Sunday 9 August 2015

ஒட்டுமொத்த பெண்களின் ஆன்மக்குரலே கவிதை - அனார்
--------------------------------------------------------------------------------------------------


01. நீங்கள் எழுதவந்த பின்புலத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்?


பாரம்பரியங்களும் பண்பாடுகளும் மாறாமல் இருந்த எனது கிராமத்தில், 90களில் நடந்த அரசியல் மாற்றங்கள் எனது பாடசாலைக் கல்வியின் இழப்பு என்பவற்றோடு என்னை சூழ்ந்த தனிமையிலிருந்தும் அச்சங்களில் இருந்தும் தப்பிப்பதற்கான ஒரு ஏமாற்று வழியாக கவிதை எழுத ஆரம்பித்தேன். மிகுந்த கட்டுப்பாடுகள்கொண்ட எனது சமூகத்தில் எனது குடும்பம் மதரீதியான செல்வாக்கை கொண்டிருந்தது. எனது தந்தை ஒரு மௌலவி ஆசிரியராகவும் அவருடைய தந்தை மார்க்க கல்விபெற்ற ஆலிமாகவும் ஊரின் பள்ளிவாசல் தலைவர்களாகவும் இருந்தவர்கள். எனவே கவிதை எழுதுவதற்கு முழு எதிர்ப்பு வீட்டிலேயே இருந்தது.

பல புனைபெயர்களில் நான் எழுதினேன். ஒரு பெயர் கண்டுபிடிக்கப்பட்டால் மற்றொரு பெயர் என்பதாக. வானொலியில் மட்டும்தான் சிலவருடங்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தேன். நிகழ்ச்சியில் என் கவிதை ஒலிபரப்பாகும் நேரம் காதோடு வைத்து எனது கவிதை ஒலிபரப்பாவதை கேட்பதுண்டு. எனது திருமணம் என்னை பல நெருக்கடிகளில் இருந்து மீட்டது என்பதே உண்மை. கணவர்தான் முதலாவது கவிதை நூலை தொகுத்து வெளியில் தெரியும்படி நான் சுதந்திரமாக எழுத ஊக்கமளித்தார். மற்றும் அதில் இன்றுவரை உறுதியாகவும் செயற்படுகிறார்.

கவிதை எழுதப்படும் தேவைக்கான பின்புலம் இல்லாதுவிட்டால் 90களில் ஆழமான வேதனைகளை கடந்து வந்திருக்க முடியாது. 80களில் எப்படி வடக்கில் புதிய கவிஞர்களின் காலமொன்று உருவாகியதோ, 90களில் அது கிழக்கில் முஸ்லீம் மக்களிடையே பல புதிய கவிஞர்களை உருவாக்கியது. என்னையும் இத்துறையில் அர்த்தபூர்வமாக செயற்படவைத்தது. 

ஒருவிதமான நெருக்கடி, வெறுமை எங்களைச் சூழும் பொழுது நாங்கள் புகுந்து கொள்ளும் தியானக்குகைபோன்றது இலக்கியத்தின் மீதான தேடல். குகைக்குள் எங்கிருந்தோ வந்து மின்னும் மின்மினிப்பூச்சிகள் எங்கள் கனவும் விடுதலையும். கவிதை என்பது அனைத்தையும் சாத்தியப்படுத்தும் இடம் என்பது எனது கருத்து.


02. நீங்கள் எழுத முற்பட்ட காலத்தில் தமிழில் பெண்ணிய எழுத்து எவ்வாறு இயங்கிக்கொண்டிருந்தது ? உங்களுக்கு அது எவ்வகையில் பாதை அமைத்தது?


என்னுடைய காலத்தில் 80களில் எழுதத் தொடங்கிய தலைமுறைப்பெண்கள் பலர் எழுதவில்லை. புதிய பெண்கள் எழுதத் தொடங்கியிருந்தனர். ஔவை, வினோதினி, ஆகர்ஷியா, .ஆழியாள், சுல்பிஃகா, கலா என மிகவும் விருப்பமான பெண்கவிஞர்கள் பெண்ணியக் கவிதைகளை நுட்பமான மொழியோடு எழுதியவர்கள். கலைத்துவமான பெண்ணிய வெளிப்பாட்டை எவ்வாறு மாறுபட்டு எழுதமுடியும் என அவர்கள் எழுத்தாக்கங்கள் வெளிப்பட்டன. பல பெண்கள் தனித்தன்மையோடு செறிவாக எழுதிக்கொண்டிருந்தனர். இலங்கையில், தமிழ்நாட்டில், புலம்பெயர்நாடுகளில் என எல்லாப் பெண்களின் எழுத்துக்களும் பெண்ணியக் கருத்துக்களின் வெவ்வேறு முகங்களை கொண்டிருந்தன. சல்மா, மாலதிமைத்திரி, சுகிர்தராணி, குட்டிரேவதி என தமிழ்நாட்டில் அந்த அலை மிகக்காத்திரமாக உருப்பெற்றிருந்தது. அவ்வளவு பெண்கள் எழுதியும் மேலும் புதிய புதிய பெண்கள் தோன்றிக்கொண்டிருந்தனர். மிக முக்கியமான பல படைப்புகள் வெளிவந்தகாலம் இதுவாகும். பெண்ணியா, பஹீமாஜஹான், நான் என புதிய பெண்கள் உருவாகிக்கொண்டிருந்தோம். எனவே என்னை அது பெருமளவு இணக்கமான மனநிலையுடன் தனித்து செயல்படும் உறுதியையும் ஏற்படுத்தியது. தேடலுடன் பெண்ணியக் கவிதைகளை வாசிப்பதற்கும், எனக்கென்ற ஒரு மொழியில் பெரிதும் மாறுபட்ட என் சூழலை எழுதவும் தொடங்கினேன். ஆண், பெண் வித்தியாசத்தையும் வேறுபாட்டையும் கடந்து எழுத்து செயற்பாடு எனும் தளத்தில் முன்செல்லவெண்டும் என்ற துணிவையும் வளர்த்துக்கொண்டேன். முஸ்லீம் பெண்ணுக்கான தனித்துவத்துடன் இலக்கியப்பயணத்தை தொடர எனது பாதையை நானே அமைக்க வேண்டியிருந்தது.

நவீன பெண்ணியக் கவிதையைப் பொறுத்தவரை, எனது சமூகத்தில் அதற்கு முதல் வேறொருவர் தொடர்ந்து தீவிரமாக செயற்பட்டிராத அந்த சூழ்நிலை எனக்கு அளவற்ற சவால்களை கடினமான வழிகளில் ஏற்படுத்தியிருந்தது. என்னுடைய எழுத்து, சிந்தனை, சொல்முறைகளில் நவீனத்தையும் வித்தியாசத்தையும் உள்வாங்கியிருந்தது. எதிர்ப்புகளை, காழ்ப்புணர்ச்சியை அவதூறுகளை எதிர்கொண்டவளாகவே எழுதிக்கொண்டிருந்தேன்.

சில தீவிர இலக்கிய இதழ்கள், பெண்ணியம் சார்ந்த எழுத்துக்களை ஊக்குவித்தன செயல்பட்டன. சரிநிகர், மூன்றாவது மனிதன் போன்றவையும் தனிநபர்கள் மூலம்வெளிப்படும் சிற்றிதழ்களிலும் எழுதினேன். குறிப்பாக ஏஜீஎம் ஸதக்கா கிழக்கிலும், எஸ். சுதாகர் வடக்கிலும் கொண்டுவந்த இதழ்களிலும், பெண் சஞ்சிகை போன்ற சிறுபத்திரிகைகள், இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் முனைப்போடு வெளிவந்து கொண்டுமிருந்தன. அவற்றில் எல்லாம் எழுதினேன். அதிகம் எக்ஸில் இதழில் எழுதிவந்தேன். என்னை அவர்கள் தொடர்ந்து மிகுந்த உற்சாகப்படுத்தினர்.


03. உங்களைப்பாதித்த பெண் எழுத்தாளர்கள், ஆளுமைகள் பற்றியும் உங்களை ஈர்த்த புத்தகங்கள் கவிதைகள் பற்றியும் சொல்லுங்கள்?


இலக்கியப் பரிச்சயம் வாசிப்பு என்பவற்றை நான் முதலியே பெற்றிருக்கிவில்லை. வாசிக்க ஆரம்பித்த பொழுது அனேகமான எழுத்துக்களும் மொழிபெயர்ப்புகளும் பழைய புதிய எழுத்தாளுமைகளும் என்னை ஈர்த்தவர்களாகவும் பாதிப்புச் செலுத்துகின்றவர்களாகவுமே இருந்தனர். அனைத்து இலக்கிய வடிவங்களிலும் என்னை கவிதை தான் ஆகர்ஷித்தது. சிறு கதையிலும் நாவலிலும் கட்டுரைகளிலும் நான் கவிதைகளையே கண்டு கொண்டுடிருந்தேன. பெண் தன்னை முழுக்க திறக்கும் இடம் கவிதை என நம்புகிறேன். ஒட்டுமொத்த பெண்களின் ஆன்மக் குரலாக கவிதை இருந்து வருகிறது. அத்தகைய பெண் ஆளுமைகளின் பெயர்களைக் குறிப்பிடலாம். பெண்கள் எழுத்துக்கள் மட்டுமே பாதிப்புச் செலுத்தியது என்று தனியாக பிரித்துக் கூறமுடியாது. வாசிப்பனுபவத்தில் ஆண் பெண் பிரிப்புகள் தேவையற்றது. மனிதர்களின் வாழ்வையும் மனங்களையும் நெருங்குவதற்கு முன்தடைகள், முன் தீர்மானங்கள் ஒன்றும் தேவையில்லை. கேள்வியின் அடிப்படையில் கூறும் பொழுது பேரா. எம்.ஏ. நுஃமான் மொழிபெயர்த்த பலஸ்தீனக்கவிதைகள், சொல்லாதசேதி கவிதைத் தொகுப்பையும், மரணத்தில் வாழ்வோம் தொகுப்பையும், இவ்விரண்டு தொகுப்புகளிலும் இடம்பெற்ற கவிஞர்களையும் முக்கியமாகக் குறிப்பிடலாம். சிவரமணியின் முனைப்பு கவிதையில்,

//பேய்களால் சிதைக்கப்படும் 
பிரேதத்தைப்போன்று சிதைக்கப்பட்டேன், 
ஆத்மாவின் உணர்ச்சிகளெல்லாம் 
இரத்தம் தீண்டிய கரங்களால் அசுத்தப்படுத்தப்பட்டன 
என்னை மேகதிற்குள்ளும் மண்ணிற்குள்ளும் 
மறைக்க எண்ணிய வேளையில் 
வெளிச்சம் போட்டுப் பார்த்தனர்// 

எனறெழுதுகிறார். இத்தகைய எழுத்துக்கள் புதிதாக எழுதவரும் பெண்ணுக்கு பாதிப்பையும் அதிர்ச்சியையும் நிச்சயம் ஏற்படுத்தும். என்னை வெகுவாக ஈர்த்த இன்னொரு பெண் ஊர்வசி. அவருடைய மொழி முழுக்க முழுக்க கலைத்தன்மை வாய்ந்தது. அழகியல் நிரம்பியது. இயற்கையின் நெருக்கத்தை கொண்டிருப்பது வேலி என்றொரு கவிதை என்னை வெகுவாக பாதித்த ஒன்று. ஒருவரது எழுத்தாளுமையில் இத்தகைய வீச்சும் நுண்மையான எழுத்துக்களைப் பின் தொடர்வது உள்ளுணர்ந்து வாசிப்பது மிகுந்த தாக்கம் செலுத்தக்கூடிய ஒன்றாகும். என்னுடைய வாசிப்புப் பட்டியல் மிக நீண்டது. பெண் எழுத்தாளர்களை மாத்திரமே வாசிக்கின்ற குறுகிய மனப்பான்மை எனக்கில்லை. நவீனத்துவம் பின்நவீனத்துவம் பெண்ணியம் தலித்தியம் என்ற வேறுபாடுகள் இல்லாது அனைவரையும் வாசிக்கின்றவள் நான். உணர்வும் கருத்தும் தனியாக இல்லாமல் முழுக் கலையாகப் பெருகும் புதிய எழுத்தாளர்கள் அதிகம். அவர்கள் அனைவரின் உழைப்பும் எழுத்துக்களும் என்னை பாதிக்கவே செய்கின்றன. என் சமகால எழுத்தாளர்கள் மீது வாஞ்சையும் மதிப்பும்முள்ளது. ஆரம்பநாட்களில் படித்த நுல்கள் இன்றைய எனது எழுத்து வளர்சிச்சிக்கு உரம்மூட்டியவை என நம்புகின்றேன். ஆனால் எப்பொழுதும் மொழிபெயர்ப்பு நூல்களை கவனமெடுத்து வாசிக்கிறேன். கமலாதாஸ், அருந்திராய், சில்வியாபிளாத், அன்னா அக்மதோவா, சிமோன்தீபவார், மஹ்மூத் தர்வீஸ், ஜோர்ஜ் லூயி போர்ஹே, பப்லோநெரூதா, சதாத் ஹசன்மாண்டோ இப்படிக் கூறிக்கொண்டே போகலாம். இவர்களைப்போல எழுத முடியாதா என்னும் ஏக்கமும் எழுத வேண்டுமென்ற பேராசையும் உண்டு. மேலும் எனக்கு விருப்பமான சில புத்தகங்களையும் பெயர்களையும் குறிப்பிடாலம் கவிஞர் சேரனின் தொகுப்புகள், பா. அகிலன் கவிதைகள், வைக்கம் முகம்மது பசீர் தொகுப்புகள், சுந்தர ராமசாமியின் கவிதைகள், ஜேஜே சில குறிப்புகள், கோணங்கி, மௌனி என்றொரு நீண்ட வரிசை இருக்கிறது. இந்தக் கேள்விக்கான பதில் ஒரு கட்டுரையாக எழுத வேண்டியயொன்று என்று நினைக்கிறேன்.




04. நீங்கள் எழுதத் துவங்கியபோது ஏற்பட்ட தடைகளை விமர்சன எதிர்ப்புகளை எப்படி எதிர் கொண்டீர்கள் ? இஸ்லாமிய பெண் படைப்பாளியாக சமூகத்திலும் குடும்பத்திலும் ஏற்பட்ட சவால்களை எப்படி அணுகினீர்கள்? 


ஒவ்வொரு சமுகப்பெண்ணும் எதிர்கொள்ளக்கூடியவைதான் இந்த நெருக்கடிகள் ஆயினும் முஸ்லீம்பெண் ஒருவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் கூடுதலான வேறுபாடுகள் காணப்படுகின்றன. முஸ்லீம் பெண் திருமணத்தின் பிறகு தன்னுடைய எழுத்துச் செயற்பாட்டை முன்னெடுப்பது சாகவும் பிழைக்கவுமான போராட்டம் என்றுதான் கூறமுடியும். மிக நுட்பமான வலைப்பின்னல்களை பின்னிவைத்திருக்கும் சமுதாயத்தில் கவிதைகளை எழுதுவதற்கு மன உறுதி இரண்டு மடங்காகத் தேவைப்படுகின்றது. நான் கவிதை எழுதுகிறபெண் என்பது வெளிப்படாமல் இருக்கத்தான் எனது சூழல் ஆசைப்படுகின்றது நிர்ப்பந்திக்கின்றது.

விமர்சன எதிர்ப்பும் பாராட்டும் அங்கீகாரமும் எனக்கு ஒரே சமயத்தில் கிடைத்துக்கொண்டிருந்தன. ஒன்றுக்கும் உதவாத எழுத்துக்களை எழுதும் தங்களை தாங்களே எழுத்தாளர்களாக எண்ணிச் செயற்படும் கிழக்கின் வட்டார எழுத்தாளர்கள் சிலருக்கு என்மீது கடும் கோபமும் காழ்ப்புணர்ச்சியும் இருந்ததன் காரணமாக பலவழிகளில் அசௌகரியமான நாகரீகமற்ற முறைகளில் எதிர்ப்புகளை காட்டினர். இன்றும் அது தொடர்கிறது. நானும் எனது அஸீமுமாக இணைந்தே இவற்றை எதிர்கொள்கிறோம்.

விமர்சனம் என்றால், அவதூறுகளை பரப்புதல் என்றாகிவிட்ட சூழலில் இவற்றை கடந்துவர வெற்றிகரமாக கையாளவும் பழகியிருக்கிறேன்.

இஸ்லாமிய பெண்படைப்பாளியாக சமூகத்தில் எப்படி தொடர்ந்து செயற்படுவது என்பதன் வரையறை எனக்கு தெளிவாகத் தெரியும் என்பதனால் குடும்பத்தில் ஒருவித சங்கடமும் இல்லை. என்னுடைய சமூதாயத்தில் என்னை சுட்டிக்காட்டி இன்னொரு புதிய பெண் எழுதமுற்படுவதை எவரும் தடுக்கக்கூடாது என்பதில் நான் கவனமாக செயற்படுகிறேன். சவால்மிக்க எடுத்துக்காட்டாக நான் இருக்கிறேன் என்பதே மகிழ்ச்சியான உண்மையுமாகும்.


05. இப்போது நீங்கள் இயங்குவதற்கான வெளி உங்களுக்கு உருவாகியுள்ளதா? அல்லது ஆரம்பகாலத்தில் நீங்கள் சந்தித்த தடைகள் இன்னும் தொடர்கின்றதா?


ஆம், தடைகளுக்கு எவ்வித பஞ்சமும் இல்லை. அது இரவு பகலாக இருக்கிறது. ஆணிடமிருந்தும் பெண்ணிடமிருந்தும் சக எழுத்தாளர்களிடமிருந்தும் யாரென்றே அறியாத, இலக்கியம் என்றால் என்ன என்றே அறியாத சமூகக் குற்றவாளிகளிடம் இருந்தும் நாளாந்தம் நான் எதிர்கொள்கிறேன். அதனை முடிவுக்கு கொண்டுவர நம்முடைய நேரம் காலத்தை கொடுத்து பிரயத்தனப்படத் தொடங்கினால் கவிதை மனம் செயற்படாது. எழுதும் மனநிலை எழுத்தாளருக்கு மிக முக்கியம்.

என்னுடைய எழுத்துவெளி மிக தெளிவான ஒன்றாக மாறியிருக்கிறது. நான் செயற்பட வேண்டிய மன அமைப்புதான் இனிமேலும் உறுதிப்படுத்த வேண்டும். தீர்க்கமும் தெளிவாகவும் தொடர்ந்து நான் செயற்படலாம் என்பதே எனது எதிர்பார்ப்பு.

எனக்கான எழுதும் செயற்படும் வெளி விசாலமாக ஆகியுள்ளது. இலக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ளவும், திறந்த உரையாடல்களில் பங்குபெறவும் நான் விரும்பியவாறு செயற்படவும் முடிகின்றது. சில விட்டுக்கொடுப்புகளினூடே நான் முன்னேறிச் செல்கின்றேன் என்றே கருதுகிறேன்.


06. இஸ்லாமிய சமூகமும், மதவாதமும் பெண் எழுத்தாளர்களை எவ்வாறு நோக்குகின்றது? அவர்களுக்கு என்ன அங்கீகாரம் மற்றும் வெளியைத் தந்துள்ளது?


பொதுவாகவே மதத்திற்கும் மதவாதத்திற்கும் நிறய வேறுபாடுகளை நாம் உலகமெங்கும் காணலாம். இஸ்லாத்தைப் பொறுத்தவரைக்கும் பல்வேறு கொள்கைகள், பிரிவுகள் தோன்றிவிட்டன. எனவே எனக்குப்பிறகு 73 பிரிவினர் காணப்படுவார்கள் என்பதும், ஒரு தரப்பினரே உண்மையாளர்கள் என்பதும் முஹம்மது நபிகளின் வாக்காகும். இது தீர்வற்ற சர்ச்சையாக தொடரக்கூடியது.

இங்கே என்னுடைய வாழ்க்கை சூழலில், ஊரில் நாட்டில் கொள்கைசார்ந்து பலபிரிவுகளுடன் முஸ்லீம்கள் காணப்படுகின்றனர். எந்தப்பிரிவிலும் இணையாத சாதாரண முஸ்லீம்களும் உள்ளனர். பெண்களுக்கு இந்தப் பிரிவுகள் கொடுக்கும் நிர்ப்பந்தம் நெருக்கடி வெவ்வேறு வகையானது என்பதனை கண்கூடாக காண்கிறோம். இது இவ்வாறிருக்க பெண் எழுத்தாளர்களை எந்தப் பிரிவினருமே முற்று முழுதாக ஏற்பதில்லை. பாடசாலை தமிழ் இலக்கியத்தில் பெண் படைப்பாளர்கள் பற்றிய அறிமுகம், அவர்களுடைய படைப்புகளை இணைத்திருக்கிறார்கள். பெண்மொழிக்கட்டுரைகள், கவிதைகள் உள்ளடக்கபட்டிருக்கிறது. பாடசாலை மட்டத்தில் இதுவொரு நல்ல மாற்றமாகும். எங்கள் தமிழ் இலக்கியத்துறையில் பெண் எழுத்தாளர்களை, பெண் எழுத்தாளர்களே நோக்குவதில் அதிக வித்தியாசம் காணப்படுகையில், குழுக்களாகப் பிரிந்து எதிர் மனநிலையில் செயற்படுகையில் மதங்களை மட்டும் குறை சொல்வது எப்படி? மதரீதியான ஆண் சமுகம் இவ்விடயத்தை புரிந்துணர்வுடன் கையாளக்கூடும் என நாம் எதிர்பார்க்க முடியாதுதான். சமுதாயத்தின் பார்வையை மாற்றும்முகமாக ஆணும் பெண்ணுமாக இணைந்து தமது எழுத்துச் செயற்பாடுகளை முன்னெடுப்பதுதான் எதிர்காலத்தில் இலக்கிய உலகில் முஸ்லீம்பெண்களை உருவாக்க வழிகோலும் என நம்புகிறேன். பெண் எழுத்தாளருக்கான அங்கீகாரத்தையும் எழுதும் வெளியையும் இன்னும் முழுமையாக பெறவில்லை என்பதற்கு மதரீதியான கட்டுப்பாடுகள் மாத்திரமல்ல, ஆணாதிக்கப் போக்கும்தான் இதற்கு முழுக்காரணம் என நான் கூறவிரும்புகிறேன். உலகில் பலநாடுகளில் இலக்கியம், சினிமா, ஓவியம், இசை போன்ற துறைகளில் எழுத்தாளர்களை நாம் காணமுடியும். மிகுந்த தன்னிகரற்ற உயர்ந்த கலைஞர்களாக முஸ்லீம்கள் காணப்படுகின்றார்கள். பல உதாரணங்கள் நம்முன் உள்ளது. பெண்களும் அவ்விதமே. எங்களது இறுக்கமான சூழ்நிலைகள் ஒரு காரணம். ஆனால் சுயவிருப்பமுள்ள தேடலுள்ள பெண்கள் மத்தியில் கலைத்துறையில் ஆர்வம், விருப்பம் குறைவு எனும் காரணமும் உண்டு. அவர்கள் படித்தோமா, வேலைக்குப்போனாமா, திருமணம் முடித்தோமா, பிள்ளைகள், கணவர், குடும்பம், மற்றும் தொலைக்காட்சி நாடகங்கள் பார்த்தோமா, உறங்கி எழுந்தோமா என அவர்கள் இருக்க விரும்புகிறார்கள். எழுத்தில் இயங்கும் பெண்கள் சார்ந்து பொதுக்கருத்தாகப் கூறப்படும் விடயங்கள் தீவிரமாக அவர்கள் செயற்படுவதைத் தடுக்கின்றது.


07. உங்கள் கவிதைகளின் சிறப்பு அவற்றின் மொழியிலும் படிமங்களிலும் உள்ளது. வாசிக்கும் போதெல்லாம் வியக்கவைக்கும் அந்த மொழியின் ஆளுமையை எப்படி பெற்றீர்கள்?


யாரும் ரகசியங்களின் முழுப்பரிமாணத்தை அறிந்துகொள்ளமுடியாது. அறிந்து கொள்ளக்கூடிய ஒன்றில் ஒரு ரகசியமும் ஒளிந்திருக்காது. என்னுடைய ரகசியங்கள் எனது கவிதைமொழியிலும் படிமங்களிலும் ஒளிந்திருக்கின்றன. அதனால் அது வசீகரமானதாக இருக்கின்றது போலும். எனது தனிமை, இயற்கையை சார்ந்திருக்கக்கூடியது. மேலும் நான் இறந்து போகாமல் இருப்பதற்காக நான் பெண்ணாகவே இருபப்தற்காக வாழ்வை தொட்டுணர்வதற்காக கவிதைகள் எழுதகிறேன். அந்தமொழி துயரும் வெறுமையும் கொண்டாட்டமும் காதலின் கொதிப்பும் கொண்டிருப்பது. மந்திரத் தன்மைகளும் பைத்தியமும் நிச்சலனமும் தொலைதலும் மெய்நிலையும் சூழ்ந்த மனதிலிருந்து வெளிப்படுகின்ற கவிதைகள் அவை என்றுமட்டும் சொல்லலாம். மேலும் என்னால் அதனை விபரிக்க முடியுமென்று தோன்றவில்லை.


08. ஈழத்தின் வன்முறையும் இன அழிப்பும் உங்கள் படைப்புகளை எவ்வாறு பாதித்துள்ளன? அவற்றை உங்கள் கவிதைகள் எப்படி உள்வாங்கி வெளிப்படுத்துகின்றன?


வன்முறையும், இனஅழிப்பும் பாதிக்காத எந்தவொரு எழுத்தாளரும் எங்கும் இருக்கமுடியாது. நான் பத்து வயதிலிருந்தே இந்தப் பிரச்சினைகளோடு கலந்திருந்தேன். கண்கூடாகக் கண்டும் அனுபவித்தும் இருக்கிறேன். ஆனால் அவற்றின் எல்லாச் சம்பவங்களையும் நான் எழுதிவிடவில்லை. ஒருவேளை அவை கவிதையாகமல் வேறு பதிவுகளில் இனிவரக்கூடும். ஆயினும் சில கவிதைகள் எழுதியிருக்கிறேன். மேலும் சில இரத்தக்குறிப்புகள் மிக அதிகமாகப் பேசப்பட்ட முக்கியமான கவிதையாகும்.

நேரடியாக முள்ளிவாய்க்கால் விடயங்களை பேசும் கவிதைதான் மாபெரும் உணவுமேசை. எனது அனைத்து தொகுப்புகளிலும் போர் சம்மந்தமான மக்கள் உணர்வுகளை பேசும் கவிதைகள் இருக்கின்றன. எந்தவொரு அனர்த்தமும் பேரழிவும் நிலைகுலையச் செய்பவைதான். அதை உடனடித் தயாரிப்புகளில் கவிதையாக்குவதில் பல மனத்தடைகள் எனக்கு உருவாகிவிடும். அந்தச் சமயத்தில் கவிதை எழுதுதல் ஒரு ஆடம்பரச் செயல்போல தோன்றுவதும் உண்டு. மனிதராய் இருப்பதிலேயே குற்ற உணர்வுக்கு ஆளாகின்ற போது எப்படி உடனடியாக எழுத முடியும்? பல தயக்கங்கள் இன்னும் எனக்குள் உள்ளது எழுதுவதற்கு. ஆனால் இன்று பல வழிகளில் இந்தவிடயங்களை எழுதிவருகின்றனர். அவர்கள் அனைவரிடமும் ஒரு உண்மை உண்டு. ஒரு அனுபவம் ஒரு கருத்து உண்டு. அவர்களது எழுத்துக்கள் அனைத்தின் மீது என் மரியாதையை வைத்திருக்கிறேன். வன்முறை தொடர்பான பதிவுகள் ஆழ்ந்த காயமும் இழப்பும் கண்டவர்களிமிருந்து தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருப்பதை தற்போது அதிகம் அவதானிக்கின்றேன். 


09. ஒரு தொகுப்பிற்கும் அடுத்த தொகுப்பிற்கும் இடையில் ஒரு படைப்பாளியாக நிகழும் மாற்றங்கள் என்ன ? அந்த மாற்றத்தில் இஸ்லாமிய சமூகமும் மதமும் தமிழ்ச் சமூகமும் படைப்புச்சூழலும் எப்படி பங்களிப்புச் செய்கின்றன?


தொகுப்புக்களுக்கிடையில் மாற்றங்கள் நிச்சயம் உண்டு. அது அத்தனை விரைவான சுலபமான ஒன்றுமல்ல. எனது முதலாவது தொகுப்பான ஓவியம் வரையாத தூரிகை வெளிவந்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் அவை தொகுக்கப்படுவதற்காக எழுதப்பட்டவையல்ல. முழுக்க நம்பிக்கையற்ற குழப்பம் சூழ்ந்த மனநிலையிலிருந்து அக்கவிதைகளை எழுதினேன். ஒருவகையில் இறப்பதற்குமுன் எழுதிவைக்கப்படும் கடிதத்தை ஒத்தவைகள் அவை. அவநம்பிக்கையின் மொத்த வடிவமாக இருந்தது. அந்த கவிதைத் தொகுப்பிற்கு சாகித்திய பரிசு கிடைத்தது குடும்பத்தில் வேறு அணுகுமுறையை ஏற்படுத்தியது. யாருக்கும் தெரியாமல் எழுதி, யாருக்கும் தெரியாமல் அனுப்பி யாருக்கும் தெரியாமல் செயற்படும் சிரமங்கள் அதன் மூலம் விலகி இருந்தன.

இரண்டாவது தொகுப்பான எனக்குக் கவிதைமுகம் எனது அடையாளத்தை தனித்துவத்தை எனக்கான மொழியை கொண்டிருந்தது. தமிழ் இலக்கியச்சூழலில் கவன ஈர்ப்பை வழங்கியது. இந்தக் காலம்தான் இறுகச்சூழ்ந்த வாழ்வின் கருணையை கருணை இன்மையையும் முடிவற்ற துயரும் கொண்ட காலமாகும். எதிர்கொண்ட வக்கிரமான தடைகளையும் இம்சைகளையும் கடந்து கவிதைதான் எனக்கு எல்லாம் என்ற நிலையில் இருந்தபடியே அடுத்தடுத்த தொகுப்புகளை கொண்டுவந்தேன். உடல் பச்சைவானம், பெருங்கடல் போடுகிறேன் கவிதைத் தொகுப்புகள் காலச்சுவடில் வந்தன. எனது ஆர்வத்தின் சிறு முயற்சியால் நாட்டார்பாடல்களை பொடு பொடுத்த மழைத்தூத்தல் தொகுத்தேன். க்ரியா வெளியிட்டது.

நான் வாழும் சமூகத்திலிருந்தபடிதான் செயல்படுகின்றேன். அங்கிருந்துதான் எதிர்காலத்தையும் கடந்தகாலத்தையும் .இணைக்கின்றேன். எழுதும் பெண்கள் குறைவானவர்களாக இருந்தாலும் முஸ்லீம் ஆண் எழுத்தாளர்கள் நிறைந்தே காணப்படுகின்றனர். அவர்கள் மத்தியில் தொடர்ந்தும் செயற்படுவது அதில் ஓரளவு நீணடகாலத்தை கடந்து வந்திருப்பதுமே நிகழ்காலத்தில் எனக்குள்ள சவாலும் வெற்றியுமாகும்.


10. பெண் படைப்பாளிகளின் எழுத்துச் சுதந்திரம் குடும்பம் மற்றும் சமூகத்தின் அடக்கு முறைகளுக்கும் அதிர்வுகளுக்குமிடையேதான் உருக்கொள்கிறது. இஸ்லாமிய பெண்படைப்பாளிக்கு இன்னும் கூடுதல் நெருக்கடி தரும் சூழல் இது. அதனால் சுயதணிக்கை என்பது பெண்ணெழுத்தில் மிக நுண்மையாக இயங்கி ஆட்சி செய்கிறது. இந்த சுய தணிக்கை உங்கள் வெளிப்பாட்டை எப்படி பாதிக்கின்றது?


சுய தணிக்கையின்றித்தான் எழுதவிரும்புகிறேன். போர்க்கால அச்ச சூழலில் சுயதணிக்கை தேவையாக இருந்தது. பல்வேறு அரசியல் முரண்பாடுகளை தவிர்க்கும் பொருட்டே எழுத்தாளர்கள் சுயதணிக்கை செய்ய நேர்கின்றது. எழுத்தாளர்களது சுயநலம் சார்ந்து அது ஒருபோதும் இருப்பதில்லை. பல்வேறு நெருக்கடிகளை தவிர்க்கும் பொருட்டே சுய தணிக்கயைின் தேவை எழுகின்றது. என்போன்ற பெண் ஒருவர் எழுதும்போது என் முன்னுள்ள குடும்பம், சமூக கட்டுப்பாடுகள், அதன் பிறகு அரசியல் சூழல் என்பன சுய தணிக்கை மேற்கொள்ள காரணமாகின்றன.

தணிக்கையின்றிய வெளிப்பாட்டினால் பாதிப்பு ஏற்படுகின்றது தான். சுமை இறுக்கம் வெறுப்பு எழுத்தாளர்களை ஆழமாகப் பாதிக்கின்றது. அண்மையில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துமிருக்கினறன. கவிதைகளில் முடிந்தவரை தணிக்கைகளை உடைத்து மீறிச் செல்லும் வழிகள் உள்ளன. நான் அதன் எல்லைகளை மொழியின் உதவியால் உடைத்து பல கவிதைகளை எழுதியிருக்கிறேன்.

புலம் பெயர் எழுத்துக்கள் இந்த விடயத்தில் மிகவும் விசாலமடைந்திருக்கின்றது. நான் அவதானித்த வகையில் எல்லைக்கோடுகளை எடுத்து வீசிய கலைஞர்களாக இங்குள்ள கலைஞர்களும் புதிய பழைய எழுத்தாளர்களும் காணப்படுகின்றனர். அங்கு நாங்கள் எந்த மௌனத்திற்குள் தொடர்ந்து குமைகின்றோமோ அதே மௌனங்கள் இங்கே அபரிமிதமான ஆற்றல்களாக வெளிப்பட்டுக்கொண்டு வருகின்றன. கவிதை, நாடகம், இசை, குறுந்திரைப்படம், நாவல், ஒவியம் புகைப்படம் சிறுகதை கூத்துவடிவங்கள் என வாழ்வதற்கான அர்த்தச் செயற்பாடுகளாக உயிருள்ளதாக மௌனங்கள் பல்வேறு வடிவங்கள் எடுத்து அசைகின்றன. இவற்றை அவதானிக்கையில் மிகுந்த சந்தோசமும் நம்பிக்கையும் ஏற்படுகின்றது.

--------------------------------------------------------------------------------------------------

கனடாவில் இருந்து வெளிவரும் தாய்வீடு பத்திரிகையில் இடம்பெற்ற எனது நேர்காணல்.

நேர்காணல் செய்த தோழி கீதாவுக்கும், அ்ன்பிற்குரிய நண்பர்கள், தாய்வீடு பத்திரிகை ஆசிரியர் திலீப் குமார், புகைப்படக் கலைஞர் கருணா மற்றும் காலம் செல்வம் ஆகியோருக்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

http://www.thaiveedu.com/publications/pdf/issues/jul-15.pdf


Thursday 4 June 2015

‘If language is wings, poetry is freedom’ - Anar
-------------------------------------------------------------------------------------------

She was the one of the international authors who participated in the Toronto Festival of Literature and the Arts (Fsala-15). The following is her speech she delivered at the session on South Asia (Is their unity in South Asian writing?)







Dear friends,

Each of us has stories to tell, they may be the same or they may be different. They may be about your footsteps towards your proud achievements. In the same manner, I, who come from a Muslim village in Eastern Sri Lanka, from a very orthodox Muslim family, also have a story – a story about loneliness and struggle. I survived that kind of suffering to write simple poems. You know how valuable any small thing will be when it is born out of struggle. I had to stop my schooling at a very early age and from then my life became a limbo in the dark. At that time, the only thing that gave me confidence was my mother tongue, Tamil.




If language can be described as wings, then poetry is freedom. So, I provided that freedom for myself and language became my wings. The gap between the space that a society provides for a woman and the space in which the woman wants to exist is dangerous. For a Muslim woman the fear instilled by these dangers speaks on different levels and brings various challenges. Her religion begins from her hair and ends in her toes.


For a Muslim woman to write poetry after getting married is a huge challenge. Her poetry is always seen through the lens called religion and gets problematized. As a woman, especially as a Muslim woman the challenges she faces are enormous and very painful. Our writing lies at the centre of these challenges.


Life and death existed in a close proximity then. At times they seemed to be the same for me. Death roamed like the roaring noise of a helicopter. At the same time, inside the locked doors poetry floated like a spell within me. I was dreaming about filling my sheath with poetry. I think poetry is a language about language. It articulates our boundless dreams and imaginations.


I articulate the sensibility between that which is understood and that which is not, between wounds, the experience of music between the eyes and the heart. That is, my poetry is about that fire known as language, which a woman carries under water.


As far as the Tamil language is concerned, even though it is the same language spoken in different Tamil speaking regions, ideologies and challenges of communities are not the same. The issues handled by authors, whether in the political or in the cultural realm are in peril of being often misunderstood. When questions are raised on the issues of an individual or a community or any other problematic situation, it becomes a controversy between fundamental groups and small communal groups. Many writers avoid expressing anything directly and instead use a censored way of writing or some may even completely avoid writing about particular issues. Authors who use English language as their medium are less prone to such controversies, compared to writers in the vernacular. Besides, the freedom in expressing in English provides them with better acceptance and attention. Consequently, writers in English wield more power through their writing than their vernacular counterparts.



Due to the rapid growth in telecommunication, the internet and such, I think readership in English and in Tamil has declined. Yet, I can say that ebooks have not taken the space of regular books completely. In the sphere of Tamil writing, along with other reasons, the love for English language has also been a reason for the declining readership. On the contrary, literary works in Tamil have enjoyed good readership as they were not affected as much as commercial writing or commercial magazines. Literary works that call for undivided attention are being published more than ever before. So it is hard to point one particular direction when there are continuous changes taking place in the field. However, what kind of ripples those works create and what dilutes the connection between readers and poetry are questions beyond my scope here. Also those questions need to be answered from socio psychological perspective.


There are many common threads in literary themes among South Asian writers. The unity between feminist writers is even stronger. Dalit writing, literature on caste divisions, on war, on relationships between men and women, education, family, communal, political, challenges in personal life and economic inequality can be considered as some of the reasons for this. Yet, we also have to consider the differences in literature produced in various regions within a country.


One can observe that among the people speaking in Tamil language, ideologies, political views, writing and virtues exist differently. For instance, in Sri Lanka, Tamil writing in Eastern province differs from the North and the mountain regions. Indian writing in Tamil and Tamil diasporic writing are also very diverse in their engagement. This can also be applied to other South Asian countries. Just like how life is not monolithic, so too are literature, emotions, ideologies and realities. Therefore, it is not possible to come to a single conclusion and there are multiple possibilities.


--------------------------------------------------------------------------------------------------------------------------


Toronto Festival of Literature and the Arts' நிகழ்வின் போது நான் பேசிய உரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தளித்த தோழி கீதாவுக்கு நன்றி. 


http://www.generallyaboutbooks.com/2015/05/if-language-is-wings-poetry-is-freedom.html

https://www.flickr.com/photos/fsala

Friday 6 February 2015


சொர்க்கத்திற்கும் நரகத்திற்குமிடையே பொழிகின்ற பனி : 

-----------------------------------------------------------------------------------------

- அனார்


நவீன உலக இலக்கியத்தின் பல்வகைமையான எழுத்துக்கள் இன்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. சமகாலத்தின் மிக முக்கியமான மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவரான ஜி.குப்புசாமி அவர்கள் தொடர்ச்சியாக உலக எழுத்தாளர்களின் நூல்களை மொழிபெயர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் ஓரான்பாமூக் அவர்களுடைய “என் பெயர் சிவப்பு, அதற்கடுத்து “பனி“ என்பன, ஜி.குப்புசாமி அவர்களின் கச்சிதமான மொழிபெயர்ப்பில் மிக நேர்த்தியாக காலச்சுவடு வெளியிட்டுள்ளது. அவ்வகையில் பனி மொழிபெயர்ப்பு, அனுபவ ஊற்றுக்களைத் திறந்துவிடுகிறது.

// அந்தக் கடவுள் நம்மிடையே இல்லை. அவர் வெளியே, வெற்றான இரவை, இருட்டில், நாதியற்ற இழிசினரின் இதயத்திற்குள் பெய்யும் பனியில் இருக்கிறார்.

கடவுளை நீயாகவே கண்டடையப் போகிறாய் என்றால், தாராளமாகச் செல். இருட்டுக்குள் நடந்து போ, பனியில் நனை, கடவுளின் அன்பை உனக்குள் நிரப்பிக்கொள்ள பனியை உபயோகப்படுத்திக்கொள் //

ஓரான்பாமூக் எழுதிய ஏழாவது நாவலும், முதலாவது அரசியல் நாவலுமான பனி துருக்கியில் இடம்பெற்ற தீவிர மாதச்சார்பானவர்களுக்கும், பொது மக்களுக்கும், மதச்சார்பின்மை அரசியல் குழுக்களுக்குமிடையேயான தொடர் மோதல்களை பேசுகின்றது. நவீன மதசார்பற்ற அரசின் சட்டமானது, துருக்கியில் பெண்கள் தலைமுடியை மூடும் அவசியமில்லை என கூறுகின்றது. பலவிதங்களில் அதிகாரத்தின் மூலம் நிர்ப்பந்திக்கின்றது. கல்லூரிகளிலும், பாடசாலைகளிலும் முக்காடு அணிந்து வரும் பெண்களை அரச நிர்வாகத்தினர் கல்வியைத் தொடர முடியாமல் நிறுத்திவிடுகின்றனர். பாமூக் தன்னுடைய நாவல்களில் துருக்கியின் மறைக்கபட்ட வரலாறு அதாவது ஆர்மேனியர்களை துருக்கிய நாடு கொன்றது பற்றி பேசியும் எழுதியும் வருகின்றவர். பனியை வாசிப்பதற்கு துருக்கியின் வரலாற்றுப்பின்புலத்தை தெரிந்துகொண்டிருப்பது கூடிய புரிதலைத் தரும்.

பெண்களை சமூதாயம் வைத்திருக்கும் இடத்திற்கும், சமூதாயத்தில் அவள் இருக்க விரும்புகின்ற இடத்திற்குமான இடைவெளி, இருண்மைகள் அபாயகரமானது. ஒரு முஸ்லீம் பெண்ணுக்கு இந்த அபாயம் தருகின்ற அச்சம் பல்வேறு தளங்களையும் புதிர் அடுக்குகளையும் கொண்டது. அவளுடைய மதம், தலைமுடியில் தொடங்கி கால்விரல்களில் முடிகின்றது. பனி நாவலில் துருக்கிய அரசாங்கம், பெண்கள் முக்காடு அணிவதைத் தடை செய்வதிலிருந்து பிரச்சினைகளும், பிளவுகளும், எதிர்ப்புகளும் எழுகின்றன. அரசியல் கிளர்ச்சியாளர்கள் அரசாங்கத்தை மூர்க்கமாக எதிர்க்கின்றனர். அதன் விளைவாக உள்நாட்டுக் கலவரங்கள், திட்டமிடப்பட்ட கொலைகள் நிகழ்கின்றன. மிக முக்கியமாக முக்காடு அணியும், தமது விருப்பம் உரிமைகள் மறுக்கப்படுவதை கண்டு அதிர்ச்சியுறும் பெண்கள், தற்காப்பு ஆயுதமாக தற்கொலையை கையாள்கின்றனர்.

நாவலின் கதையின் மையம், தீராததும் தீர்க்க முடியாததுமான மன அமைப்பிற்கும், மத அமைப்புகளுக்கும் நடுவே தொடரும் முரண்பாட்டைப் பேசுகின்றது.

மதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள விடயத்தை (முக்காட்டை) பேணுகின்ற பெண்கள், அதை தொடரமுடியாத நெருக்கடியான சூழலில், மதத்தினால் தடுக்கப்பட்ட ஒன்றை (தற்கொலையை) செய்ய முன்வருகின்றார்கள்.

// ஒரு பெண்ணுக்கு அவள் எதற்காகத் தற்கொலை செய்து கொள்கிறாள் என்பது துல்லியமாகத் தெரிந்தால், அவளுக்கான காரணங்களை அவளால் வெளிப்படையாகச் சொல்ல முடிந்தால், அவள் தற்கொலை செய்துகொள்ள வேண்டிய அவசியமே இருக்காது //. நாவலில் ஒரு உரையாடலில் இடம்பெறும் கடிஃபேவின் கூற்று இது.

உயிரற்றுப்போவது, இறப்பினூடாக நிகழ்வது மாத்திரமல்ல. வாழும்போதே உயிரில்லாமல், உறைவது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ள, அதாவது வாழ்ந்தபடியே இறப்பதற்கான பல வாய்ப்புகளை சக மனிதர்களும், சமூகமும் வழங்குவார்கள் என்று ஒரு பெண் விரைவில் தெரிந்துகொண்டு விடுகிறாள். அவள் எந்த உடையை அணிவது, எப்படி அணிவது, எதை அணியக்கூடாது என்பதெல்லாம் அதிகாரம் தீர்மானிக்கின்றது. சுயகௌரவத்தை நிலை நிறுத்துவதற்காக இளம்பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். மதவாதிகளுக்கும் மத உரிமையை பறித்தெடுப்பவர்களுக்கும் அந்தப் பெண்களின் மரணத்தின் மொழி புரிவதில்லை. வேறு பொய்க்காரணங்களைப் புனைந்து பெண்களின் உயிர்த்தியாகத்தின் முழு அர்த்தத்தையும் சிதைக்கின்றனர். எல்லாமே தவறாகவும் எதுவுமே தவறில்லை எனக் கருதுவோர்க்கிடையில், கார்ஸ் நகரின் மனித உயிர்கள் ஒன்றுமற்றுப்போகின்றது.

தனி நபர்களின் வாழ்க்கையில் இறை நம்பிக்கை மீதான பற்றுதலும், அரசின் நிர்ப்பந்தங்களின் மீதான அச்சமும், பெற்றோர்களின் கையறு நிலையும் பாமூக்கின் மொழியில் வாசிக்கையில் துருக்கியை நம்முடைய அனுபவங்களுடன், அரசியல் நெருக்கடிகளுடன், முஸ்லீம் அடையாள பின்புலத்துடன் இணைத்துப்பார்க்க முடிகின்றது. பனியால் மூடுண்ட கார்ஸ் நகரம் மர்மங்களும் மரணங்களும் சூழ்ந்த நிலமாகியிருக்கிறது.

அரசியல் காரணங்களுக்காக நாடுகடத்தப்பட்டு, பனிரெண்டு வருடங்கள் ஜெர்மனியில் கழித்த கா என்னும் கவிஞன், முக்கியமான இரு நோக்கங்களுக்காகவும் வேறுசில தனிப்பட்ட காரணங்களுக்காகவும் கார்ஸ் நகரை நோக்கி வருகிறான். அது ஒரு பனிப்பொழிவின் காலமாகவிருக்கிறது. தற்கொலை செய்து கொள்ளும் கார்ஸ் நகரின் இளம் பெண்களைப்பற்றி ஆராய்ந்து எழுதுவதற்காக காவின் வருகை அமைந்துள்ளது.

காவின் நண்பன் இந்நாவலில், அந்தக் கவிஞனின் ஆத்மாவைப்போல தொடர்ந்து வருகிறான். காவின் கவிதை நூலை பல இடங்களில் தேடித்திரிகிறான். ஆனால் அந்நூல் அவனுக்கு கிடைப்பதில்லை. சில கடிதங்களும் வேறு குறிப்புகளும் காவின் நண்பனான ஓரானிடம் இருக்கின்றது. அவற்றில் ஒரு குறிப்பில் கா எழுதுகிறான் : // அடிபட்டிருக்கும் ஒரு விலங்கைப்போலவே என் வாழ்க்கை பூராவும் தொலைந்து போனவனாகவும், தனியானவனாகவுமே உணர்ந்து வந்திருக்கிறேன் //. இதுபோல், நாவலின் எந்தக்கட்டத்திலும் வெளிப்பட்டிருக்காத காவின் கவிதைகள் அரூபமான மனச்சித்திரங்களை உருவாக்குகின்றன.

நாவலாசிரியரின் நீதி, உணர்வுமொழி, கருணை எனப் பனி கொட்டிக் கொண்டிருக்கிறது. உருகாத பனிச்சிற்பம்போல கார்ஸ் நகரின் இருளில் செதுக்கப்பட்டிருக்கிறான் கா. அவன் எழுதிய கவிதைகள், அவனுடைய இபெக் மீதான காதல் உருவாக்கும் குருட்டுத்தனமான சந்தோசம், ஸ்திரமற்ற பற்றுதல், வெகுளித்தன்மை மற்றும் பொய்நம்பிக்கைள், அதீத கனவுகளுக்கான முக்கியத்துவம், மேலும் கவிதை எழுதக்கூடியவர்களிடம் காணப்படும் பைத்தியகாரத்தனமான காதலும் சேர்ந்து காவிடம் காணப்படுகிறது.

தந்தை சாகோதரியுடன் வசித்தபோதிலும், இபெக்கின் வாழ்வின் திசைகள் அவளை விரக்தியை நோக்கி கொண்டு செல்கின்றது. முற்போக்கான நடைமுறை வெளிப்பாடுகளில் தெரியும் துணிச்சல், உறுதி அனேக விடயங்களில் அகம் சார்ந்து பரிதாபத்திற்குரியதாகிவிடுகிறது. முக்காட்டை விலக்குவதும் சுய விருப்பத்தின்படி ஆடை அணிவதும், தனது துணையை தேர்ந்தெடுப்பது அல்லது விலக்கிக்கொள்வது என்பதற்கப்பால் அப்பெண் தனது வலிமையை பிரயோகிக்கவில்லை. இபெக் கார்ஸ் நகரின் பெண்மட்டுமல்ல அரசியல் சட்டதிட்டங்களால் அமுக்கப்பட்ட நிலத்தில் அகப்பட்டுள்ள உலகின் பொதுவான பெண்ணுமாகும். ஆனால் இபெக்கின் தங்கையான கடிஃபே புரட்சியாளராய் மூர்க்கமாக செயற்படக்கூடியவளாகவும் இருக்கிறாள். அவளுடைய தெரிவுகளை கண்டடைய உக்கிரமான குண இயல்புகள் துணை புரிகின்றன. பனி நாவலின் சாகச நாயகி கடிஃபே தனது கொள்கையின் சக்தியூற்றை ஆயுதமாகப் பிரயோகித்துப்பார்ப்பவள். இபெக் காதலெனும் ஆயுதத்தால் தன்னை திரும்பத் திரும்ப காயப்படுத்திக் கொள்கிறாள். நெருக்கடி மிக்க நிலத்தில் ஆனந்தமும் தப்பித்தலுமாக தற்காலிகமான மாற்றீடாய் காதல் இருக்கின்றது. மிகப்பெரும் தீர்க்க முடியா முரண்பாடுகளைக் கொண்ட வாழ்க்கையைப்போல சகோதரிகள் இருவரும் அவர்களுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கிடையே சிக்கிக் கொள்கிறார்கள். கடிஃபே நாவலின் இறுதியில் வரும் நாடகத்தில் பங்குபெறும் விதமும் அங்கே அவள் வைக்கும் வாதங்களும் மனச்சாட்சியை உலுக்கக்கூடியவை. ஓரிடத்தில் ஆண்களைப்பார்த்து அவள் கூறுவது : // உங்களை அச்சுறுத்துவது எனது அறிவுத்திறனல்ல. நான் சுய சிந்தனைகொண்ட பெண்ணாக இருப்பதால்தான் என்னைக் கண்டு பயப்படுகிறீர்கள்.... ஏனென்றால், நம்மூரில் ஆண்கள், பெண்களின் அறிவைக்கண்டு பயப்படுவதில்லை, சுதந்திரத்தைக் கண்டுதான் பயப்படுகிறார்கள்.... //.

பிற பெண்கள் பனி நாவலில், பனிப்புகார் என தெளிவற்ற உருவங்களாக தெரிகின்றனர். குளிரில் விறைத்து நடுங்கும் அவர்களுடைய குரல், நாவல் முழுக்க பிசாசைப்போல் அலைகிறது. முக்காடுகளால் மாத்திரமல்ல பனியாலும் அவர்கள் மறைக்கபட்டிருக்கின்றார்கள்.

நீலம் எனும் எதிர் நிலைப்பாத்திரமானது, சமூகத்தில் தன்னை முன்னிறுத்தும் விடயங்கள், மதக்கருத்துக்கள் ஒரு முகமாகவும், இபெக், கடிஃபே எனும் பெண்களுக்கு ஆணாதிக்க தன்மையும், துரோகமும் வெளிப்டும்முகமாகவும் அதே சமயம் இளைஞர்களுக்கு ஆதர்சமான தலைவனாகவும், தீவிரமாக காதலிக்கப்படுகின்றவனாகவும், சதிகளோடும், கொலைகளோடும் அரசிற்கு அச்சுறுத்தல்விடுக்கும் சக்தியாகவும் இருக்கிறான். இறுதியில் நீலம் சுடப்பட்டு மரணித்துவிடுகிறான். பெண்களின் தற்கொலைபற்றி அறிந்துகொள்ளவந்த காவும், சுடப்பட்டு மரணித்துவிடுகிறான். பெண்கள் தற்கொலை செய்து மரணிக்கின்றார்கள். தேனீர்க்கடையில் பேராசிரியர் கொலை செய்யப்படுகிறார். கடி.ஃபேயைக் காதலிக்கும் நசீம் கொல்லப்படுகிறான். கடிஃபே ஒரு கொலை செய்கிறாள். இவ்விதமான மரணங்கள் ஒரு தீர்வுக்காக நிகழ்வதில்லை. அதன் அர்த்தங்களும் வேறுவேறானவை. நாவல் மிகுந்த அந்தரங்கமான பார்வையோடு, இந்த மனிதப்பாத்திரங்களை நடமாட வைக்கின்றது. அந்த அரசியல் கொந்தளிப்பினூடே, குருதியோட்டத்தை உறையச் செய்யும் பனியின் குளிர்மை, நாவலின் நெடுகிலும் நிறைந்து காணப்படுகிறது. இறுதியான ஒரு விடையைக் கொண்டிராத கேள்விக்குறிகளாக பாமூக் மனிதப்பாத்திரங்களை நாவலில் காண்பிக்கிறார்.

பனி எனும் படிமம், கறுப்பு நாயின் உருவகம், காவினால் எழுதப்படும் கவிதைகள் என நாவலுக்குள் வெவ்வேறு உருவ நிழல்கள் அசைகின்றன. வெற்றிக்கும் தோல்விக்கும், சரிக்கும் தவறுக்குமான, வாழ்விற்கும் மரணத்திற்குமான இரு நிலைகளிடையே பனி தூபம்போல எங்கும் சூழ்கிறது. மனச்சாடச்சியின் வாதங்களாக, ஏக்கமாக, அச்சமாக, பின்னப்பட்டுள்ள பலரை பனி ஊடுருவிப் பிழிகிறது. அடிமைத்தனத்தின் நெருப்பிற்குள்ளே ஒளிரும் ஆணியென பெண்கள் தகிக்கின்றனர். பண்பாடுகள், இறை நம்பிக்கைகள், பெண் கல்வி, திருமணம், வாழ்க்கை, எதிர்காலம் அனைத்தையும் எப்படி சர்வதிகாரத்தின் கை நசுக்குகின்றது. மேலும் மனிதாபிமானமற்ற நாட்களை, அவர்கள் எதிர்கொள்வதன் வலி எத்தகையது என நாவல் கேள்விகள் எழுப்புகின்றது. சமூக அமைப்புகளும், தீவிர சிந்தனை கொண்டவர்களும் முன் தீர்மானங்களின்படி, பெண்களை வற்புறுத்தி அதிகாரம் செய்கிறார்கள். நிர்க்கதியும், கையறு நிலையும், அரசியலின் உளவியலையும், உளவியலின் அரசியலையும் தெளிவாக பனி முன் வைக்கின்றது. நிராசைகளும் துரோகமும் சூழ்ந்த அறையில் இபெக் இறுதியாக நின்றபடி பார்க்கும் ஜன்னலால், தன்னுடைய காதலன் நீலத்தை தன் மூச்சுக்குள் நிரப்பியவாறு கா மீதான நம்பிக்கையின் கடைசி நூலிழையை தவறவிடுகிறாள்.

ஓரான்பாமூக் அவர்களுடைய ஆளுமை சார்ந்தும், பனி நாவலின் கலைத் தன்மை சார்ந்தும், மனிதத்துவத்தின் மீதான நீதி, பிரயாசை, கேள்விகள், நுண்ணுணர்வு சார்ந்த அவதானிப்பு என பல விடயங்கள் உள்ளன. ஆழமான விருப்பங்கள், மனங்களின் கூக்குரல் கண்ணீரின் மொழியால் பல்வேறு உயிரூட்டமுள்ள நிறங்களால் வரையப்பட்டிருக்கின்றது. தெளிவான ஆனந்த நிலையை கொடுக்கக் கூடியவையாக அதன் யதார்த்தம் அமைந்திருக்கிறது.

எழுத்தாளர்கள் விஞ்ஞானியைப்போல் ஏதாவதொரு கண்டுபிடிப்பை விட்டுச்செல்வதில்லை. மாறாக அவர்கள் எழுதிய புத்தகங்களையே விட்டுச் செல்கின்றார்கள். பாமூக்கின் நாவலான பனிக்குள் பல கண்டுபிடிப்புக்களைக் காணமுடியும், தேடலுள்ள கூர்மையான வாசகனால்.

--------------------------------------------------------------------------------------------------

நன்றி : காலச்சுவடு, பெப்ரவரி 2015 


Friday 30 January 2015



கனவுப்பெண் - கவிஞர் அனார் கவிதைகளை முன்வைத்து 

--------------------------------------------------------------------------------------------------

- நாகரத்தினம் கிருஷ்ணா (பிரான்ஸ்)



ஈழத் தமிழின் நவீன கவிதைக்குப் புதிய முகங்களைத் தருபவராக இருக்கிறார் அனார்" - கவிஞர் சேரன்

"தன்னுடைய இருப்புக்கு எதிரான நிலவரங்களை விமர்சிக்கிற அனாரின் கவிதைகள் அந்த இருப்பை உன்னதமானதாகவே உணர்த்துகின்றன" - கவிஞர் சுகுமாரன்

கடந்த ஜனவரியில் இந்தியா வந்திருந்தபோது கவிஞர்கள் சிலர் தங்கள் தொகுப்புகளைக் கொடுத்தார்கள், வேறு சிலர் தங்கள் நாவல்களைக் கொடுத்தார்கள். இரு தரப்பு நண்பர்களுமே தங்கள் படைப்புகளை கொடுத்தபோது இவற்றைக்குறித்து எழுதவேண்டும் என்று கேட்கவில்லை, அதற்கான அவசியமும் அவர்களுக்கு இல்லை. படைப்புகளை அளித்தவர்களில் சிலர் தபிழ்ப் படைப்புலகில் நன்கறியப்பட்டவர்கள்; மற்றவர்களும் தமது படைப்புகள் ஊடாக தொடர்ந்து கவனத்தைப் பெற்றுவருபவர்கள். புனைவுகளைக் குறித்து எனது கருத்துக்களை முன்வைப்பதில் சிக்கல்கள் இல்லை. கவிதைகளைக் குறித்து எழுதும்போது தயக்கம் வருகிறது. 'எனக்குத் தொழில் கவிதை' அல்ல. ஒரு காட்சியைக் கண்டு வியக்கவும், பிரமிக்கவும்; வாடவும், வருந்தவும்; அநீதிகண்டு துடிக்கவும், ஆவேசம்கொள்ளவும் செய்கிறோமெனில் நமக்குள்ளும் கவிதை இருக்கிறது. இக்குணங்கள் ஒரு கவிதையை ரசிப்பதற்கான முதற்படி. ஆனால் புறத்திலும் கவிஞர்களாக வாழ்கிறவர்கள் தங்கள் பரவசத்தை, உணர்ச்சியை வார்த்தைகளில் வடிக்கத் தெரிந்தவர்கள் தமது கண நேர உணர்ச்சி அனுபங்களை விசும்பலை, செறிவான பொருத்தமான வார்த்தைகொண்டு நிரந்தரப்படுத்த முடிந்தவர்கள். காணும்தோறும் மகிழ்ச்சியைத் தருகிற படச்சுருளைப் போல, அவர்கள் சமைக்கும் படிமங்கள் கவிதைகளை வாசிக்கும் தோறும் நம்மைப் பரவசத்தில் ஆழ்த்துகின்றன. எனினும் ஒரு கவிதையைப் புரிந்துகொள்ளவும், இதயத்தில் வாங்கிக்கொள்ளவும், உணர்வுதான் முக்கியம். இடைத்தரகனான அறிவையும், அறிவின் மொழிகளையும் (உவமை, உருவகம், படிமம், குறியீடு, தொன்மம் ஆகியவற்றை) மறந்து புலன்களால் அதாவது தொட்டும், முகர்ந்தும், சுவைத்தும் கவிதைகளை வாசிப்பது போதுமானது.

'பரிசில் வேண்டும் பாடாண் திணை' கவிஞர்கள், கடந்த காலத்தைப்போலவே இன்றும் இருக்கவே செய்கிறார்கள். 'காதல்' சொல்ல கவிதையெழுத வந்து, பிறகு காணாமற்போகிற காளான் கவிஞர்கள் வருடத்திற்கு ஆயிரம் பேராவது தேறுவார்கள். இப் பெருங்கூட்டத்திடை, அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில குரல்கள் தனித்து ஒலிக்கின்றன. அக்குரல்கள் நம்மில் சிலரிடம் ஊமைக்குரலாக ஒலிப்பவைதாம். நம்மிடம் ஊமைக்குரலாக ஒலித்த குரல், தொழில்முறை கவிஞர்களிடம் கலைவடிவம் பெறுகிறது. இந்த உலகம் முரண்படுவோர்களால் கண்ட முன்னேற்றம். சமகால கவிஞர்கள் மண்ணில் காலூன்றி நிற்பவர்கள். ''கேழ்வரகில் நெய் வடிகிறது" என்றெல்லாம் எழுதி ஏமாற்ற முடியாது. என்பதை நன்கறிந்தவர்கள். இதற்கு முந்தைய பத்தியில் கூறியிருப்பதுபோல அறிவைக்குறைத்துக்கொண்டு உணர்ச்சிகளுக்கு சற்று கூடுதலாக இடமளிக்கும் இன்றைய கவிதைகளில் 'தனிமனிதன், சமூகம்' இரண்டும் மையப்பொருட்கள். அதிலும் கண்மூடித்தனமான நம்பிக்கைகளில் கட்டமைக்கபட்ட நமது சமூகத்தில், பெண்களுக்குச் சொல்ல நிறையவே இருக்கின்றன. மதங்களும், புராணங்களும் இதிகாசங்களும் -சங்கக் கவிதைகள் உட்பட தீட்டியுள்ள பெண்சித்திரங்கள் அவர்களுக்கு ஆதரவானவை அல்ல. அன்பானவள், அடக்கமானவள், குடும்பப்பெண், மகாலட்சுமி ( கவனியுங்கள் 'சரஸ்வதி' என்ற சொல்லை சாமர்த்தியமாக தவிர்த்திருக்கிறோம்) போன்ற கவர்பொருளுடனான தூண்டில்கள் நம்மிடம் அதிகம். அவளை மஞ்சள் குங்குமமிட்ட 'தொழுவ லட்சுமி'யாய் வைத்திருப்பதில் நமக்குப் பெருமிதம். வீட்டுப் பசுவென்றாலும் கொம்பைத் தற்காப்புக்கேனும் பயன்படுத்தாமலிருந்தால் எப்படி? தங்கள் கோபத்தைக் கைப்பிடி உப்பில் காட்டி கணவனைத் தண்டிக்கும் 'குடும்பப் பெண்'களின் தந்திரமும், கையெறி குண்டாக கவிதைகளைப் பயன்படுத்தும் படைப்பிலக்கிய பெண்களின் தார்மீக கோபமும் அவ்வகை கொம்புகள்தாம்.

அனாரின் கவிதை மொழி:

"பெருங்கடல் போடுகிறேன், உடல் பச்சை வானம், "எனக்குக் கவிதை முகம்" என்று மூன்று கவிதைத் தொகுப்புகளை கவிஞர் எனக்களித்திருந்தார். அனார் ஒருகவிஞர் என்பதும், இருபது ஆண்டுகால ஈழ யுத்ததின் சாட்சியாக இருந்த ஓர் இஸ்லாமியத் தமிழ் பெண் என்பதும், அனாருடைய கவிதைகள் பற்றிய சிற்சில அபிப்ராயங்களை உருவாக்கியிருந்தன. எதிர்பார்ப்பிற்கு மாறாக சமகால ஈழ கவிஞர்களிடமிருந்து மாறுட்ட பாடுபொருட்களை அவர் கவிதைகளில் காண முடிந்தது. அனாரின் கவிதைமொழிக்குள் பிரவேசித்ததும் எனக்குப் பாரதியாரின் "சோதிமிக்க நவ கவிதை' என்ற வரிதான் நினைவுக்கு வந்தது. உணர்வுகளை மீ எதார்த்த நிலையில் இத்தனைச் சுதந்திரமாக எழுத்துவடிவில் கொண்டுவர முடியுமா? என்ற கேள்வி எழுந்தது.

நவீன கவிதையின் நெளிவு சுளிவுகளையும், கட்டுமானங்களையும் வண்ணங்களையும் புரிந்துகொண்ட பின்நவீனத்துவ கவிஞர். சிற்சில கவிதைகளில் அவை விழலுக்கு இறைத்த நீராகின்றன என்பதையும் இங்கே சுட்டத்தான் வேண்டும். கவிதைத் தொகுதிகள் முழுவதும் கவிஞர் சுகுமாரன் கூறுவதைப் போல, " படிமச் செறிவான கவிதை மொழியைப் பயன்படுத்துகிறார்". கற்பனையின் புதுமையும், சொற்களில் செழுமையும் அவரது கூடுதல் பலம்: "நிலை கொள்ளாது ஆடும்/ பொன் மிளிர்வுத் தூவல்களில் / ரயில் பட்டுப்புழுவைபோல நீளுகிறது." (போகும் ரயில்). "காரிருளில் பாய்ந்தோடும்/ கறுப்புக் குதிரையின் கண்களில்/ இறுகி மின்னுகின்றது என்னுடைய கண்ணீர்" ( கருமை). "இலைச்சுருட்டிச் செவ்வெறும்புகள்/ஆளும் மரமெங்கும்/ இனிப்பாய்க் கசியும்/ மரப்பிசின் ஒழுகி உறைந்து/ மணிச்சிற்பங்கள்/ காட்டிய வரிசைகள்" ( அரூபன்). இவற்றை வெறுமனே படிமங்களால் ஆன கவிதைகள், எனக் கடக்க மனம் இடம் கொடுப்பதில்லை. 'பெருங்கடல் போடுகிறேன்' தொகுப்பில் "சந்திர கிரகணத்தின் ஸர்ப்பம்" கவிதையில் இடம் பெறும் இவ்வரிகளை 'ஒரு சோறு' பதமாக எடுத்துக்கொண்டேன்:

".....நினைவுப் பந்தலின் கீழ் 
காட்டு மல்லிகையின் வாசனை
ஸர்பத்தை வரவழைக்கிறது
மேனி மினுக்கத்தில்
தெளிவின் மென்மையில் 
தாழம்பூ மண்டபம் விரிகிறது."

அவருடைய கவித்துவத்தை அளக்க கீழ்க்கண்ட வரிகளும் உதவும்:

"தத்திச்செல்லும் பிள்ளையின் பாதச்சுவடுகள்
நிலவு பொறுக்கியுண்ணும் 
மிக இனிக்கின்ற உணவோ" 
..................................
...................................

" என் பசுங்குருத்துச் சூரியன்
உதிக்க அதிகாலை இருள் நீங்கும்
உறங்க பொன்னந்தி பாய்விரிக்கும்" (நிலாக் குட்டி)


கனவுப்பெண்:

அனார் கவிதைகளின் பெண்குரல் கனவுகளுக்கு நெருக்கமானது "கனவுகள் காண ஏங்கும் கனவு நான்" (சுலைஹா); "கனவுகளின் பாளைகளில் சேரும் 'கள்' என பொங்கும் இவ்விரவை நீ கொஞ்சம் நான் கொஞ்சம் பிடிக்கலாம் நிறையும் வரை" (குடுவையில் நிறையும் இரவு); "படியும் கனவுப் பனி வெள்ளைக்கரு/ ஒளிரும் மென்தகிப்பு மஞ்சள் கரு என/ உருமாறியது மச்சம்" (மண்புழுவின் கண்); "இரவுத் தேன் கூடு நிரம்பியிருக்கிறது / கனவில் இருந்தபடி/ முதலாவது நீலத்தேனைப் பருகிடும் தருணம்/ மலை நகரந்து போகிறது. ( நீலத்தேன்); கனவின் துவாரங்கள் வழி/ சொட்டித் தேங்கிய/ காமக் கடல் அலைகள் பாய்கின்றது/ சிலந்தி வயிற்றினுள்" (பெண் சிலந்திப்பூச்சியின் வீடு); "கனவின் கத்திகள் பாய்ந்த கவிதையை/ ருசிக்கின்றோம் மிச்சம் வைக்காமல்" (குரல் என்ற நதி அல்லது திராட்சை ரசம்); " வாழ்வின் கனாக்காலம் முழுவதும்/ பருவங்கள் மாறி மாறி பறக்கும் வண்ணத்துப்பூச்சிகள் (வண்னத்துப் பூச்சியின் கனாக்காலக் கவிதை); " முயலின் பளபளக்கும் கண்களாய்/ மிரட்சியுடன்/ உன்னை வெறித்தபடி இருக்கும் என் கனவு"(வெறித்தபடி இருக்கும் என்கனவு).

தனிமைப்படுத்தபட்ட பெண்ணின் ஏக்கமும் கனவுகளும் அனார் கவிதைகளில் மையப்பொருளாக இருக்கின்றன. திரும்பத் திரும்பத் தமது இருப்பை முன்னிறுத்தியும் சோர்வுறாத பெண் குரல் எல்லா கவிதைகளிலும் கேட்கிறது. காதலும் தேடலுமாக கழியும் பொழுது. அலைக்கழியும் வாழ்க்கை. மதத்தின் பேராலும் மரபுகள் பேராலும் பெண்களை விலங்கிட்டு இருட்டறைக்குள் வைத்திருக்கும் குருட்டு சமூகத்தைச் சேர்ந்த பெண் வெளிச்சத்திற்கு ஏங்குவது இயல்பு. கதவுகள் திறக்குமென்ற எதிர்பார்ப்பில்லை. சன்னல்கள் திறப்பதே போதுமானதுதான். இறை தூதரைகாதலித்த சுலைஹாவாக தம்மை கற்பிதம்செய்து மார்தட்டும் அப்பெண்ணுக்குள் "கடந்தகால சாபங்களை மீளவும் எதிர்கால சவால்களை வெல்லவும்" கனவுகள் இருக்கின்றன. ஆனால் நிஜத்தில் அவள் வாழ்க்கை வேறுவகையாக விதிக்கப்பட்டிருக்கிறது 'போகும் இரயில்' கவிதையும், 'கருமை' என்ற கவிதையும் ஓர் அப்பாவி பெண்ணின் கனவுக் குரலாக பொருமுகிறது. பட்டுப்புழுவைபோல என்ற உவமைக்கு ஆளாகும் இரயில், கவிதை முடிவில் ராட்த்சத பூரானென்கிற உவமை ஆகுபெயராக உருமாறி தரும் சோகம் கொடியது. கற்பனையில் கூட பெண்ணுக்கு வெளிச்சம் எட்டிவிடக்கூடாதென்பதுபோல அவளது நிஜம் குறுக்கிட்டு அக்கனவுகளைக் கலைத்துவிடுகிறது. கவிஞர் மொழியில் சொல்வதெனில் " கனவுக்குள்ளே முழு ஏமாற்றத்துடனும் முட்டி மோதுகிறேன்"(சுவர் ஓவியம்). இந்தப் பரிதாபக்குரலுக்கு, காலம் பெருமிதத்தைப் பூட்டுகிற தருணமும் வாய்க்கிறது.

"பெண் உடல் பூண்ட இயற்கை நான்
காற்றில் வசிப்பவன் 
காலத்தைத் தோன்றச்செய்பவன்...
இன்றென்னைத் தீண்டலாம்" (குறிஞ்சியின் தலைவி -உடல் பச்சை வானம்)

என்ற வரிகளைப் படிக்கிறபோது அக்குரலை ஒரு பெண்ணியக் குரலாகத்தான் பார்க்க முடிந்தது. பெண்ணியம் என்பது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எதிரானதல்ல. 'ஆண்' பாலின முத்திரையொன்றுபோதும் தாம் செலவாணியாக என நினைக்கும் அற்ப புத்திகொண்ட ஆணாதிக்கத்திற்கு எதிரானது. அனார் கவிதைகளில் பெண்குரல் பொலபொலவென்று கண்ணீர்விடுவதில்லை, மூக்கைச்சிந்துவதில்லை. காதல் வயப்படும்போது கூட "கத்திகளால் கைகளையோ கனிகளையோ வெட்டிக்கொள்ளாதவள், நான் யூசுப்பைக் காதலிப்பவள், சுலைஹா", என முழங்கக்கூடிய தைரியம் பெண்ணியத்திற்கு உரியது.

ஈழ யுத்தம் குறித்து அனார்:

அனார் தமது கவிதைள் ( கைவசம் இருக்கும் தொகுப்புகளின் அடிப்படையில்) ஈழ யுத்தத்தைப் பற்றி அதிகம் பேசுவதில்லை. சமகால ஈழக்கவிதைகளில் ஈழப்போரும் அதன் விளைவுகளும் அதிகம் இடம்பெற்றிருப்பதால் அவற்றை ஓர் அளவோடு கையாண்டிருக்கிறார். யுத்தத்தின் கோரங்கள் தெளிவாக சொல்லப்பட்டிருக்கின்றன, பூடக மொழிக்கு இடமில்லை. ஆனால் யுத்தத்தை பாடுகிற அனார் வேறு. காதலும் தேடலுமாக காலத்தைக் கழித்த கனவுப்பெண்குரலுக்குரிய கவிஞரல்ல இவர், யுத்தகளத்தை நேரில் கண்ட புறநானூற்று தாய். 'பெருங்கடல் போடுகிறேன்' தொகுப்பில் 'மாபெரும் உணவுமேசை' ஓர் உதாரணம்:

"சிசுக்களின் மூளையாலான
மிளகுரசம் (புதினா சேர்த்தது) 
கண்ணாடிக் குவளைகளில் ஊற்றப்பட்டிருக்கிறது"

"......................................
கொல்லப்பட்டக் குழந்தையின்
உடலிலிருந்து கொட்டுகின்றது இரத்தம்
மிக நிசப்தமாக
மிக குழந்தைத் தனமாக" (மேலும் சில இரத்தக் குறிப்புகள்)

இறுதியாக கவிஞர் அனார் பற்றி எப்படி சொல்லி இக்கட்டுரையை முடிக்கலாம் என யோசித்தபோது, அவரது வரிகளே உதவிக்கு வந்தன.

"நான் பாடல் எனக்குக் கவிதை முகம்"

==

( காலச்சுவடு இதழ் 177, செப்டம்பர் 2014 )