Friday 11 February 2011

அனாரின் தொடரும் ஆளுமைப் பதிவுகள்


- எம். எம். எம். நூறுல்ஹக் (சாய்ந்தமருது)
----------------------------------------------------------------------------------------------------------

தமிழ் பேசும் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டவரும் பரவலான வாசிப்பு செய்யப்படுபவருமான ஒருவர்தான் கவிதாயினி அனார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இலக்கிய ஆளுமை ஈழத்து இலக்கிய வளத்திற்கு கிடைத்த இன்னுமொரு வலிமையாகும்.


சாய்ந்தமருது மண்ணை பூர்வீகமாகக் கொண்டு 1990 களில் எழுத்துலகிற்கு வந்த பெண்படைப்பாளிகளுள் கவிதைத் துறையில் நமது ஆளுமை என்று சொல்லுமளவில் வளர்ந்தும், உயர்ந்தும் நிற்கின்ற ஒருவராகவும் அனார் அடையாளப்படுத்தப்படுகின்றார்.


இதுவரை மூன்று கவிதைத் தொகுதிகளை அனார் தந்திருக்கின்றார். இவரது முதல் கவிதைத் தொகுதி 2004 இல் ‘ஓவியம் வரையாத தூரிகை’ என்ற தலைப்பில் வெளிவந்தது. இத்தொகுதிக்கு 2005 ஆம் ஆண்டு இலங்கை அரசின் சாகித்திய விருதும் வடக்கு, கிழக்கு மாகாண அமைச்சின் சாகித்திய விருதும் கிடைக்கப்பெற்றன.


கவிதைத் துறைக்காக இவ்விருதைப் பெற்ற முதல் முஸ்லிம் பெண் என்ற வரலாற்றுப் பதிவையும் தமதாக்கிக் கொண்டுள்ளார். இவரது இரண்டாவது தொகுதி 2007 இல் ‘எனக்குக் கவிதை முகம்” என்ற தலைப்பில் வெளிவந்தது. இந்நூலினை கலச்சுவடு பதிப்பகம் தனது 203 வது வெளியீடாக வெளிக் கொணர்ந்தது. அதே பதிப்பகத்தின் 313 வது வெளியீடாக அனாரின் மூன்றாவது கவிதைத் தொகுதி “உடல் பச்சை வானம்” என்ற தலைப்பில் அண்மையில் வெளிவந்திருக்கின்றது.


64 பக்கங்களில் விரிந்திருக்கும் இந்நூல் 34 கவிதைகளைச் சுமந்து கொண்டிருக்கிறது. கவிதைத் தலைப்பு ஒவ்வொன்றும் கவிதையாக அமைந்திருக்கின்றன. ‘உடல் பச்சை வானம்’ என்ற நூலின் தலைப்புக் கூட வித்தியாசமாகவும் பல அர்த்தங்களை விரித்துக் கூறக்கூடியதாகவும் இருக்கின்றது.


அன்னாரின் இரண்டாவது நூலான “எனக்குக் கவிதைமுகம்” என்ற கவிதைத் தொகுதியில் இடம்பெற்றிருக்கும் கவிதைகளுக்கும் “உடல் பச்சைவானம்” தொகுதி கொண்டிருக்கும் கவிதைகளுக்குமிடையில் கருத்து நிலை உணர்வுகள் மாறுபட்டுக் காணப்பட்டாலும், கவிதை வெளிப்பாட்டு வடிவத்தில் பாரிய வித்தியாசத்தைக் காணமுடியவில்லை.


கவித்துவம், சொல்லாட்சி இறுக்கம், கருப்பொருள் என்ற தன்மைகளில் மிகவும் அவதானம் செலுத்தப்பட்டு செழுமையானதும் சூழ்நிலை கருத்தினைப் புலப்படுத்தும் வகையானதுமான கவிதைகளை யாப்பதில் அனாருக்கென்று ஒரு பக்குவமும், தனித்துவமும் இயல்பாக இருக்கின்றது என்பதை எடுத்துக்காட்டுவதில் அவரது கவிதைத் தொகுதிகள் முக்கிய இடம்வகிக்கின்றன.


அனாரின் முதலாவது கவிதைத் தொகுதியான ‘ஓவியம் வரையாத தூரிகை’யினைத் தொடர்ந்து வெளிவந்த இரு தொகுதிகளிலும் இடம்பெற்றிருக்கும் கவிதைகளில், கவிதை வெளிப்படும் விதம் ஒரே சாயலைக் கொண்டிருக்கின்றன. அதுதான் அனாரின் கவிதைத் தனித்துவத்தை அடையாளப்படுத்தும் பாங்காகவும் அமைந்து விடுகின்றது.


கவிதைகளை வாசிப்புக்குட்படுத்துகின்ற போது வாசகனின் உணர்வு நிலையில் திடீர் ஆச்சரிய மாற்றத்தினை ஏற்படுத்தும் வரிகள் அமைந்துவிடுவதுண்டு.


இவ்வாறான நிறையக் கவிதைகளை ‘உடல் பச்சைவானம்’ தொகுதி கொண்டிருக்கின்றது. இதற்கு எடுத்துக்காட்டாக பின்வரும் கவிதைகளை சுட்டிக்காட்டலாம்.



‘வளராத இறகுகளுடன்

அவனது சொற்கள் மின்னி மின்னிப் பறக்கின்றன’

(நிலாக்குட்டி - பக்கம் 20)


‘இசைபாறையாகிவிட்டது’

(நிசப்தத்தில் குளிரும் வார்த்தை - பக்கம் - 22)


................

உப்புச் சுவையாய் இரு உடல்கள் மாறினோம்

அலைகளை எழுப்பி எழுப்பி கடல் ஆகினோம்’

(வித்தைகள் நிகழ்த்தும் கடல் - பக்கம் 24)


‘அவளது கரங்கள்

எப்போதும் வற்றாது கிளை பிரிந்தோடும் நீரோடை’

(அக்காவுக்குப் பறவைபோல சிரிப்பு - பக்கம் 32)


‘.... தொன்மையான அவளது ஆன்மா

கண்களில் எட்டி எட்டிப் பார்த்து

சூரியக்கோயிலை தழுவி வீசும்

ஆதிக்காற்றின் காதுகளுக்குள்

பேருணர்ச்சியை கூவினாள்’

(சூரியக் கோயில் - பக்கம் 50)


மேற்சுட்டிக்காட்டிய கவிதைகளுடன் நீர் நடனம், குறிஞ்சியின் தலைவி, அதிசயத்தை ஒளியால் பேசிக்கொள்ளுதல், கனவுக்குள் அசையும் உடல் மொழி போன்ற தலைப்பிலான கவிதைகளும் அனாரின் கவித்துவ புனைவு ஆளுமைக்கு சான்றாக நிமிர்ந்து கொள்கின்றன.


இவையல்லாத கவிதைகளில் கவித்துவம் இல்லை என்று இந்தச் சுட்டுதலை அர்த்தப்படுத்திவிடக்கூடாது. ஏனெனில் வாசிப்பு என்பதும் ஈர்ப்பு மற்றும் நோக்கு என்பவைகளும் ஒருவருக்கொருவர் வேறுபட முடியும். அந்த வகையில் எனக்குள் ஏற்பட்ட ஆகர்ஷிப்பை மட்டுமே இங்கு பதிவாக்கியிருக்கின்றேன்.


ஒரு நிலையினை அடைந்து விட்டால், தம்மால் யாக்கப்படும் அனைத்துக் கவிதைகளும் பேசப்பட வேண்டியவை என்கின்ற போதைக்குள் நின்று கவி புனையும் கவிஞர்களை நாம் இன்று அதிகளவில் பார்க்கிறோம்.


இத்தகைய நிலைக்கு அனார் இன்னும் ஆளாகவில்லை. அவரது மூன்று கவிதைத் தொகுதிகளும் அவரது கவிதை முதிர்ச்சியையும் ஆளுமைப்பாங்கையும் எடைபோட்டுக் காட்டும் கண்ணாடிகளாகவே காணப்படுகின்றன. கருப்பொருள், கவிதை வெளிப்படும் பாங்கு, சிந்தனைப்பாங்கு, கையாளும் சொற்கள் என்று எல்லாமே அனாரிடம் புதிது புதிதாக பிறக்கின்றன. அவரது பெரும்பாலான கவிதைகளில் இவை கைகூடியும் வந்துள்ளன.


“உடல் பச்சை வானம்” தொகுதியில் இடம்பெற்றிருக்கின்ற ‘குறிஞ்சியின் தலைவி’ எனும் தலைப்பிலான கவிதையை வாசிப்புச் செய்யும் போது ‘எனக்குக் கவிதை முகம்’ தொகுதியில் இடம் பெற்றிருக்கும் ‘நான் பெண்’ என்ற கவிதையின் இன்னொரு வடிவமாகப் புலப்படுவதை அவதானிக்கலாம். இங்குதான் கவிஞனின் வெற்றியிருக்கிறது. ஏனெனில் ஒரே கருப்பொருளானாலும் அதனை வேறு விதமாகவும் வழங்க முடியும் என்பதையே இது நிரூபிக்கிறது.


இத்தொகுதியில் இடம்பெற்றிருக்கும் நிருபரின் அறிக்கை, இறுதி நிலைகள் ஆகிய இரு கவிதைகளிலும் அனாரின் தனித்துவ அடையாளங்களைக் காண முடியவில்லை. வெறும் வார்த்தைக் கோர்வைகளாக அமைந்திருந்தன. இவ்விரு கவிதைகளும் அனாரின் வழமையான கவித்துவ புலமைத்துவத்திலிருந்து விலகி நின்று வெறும் செயற்கைத்தன்மையை வெளிக்காட்டுவனவாக உள்ளன.


எது எப்படி இருப்பினும் ‘உடல் பச்சை வானம்’ தொகுதியில் இடம் பெற்றிருக்கும் கவிதைகள் குறித்து சுகுமாரன் பின்னட்டையில் குறிப்பிடுவது அனார் கவிதையினுள் இயற்கைத் தன்மையை எடுத்துக்காட்டப்போதுமானது. அவற்றிலிருந்து...


“முந்தைய தொகுப்புகளில் வெளிப்பட்ட அவருடைய கவிதை முகம் இதில் வேறு தோற்றம் கொள்கிறது. முந்தைய கவிதைகளில் பெண்ணிருப்பின் உணர்வு நிலையில் உரையாடிய கவிஞர் இந்தத் தொகுப்பின் கவிதைகளில் ‘பெண்ணுடல் பூண்ட இயற்கை நான்’ எனப்பிரகடனம் செய்கிறார்.


தொகுப்பின் கவிதை வரிகளுக்கிடையில் பெண் நீராகிறாள், ஊற்றாக, நதியாக, மழையாக, கடலாக மாறுகிறாள். பெண் நிலமாகிறாள், மலையாக, வயல் வெளியாக உருவங்கொள்கிறாள். பெண் காற்றாகிறாள், மூச்சாக, ஊழிப்புயலாக வடிவெடுக்கிறாள். பெண் ஒளியாகிறாள். அனலாகிறாள், இயற்கை பெண்ணுடலாகிறது. இயற்கை பெண்ணாகிறது.” (சுகுமாரன்)

“உடல் பச்சைவானம்” நமது வாசிப்புக்கு வனப்பானது. ஈழத்து இலக்கிய களத்திற்கு வலிதானது. அனாரின் கவித்துவ ஆளுமையின் மற்றுமொரு தடம்.



( தினகரன் - 22 ஆகஸ்ட் 2010 )

----------------------------------------------------------------------------------------------------------

Wednesday 9 February 2011

இலக்கியச் சுவை கொட்டும் அனாரின் கவிதைகள்


- கே.எஸ். சிவகுமாரன்
--------------------------------------------------------------------------------------------------------------------------

சாந்தமருதுவைச் சேர்ந்த இஸ்ஸத் ரீஹானா முஹம்மட் அஸீமை உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம். ஆனால் வித்தியாசமாக இலக்கியம் சமைப்பவர்களும், இரசிப்பவர்களும் “அனார்” என்ற பெண்ணையும் அவரின் கவிதையாற்றல்களையும் அறிந்திருப்பர். இரு பெயர்களும் ஒருவரையே குறிக்கும். 

பல விருதுகளைப் பெற்றுள்ள இவருடைய கவிதை நூல்கள் ஓவியம் வரையாத தூரிகை, எனக்குக் கவிதை முகம், உடல் பச்சை வானம் என்பனவாகும் தமிழ்நாடு நாகர்கோவிலில் இருந்து வெளியாகும் காலச்சுவடு என்ற இலக்கிய ஏட்டினர் மூன்றாவது நூலை வெளியிட்டுள்ளனர். 

இந்நூலில் இடம்பெற்ற கவிதைகளில், 


“இயற்கை பெண்ணுடலாகிறது. 

இயற்கை பெண்ணாகிறது” என்று சுகுமாரன் 

எழுதிய கூற்று பின்னட்டையில், கவிஞரின் நிழற் படத்துடன் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையிலுள்ள பொதுவாசகர்கள் அனாரை அதிகம் அறிந்திருக்காவிட்டால் அதற்குக் காரணம், அவருடைய கவிதைகள் அதிகமாக பிறநாடுகளின் தமிழ் ஏடுகளில் வெளிவந்தமையாய் இருக்கக்கூடும். கடந்த மூன்றாடுகளில் அனார் எழுதிய 34 கவிதைகள் இந்நூலிலே சேர்க்கப்பட்டுள்ளன. 

‘புதுக்கவிதை’ என்ற பெயரிலே கேள்வி சார்ந்த வசனங்களையும், அரசியல் சார்ந்த சுலோகங்களையும் நெஞ்சிலோ, உணர்விலோ எந்தவிதமான பற்றுமில்லாமல் பறைசாற்றித் தம்மைக் கவிஞர்களாக கருத்திக் கொள்வோரின் படைப்புகளின்று வெகுதூரம் உயர்ந்த மட்டத்தில் கவிதா நெஞ்சத்துடன் அழகான தமிழ்ச் சொற்களைக் கையாண்டு கவிதையாகவே சொற் சித்திரங்களைத் தந்திருக்கும் அனார் எனது கணிப்பில் பாராட்டுக்குரியவர். 

எனது கணிப்புகள் பெரும்பாலும் அகவயமானது என்பதனை எனது முதலாவது கட்டுரையில் வாசகர்களுக்குத் தெளிவுபடுத்தியிருந்தேன். 

அனாரின் படைப்புலகம் அவருக்கே உரித்தானது. அது என்ன என்று அறிந்துகொள்ள நாம்தான் அகவயமாக அவர் மனதில் நுழைந்து புரிந்து கொள்ள வேண்டும். 

நாமும் கவியுள்ளங் கொண்டே இத்தகைய கவிதைகளை அணுக வேண்டும். வெளியேயிருந்து நாம் வரித்துக் கொண்ட கொள்கைகள், கோட்பாடுகள் போன்றவற்றை வெளியொதுக்கிவிட்டு, இறைவனைப் புரிந்து கொள்ள நாம் நம்மையே மறக்கவேண்டும் என்பதுபோல, பெரும்பாலான அகவயப் படைப்பாளர்களைப் புரிந்து கொள்ள நாம்தான் சிரத்தையுடன் அத்தகையோர் படைப்புகளை அணுகவேண்டும். 

அது சரி ஐயா, “விமர்சனம்” என்னாவது? நீங்கள் குறிப்பிடும் “திறனாய்வு” என்னாவது என்கிறீர்களா? ஒரு படைப்பாளியின் பங்களிப்பை பரந்த இலக்கியப்படுதாவில் இனங்கண்டு கண்டித்து, பாராட்டுவது “ஆழமான”, “விமர்சகர்”களின் பணியாக இருக்கலாம். 

ஆயினும் என் போன்ற இரசிகனுக்கு படைப்பாளியின் கண்ணோட்டத்தைப் புரிந்து அனுபவ வெளிப்பாட்டைத் தெரிவிப்பது மேலென நினைக்கிறேன். 

தவிரவும் இந்த இலக்கிய மதிப்பீடுகள் சாசுவதமான துமல்ல. ஒரு காலத்தில் புறக் கணிக்கப்பட்ட படைப் பாளிகள் மற்றொரு காலத்தில் மறுமதிப்பீடு செய்யப்படுவது ஒன்றும் புதிதானதல்ல. அதனாற் போலும் ‘மெளனி’ என்ற எழுத்தாளர் சமூகப் பிரச்சி னைகளைக் கையாளாதனால் ஏளனம் செய்யப் பட்ட போதிலும், அந்தச் சிறுகதை ஆசிரி யரின் பெயர் இன்றும் பேசப்பட்டு வருகிறது. 

அனாரின் கற்பனைக் கனவுகளை இனங்கண்டு சஞ்சரிக்கும் பொழுது ஓர் இலக்கியச் சுவையை நாம் உணரமுடியும். அவருடைய படைப்புலகம் சாதாரண வாசகர்களாகிய நமக்கு அன்னியமாகப் படலாம். அதை நாம் நிராகரிக்கவும் கூடும். இருந்தபோதிலும் அனார் நம்மை அந்த உலகுக்கு அழைத்துச் செல்லும் பாங்கு நிச்சயமாக நல்ல கவிதைகளில் காணப்படும் அழகுதான். 

இதை எப்படி விளக்குவது? 

ஆழமான விமர்சனம் என்ற பெயரில், ஒரு மலரைச் சின்னாபின்னமாக்குவது போல, பகுப்பாய்வு என்ற பெயரில் கிழித்துக் கண்டனம் செய்கையில் படைப்பு வெறும் வெறுமையாகத்தான் இருக்கும். கவிதைக்கு முக்கியமான உறுதிப் பொருள்கள் இருப்பது அவசியம். அவற்றுள் ஒன்று புத்தாக்கம் கொண்ட சொல்லாட்சி. சொற்கள் வகிக்குமிடத்தைப் புறக்கணிக்க முடியாதல்லவா? கவிதைக்கழகு லயமுங்கூட. அவற்றை நீங்கள் இக்கவிதைகளில் காணலாம். 

உதாரணமாக எடுத்துக் காட்டுவதென்றால், கவிதை வந்தமர்ந்த சொற் பிரயோகங்களைக் காட்ட முடியும். அவற்றுள் பல என் இதயத்தை மென்மைப்படுத்தின. அவற்றுள் வித்தியாசமானவையும் இருந்தன. 

அனார் ஆங்கிலக் கவிதைகளைப் படிக்கிறாரோ தெரியாது. அத்தகை நல்ல கவிதைகள் போன்று அணிச் சேர்ககை என்னைப் பரவசமூட்டின. இங்கே பாருங்கள்: 

“மந்தமாகப் பெய்யும் மழைக்குள் 

வெயில் கீற்று 

வயலின் ஒலியாக ஊடுருவும்போது 

மறுபடியும் நாம் 

காதலைச் சொல்லிக் கொள்கிறோம்” 

இந்த அழகிய அர்த்தம் மிகுந்த வரிகளை விளக்கித்தான் கூற வேண்டுமா? இரசியுங்கள்: 

“உவகை பொங்கும் உறவின் கண்களில் 

உண்மை கொடுங்கனவாகித் தெரிகின்றது” 

“அபூர்வமான மெழுகுக் கடல் 

ஓர் காலைப் பொழுதெனத் தெரிகின்றது”. இவர் எழுதிய “மருதம்” என்ற கதையோட்டம் போன்ற விவரணைக் கவிதை எனக்கு மிகவும் பிடித்தது. நீங்களும் சுவையுங்கள்.


( தினகரன் - 10 ஒக்டோபர் 2010 )

--------------------------------------------------------------------------------------------------------------------------