Sunday 5 November 2017

கவிதை முழுமையடையும் தருணம்
------------------------------------------------------------

- பேரா. அ. ராமசாமி



இப்போது வரும் கவிதைத்தொகுதிகளில் ஒன்றைக் கையில்கொடுத்து விமர்சனம் செய்யவேண்டும் அல்லது விளக்கிப்பேசவேண்டுமென்றால் திணறல் ஏற்படுவது தவிர்க்கமுடியாதது. அந்தத் திணறல் காரணமாகவே தமிழின் முக்கியக் கவிகள் பலரைப்பற்றியும் எனது வாசிப்பனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளாமல் தவிர்த்துக் / தவித்துக்கொண்டிருக்கிறேன். அனாரின் கவிதைகளின் தொகுதியும்சரி, தனித்தனிக் கவிதைகளும்சரி அந்தத் திணறலை ஏற்படுத்துவதில்லை.

அச்சில் ( தடம், நவம்பர், 2016 ) வந்திருக்கும் தனது கவிதையொன்றை அனார் தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தக் கவிதையின் தலைப்பு,
" ஆழ்தொலைவின் பேய்மை"

’ நீயொரு மாறுதலற்ற நிழல்
நான் பகலை முந்திச்செல்லும் இரவு’

என்பதான இருமைக்குள் விரியும் படிமக் காட்சிகள் பிறன்மை(Other) யையும் தன்னிலை(Self)யையும் அடுக்கிக் காட்டுகின்றன.

பகலை முந்திச்செல்லும் இரவு எனத் தன்னை ( ) முன்னிலைப்படுத்திக்கொண்டு, பிறன்மையை ஆழ்தொலைவின் பேய்மையாக உருவகித்துக்கொண்டு உரையாடலை நிகழ்த்துகிறது. தனக்கும் அதற்குமான தூரம் வெகுதூரமாக இருந்தபோதிலும் தனது இருப்பு, 'வெம்புக்காட்டின் சுருள்களுக்குள்
நாகத்தின் சீற்றம்' மின்வெட்டு, கரைந்தபடி அலையும் ஒற்றைக்காகம், ஜொலிஜொலிப்பாக விரியும் அமிர்தத்தின் குடுவை எனச்சொல்கிறது. என்றாலும் கணத்தில் சூழும் பேய்மைகள், மரணத்தை நினைவூட்டும் அச்சமாகச் சூழ்கிறது என விரிகிறது.


கவிதைக்குள் இருக்கும் ‘சொல்லி’யின் தவிப்பும் நிலைப்பாடும் தனியொருவருக்குரியதாக இல்லாமல் பொதுநிலைக்குரியதாக ஆவதில், ஒவ்வொரு அகக்கவிதையும், பொதுநிலைக்கவிதையாக மாறிவிடும். அனாரின் இந்தக் கவிதை அதைத்துல்லியமாகச் செய்துகாட்டியிருக்கிறது.ஆணைச்சார்ந்து வாழும் பெண்மையாக மட்டுமல்லாமல், தனது படைப்பாற்றல், உற்பத்தித்திறன், பயணம் தரும் கொண்டாட்டத்தை அனுபவிக்கும் மனுசியாக உலகத்தின் பரப்பிற்குள் விரிக்கும் ஒரு பெண்ணைச் சூழும் பேய்ம்மைகள் பலவிதமானவை. அவற்றின்மீது அந்தப்பெண் கொள்ளும் கோபத்தின் ஆவேசத்தை, ஆவேசமான சொற்களைத்தவிர்த்து அதன் வீர்யம் குறையாத வேறுசொற்களால் நிரல்படுத்துவதில் அனார் கவனம் செலுத்துபவர். அந்த நிரல்படுத்தலில் தான் வாழும் நிலம்சார்ந்த காட்சிச்சித்திரங்களையும் தந்துவிடுவார். இந்தக்கவிதையிலும் அதை உறுதிசெய்திருக்கிறார். அச்சத்தின் சாயலும் பெருமிதத்தின் நிமிர்வுமெனக் கசியும் இந்தக் கவிதையில் ஒரு தமிழ்க்கவிதையின் அழகியலான முதல், கரு, உரி என்ற மூன்றும் சம அளவில் வெளிப்பட்டுள்ளது. அந்தச் சமநிலையில்தான் கவிதை முழுமையாகும். இந்தக் கவிதை அப்படியொரு முழுமையான கவிதை:


இனி முழுமையாக அந்தக் கவிதையைத் தருகிறேன்.


வெம்புக்காட்டின் சுருள்களுக்குள்
நாகத்தின் சீற்றமாக இருக்கிறேன்

மேகப்படைகள்
மழையை விரித்துக்கொண்டும்
சுருட்டிக்கொண்டும் இருந்தவேளை
மின்வெட்டாக….

சாம்பல் அந்திகளில் கரைந்தபடி
குறுக்கு மறுக்காக பறக்கும்
ஒற்றைக் காகத்தின் பரிதவிப்பாக
இரு மலை உச்சிகளின் நடுவே
விழும் பெருநீர்ப்பரப்பின் ஜொலி ஜொலிப்பு
குறைவான அமிர்தத்தின் குடுவை
கணத்தில் காணும் விபத்து

மரணத்தைக்கொண்டு நினைவூட்டும் அச்சம்

மிளகுக்கொடியின் அருகே பிறந்த
மலைப் பூனையின் வாசம்

பொங்கிவரும் நுரைத்துளிகளை 
காய்ந்துறையச் செய்யும்
நினைவுகளின் வறண்ட பள்ளங்களில்
தேங்கிய கானல்

மலையைச் சுற்றிப்போகும் குளம்
ஆழ் தொலைவில் 
பேய்த்தனமாய்ச் சிவந்து நீர்ச்சுடர்கள் மினுங்கும்
நீயொரு மாறுதலற்ற நிழல் 
நான் பகலை முந்திச்செல்லும் இரவு’


-------------------------------------------------------------

நன்றி :  பேரா. அ. ராமசாமி