Friday 21 July 2017

காட்சிகளை கருவுக்குள் சிக்கவைக்கும் சாமர்த்தியம் அல்லது தரிசிப்பையே கருவாக்கிடும் ஆற்றல்....

---------------------------------------------------------------------------------------------------------------

- பரீட்சன் (வபா பாறூக்) - சாய்ந்தமருது





உலக மட்டத்தில் தமிழ் கவிதைகள் எந்தத் தரத்தை எட்டியுள்ளது என்பதை மாற்று மொழிக்கவிதைகளுடனான ஒப்பீடுகள் மூலமே ஓரளவு மதிப்பீடு செய்யலாம். இணையத்தின் உதவியால் பாரிய சிரமம் இல்லாமல் இந்த முயற்சியும் இலகுவாக்கப் பட்டுவிட்டது. அனேகமாக எல்லா மொழியிலும் எழுதப்படுகின்ற தரமான கவிதைகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் பட்டு விடுகின்றன என்றே சொல்லலாம். இத்தகைய பதிவுகள் அனைத்தையும் ஒருவரால் படித்திட முடியாது என்பது உண்மையே. இது எல்லாத்துறை/பிரிவுகளுக்குமான பொதுவான யதார்த்தமே என்றாலும் ஆய்வு நோக்கில் தேடுகின்ற ஒருவரின் தேடல் சாதாரன துலாவலைக் கடந்து செல்லும் என்பதில் இரண்டாவது கருத்து இருக்காது.


கடந்த சில மாதங்களாக தமிழ் கவிதைகளின் உலக மட்டத்திலான நிலையை அறிந்து கொள்ளும் நோக்கில் மிக விசாலமான தேடலை மேற்க் கொண்டேன். அந்த முன்னெடுப்பில் ஒரு உண்மையை அறிய முடிந்தது. பொதுவாக என்று கூற முடியாவிட்டாலும் குறிப்பிட்ட சில தமிழ் படைப்புகளுகள் ஒப்பீட்டளவில் மிகவும் உச்சத்தில் இருக்கின்றது என்பது தான் உண்மை..

இந்தியாவை சேர்ந்த இளம் கவிஞர் நேஹா குமாரி ஆங்கில கவிதைகளுக்கு முற்றிலும் புதுமையான பெயரிடப்படாத வர்ணங்களை சேர்த்துக் கொண்டிருக்கிறார். இது தவிர இத்தாலிய, பிரெஞ்ச் மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப் பட்டுள்ள சில கவிதைகளை நோக்கின் அவை நுட்பமான படைப்புகளாய் இருந்தாலும் ஆச்சரியப்படத்தக்கதாகவோ முயன்றால் முடியாதனவாகவோ தென்படவில்லை அப்படைப்புகளில் செயற்கையான நுட்பவியல் முயற்சி பெரும் ஆதிக்கம் செலுத்துகின்றன. அந்தக்கவிதைகளில் ஒன்றை படித்து முடித்தவுடன் படைப்பாளியான வாசகனுக்குஉடணடியாக ஒரு புதிய கவிதையை எழுதிவிடலாம் என்றோ, முன்னர் எழுதியிருந்த அல்லது கரு நிலையில் மனதில் இருக்கும் தனது கவிதை ஒன்றையோ சில நிமிடங்களில் நுட்பவியல் திருத்தத்துக்கு உட்படுத்தி புது வடிவொமொன்றை கொடுத்து விடுவதில் சிரமம் இருக்காது. தவிரவும் அத்தகைய கவிதைகள் கணிசமான அளவு தமிழில் எழுதப் படாமலும் இல்லை. குறிப்பிட்டு சொல்லக்கூடிய சில கவிஞர்கள் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டு வருகின்றனர் (கவிஞர்கள் என்று குறிப்பிடுவது அனைத்து பாலாரையுமே). புதிதாகவும் சில கவிஞர்கள் நுட்பச் செறிவான கவிதைகளை எழுதத் தொடங்கியுள்ளதையும் அவதானிக்க முடிகிறது ஆனாலும் உலகத்தரத்தில் உச்ச நிலைத் தமிழ் கவிதைகள் என்று கூறும் போது அது வெறுமனே எழுத்திலோ பாணியிலோ தனித்துவம் உடையதாக மட்டும் இருப்பது போதுமாகாது. மேலதிக பிரத்தியேக சிறப்புக்காரணமும் இருத்தல் அவசியம். அந்த வகையில் சர்வதேச விருதுகள் பெற்ற கவிஞர் அனாரின் கவிதைகள் சமகால கவிதைப் பரப்பில் மொழி/தேசங்கள் கடந்து முன்னிலையில் நிற்பதை அவதானிக்க முடிகிறது.


அனாரின் தனித்துவமான மொழிக் கையாழ்கை, கருத்தேர்வுகளுக்கு அப்பால் வியக்கத்தகு தரிசனப்பாங்கு ஒன்று சுழல்கின்றது. ஏழாம் நிலைத் தரிசனம் ஒன்று இயற்கைக் கொடையாக கிடைக்கப் பெற்றிருப்பதை அனாரின் கவிதைகள் சாட்சி சொல்கின்றன. தரிசிப்பின் வியாபிப்பும், அகத்தை புற வடிவுக்கு மாற்றலும் அந்தரங்கத்தை சர்வசாதாரணமாக பகிரங்க காட்சிமாற்றலுக்குட்படுத்துவதும் அனாரின் நுட்பங்களாயிருந்தாலும் ஏழாம் நிலைத் தரிசிப்பே அனாரின் அதிகமான கவிதைகளின் கருக் களமாக காணப்படுகின்றன. இத்தரிசிப்பு எல்லோரிலும் இயற்கையாக இருக்கும் அம்சமாயினும் அதன் பிரயோகிப்பும் நெறிப்படுத்தலும் தனி மனித ஈடுபடுத்தலுக்கும் ஏற்ற விதத்துக்கு இசைவடைய ஆரம்பித்ததால் சுவரில் தொங்கும் ஓவியத்தின் வர்ணங்களை இழை இழையாக பிரித்தெடுத்து இறுதியில் உருவமும் வர்ணமுமில்லாத ஓவியத்தை மடியில் வைத்து இசை கேட்பதெல்லாம் அனாரை பொறுத்தவரை நாளாந்த நிகழ்வுகளாக மாறி விடுவது விந்தையல்ல.


பயிற்றப்பட்ட வண்டில் மாடு உரசிடாமல் பக்குவமாய் குறும் ஒழுங்கைக்குள் சென்று திரும்புவது போல் அனாரின் தரிசனங்கள் புறத்தை உரசிடாமல் ஆழ்அகங்களை இயல்பாக தரிசிக்கப் பழகிக் கொண்டதால் அவாவின் கவிதைகளில் ஒரு ஏழாம் நிலைக் காட்சிகளையே நம்மாலும் காணமுடிகிறது. காட்சிகளை கருவுக்குள் சிக்கவைக்கும் சாமர்த்தியம் அல்லது தரிசிப்பையே கருவாக்கிடும் ஆற்றலும் பிரத்தியேக ஈடுபாட்டின் இலாபங்களாய் கிடைக்கப்பெற்றிருந்தாலும் அனாரின் அலாதியான மொழியீடு கவிதைகளை மொழி/தேசங்கள் கடந்த உச்ச நிலை படைப்புக்களாக  சமகாலத்தில் அடையாளப்படுத்துகின்றன.


இப்படியான உன்னதமான படைப்பாளி பிறந்த மண்ணில் வாழ்வதிலும் பெருமையே.


-
15.12.2015