Sunday 26 May 2013

ஊடறு  றஞ்சியின்  தூய  உண்மைகளும் ,
(http://www.oodaru.com/?p=6265#more-6265)

அனாரின் ஆதாரங்களும்.... 
------------------------------------------------------------------------------------------------------------

காலச்சுவடில் வெளியான என்னுடைய 'காற்றின் பிரகாசம்' (http://www.kalachuvadu.com/issue-161/page62.asp ) கட்டுரையில் ஊடறு றஞ்சி என்பவர் நான் குறிப்பிட்ட ஒரு விடயத்தை பொய் என்று கூறி ஊடறுவில், றஞ்சி அப்பழுக்கற்ற சில 'உண்மைகளைத்' தெரிவிக்க முயன்றிருக்கிறார்.. அது ஏற்கனவே அவருக்குள்ள 'நற்பெயருக்கு' மேலும் வலுச்சேர்த்துள்ளது என்பதை நான் கூற விரும்புகிறேன்.


ஊடறு றஞ்சி : “ ‘எனக்குக் கவிதை முகம்’ தொகுப்பை ஊடறு அமைப்பு வெளியிடுவதற்குக் கேட்டிருந்தது. சேரனிடம் முன்னுரை பெற்று, தொகுப்பைக் கொண்டுவர வேண்டும் என்பது எனக்கிருந்த நீண்ட நாள் ஆசை. அது சரிநிகர் ஊடாகவும் ‘மரணத்தினுள் வாழ்வோம்’ தொகுப்பினூடாகவும் கொழுந்துவிட்டு எரிந்த நெருப்பு. எனவே ஊடறு றஞ்சி தன் அன்றைய அரசியல் நிலைப்பாட்டால் சேரனிடம் முன்னுரை வாங்கினால் என்னுடைய புத்தகத்தை அவர்கள் கொண்டுவர முடியாது எனத் தெரிவித்தார்.இந்தக் கட்டளையை மீறினால், ஊடறுவிலிருந்து என்றைக்குமாக என்னைத் தள்ளி வைப்பதாக றஞ்சி அன்பாக மிரட்டினார். நானும் அன்பாக விலகிக்கொண்டேன்.“ இதை வாசித்தபோது அதிர்ச்சியடைந்தேன். காரணம் இதில் சொல்லப்பட்டது அத்தனையும் பொய் என்பதுதான்.


1. ‘எனக்குக் கவிதை முகம்’ தொகுப்பை ஊடறுவிற்கு கொடுக்கவில்லையென்பதால் பல முறை தொலைபேசியில் அவர் பிடித்த சண்டைகளை ... உடனுக்குடன் நான் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அந்த நண்பர்களைத்தான் இப்போது சாட்சிக்கு அழைக்க முடியும்.அவர்களுக்கு அது இன்னமும் நினைவில் இருக்குமென்றே நான் நினைக்கின்றேன். நண்பர்களான என்.ஆத்மா, எம்.பௌசர், கவிஞர். சேரன், ஓட்டமாவடி அறபாத் ஆகியோர்களிடம், என்னுடைய தொகுப்பை கொண்டு வருவதற்கு முடிவு செய்வதற்கு முதல், இப் பிரச்சினைக்கான சில ஆலோசனைகளை பெற்றிருக்கிறேன். எனவே அவர்கள் இவ்விடயத்தை உறுதிப்படுத்துவார்கள் என நம்புகின்றேன். 


2. காலச்சுவடு கட்டுரை ஒன்றைக் கேட்டதன் நிமித்தமே, என்னுடைய அனுபவங்கள் சிலவற்றை அதனூடாகப் பகிர்ந்து கொண்டேன். எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து சுமார் 20 வருடங்கள் வரை சொல்வதற்கு பலவிடயங்கள் இருக்கின்றன. எனவே எதிர்வரும் காலங்களில் அவற்றைப்பற்றி அவ்வப்போது எழுத விரும்புகிறேன்.


ஊடறு றஞ்சி : அனார் பிரபல்யமான பதிப்பகங்களினூடாகத்தான் தனது கவிதைத் தொகுப்பைக் கொண்டு வரவேண்டும் என தம்மிடம் கூறியிருந்ததாக ஊடறுவின் சக தோழி ஆழியாள் கூறுகிறார் (அனார் ஆழியாளுக்கு எழுதிய கடிதம் இதற்குச் சாட்சி)


3. ஆழியாள் எப்போதும் என் மதிப்பிற்குரிய தோழி. எனவே றஞ்சி அவரை இவ்விடயத்தில் சேர்த்திழுப்பதில் எனக்கு ஒரு ஆட்சேபனையும் இல்லை. என்னுடைய கடிதங்கள் அவரிடமும், அவருடைய கடிதங்கள் என்னிடமும் நிறைய இருக்கின்றன. றஞ்சியின் தொடர்பிற்கு முன்பே ஆழியாள் மிக நெருக்கமான நண்பி. (பிரபலமான பதிப்பகங்களில் வெளிவரவேண்டும் என நாம் தீர்மானிப்பதில்லை. நம்முடைய எழுத்துக்கள் ஆழமானதாகவும், அர்த்த பூர்வமானதாகவும், அனுபவச் செறிவுள்ளதாகவும் இருந்தால்... அந்தப் பதிப்பகங்களின் வாசல் நமக்காகத் திறந்திருக்கும் )


ஊடறு றஞ்சி : ஒருவேளை அனாரின் காழ்ப்புணர்வு இங்கிருந்து தொடங்கியுமிருக்கலாம். 2007ம் ஆண்டு எம்மால் வெளியிடப்பட்ட மலையகப்பெண்களின் கவிதைத்தொகுபப்பான „இசைபிழியப்பட்ட வீணை“ இல் இடம்பெற்ற சூரியகலா என்ற மலையகக் கவிஞையின் கவிதை தன்னுடைய கவிதை வரிகளை கொண்டிருக்கின்றது என்று எம்முடன் வாதிட்டார். அந்தக் கவிதையில் வந்த வரிகள் தன்னுடைய கவிதை வரிகள் என குற்றம் சாட்டினார். அத் தொகுப்புக்காக கவிதைகளை ஊடறுவுக்கு சேகரித்து அனுப்பிய தோழர் வே. தினகரனுக்கும் அனார் தொலைபேசியில் இதுபற்றி முறையிட்டு விமர்சித்துள்ளார். ஆனால் அந்தக் கவிதை பற்றி நாம் ஆராய்ந்தபோது, மலையகக் கவிஞை சூரியகலா 2003 இல் அந்தக் கவிதையை எழுதி அது மலையகப் பத்திரிகையில் ஏற்கனவே வெளிவந்துவிட்டது என அறிந்தோம். இதை நாம் அனாருக்கு தெரியப்படுத்தியுமிருந்தோம். அனாரின் தொகுப்பு ‘ஓவியம் வரையாத தூரிகை’ 2005 இல் வெளிவந்திருந்தது. மலையகக் கவிஞை சூரியகலா தன்; கவிதையை 2003 இல் எழுதியிருக்கிறார் என நாம் அனாருக்கு அறிவித்த போது கோபமாக “அப்போ நான் பார்த்து எழுதியதாக நினைக்கின்றீர்களா?“ என எம்முடன் விசனம் கொண்டார்.


4. அம்பலப் படுதல்,, காழ்ப்புணர்வு, அவதூறு காரணமாக றஞ்சி அடையும் பதட்டம்... கையூட்டம் பெற்ற பொய்சாட்சியொருவர் நீதி மன்றத்தில் மிரட்சியுடன் முழித்து , முக்கி முனகுவதுபோல இருக்கிறது. தகவல் அறிவீனமும் பொய்மையும் ரஞ்சியுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் இரட்டைக் குழந்தைகள். றஞ்சியின் இந்த இயல்பை எண்ணி நான் ஆச்சரியப்படவில்லை. மலையகக் கவிஞைகளின் படைப்புகளைக் கொண்ட 'இசை பிழியப் பட்ட வீணை ' என்ற தொகுப்பு 2007 இல் வெளி வந்தது. 2004 இல் வெளிவந்த எனது “ஓவியம் வரையாத தூரிகை“ தொகுப்பிலிருந்து “ம(ர)ணப் பந்தல்“ என்ற எனது கவிதை (பக்கம் 22,23), ஜே. அன்னால் குளோரி என்பவரால் திருடப்பட்டு, அக்கவிதை “ம(ர)ண பந்தம்“ என்ற இன்னொரு தலைப்பில் அத்தொகுப்பில் மீண்டும் பிரசுரமாகியிருக்கிறது. 2002 ஆகஸ்ட் 12வது “எக்ஸில்“ இதழில் எனது “ம(ர)ணப் பந்தல் கவிதை“ முதன் முதலாக பிரசுரமாகியிருப்தை அனைவரும் அறிவார்கள். றஞ்சி இப்போது அதனை சூரியகலா எழுதியதாக ஞாபகப் பிசகுடன் குறிப்பிடுகிறார். “இசை பிழியப்பட்ட வீணை' தொகுதியில் சூரியகலா என்ற பெயர் எங்குமே இல்லை.. ஜே. அன்னால் குளோரி என்ற பெயர்தான் அங்கு இருக்கிறது. இந்தப் பெயர்களைக் கொண்டவர்கள் றஞ்சியின் அவதாரங்களா? நேர்மையின் உருவமான றஞ்சியிடம் இதுபற்றி, நியாயமான கோபத்துடன் 6 வருடங்களுக்கு முன்பு நான்கேள்வி எழுப்பிய போது மழுப்பல் நிறைந்த பொறுப்பற்ற பதிலை வெளிப் படுத்தினார். பெண்ணிய நோக்கில் இன்று வரை செயற்படுவதாகக் கருதப் படும் இவர் , சக பெண் படைப்பாளரான எனக்கு இத்தகையதோர் அநீதி நிகழ்ந்த போது எந்த நியாத்தையும் கூறாமல் வேடிக்கை பார்த்தார்.. ஒரு பதிப்பாளராக இருக்கும் றஞ்சிக்கும் , தொகுப்பாளரான தினகரனுக்கும் இது பற்றிக் கிஞ்சித்தும் கூச்சமோ,குற்றவுணர்வோ இல்லை.. அனாமதேயியான “ஜே. அன்னால் குளோரி“ என்ற இலக்கியத் திருடிக்கு வெளிச்சம் பாய்ச்ச வேண்டும் என்பதுதான் அவர்களின் ஒரே இலட்சியம். . என்னுடைய ஆதாரபூர்வமான கேள்விகளைக் கூடப் பொருட் படுத்தாமல் அந்த நபருக்காக என் நட்பையும் பலி கொடுத்தவர் றஞ்சி. இன்று கூசாமல் மறுபடியும் தன்னுடைய 'பொய்க் கடையை' இங்கே வந்து பரப்புகிறார். என்னுடன் பேசியதாகக் கூறிய அனைத்தையம் மறு தலிக்கிறார் .தொடர்ச்சியாக அவருக்கு சில ஆதாயங்கள் தேவைப்பாடுகள் இதன் பின்னணியில் இருக்கக் கூடும் .. இந்த விடயம் தொடர்பாக “இசை பிழியப்பட்ட வீணை“ தொகுப்பு அச்சாக்கத்துக்கு உதவி புரிந்த ஆத்மாவிடம் 6 வருடங்களுக்கு முன்பே முறையிட்டேன். எக்ஸில் விஜியிடமும் இது பற்றிப் பேசியிருக்கிறேன். இதை பெரிதுபடுத்த் வேண்டாம். சில பிழைகள் தொகுப்பில் நேர்ந்து விட்டன என ஆத்மா குறிப்பிட்ட்டார். தினகரனிடம் கதைத்போது உரியபதில் தருவதாக அப்பொழுது கூறினார். நல்ல வேளையாக இந்த மோசடியை அம்பலப் படுத்தும் ஓர் அரிய வாய்ப்பை இந்த றஞ்சியே ஏற்படுத்தித் தந்திருக்கிறார். அப்போதும் இப்போதும் நான் கூறுவது ஒன்றுதான்.... தூங்குவது போல் பாவனை செய்யும் தினகரனுக்கும், றஞ்சிக்கும் புரிந்தும் புரிய மறுப்பது வாசகர்களுக்குப் புரியும் என்று நம்புகின்றேன். ஆதாரபூர்வமாக இதை இப்போது வெளிப்படுத்தியிருக்கிறேன்.என்னை இலக்கு வைத்து ஊடறுவில் றஞ்சி அவ்வப்போது எடுக்கின்ற வாந்திகளை நான் கண்டுகொள்வதில்லை.அவற்றை நக்கிச் செல்ல அவர் வளர்த்த நாய்கள் இருக்கின்றன. ஒரேயடியாக றஞ்சி இப்போது உண்மையின் திருவுருவம் எடுக்க முனைந்தது அரசியல் நோக்கம் அற்றது, காழ்புணர்ச்சியற்றது, அவதூறுகளற்றது, பொறாமைக்கு அப்பாற் பட்டது என்றே எடுத்து கொள்கிறேன்.


5. றஞ்சியின் கண்டுபிடிப்பின் படி , சூரியகலா 2003 இல் எழுதிப் பிரசுரமாகியதாக சொல்லப் படுகின்ற அந்தக் கவிதை... என்னால் 2002 இல் எழுதி அதே ஆண்டு ஆகஸ்ட் மாத எக்ஸிலில் பிரசுரமாகியுள்ளது. 
இசை பிழியப்பட்ட வீணை வெளி வந்த ஆண்டோ 2007. றஞ்சி குறிப்பிடுவது போல் அந்தக் கவிதை சூரியகலா என்ற பெயருடையவரால் எழுதப் பட்டதுமல்ல. திடீரெனத் தோன்றிய ஜே. அன்னால் குளோரி என்ற 'இலக்கிய மாய மோகினி' திருடி வெளியிட்ட கவிதை அது.  2004 இல் வெளி வந்த என்னுடைய முதல் நூலை 2005 இல் வெளி வந்தது என்ற தகவல் திரிபு வேறு. இந்தக் தகவலைக்கூட சரி,பிழை பார்க்கத் தெரியாத றஞ்சி.. தன் மேல் நான் காழ்ப்புணர்வுடன் இருப்பதாக கனவு காண்கிறார். றஞ்சியைப்போல் எனக்கு அரசியல் தேவைகள் இல்லை. பொய் கூறுவது நானா ,நீங்களா? உங்களுக்கு மேலும் நடக்க முடியவில்லையா , பரவாயில்லை. காலாற அமருங்கள். அதற்காகப் பயணிகளைத் தடுத்து தொந்தரவு செய்யாதீர்கள்.


ஊடறு றஞ்சி : சேரனிடம் முகவுரை வாங்கினால் ஊடறு அனாரின் தொகுப்பை கொண்டுவராது என்று கட்டளை (?) இட்டதாக சொல்வதும் முழுப்பொய். இன்னும் மேலே போய் இந்தக் கட்டளையை மீறினால் (?) ஊடறு தள்ளிவைக்கும்(?) என புனைந்து ஒரு அவதூறையே செய்திருக்கிறார். நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. ஊடறுவை சேரனுக்கு எதிராய் நிறுத்தும் மலிவான நோக்கம் தனது தொகுப்பை காலச்சுவட்டினூடாக வெளிக்கொணரத்தானோ என எண்ணத் தோன்றுகிறது. உண்மையில் 2008 இல் அனாரின் ‘எனக்குக் கவிதை முகம்’ கவிதைத் தொகுப்பு வெளிவந்த பிறகே அதற்கான முகவுரையை சேரன் எழுதியிருந்தது எமக்குத் தெரியும்.


6. 2007 இல் எனது 2வது கவிதைத்தொகுதி “எனக்கு கவிதை முகம்“ வெளிவந்திருக்கிறது. ஆனால் அவர் குறிப்பிடுகிறார், 2008இல் நூல் வெளிவந்த பினர்தான் சேரன் முன்னுரை எழுதியதாக. றஞ்சிக்குத் தெரிந்த இவ்விடயம் எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் முன்னுரை பெற்றதன் பின்னர்தான் நூலை வெளியிடுவார்கள். இது எப்படிச் சாத்தியம்.....?? இது என்னவிதமான கண்டுபிடிப்பு..?


7. ஊடறுவிற்கு கொடுத்த எல்லா ஆக்கங்களும், அவரிடமிருந்து கவிதைகளோ.. பிற ஆக்கங்களோ.. கேட்டு கடிதங்கள் வந்த பிறகே நான் அனுப்பியவையாகும். 


(கவிதைகள் பிரசுரமான ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளன)












ஜே. அன்னால் குளோரி - என்பவரின் பெயரி்ல் என்னுடைய கவிதை இடம்பெற்ற புத்தகம் இது (இசை பிழியப்பட்ட வீணை).









Wednesday 22 May 2013

காலச்சுவடு 150-தொடரும் பயணங்கள் : காற்றின் பிரகாசம்

- அனார்
------------------------------------------------------------------------------------------------------------

1990களின் நடுப்பகுதியில் என் கவிதைமுயற்சிகளைத் திருட்டுக் காரியம் பண்ணும் பிரயத்தனங்களோடும், எனக்கிருந்தசவால்களோடும், இயலாமைகளோடும் எழுதத் தொடங்கியிருந்தேன். எனக்குள் சென்று என் ஆன்மா பேசியதை உற்றுக்கேட்பதற்கு எவரும் தயாராக இல்லாத சமயத்தில், நானே அதைக்கேட்க விரும்பினேன். மிக உன்னிப்பாக, கொஞ்சம் ஆதரவாக. என்னை நான் வளர்த்தெடுக்கும்கனவுகளோடு, கவிதையுடன் ஆழ்ந்த உடன்பாட்டிற்கு வந்தேன். யுத்தம் காதலைப் போலவும், காதல் யுத்தத்தைப் போலவும் வீட்டிற்குள்ளும் வெளியேயும் அவ்வப்போதுவெடித்துக் கொண்டிருந்தன.

திணறிக்கொண்டிருந்த அன்றைய காலச்சூழலுக்கு ‘மூன்றாவது மனிதன்’ சஞ்சிகையும், மிகஅரிதாகவே கிடைக்கும் ‘சரிநிகர்’பத்திரிகையும் அமைதி சேர்த்தன. அவற்றில் இடம்பெற்ற கட்டுரைகள், கவிதைகள்,எதிர்வினைகள் அவற்றை எழுதியவர்களுடைய, நான் கண்டும், கேள்விப்பட்டுமிராத பெயர்களும்விடயங்களும் அதிசய உலகத்தைக் காண்பித்தன. கனவிலும் அந்தப் பெயர்கள் ஒவ்வொரு உருவம்எடுத்து வந்து, என்னை அவ்வுலகிற்கு அழைத்துக் கொண்டிருந்தன. அந்தச்சந்தர்ப்பத்தில் 2001ஆம் ஆண்டு, கணவர் அஸீமுடன் சவூதி அரேபியாவில் வசிப்பதற்காகஆயத்தமாகிக் கொண்டிருந்தேன். சிறுகதை ஆசிரியராக அறியப்பட்ட என்னுடைய மாமனார் யூ. எல்.ஆதம்பாவா அவர்கள், அங்கே சென்று வாசிப்பதற்குக் சில காலச்சுவடின் பழைய இதழ்கள் சிலவற்றை எனக்குகொடுத்தார். அவற்றில் 1999க்கு முற்பட்ட சில இதழ்களும் அதன் பிறகான சிலவும் இருந்தன. அவற்றை அத்தனை தூரத்திற்குக் கொண்டுசென்றேன். காலச்சுவடு இழ்களின்முதல் பரிச்சயம் இவ்விதம்தான் தொடங்கியது. காலச்சுவடு இதழ் 47-பெண்கள் சிறப்பிதழாகவும், இன்னொரு இதழ்ஈழப்பெண்கள் கவிதைகளைக் கொண்ட தொகுப்பாகவும் வெளிவந்தது. அந்நேரத்தில் யார் கண்ணிலும் படாமல், எவருடைய மனதையும் உலுக்காமல் நானும் எழுதிக் கொண்டுதான் இருந்தேன்.

அவ்விதழை வாசித்தபோது சிறிய ஏமாற்றமும்துக்கமும் ஏற்பட்டன. அதற்கு காரணம் அந்நாட்களில் காலச்சுவடில் யாருடையகவிதையாவது இடம்பெற்றால் அவர் சந்தேகத்திற்கிடமில்லாமல் கவிஞராகப் போற்றப்பட்டுக்கொண்டிருந்தார். SLS முத்திரை குத்தப்பட்டதொரு மதிப்புமிக்க பொதிபோல அவரைப் பார்த்தார்கள். இன்னும் எனக்கு அவ்வளவு உயரமான கொம்புகள் வளரவில்லை என்று நான் நினைத்தேன். கொம்புகள் வளர என்ன செய்ய வேண்டும்? அல்லது எதைச் சாப்பிடவேண்டும்? என்ற கேள்விகளைஅப்போது யாரிடம் கேட்பதென எனக்குத் தெரியவில்லை.

காலச்சுவடு இதழ்களின் மூலம்தான் தலித்மக்களின் வாழ்வியல் அவை சம்மந்தமான விவாதங்களைத் தெரிந்து கொண்டேன். திருநங்கைகள்பற்றிய பெண்ணிய நோக்குகளையும் அவற்றை எழுதும் எழுத்தாளர்களைப் பற்றியும் கூடுதலாகவேறொரு தளத்தில் தெரிந்து கொள்ள முடிந்தது. மனித வதைகள், வன்முறைகள், அழிவுகள்தொடர்பான பதிவுகளைக் கவனமெடுத்து வெளியிட்டது. மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், சிறுகதை,கவிதைகள், ஓவியங்கள், இசை பற்றிய கட்டுரைகள் என காலச்சுவடு இதழ்கள் வாசிப்பதற்கு உகந்தனவாகஇருந்தன.

2004 இல் சவூதி அரேபியாவிலிருந்துவந்ததும், என் முதல் கவிதைத் தொகுப்பை “ஓவியம் வரையாத தூரிகை“ யை மூன்றாவது மனிதன்பதிப்பகம் வெளியிட்டது. இரண்டாம் தொகுப்பிற்கான கவிதைகள் எழுதப்பட்ட மூன்று வருடகாலத்தில், கொம்புகள் முளைக்கும்தருவாயில் இருந்த மான்போல, வசீகரமான மொழியுடன், மிடுக்குடன், பயமற்றுத் துள்ளித்துள்ளி எழுதிக் கொண்டிருந்தேன். காதலில், வாழ்க்கையில், அனுபவத்தில் விழுந்துகொண்டிருந்தேன். கொம்புகள் வளர்வதற்காக எதைச் சாப்பிட வேண்டுமோ அதைச் சாப்பிடத்தொடங்கியிருந்தேன்.

‘எனக்குக் கவிதை முகம்’ தொகுப்பை ‘ஊடறு’ அமைப்பு வெளியிடுவதற்கு கேட்டிருந்தது. சேரனிடம் முன்னுரை பெற்று,தொகுப்பைக் கொண்டுவரவேண்டும் என்பது எனக்கிருந்த நீண்ட நாள் ஆசை. அது ‘சரிநிகர்’ ஊடாகவும் ‘மரணத்தினுள்வாழ்வோம்’ தொகுப்பினூடகவும் கொழுந்துவிட்டு எரிந்தநெருப்பு. எனவே ஊடறு றஞ்சியி தன் அன்றைய அரசியல் நிலைப்பாட்டால் சேரனிடம் முன்னுரைவாங்கினால் என்னுடைய புத்தகத்தை அவர்கள் கொண்டுவரமுடியாது எனத் தெரிவித்தார். இந்தக் கட்டளையைமீறினால், ஊடறுவிலிருந்து என்றைக்குமாக என்னைத் தள்ளி வைப்பதாக றஞ்சி அன்பாகமிரட்டினார். நானும் அன்பாக விலகிக் கொண்டேன். அதன் பிறகு சேரனின் முழுமனதானமுன்னுரையோடு முழுமையான முயற்சிகளோடு (இலங்கை முஸ்லீம் பெண்களின் வரலாற்றிலேயேமுதல் முறையாக !) என் கவிதைத் தொகுப்பு காலச்சுவடு பதிப்பாக 2007இல்கொண்டுவரப்பட்டது. என் கவிதைத் தொகுப்பை ஒரு நல்ல நாளில், சேரன் என்னுடையவீட்டிற்கே கொண்டு வந்து தந்தார். அன்று என் புத்தகத்தின் அட்டை நிறமும்என் ஆடையின் நிறமும் ஒன்றாக இருந்தன. நான் அன்றெல்லாம் அதே நிறத்திலேயே சிரித்துக் கொண்டிருந்தேன்.. என்னுடைய உறக்கமும் அந்த நிறத்திற்கே மாறியிருந்தது.

2001 இலிருந்து காலச்சுவடு வாசகியாகஇருந்த என் கவிதைத் தொகுப்பை 2007இல் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டு, பொற்காலத்தை தொடங்கி வைத்தது. என்றும்நீடித்திருக்கும் வகையில் அக்கறையும் உணர்வும் மிகுந்த நட்பு சேரனுடன் உருவாயிற்று.

ஒரு பெண்ணாக இருந்து காலச்சுவடு பதிப்பகத்தின் மூலம் கவிதைத் தொகுப்பொன்றைக் கொண்டுவந்ததால் என்னைச் சுற்றி வீசப்பட்டிருந்த பலத்தசந்தேகங்களும் அவதூறுகளும் நாயின் வாந்தியைப்போலக் கிடந்த பாதையைக் கடந்து சென்றேன்.

ஆனால் அடுத்த வருடம் 2008 இல் ஒரு அழகியஇலக்கியப் பயணத்திற்கான ஒரு வாய்ப்பைப் பெற்றேன். தெற்காசிய நாடுகளின்இளம்கவிஞர்கள் மாநாட்டுக்காக ஒரிசா சென்றேன். அங்கிருந்து சென்னை திரும்பியதும் எழுத்தாள நண்பர்களுடன் ஒரு சந்திப்பையும், கலந்துரையாடலையும் கண்ணன் ஏற்பாடுசெய்திருந்தார். மறக்க முடியாத நிகழ்வாக அது இன்றும் சந்தோசத்தைத் தருகிறது. நண்பர் ரவிக்குமார் என் கவிதைகளைப்பற்றி பேசினார்.சல்மாவை முதல் முறையாகப் பார்த்துப் பேசினேன். சுகிர்தராணியைத் தழுவினேன். கவிதாமுரளிதரன், சேரன், ரேவதி, பாரதிமணி, குவளைக் கண்ணன், ஐயப்பமாதவன், யுவன்,இப்படிப்பல எழுத்தாளர்கள் மத்தியில் உரையாடியதும் கவிதை வாசித்ததும் அற்புதமானஅனுபவம்.

ஒரு பதிப்பாளராகக் கண்ணனிடம் உள்ள திறமை, கண்ணியம், நேர்மை அனைத்தையும் கருத்தில் கொண்டே எனது மூன்றாம் கவிதைத் தொகுப்பான ‘உடல் பச்சை வானம்’ தொகுப்பை 2009இல் காலச்சுவடுக்கு வெளியிடக் கொடுத்தேன். ‘எனக்குக் கவிதை முகம்’ இரண்டாம் பதிப்பும் வெளிவந்திருக்கிறது.

காலச்சுவடும் நானும் என்ன்னுடைய தனித் தன்மைமீது பற்றும் நம்பிக்கையும் கொண்டிருந்தோம். என் மொழியின், ஆற்றலின் தனித் தன்மையைக் கொம்புகளாக அல்ல மாதுளைமரமாக வளர்த்தெடுக்கவே முயன்று செயல்பட்டுவருகிறேன்.

ஒருவருக்குப் பிரபலமும் புகழும் கிடைக்கவேண்டுமென்றால் முதலாவதாகக் காலச்சுவடு பதிப்பகத்தின் மூலம் புத்தகம் கொண்டு வரவேண்டும்.அடுத்ததாகத் தமிழ்நாட்டிற்கு இலக்கியத்தின் பெயரில் ஒரு பயணம் போகவேண்டும். இலகுவாகக் கவிஞராகிவிட இவைதாம் வழியெனவும் நினைத்து முனைந்தவர்களினதும் குறைவாகமதிப்பிட்டவர்களின் பலவிதமான தப்பான அபிப்பிராயங்களையும் காலச்சுவடு நீக்கியிருக்கிறது. 

காலச்சுவடு பதிப்பகம் முன்பைவிடவும்அதிகமான புதிய இலங்கைத் தமிழ், முஸ்லிம் ஆண் பெண் கவிஞர்கள் எழுத்தாளர்களுக்குவாய்ப்பளிக்கிறது. வடக்கு- கிழக்கிலிருந்தும் பிற மாகாணங்களிலிருந்தும்படைப்புகளைப் பெற்று வெளியிடுகிறது. இவ்வருடம் இலங்கை அரசின் சாஹித்திய விருதைப்பெற்ற அதிகமான தமிழ்நூல்கள் காலச்சுவடுவெளியீடுகளே.

காலச்சுவடு என்னும் இலக்கிய இதழை என்னுடையவாசிப்பு அனுபவத்தை விரிந்துபோகச் செய்யவும், நுண்மையான அர்த்தங்களைக் கண்டெடுப்பதற்காகவுமே வாசிக்கிறேன். பொறுப்பாசிரியர் தேவிபாரதியின் உழைப்புசிறப்பானதும் மதிக்கத் தகுந்ததுமாகும்.

என்னிடம் 1988, 1989 இல் வெளியான காலச்சுவடுஇதழ்களின் இரு முழுத் தொகுப்புகளும் உள்ளன. சு.ரா. என்னும் ஆளுமை அந்த இதழை மிகுந்த படைப்பூக்கம்நிறைந்த பல்வகைமையான இலக்கியப் பங்களிப்புகளைத் தேர்ந்து பதிவு செய்திருக்கிறார்.சு.ரா இன்னும் அத்தொகுப்பினுள்ளே எழுதிக் கொண்டிருக்கிறார்.

என்னைப் பாதித்த காலச்சுவடு இதழ்கள்சிலவற்றையும் படைப்புக்களையும் நினவூட்ட விரும்புகிறேன். இதழ் 34இல் ஆனந்த் எழுதிய குறுநாவல் ‘நான்காவதுஆணி’, இதழ் 37இல் நிர்மல்வர்மாவின் நேர்காணல், இதழ்28இல் பா.வெங்கடேசன் எழுதிய ‘மழையின் குரல்தனிமை’ சிறுகதை, இதழ் 87இல் ‘சந்திரலேகாவின் மரணம் குறித்த பதிவுகளும் கண்ணுக்குள்விட்டுவிலாகாதிருக்கும் அவரது அரிதான புகைப்படங்களும்’,இதழ் 139இல் சுகுமாரன் மொழிபெயர்ப்பில் ‘மிகயீலின்இதயம் நின்றுவிட்டது’ சிறுகதை, அம்பையின் ‘வெப்பக்காற்றுஉன்மேல் வீசாதிருக்கட்டும்’, இதழ் 44இல் மலையாளக் கவிஞர் சுகதகுமாரி நேர்காணல், சு.ராவின் “வானகமே இளவெயிலே மரச்செறிவே“ பகுதி, இதழ் 132இல் ‘நீதியின் பெண்குரல், அருந்ததிராய் பற்றிய ’ மாலதி மைத்திரி கட்டுரை. இதழ் 117இல் அயல் இலக்கியம் விஸ்லா வாசிம்போர்காவின்‘உரையும் கவிதைகளும்,இதழ் 99இல் வைக்கம் முகம்மது பஷீர் நூற்றாண்டுச் சிறப்புப்பகுதி, இதழ் 153 இல் எம்.ஏ. நுஃமான் அவர்களின் நேர்காணல் என மிகச் சிலவற்றையே இங்கு குறிப்பிட முடியும்.

சென்ற ஜனவரி 2012இல் காலச்சுவடு பதிப்பித்த கவிஞர்.சேரனின் “காடாற்று“ கவிதை நூலை வெளியிட என்னை அழைத்ததின் பெயரில் மீண்டும் சென்னைசெல்லும் வாய்ப்புக் கிடைத்தது.

New Woodland Hotel இல் கண்ணன்எங்களை வரவேற்றார். காலச்சுவடுடன் தொடர்பு ஏற்பட்டு சுமார் ஆறு வருடங்களுக்குப்பிறகு முதன் முதலாக அவரைச்சந்திக்கக் கிடைத்ததில் நானும் அஸீமும் மகிழ்ச்சியடைந்திருந்தோம்.அருந்ததிராய்க்கும், நவயானா ஆனந்த் அவர்களுக்கும் கண்ணன் என்னை அறிமுகம் செய்துவைத்தார்.

சென்னைப் புத்தகக் கண்காட்சி, வேறு சிலநூல் வெளியீட்டு நிகழ்வுகள், ஆர்.எம். நௌசாத், உமாஷக்தியின் புத்தக வெளியீட்டுவிழா ஆகியவற்றில் கலந்துகொண்டோம். எழுத்தாளர் அசோகமித்திரன், கவிஞர். சுகுமாரன்,நெய்தல்கிருஷ்ணன், தேவிபாரதி, பெருந்தேவி, கோணங்கி, ஷாஜி எனப் பல எழுத்தாளர்களையும் என் அன்பிற்கும்மதிப்பிற்கும் உரியவர்களையும் சந்தித்தேன். ஒவ்வொன்றும் தனித் தனியான அர்த்தமுள்ளசந்திப்புகள்.

முதல் இலக்கியப் பயணத்தில் யாருக்கும் வாய்க்க முடியாத ஒரு சந்திப்புநேர்ந்தது. மாபெரும் ஒரியக் கவிஞரான சீதாகாந் மஹாபத்ரா அவர்களுடன் இரு நாள்கள்ரயிலில் பயணம் செய்யக் கிடைத்த ஒரு அதிஸ்டவசமான அனுபவத்துடன் திரும்பியிருந்தேன்.அடுத்த பயணத்தில் சின்ன விசயங்களின் கடவுள் எழுதிய பறவையைப் போன்ற மென்மையானபெண்ணான தன் அரசியல் கருத்துக்கள் செயற்பாடுகளால் தீப்பொறியைப்போல கனன்று கொண்டிருப்பவருமானஅருந்ததிராயைச் சந்தித்தேன். அவருடன் ஒரே மேடையைப் பகிர்ந்து கொண்டதும் அவருடன்உணவருந்தி உரையாடியதும் வாழ்வின் முக்கியமான தருணங்கள். விவரித்தால் எங்கேதீர்ந்து போய்விடுமோ என கனவைப்போல் இந்த அனுபவங்களைப் பூட்டி வைத்திருக்கிறேன்.

என் கவிதைகள் ஊடாகக் கிடைத்த வெற்றிகள்,சந்தோசங்கள் நினைவுகளில் காலச்சுவடு சேர்ந்தே பயணிக்கிறது.

இந்தக் கைகோர்த்தல்... இந்த நடை... மிகஅழகானது... வலிமையானது... ஒரு கவிதையைப்போல !

-----------------------------------------------------------------------------------------------------------

காலச்சுவடு இதழ் - 161, மே 2013


Sunday 19 May 2013

கவிதை முகம்

- ஸ்ரீரங்கம் சௌரிராஜன் (இந்தியா)

----------------------------------------------------------------------------------------------------------

இலங்கைக் கவிஞர் அனார் எழுதிய இரண்டாவது கவிதைத் தொகுதி “எனக்குக் கவிதை முகம்”. இதில் முப்பத்தொரு கவிதைகள் உள்ளன. இயற்கை, வன்முறை, பிரிவு, சுயம்பேசுதல், தத்துவம், காதல் என பாடுபொருள்கள் பல வகைப்படுகின்றன. இவரது மொழிநடை சற்றே முறுக்கேறி நிற்கிறது. புதுப்புது சொற்பிரயோகம் வியப்பளிக்கிறது. இதனாலேயே நல்ல கட்டமைப்பு கவிதைகளில் அமைந்து விடுகிறது. முதல் வாசிப்பில் பிடிபடாதவை, மீள்வாசிப்பில் நம்மைக் கவர்கின்றன. தன் சுதந்திரத்தை அளவோடு, அழகாய்ப் பயன்படுத்தும் அனார் நல்ல பல கவிதைகளுக்குச் சொந்தக்காரர் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

“நான் பெண்” என்ற கவிதை முதலில் நகுலனை நினைவுபடுத்தி, பின் பாரதியாரை எண்ண வைக்கிறது.

கண்கள் நெருப்பு
நானே ஆகாயம்
நானே அண்டம்
எனக்கென்ன எல்லைகள்

எனப் பெண்மை விஸ்வரூபம் காட்டுவது ரசிக்கத்தக்கது.

தாபம் பற்றி பேசும் “தணல் நதி” ஒரு நல்ல கவிதை.

விசமத்துடன் உதட்டைக் கடித்து
நெளியும் இவ்விரவில்
ஓர் முத்தத்தைப் பற்றவை

என்கிறார் கவிஞர்.

என் முன் தொங்குகிறது
தணல் நதியாய் இரவு

என்னும் போது ஓர் அழகான படிமம் அமைந்து விடுகிறது. மிகவும் தேர்ந்த சொற்கள் இக்கவிதையில் வந்து விழுந்துள்ளன.

மேகங்களை ஓட்டிச் செல்கிறது காற்று என்ற சொல்லாட்சி, லகானைக் கையில் பிடித்து மொழியை நடத்திச் செல்லும் அழகைக் காட்டுகிறது.

'குரல் என்ற நதி அல்லது திராட்சை ரசம்' சரியான கவிதை! “ஒரு வயல் வெளியளவு சொற்கள் இருந்தன என்னுள்” என்ற வரியின் ஆழ, அகல, உயரம் அசாதாரணமானவை. இது உருவாக்கும் அர்த்தவெளி பரந்துபட்டது. ஒரு மனிதக்குரல் இக்கவிதையில் ஆராதனை செய்யப்பட்டுள்ளது. அந்தக் குரலுக்குள் உட்கார்ந்து தவம் மேற்கொண்டிருக்கிறார் என்பது மிகையல்ல.

உன் குரலில் வைத்திருக்கிறாய்
முத்தங்களால் நிரம்பிய மாயப்புரம்

என்ற வரிகளில் அழகான படிமம் நம்மை மகிழ்விக்கிறது.

அனைத்து ருசிகளும் உள்ளதுதான்
உன் குரல் என்ற திராட்சை ரசம்

என்ற முத்தாய்ப்பு கவிதையை அதிக உயரத்துக்கு தூக்கிச் சென்றுவிட்டது. இத்தொகுப்பின் ஆகச் சிறந்த கவிதை என ஒன்றை மட்டும் குறிப்பிட முடியாது. ஆகவே இதுவும் ஓர் ஆகச் சிறந்த கவிதை என்பது என் துணிபு!

“மேலும் சில இரத்தக் குறிப்புகள்” என்ற கவிதை மனத்தை வருத்துகிறது. குழந்தை விரல் இரத்தம், பெண்ணின் இரத்தம், கொல்லப்பட்ட குழந்தையின் இரத்தம், வன்மத்தில் இரத்த வாடை, வேட்டையில் இரத்த நெடி எனப் பல வகையான இரத்தம் காண வேண்டியிருக்கிறது என்று ஆதங்கப்படுகிறார். “நிழலின் அலறல்” சிக்கலான வெளியீட்டு முறையில் அமைந்துள்ளது.

இழந்து விட்ட சொர்க்கத்தின்
சாபம் படிந்த மணல் திட்டுக்களில்
சபிக்கப்பட்ட தீர்ப்புகளாய்
எனதற்ற நீ
உனதற்ற நான்

என்ற முடிவில் முன் நிற்கிறது பிரிவு! இன்னும் தெளிவும், பத்தி பிரித்தலும் அமைந்தால் இக்கவிதை சென்று சேரும் வாசகர் வட்டம் பெரிதாகும்.

“காதலைக் கொல்லும் தேவை” அழுத்தமான காதல் கவிதை! வழக்கமான புதிய சிந்தனை, கவிதையின் இறுதியில் அற்புதமான படிமமாக அமைந்துள்ளது வண்ணத்துப்பூச்சி! என்ன மாதிரி வண்ணத்துப்பூச்சி தெரியுமா? முத்தம் கண்களாகவும், பெயர் சொல்லி அழைத்த கணங்கள் நிறங்களாகவும் கொண்டதொரு அபூர்வ வண்ணத்துப்பூச்சி!

காதலித்தவரை மணக்க முடியாமல் போகும் அனுபவம் பலருக்கும் பழக்கமானதுதான். அது போன்ற ஒரு சூழல் இக்கவிதையின் பாடுபொருளாகியுள்ளது.

உன் குரலின் இனிய ரகசியங்களை
சிரிப்பை
வானத்தில்
எறிந்து விட்டேன்

என்ற வரிகள் அப்படி ஒரு ஆசையை முன்வைக்கும் அதே நேரத்தில், அது சாத்தியமற்றது என்பதையும் சொல்லிவிடுகிறது. இக்கவிதையின் கட்டமைப்பு கவனத்தை ஈர்க்கிறது.

“பருவ காலங்களைச் சூடித்திரியும் கடற்கன்னி” என்ற கவிதையில் கதைத் தன்மை காணப்படுகிறது. “சிறுமிகளில் மடி கொள்ளாத வெண் சிப்பிகள்” அரிய யதார்த்தக் காட்சியாக உள்ளது. “மேகங்களை வேட்டையாடுகிறாள்” போன்ற புனைவுக் காட்சிகளும் இக்கவிதையில் இடம்பெற்றுள்ளன.

மின்னல்கள் கூக்குரலிட்டு கூவி வெடிப்பதெல்லாம்
கடற்கன்னியில் பெயரைத்தான்

என்பது நல்ல கற்பனை! இக்கவிதையை மீண்டும் மீண்டும் படித்தாலும் புதுமை மாறாமல் இருக்கிறது.

தலைப்புக் கவிதையான “எனக்குக் கவிதை முகம்” இருண்மையோடு காணப்படுகிறது. “அதோ வருகிறான் மாவீரன்…” என்னும் காட்சியும் அதைத் தொடரும் வரிகளும் தொடர்பில்லாமல் துண்டு துண்டாக நிற்பது போல் தெரிகின்றன. இரண்டு முயல்கள் என்னும் குறியீடு எதைக் குறிக்கிறது? “பெண் பலி” சமூக அவலத்தைச் சுட்டுகிறது. பெண்ணுரிமைக்கான குரல் பதிவாகியுள்ளது.

என் முன்தான் நிகழ்கிறது
என் மீதான கொலை!

என்னும் முத்தாய்ப்பு கவிதைக்கு வலிமையூட்டுகிறது.

தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவர் இல்லை
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்

என்ற பொருளாழமிக்க சினிமாப் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

“பிச்சி” ஒரு பாலியல் கவிதை. மறை பொருளாய், நாசூக்காக ஒரு கூடலைச் சொல்கிறது. பாணனின் இசை, மயக்க இழைகள், மாயத்திசை, கத்திகள் பய்ந்த கவிதை என எங்குதான் கிடைக்கின்றன இந்த சொல்லாடல்கள்?

வானம் பூனைக்குட்டியாகி
கடலை நக்குகிறது

என்ற கவிதையின் கடைசி வரிகள் தருகின்ற ஒரு பூதாகரமான படிமத்தை. “பசுமையின் உச்சமாகி நான் நிற்கிறேன்” என்ற வரி (கவிதை: “மின்னல்களைப் பரிசளிக்கும் மழை”) கவித்துவத்தை எல்லா சொற்களிலும் நிரப்பி, வாசகர்கள் முன் நீட்டுகிறது. இக்கவிதையின் தொடக்க வரிகள்,

மழையாய் பெய்து குளிர்ந்தன
எனக்குள் உன் பேச்சு

இந்த வரிகள்,

உன் பேச்சில்
மலர்களாய் தொடுக்கப்பட்டுள்ளன
எனக்கான ப்ரியங்கள்

என்ற கவிதை வரிகளை நினைவுபடுத்துகின்றன.

நிறைவாக, மொழி வளம் நன்கு கைவரப்பெற்றுள்ளது. சுயபாணி வலுவூட்டுகிறது. கலை நேர்த்தி பாராட்டுக்குரியது. கவிதைத் தலைப்புகள் அழகாக அமைந்துள்ளன. ரசமானவை! நல்ல மன நிறைவைத் தரும் தொகுப்பு.


----------------------------------------------------------------------------------------------------------

அம்ருதா ஏப்ரல் - 2013