Monday 25 March 2013

பொடுபொடுத்த மழைத்தூத்தல் - தொகுப்பு: அனார்

- கிரி ராமசுப்ரமணியன்
------------------------------------------------------------------------------------------------------

வண்டறுத்த சோலையிலே
மரமழுது போறதுபோல்
நின்டழுவன் மச்சான்
உங்கெ நினைவுவாற நேரமெல்லாம்


இஸ்ஸத் ரீஹானா எம்.அஸீம் என்கிற 'அனார்'. இலங்கையைச் சேர்ந்த முக்கியமான இளம் தலைமுறைப் பெண் கவிஞர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர். கிழக்கு இலைங்கையின் சாய்ந்த மருது என்னும் ஊரைச் சேர்ந்த அனார் தொகுத்து 'க்ரியா' வெளியீடாக வெளிவந்திருக்கும் கிழக்கிலங்கை நாட்டார் காதல் பாடல்களே 'பொடுபொடுத்த மழைத்தூத்தல்' என்னும் இந்தப் புத்தகம்.

நாட்டார் பாடல்கள் அல்லது கிராமியப் பாடல்கள் என்பவை நாட்டுப்புற மக்கள் தங்கள் வேலை நேரங்களின் இடையே வேலைப்பளு தெரியாமல் இருப்பதற்காகப் பாடுபவை. இவை எழுதிவைத்துப் பாடிய பாடல்கள் அல்ல. இவற்றைப் பாடியவர்கள் ஏட்டுக்கல்வி அறிந்தவர்களாக இருந்திருப்பார்களா என்பதுவும் சந்தேகமே. ஆக வாய் வழியே பாடி செவி வழியே கேட்டு சந்ததிகள் வழியே பயணப்பட்டு இவை காலங்காலமாய் வாழ்ந்து கொண்டு இருப்பவை. கைப்பேசியிலேயே வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்கும் வசதி பணியாளர் அறைகளில் தொலைக்காட்சி பார்க்கும் வசதி என்று வளர்ந்துவிட்ட இன்றைய சூழலில் இந்தவகைப் பாடல்கள் இன்னமும் பரவலாகப் புழக்கத்தில் உள்ளனவா என்பதுவும் அடுத்த அடுத்த தலைமுறைகளுக்கு இவை வாய்வழிச் செவிவழி கொண்டு செல்லப்படுமா என்பதுவும் கேள்விக்குறியே. 

காலங்காலமாக நம் கிராமங்களில் வாழ்ந்து வரும் இப்பாடல்கள் நம்மவர்களின் நாகரிக வளர்ச்சியில் மூச்சடைத்து அழிந்திடாமல் இருக்க அவ்வப்போது சிலர் இவற்றை ஆவணப்படுத்துகிறார்கள்.

சிலப்பதிகாரம் போன்ற பெரும் காவியங்கள் கூட அடிப்படையில் நாட்டார் பாடல்களை ஆதாரமாகக் கொண்டு படைக்கப்பட்டவையே என்ற கருத்தும் உண்டு. 

வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு நம்மிடையே பிரபலமானது நடிகர் சிவாஜிகணேசன் நடித்த படத்தின் மூலம் என்பது நாம் நன்கு அறிந்த விஷயம்தான். ஆனால் அதற்கு முன்னால் கிராமங்களில் கட்டபொம்மனின் வழிவந்த கிராமத்துக் கிழவிகள் அவன் வரலாறை நாட்டார் பாடல் தொனியில் பாடிக் கொண்டிருக்க அதைக் கேட்ட மபொசி அவற்றை ஆவணப்படுத்தி வெளிக் கொணர்ந்ததே கட்டபொம்மன் கதை வெளிவந்ததன் முதல்படி. மபொசி கட்டபொம்மன் வரலாறை வெளிக் கொணர்ந்திரா விடில் பத்தொடு பதினொன்றான சிற்றரசர்களுள் ஒருவனாக அவன் மறக்கப்பட்டிருப்பானோ என்னவோ.

(எட்டையாபுர வழி வந்தவர்கள் கட்டபொம்மனைக் கொள்ளையனாகப் பார்ப்பவர்கள். அவர்களுக்கு இந்த விஷயத்தில் மபொசி மீதும் சிவாஜிகணேசன் மீதும் தனிக் கோபம் இருப்பது தனிக்கதை)

இப்படி ஒரு சிற்றரசனின் வரலாறே காலப்போக்கில் மறந்து தொலைக்கக் கூடியது எனில்இ யார் ஆதிகாலத்தில் உருவாக்கினார்கள் என்றே தெரியாத இதர நாட்டார் பாடல்கள் எம்மாத்திரம்? ஆக இத்தகைய பாடல்களைத் தொகுத்துப் புத்தக வடிவில் கொண்டு வருபவர்கள் ஒருவகையில் ஒரு வட்டாரத்தின் ஒரு காலகட்டத்தின் வரலாறைப் பதிவு செய்கிறார்கள். 

வரலாறு? காலகட்டம்?

ஆம் பேரிலக்கியங்கள் மட்டுமல்ல சின்னச்சின்ன நாட்டார் பாடல்களும் அவை பாடப்பட்ட காலகட்டத்தின் மக்களின் வாழ்வியலை போகிற போக்கில் சொல்லிச் செல்பவைதானே.

நாட்டார் பாடல்களானவை நடவுக்கும் ஏருக்கும் உழவுக்கும் படகு வலிக்கவும் வண்டி ஓட்டும் வேளையிலும் பாடப்படுவது என்று வேலை நேரத்திற்கானது என்று மட்டுமே அல்லாமல் தாலாட்டில் தொடங்கி ஒப்பாரி வரை வாழ்வின் அனைத்து காலகட்டங்களுக்கும் பாடப்பட்டவை. கும்மிப்பாட்டு நெற்குத்திப்பாட்டு ஏற்றப்பாட்டு என்று இவற்றில் பல கிளைவகைகள் இருக்கின்றன.

கிழக்கிலைங்க நாட்டார் பாடல்களில் அனார் தேர்ந்தெடுத்துத் தொகுத்திருப்பவை காதல் சுவையை மட்டுமே. 

கத்தி எடுத்துக்
கதிர் அரியும் வேளையிலே
கள்ள எண்ணம் வந்து
என்ட கையறுத்துப் போட்டுதடி 

இப்படி தோராயமாக ஒவ்வொன்றும் நான்கு அடிகள் கொண்ட பாடல்கள். 160 பாடல்களை அனார் தொகுத்திருக்கிறார். படிக்க வசதியாக அவற்றை 'அவன்' பாடுவதாக 80 பாடல்களையும் 'அவள்' பாடுவதாக 80 பாடல்களையும் கோர்த்து ஜோடிப் பாடல்களாக ஒன்றுக்கு ஒன்று கேள்வியும் - பதிலுமாய்த் தந்திருப்பது படிக்க இனிமை.

உன்னை மணந்து
உயர்ந்த கட்டில்மேல் வைத்து
கன்னந்திருப்பிக்
கதைக்க வெகு நாட்களில்லை

என்று 'அவன்' காதற்சுவை பாடினால்....

ஏறப் பழுத்த
இரு சிவப்பு மாம்பழத்தை
என்ன வந்தாலும்
எடுத்தருந்து என்கிளியே

என்று 'அவள்' காமத்துப்பால் பருகச் சொல்கிறாள்.

நாட்டார் பாடல்களின் சிறப்பு ஒன்றேயொன்றுதான். இவை கவிஞனின் கவித்திறமையை உவமைத் திறனை இலக்கண சுத்தத்தை இலக்கிய ஆளுமையை என்று பெரிய விஷயங்களுக்குள் எல்லாம் நுழையாமல் ஒரு சாமானியனின் கணநேரச் சிந்தையை உள்ளதை உள்ளபடிக்கு மொழிபெயர்ப்பனவாக இருப்பதுதான். கவிக்கட்டமைப்பின் கவனச் சிதறலின்மை இவற்றைப் போலியற்ற கவிதையாக வாழ்வாங்கு வாழவைக்க உதவுகின்றன.

கிழக்கிலங்கை நாட்டார் பாடல்களைப் பாடினதில் முஸ்லிம் பெண்களின் பங்கு அதிகமானது என்கிறார் அனார். பிரிவு இரங்கல் தூதுப் பாடல்கள் அவற்றில் தூக்கலாகத் தெரிபவை.

இந்தப் புத்தகத்தின் மூலம் நமக்குக் கிடைப்பவை அந்த சுவைமிக்க நாட்டார் பாடல்கள் மட்டுமல்ல; கூடவே அவை ஒவ்வொன்றிலும் கையாளப்பட்டிருக்கும் கிழக்கிலங்கைப் பிராந்தியத்தின் பிரத்தியேக வார்த்தைகள் சிலவற்றுக்கான அர்த்தங்களும் கூடவே. சுமார் பத்து டஜன் வார்த்தைகளுக்கு பொருளும் சேர்த்தே தரப்பட்டுள்ளது.

சில உதாரணங்கள்:

பொடுபொடுத்த - துளித்துளியாய்ப் பெய்யும் மழை
ஒழுங்கை - வீதி
நுளம்பு - கொசு
பொறுதி - பொறுமை.

அள்ளினால் தங்கம்
அணைச்செடுத்தால் அமிர்த குணம்
கொஞ்சினால் இஞ்சி மணம்
கோவைசெய்தால் வேர்வை மணம்

ஆம்! வேர்வை மணத்தின் இனிமைதான் நாட்டார் பாடல்களின் இனிமையும் கூட!


பொடுபொடுத்த மழைத்தூத்தல்
(கிழக்கிலங்கை நாட்டார் காதல் பாடல்கள்)
க்ரியா பதிப்பகம் 
தொகுப்பு: அனார்
72 பக்கங்கள் ஃ விலை ரூ. 150/=
------------------------------------------------------------------------------------------------------
நன்றி : http://omnibus.sasariri.com/2013/01/blog-post_30.html?spref=fb

Tuesday 19 March 2013

Award for Excellence in the Filed of Literature
( Launched by Vijay TV – Sigaram Thotta Pengal - 2013 )

__________________________________________________________________________









பெண் தான் வாழ்வதற்கும், தன்னை நிரூபிப்பதற்கும் நிச்சய்ம் போராட வேண்டியிருக்கிறது. இதற்கு விதிவிலக்கான பெண்கள் எவரும் இல்லை என்றே எண்ணுகிறேன். 

அவள் கவிதை எழுதினாலும் எழுதாவிட்டாலும், சிறுமியாக இருந்தாலும், முதிர்ந்தவளானாலும், படித்தவளானாலும், பயிலாதவளானாலும், கிராமத்தில் வாழ்ந்தாலும், நகரத்தில் வாழ்ந்தாலும்... இனம், மொழி, மதம், நாடு கடந்து, உலகமெங்கும் பெண் மரணம் வரை போராட வேண்டியிருக்கிறது. அந்த சக்தியை அவள் பெற்றுமிருக்கிறாள்.

இந்நிகழ்வு, என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல உந்துதலையும், உறுதியையும் ஏற்படுத்தியிருக்கிறது. விஜய் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும், நண்பர் திரு. அன்டனி மற்றும் திரு. சுந்தரராஜன் அவர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கிறேன். மேலும் என்னுடைய நூல்களைப்பதிப்பித்த பதிப்பகங்களான காலச்சுவடு, க்ரியா, மூன்றாவது மனிதனுக்கும் நன்றிகள். குறிப்பாக காலச்சுவடு கண்ணன், க்ரியா ராமகிருஷ்ணன் அவர்களோடு இந்தப் பெருமிதத்தைப் பகிர்ந்து கொள்கின்றேன்.

அனைத்தையும் சாத்தியமாக்கித் தந்த இறைவனுக்கும் என் அஸீமிற்கும் நன்றி.
 
                                           
                                         நீயா நானா அன்ரனி, அஸீம், அனார்

                              நீயா நானா அன்ரனி, அஸீம், அனார், சுந்தரராஜன், வளர்மதி அம்மா



                                          அனார், தமிழச்சி தங்கபாண்டியன்


- அனார்
18.03.2013




for more, please click the bellow link:

https://www.youtube.com/watch?v=E4PHAtdUuMo

Monday 4 March 2013

சிகரம் தொட்ட பெண்கள் -பெண் சாதனையாளர் விருது விழா-2013
-------------------------------------------------------------------------------------------------


என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஒரு செய்தியை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். சமூக செயற்பாடு, விஞ்ஞானம்,தொழில் நுட்பம், அரச சேவை, மருத்துவம், கல்வி, களிப்பூட்டல், இலக்கியம் உள்ளிட்ட பல துறைகளிலும் அசாதாரணமான அடைவுகள் மூலம் சாதனைகளை நிலை நாட்டிய இளைய தலைமுறைப் பெண்களை 'சிகரம் தொட்ட பெண்கள் ' என்ற தலைப்பில் விஜய் டி .வி . ஆண்டு தோறும் கௌரவித்து வருவதைப் பலரும் அறிந்திருப்பார்கள்.

இந்த வகையில் இவ் ஆண்டின் இலக்கியத் துறைக்கான சாதனைப் பெண்ணாக கவிஞர் அனார் அவர்கள் விஜய் டி .வி. யால் அறிவிக்கப் பட்டுள்ளார்.

அவரையும், வெவ் வேறு துறைகளில் சாதனைகள் புரிந்த இதர பெண்களையும் கௌரவிக்கும் நிகழ்வு 10.03.2013 அன்று சென்னை விஜய் டி .வி. கலையகத்தில் நடை பெறவிருக்கின்றது.

பெரும் பரப்பொன்றிலிருந்து அவர் தேர்வு செய்யப் பட்ட செய்தியானது மூன்று விதங்களில் என்னை மகிழ்ச்சி கொள்ள வைக்கின்றது.

1. விருது பெறத் தகுதியான எழுத்தாற்றலை அவர் கொண்டிருக்கிறார்.

2..அவர் ஓர் ஈழத்தவர் என்ற பிரதேசம் சார்ந்த பெருமிதம்.

3.அறிமுகமான நாள் தொட்டு இன்று வரை கீறல் விழாத அவருடனான இலக்கியம் சார்ந்த இனிய நட்பு.

அவருக்கு வழிகாட்டிகள் என யாரையும் என்னால் குறிப்பிட முடியவில்லை.அவர் சுயமாக உருவாக்கிக் கொண்ட ஈரம் ததும்பும் மொழியும், கவிதைகளூடாகப் பரவும் காதல் வாசனையுந்தான் இத்தகைய 'சிகரங்களை ' நோக்கி அவரை அழைத்துச் செல்கின்றன.

சிகரம் என்பது ஓர் எல்லையின் குறியீடு. அதற்குப் பின் எட்ட எதுவுமில்லை என்றாகி விடும்.ஆனால் அனாருக்கு எல்லை தாண்டும் வல்லமை உண்டு என்பதை நான் அறிவேன்.

என் மகிழ்ச்சியில் பங்கு கொண்டு அவரை வாழ்த்து மாறு அன்புடன் தோழர்களையும்,தோழியரையும் கேட்டுக் கொள்ளுகின்றேன். 

உமா வரதராஜன்,
கல்முனை ,
இலங்கை. 
27.02.2013