Tuesday 13 March 2018


அனாருடைய  கவிதைகளில்  எதிர்ப்புக்  குரல்:  பெண்விடுதலை  நோக்கிய பார்வை.

By : A. Paunanthie & J. Rasanayagam ( University of Jaffna )
(5th International Symposium -2015 @ SEUSL  இல் வாசிக்கப்பட்ட கட்டுரை)
---------------------------------------------------------------------------------------------------------------

Abstract : 'அனாருடைய  கவிதைகளில்  எதிர்ப்புக்  குரல்  -  பெண்விடுதலை  நோக்கிய  பார்வை'  என்ற தலைப்பில்  இந்த ஆய்வு முன்னெடுக்கப்படுகின்றது.  அனார், கிழக்கிலங்கையிலுள்ள சாய்ந்தமருது என்னும்   ஊரில்   பிறந்தவர். இஸ்ஸத்   ரீஹானா   முஹம்மட்   அஸீம்   என்ற   இயற்பெயரையுடைய   இவர் அனார்  என்ற  பெயரோடு  கவிதைகளை  எழுதிவருகின்றார்.


இலங்கைத் தமிழ்ப் பெண் கவிஞர்களில் முக்கிய கணிப்பைப் பெற்றவராக அனார் விளங்குகின்றார். இதுவரை அவருடைய நான்கு கவிதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. இவற்றைவிட உதிரிகளாகவும் பல கவிதைகள் பிரசுரமாகியுள்ளன. பெண்ணடிமைத்தனத்துக்கு எதிரான பெண்களது எதிர்ப்புக்குரல் இலங்கைத்    தமிழ்    இலக்கியங்களில்              1980    களின் ஆரம்பத்திலிருந்து    வெளிப்படத்          தொடங்கியது. அந்தவகையில்'சொல்லாத    சேதிகள்'                கவிதைத்      தொகுதிவிதந்துரைக்கப்பட         வேண்டியதாகும்.


அனாருடைய கவிதைகளிலும் இந்த எதிர்ப்புக் குரல் ஒலிப்பதைக் காணலாம். அவருடைய கவிதைகளில் பெண் அடிமைத்தனத்தை நோக்கிய எதிர்ப்புக்குரல் விடுதலை சார்ந்து ஒலிப்பதைக் காணலாம். அனாருடைய கவிதைகளில் பெண் அடக்குமுறைகள் எவ்வாறு அடையாளப்படுத்தப்படுகின்றன என்பதையும் அவற்றுக்கு எதிரான குரல் எவ்வாறு ஒலிக்கின்றது என்பதையும் நோக்கும் அடிப்படையில் இந்த ஆய்வு முன்னெடுக்கப்படுகின்றது.


இந்த ஆய்வின் மூலம் அனார் என்ற பெண் கவிஞர் தமிழ்க் கவிதையுலகில் பெறும் முக்கியத்துவத்தை அறிய முடிவதோடு அவரது கவிதைகளின் தனித்துவத்தையும் சிறப்பையும் அடையாளம் காணமுடியும். அனாருடைய கவிதைகள் பற்றிய ஆய்வுகள் சில வெளிவந்துள்ளபோதும் அவருடைய கவிதைகளில் விடுதலை நோக்கிய எதிர்ப்புக் குரல் எவ்வாறு வெளிப்படுகின்றது என்பது ஆய்வு செய்யப்படவில்லை. அந்த அடிப்படையில் இந்த ஆய்வு முக்கியத்துவமுடையதாக அமைகின்றது. இந்த எதிர்ப்புக் குரல், ஒட்டுமொத்தப் பெண்களின் குரலாக எவ்வாறு துலக்கம் பெறுகிறது என்பதும் இங்கு நோக்கப்படுகின்றது. அனாருடைய கவிதைகள் விவரண ஆய்வுமுறை மற்றும் பகுப்பாய்வுமுறை ஆகியவற்றினூடாக ஆய்வு செய்யப்படுகின்றன.


Keywords: எதிர்ப்புக்  குரல்,  பெண்ணடிமைத்தனம்,  பெண்விடுதலை  நோக்கிய  பார்வை

1.            ஆய்வு  அறிமுகம்:

இலங்கைத் தமிழ்க் கவிதை வரலாற்றில் பெண்களின் பங்களிப்பு கனதியான கணிப்பைப் பெற்றுள்ளது. 1980 களில் இலங்கையில் தீவிரமாகப் பரவத் தொடங்கிய பெண்ணியச் சிந்தனைகள் இலக்கியங்களில் பெண்கள் சார்ந்த கருத்துக்கள் வலுப்பெற ஏதுவாகின. அது மட்டுமின்றி               அக்காலப்    பகுதியில்    ஏற்பட்ட    தமிழ்    இயக்கங்களின்    போராட்டங்களும்    அதில் பெண்கள்இணைந்துகொண்டமையும்           பெண்களை விழிப்படையச்         செய்தன.  இந்நிலையில் இலங்கையில் தமிழ்ப் பெண்கள் தம்மை அடக்கியாள முற்படும் சக்திகளை நோக்கி எதிர்ப்புக் குரலை வெளிப்படுத்தினர். இது விடுதலை உணர்வின் குரலாக ஒலிக்க ஆரம்பித்தது.


இக்குரல் இலங்கைத் தமிழ் இலக்கியங்களிலும் - குறிப்பாக கவிதைகளிலும் ஒலிக்கத் தவறவில்லை. பெண்களின் பிரச்சினைகள் பற்றி ஆண்கள் இலக்கியங்களில் வெளிப்படுத்துகின்ற நிலை மாறி பெண்கள் தமது பிரச்சினைகளைப் பற்றித் தாமே குரலெழுப்பத் தொடங்கினர். இதனால் முன்னரைக்காட்டிலும் 1980 களிலிருந்து இலக்கியங்களில் பெண்ணடிமைத்தனத்துக்கு எதிரான குரல்கள் வலுக்கத் தொடங்கின.

அந்தவகையில் அனாருடைய கவிதைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்கின்ற அனார் தன் கவிதைகளில் பெண்ணடிமைத்தனத்துக்கு எதிரான குரலை எவ்வாறு பதிவுசெய்கிறார் என்பதை விமர்சன நோக்கில் ஆய்வு செய்வது அவசியமாகின்றது.

2.            ஆய்வுமுறையியல்:

             ஓவியம்  வரையாத  தூரிகை
             எனக்குக்  கவிதை  முகம்
             உடல்  பச்சை  வானம்
             பெருங்கடல்  போடுகிறேன்

ஆகிய நான்கு தொகுதிகளையும் அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது.


கவிதையில் இடம்பெறுகின்ற முக்கிய விடயங்கள் விவரண ஆய்வுமுறையிலும் பகுப்பாய்வு முறையிலும் ஆய்வு செய்யப்படுகின்றன. நான்கு தொகுதிகளிலும் உள்ள கவிதைகள் உள்ளடக்கத்தைக் கருத்திற்கொண்டு பகுப்பாய்வு செய்யப்படுவதோடு அவை பற்றிய விவரணங்களும் வியாக்கியானங்களும் முன்வைக்கப்படுகின்றன.

3.            இலக்கிய  மீளாய்வு:

அனாருடைய கவிதைகள் பற்றிய முழுமையான தனியான ஆய்வு இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்றே அறிய முடிகின்றது. அவருடைய ஒவ்வொரு கவிதைத் தொகுதிகளும் வெளிவருகின்றபோது வாசகர்களின் மனப்பதிவாக சில கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இலங்கைத் தமிழ்க் கவிதை சாரந்த வேறுசில கட்டுரைகளில் அனாரின் கவிதைகளும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. அவருடைய கவிதைத் தொகுதிகள் பற்றிப் பிரசுரமாகியுள்ள கட்டுரைகள் அவரது கவிதைகள் பற்றிய பொதுவான பார்வையையே வெளிப்படுத்த முற்படுவதை அவதானிக்கலாம்.



பெண்ணுக்கான யதார்த்தம் நிறைந்த கனவுகள், ஏக்கம், காதல், பீதி, தன்னம்பிக்கை போன்ற உணர்வுகளை மொழிபவையாக அனாருடைய கவிதைகள் உள்ளன. அவருடைய கவிதைகளில் பெண்  மொழி  சிறப்புற  மேலோங்கி  நிற்கின்றது  (வஸிம்  அக்ரம்,  2009).

காதல்,              அன்பு,   வாஞ்சை,   வேட்கை   என்பவற்றைக்   காத்திரமாக வெளிப்படுத்தும்   அனாரின் மொழியில் வலிகளையும் எதிர்ப்புக்களையும் தன் இருப்பின் அடையாளத்தையும் இடையிடையே கேட்க முடிகின்றது (தேன்மொழி, 2011). இந்தக் கட்டுரை அவருடைய முதல் இரு தொகுதிகளையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

தலைவன் தலைவிக்கிடையேயான ஊடல், கூடல், களிப்பு போன்றவற்றையும் பெண்களுக்கெதிரான சமூக அடக்குமுறைகளையும் உள்நாட்டுப் போரின் உக்கிரங்களையும் அனாரின் உடல் பச்சைவானம், எனக்குக் கவிதை முகம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் காணமுடிகின்றது (தாஜ், 2011).


உடல் பச்சை வானம் கவிதைத் தொகுதியின் உள்ளடக்கம் சமூகப் பிரச்சினைகளின் பதிவாக அமைந்துள்ளது (சௌரிராஜன், 2013)

இக்கட்டுரைகள் அனாரின் ஒன்று அல்லது இரண்டு கவிதைத் தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி அவரது கவிதைகளின் பாடுபொருள் பற்றிப் பொதுவாக நோக்குகின்றன. ஆனால், இந்த ஆய்வுக் கட்டுரை, இதுவரை வெளிவந்துள்ள அவரது நான்கு கவிதைத் தொகுதிகளையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளதோடு அவரது கவிதைகளில் பெண்விடுதலை நோக்கிய எதிர்ப்புக் குரல் எவ்வாறு வெளிப்படுகின்றது என்பது பற்றி மட்டுமே ஆய்வுசெய்கின்றது. இந்த வகையில் ஏனைய கட்டுரைகளிலிருந்து  இது வேறுபட்டு நிற்கின்றது.


4.            ஆய்வுப்  பெறுபேறுகளும்  வியாக்கியானங்களும்:

ஈழத்துத் தமிழ் கவிதையுலகில் அனார் முக்கியமான கணிப்பைப் பெறுகின்றார். அவருடைய கவிதைகளில் பெண்ணடக்குமுறையை எதிர்த்துக் கருத்துக்கள் ஒலிப்பதைக் காணலாம். அவை விடுதலையை அவாவி நிற்கின்ற குரல்களாகக் கேட்கின்றன.

குடும்ப அடக்குமுறை, பாலியல் சார்ந்த அடக்குமுறை, பாலியற் சுரண்டல், அதிகரித்த வேலைச்சுமை, உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமை, பெண்ணின் உடல்சார்ந்த இயலாமையைச் சாதகமாக்கிக்கொள்ளல் போன்ற பல விடயங்களை எதிர்த்து அனார் தனது கவிதைகளினூடாகக் குரல் கொடுக்கின்றார். அவரது குரலில் பெண்கள் விடுதலை பெறவேண்டும் என்ற அவா தொனிப்பதை உணரலாம். தனது நேரடி அனுபவங்களின் பேறாகவும் சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்கின்ற வலிகளின், வதைகளின் துன்பத் தரிசிப்பைக் கண்டு பொறுத்துக்கொள்ள முடியாது வெளிப்படுகின்ற எதிர்ப்பலையாகவும் அவரது கவிதைகளை நோக்க முடிகின்றது.

பெண் விடுதலைசார்ந்த தனது உணர்வுக் கொதிப்புகளை அனார் தனது கவிதைகளில் வெளிப்படுத்தியுள்ளார்.


ஆண்களுக்கு அடிமைப்பட்டவர்களாக வாழ்வதை வெறுக்கும் உணர்வு அவரது கவிதைகளில் வெளிப்படுகின்றது. மாறாக பெண்கள் வெறும் தசைப் பிண்டங்களாக அல்லாமல் உளமும் உணர்வும் கொண்ட உன்னதப் பிறவிகளாக மதிக்கப்பட வேண்டும் என்ற அவா அவரது கவிதைகளில் தொனிக்கின்றது.

அவரது சில கவிதைகள், ஆணாதிக்கத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுபட முடியாத பெண்களின் வேதனைகளைப் பாடுவதோடு அவற்றிலிருந்து மீளமுடியாத அல்லது மீள வழிதேடாத பெண்களின் வேதனைகளைப் பதிவுசெய்கின்றன. தூண்டிலில் அகப்பட்ட மீனாக வேதனைகளை வெளிப்படுத்துவதோடு உயிர்வாழ்தலுக்காக ஆண்களின் அனுசரணையை அவாவி நிற்கும் கவிதைகளையும் காணமுடிகின்றது. வாழ்க்கைப் பிணைப்பிலிருந்து விடுபட முடியாது கட்டுண்டுபோன உணர்வுப் பதிவுகளாகச் சில கவிதைகள் அமைந்துள்ளன. ஆண்களை விட்டுத் தனித்து வாழ முடியாத ஒட்டுண்ணிகளாகப் பெண்களைப் பாடுகின்றார். காதல் வசப்பட்ட ஒரு பெண்ணின் மெல்லுணர்வுகளைப் புரிந்து கொள்ளாத ஆண்களின் அபத்தத்தை வேதனையின் வெளிப்பாடாகத் தனது கவிதைகளில் அனார் பதிவுசெய்துள்ளார்.


'யவ்வனப்  பத்தியிலே
உன்  திறமைகளால்  உரசி
சுடர்  ஏற்றி  வைத்துப் போய்  விட்டாய்
என்  உயிர்த்திரி  உணர்வு  நெய்  வற்றி
நூர்ந்துவிட  முன்  வந்து
தூண்டிவிடு அல்லது
அணைத்துவிட்டுப் போ'

ஆண் ஒருவனின் அன்பிற் கட்டுண்டு சேர்ந்து வாழத்               துடிக்கும் பெண்ணின் ஆத்மாவை பிரதிபலித்து   நிற்பதாக   அவரது   'மௌனச்   சிலுவைகள்'  என்னும் கவிதை   அமைந்துள்ளது. சேர்ந்து வாழ்தல் வேட்கையின் உந்தல் பெண்ணிலை சார்ந்து வெளிப்படுவதில் ஆச்சரியமில்லை. ஆனாலும், இந்தக் கவிதையில், பெண்ணுக்கான இன்பத்தைக் கொடுக்க வல்லவனாக ஆண் ஒருவனைக் கற்பிதம் செய்வது பெண்விடுதலை நோக்கிய குரலாகக் கொள்ளப்பட முடியாதது.

'எனதன்ப
துன்பத்திற்காயும் மனத்தினை
நீ  நிழலாய்  மூடு'

என்று ஒரு பெண்ணின் குரலாக ஒலிக்கிறன அந்தக் கவிதை வரிகள். அன்பின் அடக்குமுறைக்குள் அகப்பட்டுக்கொண்டு அந்த ஆணிடம் ஆதரவு தேடும் அவலத்தையும் தாண்டி, பெண்ணடிமைத்தனத்தின் விலங்கினைத் தகர்த்தெறியும் எத்தனத்தில் வெளிப்படும் பல கவிதைகளையும் காணமுடிகின்றது.


பெண்கள் தமது வாழ்க்கைக்கு ஆணாதிக்க சக்திகளால் கற்பிக்கப்பட்ட இலட்சணங்களை ஏற்றுக்கொண்டு, போடப்பட்ட வேலிகளுக்குள் வலிகளைச் சுமந்துகொண்டு வாழ்வதை பிரக்ஞையற்றுப் பின்பற்றிக்கொண்டனர். ஆனால், பெண்விடுதலைக் கருத்துக்கள் வலிமைபெறத் தொடங்கியபோது விடுதலை பற்றிய உணர்வு ஏற்பட்டு அடக்குமுறைக்கு எதிரான உசாவல்கள் எழத்தொடங்கின. இதற்காகக் பெண்ணிய எழுத்தாளர்கள் பலரும் தமது எழுத்தாயுதத்தை கூர்மையோடு பயன்படுத்தினர். அனாரின் கவிதைகளிலும் இப்போக்கைத் தரிசிக்கலாம்.

'அந்தந்த  வயதில்
அவரவர்கள்  பொதிகளைச்
சுமக்கும்  கழுதைகளாக நாமிருந்தோம்

காலப்போக்கில்
பொதி மூட்டைகளாகிக்
 கூடவே சவாரி செய்யவும்
ஏறியமர்ந்தார்கள்

அவர்கள்  போட்ட  பாதையில்
அவர்கள்  நோக்கிய திசையில்
அவர்கள்  சுட்டுவிரல்
காட்டும் இலக்கில்
எம்மை இழுத்துப்  போனார்கள்

எப்போதும்
அப்படியே  இருக்கமாட்டோமா என்றுதான்
ஏக்கம்  அவர்களுக்கு

இப்புதிய கழுதைகளுக்கு
இது காலம் தந்த பாடம் அல்ல
காயம் தந்த ஞானம்'

என்று 'காயமே மருந்தாகி' என்ற கவிதையில் அனார் கூறுகின்ற விடயங்கள் எதிர்ப்புக்குரல் பெண்விடுதலை நோக்கிய பெண்ணியத் தளத்தின் ஆழத்திலிருந்து மேலெழுவதைக் காணலாம். பெண்களின் உரிமைகளைத் தமது கையிலெடுத்துக்கொண்ட ஆண்கள் அவர்களின் பேச்சுச்சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் என எல்லாவற்றையும் நிராகரித்துவிட்டு தமது நன்மைகளுக்குப் பலம் சேர்க்கும் பக்குவங்களையே அவர்களுக்குக் கற்பித்துக்கொண்டிருக்கின்றனர. சுகங்கள் அனைத்தையும் ஆண்களே அனுபவித்து விட்டு சுமைகளையும் வலிகளையும் தமக்குத் தந்துவிடுகின்றனர் என்று பெண்ணினத்தின் பிரதிநிதியாக நின்று எதிர்ப்புக் குரல் எழுப்புகின்றார். 'துஷ்பிரயோகம்' என்ற கவிதையில்,

'கஷ்டங்களை நான் சுமக்க
சுகங்களை நீ பெருக்கினாய்

அதற்காகவே
உனது வதை ஆலையில்
என்  வாழ்க்கை
சக்கை  பிழியப்பட்டு  வருகிறது

என் இனிய வரலாற்றை
ஓலங்களைக் கொண்டு
கண்ணீரைக்  கொண்டு  எழுதுவித்தாய்'

என்று  கூறுகின்ற  வரிகள்  அவரது  ஆன்மாவின்  குரலாக  ஒலிக்கின்றனது.

'யாருக்கும் கேட்பதேயில்லை', 'வன்மப்படுதல்', 'ஊமைக் காவியம்', 'ஓவியம் வரையாத தூரிகை' போன்ற கவிதைகளிலும் பெண்களது வாழ்வியலில் ஆண்கள் கொடுக்கும் அவலத்துக் எதிரான குரல் ஓங்கி ஒலிப்பதைக் கேட்க முடிகின்றது. பெண்களது பூப்பெய்தலின் பின்னர் உடலை மட்டும் வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்ற ஆணாதிக்க சமுதாயம் உள்ளத்தையும் உணர்ச்சிகளையும் வளர விடாமல் செய்வதற்குக் கையாளும் தந்திரங்களை தகர்த்தெறிய  வேண்டும் என   அவர்   பாடுகின்றார்.   'மலட்டுச்   சித்திரங்கள்'  என்ற   கவிதையில்   சுகங்களற்ற, சூனிய வாழ்வை வெறுக்கும் பெண்களின் குரலாக ஒலிக்கிறார். இந்தவாழ்க்கையைப் பெண்களுக்குப் போதிக்கும் ஆணாதிக்க சக்திகளையும் அவற்றின் செயற்பாடுகளையும் வன்மத்தின்  வடிவங்களாகவே அவர்  பார்க்கின்றார்.

இந்தப் பின்னணியில் திருமணம்கூடப் பெண்கள் பலருக்கு துன்பம் மிகுந்த வாழ்க்கையைப் பிரசவித்திருக்கின்றது. மணப்பந்தலுக்கு அலங்கரிக்கப்பட்டு அழைத்துச் செல்லப்படும் ஒரு பெண் ஆணை நோக்கிப் பேசும் நியாயக் குரலாக,'()ணப்பந்தல்' என்னும் கவிதை அமைந்துள்ளது. மணப்பெண்ணுக்குப் பிடித்தமானவையெல்லாம் நிராகரிக்கப்பட்டு ஆணின் அபிலாசைகள் அரங்கேற்றப்படுவதற்காக நடைபெறும் சடங்காகவே திருமணத்தை அந்தப் பெண் பார்க்கிறாள். வளையல்கள், வண்ணப்பூச்சுக்கள், ஆடம்பர ஆடை, மருதாணி, குதி உயர்ந்த செருப்பு என பலவற்றையும் நிராகரிக்கும் பெண் கண்மையை நிராகரிப்பதற்கு கூறும் காரணம் அனாரின் ஆத்மார்த்தமான எதிர்ப்புக் குரலாக அமைகின்றது.

'கண்ணுக்கு மையிடுகிறாயா
சற்றுப் பொறு
அதை நிறுத்து ஏனெனில்
எல்லா  நேரங்களிலும் (பெ)ண்
கண்ணீர்விடவேண்டிய  வஸ்து'


என்று கவிதைவரிகளில் அதை வெளிப்படுத்துகின்றார். முதிர் கன்னியாக இருந்து தவிக்கும் பெண் ஒருத்தியின் அவலக்குரலாகத் தொனிக்கும் 'அக்காவுக்குப் பறவைபோல சிரிப்பு' என்னும் கவிதை ஆண்களை முன்னிறுத்தி நியாயம் கேட்கும் எதிர்ப்புக் குரலாகவும் அமைகின்றது.

எந்த ஒரு அதிகாரமும் உலகில் நிலையாக இருந்ததில்லை என்பதால் ஆணாதிக்க அதிகாரமும் அதிக நாள் நிலைத்திருக்காது என்ற எச்சரிக்கையை அடக்குமுறையாளர்களை நோக்கி அனார் முன்வைக்கின்றார். 'வன்மப்படுதல்' என்ற கவிதை இங்கு குறிப்பிடத்தக்கது.

'சுற்றி  வளைத்து வேலிகட்டி
அதற்குள்  என்னைச்
சுவாசிக்கச்  சொல்வது  தான்
நீ  காட்டும்  சுதந்திரம்
.....................................................
நீ குற்றவாளியாக இருந்து கொண்டு
என்னைத் தண்டிக்கின்றாய்

நீ ஏவிய சூறாவளி
வெற்றிகரமாய் வீசி வீசி
என்  தேசத்தையே  நாசப்படுத்தலாம்

உலகில் ஒரே காலநிலை
ஒரே அதிகாரம்
நிலைத்திருப்பதில்லை என்பதை
நீ மறந்து விட்டாய்'

என்கின்ற குரல் அடக்கியாள முற்படும் ஆணாதிக்க சமுதாயத்தை நோக்கிய எச்சரிக்கையாகவே அமைகின்றது.


எதிர்பார்ப்புக்கள், ஏக்கங்கள் நிறைந்ததாக பெண்களது வாழ்க்கை அமைந்துவிடுகின்றது. பெண்கள் மென்மையான உணர்வுகளோடு வாழ்க்கைக்காகக் காத்திருக்கிறார்கள். ஆனால், ஆணாதிக்க சமூகத்திடமிருந்து அதைப் பெறமுடியாதபோது அவள் பொசுங்கிப்போய்விடுகின்றாள். மகிழ்ச்சியாக வாழ்தலுக்கான பாதைகள் வலுக்கட்டாயமாக அடைக்கப்படும் அவலத்தைப் பெண்கள் எதிர்க்கின்றார்கள் என்பதை 'காயங்கள்' என்னும் கவிதையில் விளக்கும் விதம் மிகவும் சிறப்பாக உள்ளது. பெண்ணொருத்தி தான் செல்லும் பாதையை விட்டு ஆணாதிக்க சமுதாயத்தை விலகி நிற்கச்சொல்லி எச்சரிக்கை செய்வதாகக் 'கோரிக்கை' என்ற கவிதையும் எதிர்ப்புக் குரலைக் கக்குகின்றது.


பெண்கள் சமூகத்திடம் எதிர்பார்த்துக் காத்திருப்பதை விடத் தாமே சுயேட்சையாக, சுதந்திரமாகச் செயற்பட வேண்டும். மற்றவர்களின் உடைமையாகப் பெண் தன்னைக் கருதிக்கொள்ளக் கூடாது போன்ற கருத்துக்களையும் தனது கவிதைகளினூடாக அனார் வலியுறுத்துகின்றார். புகழ்மொழிகளுக்குள் கட்டுண்டுபோகும் பெண்களின் அறியாமை இருள்போக்கும் கவிதைகளையும் அவர் பாடியுள்ளார். பெண் என்பவள் கொதிமலைபோல இருப்பவள். அந்தக் கொதிமலையில் கக்கும் நெருப்பை ஆண்கள் மெழுகுவர்த்திகளை ஏற்றவும் ஊதுபத்திகளைப் புகையவிடவும் பயன்படுத்தி சுகங்காணபதைக் கண்டு அனார் கொதித்தெழுகின்றார். இவ்வுணர்வை 'வெளியேற்றம்' என்ற கவிதையில் காணலாம். மௌனத்தை வரித்துக்கொண்டு வாழும் பெண்களின் சந்ததி காலாவதியாகிவிட்டது. விடுதலைபற்றிய தேடலுக்கான விடை ஆண்களிடமிருந்து கிடைக்கும் என்ற நிலையை விடுத்து பெண்களுக்குத் தமது வாழ்வைத் தாமே நிர்ணயிக்கும் தைரியம் அவசியமானது என்பதை வலியுறுத்துகின்றார்.


வாழ்க்கை     என்னும்   களத்தில்   பெண்கள்   தினமும்   வதைபடுகிறார்கள்.   துன்பத்தைச்   சுமந்து சுமந்து நொந்துபோகிறார்கள். எனினும், அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் எவருமில்லை. அந்த அவல வாழ்க்கை அவர்களைத் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றது. அதனை உடைத்தெறிந்து நித்தியமான விடுதலை வாழ்வைப் பெண் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அனாரின் எதிர்ப்புக் குரல் ஒட்டுமொத்த சமுதாயத்தின் மீது எதிரொலிக்கின்றது. வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் பெண்கள் முகவரியிழந்து போகாது தமது இருப்பை நிலைநாட்டப் பாடுபடவேண்டும். எவர் வரின் எதிர்த்துப் போராடும் இயல்பு வலுக்க வேண்டும் எனத் தனது கவிதைகளில் வலியுறுத்துகின்றார். 'பெண்பலி' என்ற கவிதையில் பெண்ணினத்தின் உணர்வுகள் கொல்லப்படுவது பற்றிய குரல் ஒரு சமுதாயத்தையே எதிர்த்து எழும் குரலாக அமைகின்றது.

ஒவ்வொரு பெண்ணும் அடிமைத்தனத்துக்கு எதிரான குரலை ஓங்கி ஒலிக்கச்செய்ய வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் தன்னை அரசியாகப் பிரகடனப்படுத்திக்கொள்ள வேண்டும். தாம் விரும்பியபடி வாழும் உரிமையைப் பிரகடனப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது அனாரின் கொள்கையாகத் தொனிக்கின்றது.

'சாபத்தை உடைத்துப் பூத்திருக்கின்றேன்
மீளும் உரிமை கோரி
ஆற்றலை  உறுதி  செய்து
என் உள்ளம் திறந்துகொள்கின்றது
 பூமியில் முடிவற்ற பிரமாண்டமாய்'

என்ற கவிதை வரிகளில் பெண்கள் தமது சாபத்தை உடைத்தெறிந்து ஆற்றல்மிக்க சக்தியாக உலகில் மாறவேண்டும் என்று வலியுறுத்துகின்றார். இந்த வற்புறுத்தல் ஆணாத்திக்க சக்திகளை மிரட்டும்  எதிர்ப்புக்  குரலாக  அமைகின்றது.

பெண்ணின்              விருப்பற்ற           புணர்ச்சிக்கு                 எதிரான                குரல்களும் அனாருடைய கவிதைகளில் ஒலிக்கின்றன. விருப்பின்றி நடக்கும் கணவனுடனான புணர்ச்சிகூட அருவருப்பையும் வெறுப்பையும் பெண்களுக்குக் கொடுத்துவிடுகின்றது. மாற்றமுடியாத வலிகளையும், வருத்தத்தையும் கொடுத்துவிடுகின்றது. இந்நிலையில், அனாரின் கவிதைகளில், ஆணின் அதிகாரத் தோரணையில் நடைபெறும் புணர்ச்சிக்கு எதிரான குரல் கவிதைகளில். அந்தவகையில், 'அறைக்கு வெளியே அலையும் உறக்கம்', 'மாற்ற முடியாத வலி', 'வரு(ந்)த்துதல்', 'தண்ணீர்', 'சாபம்' போன்ற கவிதைகள் குறிப்பிடத்தக்கன. புணர்ச்சி வன்மத்தின் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தும் அனாரின் கவிதைகளில் 'மாபெரும் உணவுமேசை' என்பது முக்கியமானது.


'சில்லி  சோஸ்  ஊற்றப்பட்ட  தட்டுக்களில் யோனிகள்  பரிமாறப்பட்டன உடனுக்குடன்  வெட்டப்பட்ட  முலைகளும் விருந்தினரை  அதிகம்  கவர்ந்திருந்தன'  என்ற கவிதை வரிகளில் பெண்ணுக்கு எதிராகச் சமூகம் செய்யும் கொடுமைகளின் உச்சம் வெளிப்பட்டு நிற்பது மட்டுமல்லாமல் அதற்கு எதிராக அனைவரும் கிளர்ந்தெழ வேண்டும் என்ற எதிர்ப்புணர்வையும் ஏற்படுத்திவிடுகின்றன.

பெண்கள் பிள்ளைபெறும் இயந்திரங்களாக வாழ்வதை 'புள்ளக்கூடு' என்ற கவிதையினூடாக அனார் எதிர்க்கிறார். குடும்ப வாழ்க்கையோடு கட்டுண்டு விடுபட முடியாத வேதனையில் துடிக்கும் பெண்கள் தலையணையோடு அழுது தீர்க்க எத்தனிக்கின்றார்கள். பல பெண்கள் தமது பிரச்சினைகளை வெளிப்படுத்த முடியாது மடிந்துபோகின்றார்கள். அந்த அவல வாழ்வுக்கு யாரும் பொறுப்பேற்பதில்லை.

'வெகு  காலமாக  ஒருத்தி
நிறங்களை  அழுவது  தொடர்பான
கடினமான  வேதனை  பற்றி
உங்களுக்கு எதுவும் தெரியாது என்றபோதிலும்
உங்களில் ஒருவரே
அதற்கு முழுப் பொறுப்பாளி என்பதையும்
தயவு செய்து ஞாபகம் வைத்திருங்கள்?'

என்ற கவிதை வரிகளில் பெண்ணடிமைத்தனத்தின் கோரத்தனங்களுக்கு சமுதாயத்திலுள்ள ஒவ்வொருவரும் பொறுப்பாளிகள் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றார். அதற்குக் காரணமான ஒட்டுமொத்த சமுதாயத்தை எதிர்த்துக் குமுறுகின்றார்.

அனார், பெண்ணடக்குமுறைக்கு எதிரான தனது குரலை 'சுலைஹா' என்ற கவிதையில், தொன்மம் சார்ந்த உத்தியினூடாகப் பாடியுள்ளார். அனார், சுலைஹாவை விடுதலை வேட்கையுடை ஒட்டுமொத்தப் பெண்களின் பிரநிதியாக நிறுத்திப் பேச வைக்கின்றார்.

'கனவுகள்  காண  ஏங்கும்  கனவு  நான்
என்  உடல்  செஞ்சாம்பல்  குழம்பு
கத்திகளால்
கைகளையோ கனிகளையோ
 வெட்டிக்கொள்ளாதவள் '

என்று  அவள்  சுதந்திரத்தைச்  சுயபிரகடனம்  செய்கிறாள்.  பெண்ணுக்கு        எமது சமுதாயம்                போதித்திருக்கும் இலட்சணங்களைப் பொய்ப்பித்து, அடிமைத்தனத்தை உடைத்தெறிந்து, சக்தி மிக்கவளாக எழவேண்டியதன் அவசியத்தை அனார் வலியுறுத்துகின்றார். பெண்களை அடிமைகளாக எண்ணுபவர்களுக்கு எதிரான குரலாக ஒரு பெண் படைக்கப்படுகின்றாள்.  அவள்,

'ஒரு  காட்டாறு
ஒரு  பேரருவி
ஓர்  ஆழக்  கடல்
ஓர்  அடை  மழை
நீர்  நான்

கரும்  பாறை  மலை
....................................
எனக்கென்ன எல்லைகள்
நான் இயற்கை
நான்  பெண்'

என்று  வலிமையோடு  பிரவாகித்தெழுபவளாக  பெண்ணைக்  காட்டுகின்றார்.  பெண்களது வலிகளும் வேதனைகளும் பெண்கள் மீதான வன்மத்தின் வடுக்களும் அவற்றுக்கான காரணங்களும் மட்டுமின்றி அவற்றுக்கு எதிரான குரல்களும் அனாருடைய கவிதைகளில் ஓங்கி ஒலிப்பதைக் காணலாம். சமுதாயத்தின் பல்வேறு பிரச்சினைகளையும் பாடுபொருளாகக் கொண்டுள்ள அனார் பெண்ணடிமைத்தனத்தை எதிர்ப்பது தொடர்பாக அதிக கரிசனை கொண்டிருப்பதைக் காணமுடிகின்றது. அந்தச் சமுதாய அக்கறையின் வெளிப்பாடாக அவரது எதிர்ப்புக் குரல்கள் வெளிப்பட்டு நிற்கின்றன.

இருள், இருட்டு. பாம்பு, சிவப்பு, மலை, பள்ளத்தாக்கு, போன்ற சொற்கள் அவரது கவிதைகளில் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். பெண்ணுடலுடன் தொடர்புடைய குறியீடுகளாகவும் இவை கையாளப்பட்டுள்ளன. ஒற்றை வாசிப்பில் விளங்கிக்கொள்ள முடியாத பல படிமங்களையும் கையாண்டு பெண்ணடிமைத்தன எதிப்புக்குரலை வெளிப்படுத்துகின்றார். சில கவிதைகள் இருண்மை நிறைந்து உணர்வுத் தொற்றலை ஏற்படுத்துவதில் தொய்வினை உண்டாக்கிவிடுகின்றன என்பதும் மறுப்பதற்கில்லை. எனினும், அனாரினுடைய கவிதைகள் மொழி, மொழிதல், உள்ளடக்கம் என்ற அடிப்படையில் பலரதும் கணிப்பைப் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தவகையில் சங்கரி, சிவரமணி, ஒளவை, ஊர்வசி, சன்மார்க்கா, ஆழியாள், மைத்திரேயி, ரங்கா, மசூறா, .மஜீட், சுல்பிகா, பெண்ணியா, கெக்கிறாவ சுலைகா என்று நீண்டு செல்லும் இலங்கைப் பெண்கவிஞர்களின் பட்டியலில் அனார் தனக்கென ஒரு இடத்தைப் பதிவு செய்துள்ளார் என்பது வெளிப்படையானது.




5.            முடிவுரை:

இலங்கைத் முஸ்லிம்     தமிழ்ப்             பெண்கவிஞராக     விளங்குகின்ற அனார் தனது  கவிதைக் கொள்கை      காரணமாக  இன,   மத    வேறுபாடுகளைக் கடந்து    ஒடுக்கப்பட்ட       ஒரு                கூட்டத்தின் எதிர்ப்புக் குரலாக ஒலிக்கின்றார். பெண்ணடிமைத்தனச் சிந்தனைகள் ஆழ வேரூன்றிவிட்ட இலங்கை தமிழ், முஸ்லிம் சமூகத்தில் பெண்விடுதலை பற்றிய கருத்துக்கள் பேசப்பட்டாலும் அவை காத்திரமான நிலையைப் பெறவில்லை என்பது கசப்பான உண்மையாகும். பெண் விடுதலை பற்றி ஆரம்பத்தில் ஆண்கள் பாடினாலும் பெண்கள் தமது பிரச்சினைகளைப் பற்றித் தாமே பாடத் தொடங்கிய பின்னரே எதிர்ப்புக் குரல்கள் வலுப்பெறத் தொடங்கின. கவிதைகளின் உள்ளடக்கம், எடுத்துரைப்பு முறை ஆகியன பற்றிய பல வாதப்பிரதிவாதங்கள் காணப்பட்டாலும், பெண்விடுதலையை நோக்கிய எதிர்ப்புக் குரல்களின் உள்ளடக்கம் காரணமாகவும் படிமம் போன்ற வெளிப்பாட்டு உத்தி, கையாளும் மொழி காரணமாகவும் தமிழ்க் கவிதையுலகில் அனார் தனக்கென ஒரு இடத்தைப் பதிவுசெய்துள்ளார் என்பது வெளிப்படையானது.


6.  உசாத்துணைகள்:

அனார். (2004), ஓவியம் வரையாத தூரிகை. மூன்றாவது மனிதன் வெளியீட்டகம: கொழும்பு.

அனார். (2007), எனக்குக் கவிதை முகம். காலச்சுவடு பதிப்பகம்: சென்னை.

அனார். (2009), உடல் பச்சை வானம். காலச்சுவடு பதிப்பகம்: சென்னை.

அனார். (2013), பெருங்கடல் போடுகிறேன். காலச்சுவடு பதிப்பகம்: சென்னை.

இந்திரன். (2001), கவிதையின் அரசியல். அலைகள் வெளியீட்டகம்: சென்னை.

முத்துச்சிதம்பரம், . (1999), பெண்ணியம் தோற்றமும் வளர்ச்சியும். தமிழ்ப் புத்தகாலயம்: சென்னை:

யோகராசா, செ. (2007), ஈழத்து நவீன கவிதை. குமரன் புத்தக இல்லம்: சென்னை.

வாசுகி, சி. ரூ அயோத்தி, சி. (2007), பன்முக நோக்கில் பெண்ணியப் பதிவுகள். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்: சென்னை:

---