதைகளின் அனேக இடங்கள் பறைசாற்றுகின்றன. நான் பெண், எனக்குக் கவிதை முகம், வண்ணாத்துப் பூச்சியின் கனாக்காலக் கவிதை, மேலும் சில இரத்தக் குறிப்புகள், அரசி, பெண்பலி, மாற்றமுடியாத வலி, அறைக்கு வெளியே அலையும் உறக்கம் என்பன இதில் முக்கியமானவை. அனாரின் கவிதை மொழியலகு சிறப்பானது. அதிலும் பெண்ணியக் கருத்துக்கள் மக்கியமானவை. அதே வேளை கவிதைகளின் கருத்தியல்கள் ஒரே விதமானவை. அனாருக்கு நமது கடந்த காலப் போரின் அனந்தமான விளைவுகள் எட்டாமல்போனது விசித்திரமானது. அனாரின் கவிதைப் புலம் ஒரு வீட்டின் எல்லைக்குள் மட்டும் நிழலாடுவதாக தோன்றுகிறது. அனாரின் கவிதைகள் குறைந்த வாசகர் தரத்தை எய்வதாகவே எமக்குப் படுகிறது. அது நமது நாட்டுத் தொடர் சிற்றிதழ்களிலும் வெளிவந்து சமூகத்தின் கண்களுக்கு புருவங்களை உயர்த்தப் பின்னுட்ட வேண்டும் என அனாரை இச்சந்தர்ப்பத்தில் வேண்டலாம்.


( மல்லிகை - ஆகஸ்ட் 2009 )


-----------------------------------------------------------------------------------------------------------------------------------

No comments: