Saturday, 3 December 2011

சுலைஹா


மேலும்.... உங்களுக்கு சொல்ல வேண்டும் என்றால்
அர்த்தங்களுக்கு வெளியே வளர்பவள் நான்

கல்லும் கல்லும் மோதிவரும்
நெருப்புப் பொறிகளால் உருவானவள்

இங்கிருந்தும் அங்கிருந்தும்
தாவுகின்ற மின்னொளி

கடந்தகால சாபங்களிலிருந்து மீண்டவளும்
எதிர்கால சவால்களை வென்றவளும் நானே

ஒட்டகங்களைப்போல்
மலைகளைக் கட்டி இழுத்துவரும் சூனியக்காரி

ஒளியை அணிந்திருப்பவள்
உப்புக் குவியலைப்போல் ஈரலிப்பானவள்

'இறுமாப்பு' என்னும் தாரகைகளாக
வீசியெறிந்திருக்கிறேன் என் பருவங்களை

கண்களிலிருந்து காதலை பொழியச் செய்பவள்

கனவுகள் காண ஏங்கும் கனவு நான்

என் உடல் செஞ்சாம்பல் குழம்பு

கத்திகளால்
கைகளையோ கனிகளையோ வெட்டிக்கொள்ளாதவள்

காதலால் கத்தியை உடைத்தவள்

நான் யூசுப்பைக் காதலிப்பவள்
சுலைஹா........


31 மே 2011


      _____________________________________________________________________
சுலைஹா : எகிப்து நாட்டின் அமைச்சர் ஒருவரின் மனைவி. யூசுப் எனப்படும் இறைத்தூதரை காதலித்தவர்.

Saturday, 19 November 2011

அனார்: பச்சை வான உடலும் கவிதை முகமும்


- கநாசு.தாஜ் (இந்தியா)

கவியிடமுள்ள நவீன மனம்தான், நவீன கவிதையை படைக்கும்.' நவகவிதையின் அடிப்படை குறித்து துல்லியமான அபிப்ராயம் கொண்டிருக்கும் இஸ்ஸத் ரீஹானா முஹம்மட் அஸீம் என்கிற 'அனார்' கிழக்கிலங்கை சாய்ந்தமருதுக்காரர். மதரீதியான பவித்திரங்கள் கூடிய மத்தியத்தர குடும்பம்! அவர்களது பகுதியில் இனக் கலவரம் சூடுபிடித்த காலகட்டத்தில், சமூகத்தில் நிலவிய அச்சம் காரணமாக உயர்நிலை பள்ளிப் படிப்பு மட்டும் என்கிற அளவில், படிப்பை முடித்துக் கொண்டு, வீட்டுக்குள் வளையவர வேண்டிய நிலை!

// வீடு தனிமைக்குள் கேட்காத/ கதறலாய் இருக்கிறது/ மூச்சுத் திணறுமளவு பூட்டிய அறையினுள்/ தனிமையின் புகைச்சல்// - தனிமையின் இருப்புக் குறித்த மனவேதனையை வேறொரு செய்தியினை கூறவந்த கவிதையொன்றில், கவிஞர் இப்படி குறிப்பிடும் சிரமத்தையொத்த சிரமத்தையும், மனசங்கடத்தையும் கலைய புதுக்கவிதை வாசிப்பெனத் தொடங்கி அதனோடு நேசமும் ஈடுபாடும் கொண்ட நாட்களில், தனக்குள்ளும் ஓர் கவிஞன் உயிர்ப்போடு இருப்பதை கண்டுணர்ந்து எழுத முனைகிறார். கவிதை எழுதத் தொடங்கும் யவரையும் போல யதார்த்த முனையிலிருந்தே தனது கவிதைகளை தொடங்கிய அவரின் இன்றைய கவிதைகள் வியக்கச் செய்யும் விசேசங்கள் கொண்டதாக இருக்கிறது!

// ஒரு காட்டாறு/ ஒரு பேரருவி/ ஓர் ஆழக் கடல்/ ஓர் அடை மழை/ நீர் நான்/ கரும் பாறை மலை/ பசும் வயல் வெளி/ ஒரு விதை/ ஒரு காடு/ நிலம் நான்/ உடல் காலம்/ உள்ளம் காற்று/ கண்கள் நெருப்பு/ நானே ஆகாயம்/ நானே அண்டம்/ எனக்கென்ன எல்லைகள்/ நான் இயற்கை/ நான் பெண். //

வலைப்பதிவொன்றில் 'நான் பெண்' என்கிற இந்தக் கவிதை, எதேச்சையாகக் கிட்ட, வாசித்த நாழியில் நிமிர்ந்து உட்கார்ந்தேன்! பெண்ணியத்திற்கு குரல் கொடுக்கும் எந்தவோர் மனமும் அந்த நாழிகையில் என் நிலை கொள்ளாமல் முடியாது! வார்த்தைகளின் அடுக்காக அது சொல்லப்பட்டிருந்தாலும், கனக்கும் அதன் படிமச்செறிவுகளின் வீச்சு கவனிக்கத் தக்கது. பெண் குறித்த கீர்த்திகளும் தீர்க்கங்களும் தைரியலட்சணத்தோடு சொல்லப்பட்டிருப்பது மேலும் குறிப்பிடத் தகுந்தது.

மென்மையின் அடையாளமாக பெண்களை கவிதைக்குள் உட்காரவைத்துப் பார்த்த காலம் மலையேறிவிட்டதென்றாலும், 'நான் பெண்' என்கிற இந்தக் கவிதை, பெண்கள் உணரும் சுயத்தின் எழுச்சியாக, உலகம் தழுவிய அவர்களது உள்ளத்துப் பிரகடனமாக, எவராலும் தவிர்க்க இயலாத நிஜத்தின் பதிவாக வீறுகொண்டிருப்பது நம்ப முடியாத நிஜம்! பெண்ணியம் பேசும் நம் பெண்கவிஞர்களின் கவிதைகளூடே இது புதிய தரிசனம்!

இந்தக் கவிதையை வாசித்ததற்கு பிறகான நாட்களில், 'யார் இந்த அனார்?' எனத் தேடி அவரது ஆக்கங்களைப் பெற்றேன். 'எனக்குக் கவிதை முகம்'(Sep-2007) / 'உடல் பச்சை வானம்'(Dec-2009) ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகளில் அவர் சுழுவாய் சிக்க வாசித்தேன்! மொழியால், சிந்தையால், கலைநுட்ப முயற்சிகளால் மெருகூட்டப்பட்ட அவரது வார்த்தைகள் அந்த இரண்டு தொகுதிகளிலும் பச்சைப் பசேலென செழுமை கூடித் தெரிய, நான் கொண்ட இன்னுமான தரிசனங்களை சொல்லி மாளாது!

அவரது கவிதைகள், ஏனைய கவிதைகளின் வாசிப்பைப் போலவே முதல் வாசிப்பு அத்தனைக்கு எளிமையானதாக இல்லை. சரியாக குறிப்பிடணும் என்றால், கூடுதலாகவே சிரமம் தந்தது. கடல் தாண்டிய தமிழரான கவிஞர் அனாரின் கவிதைகளை உள்வாங்கிக் கொள்ள முன்தெளிவுகள் நிறைய வேண்டியிருந்தது. தவிர, நவகவிதைகளுக்கே உரிய திமிரான, திடமான முறுக்குகள் அத்தனையையும் வாசிப்பில் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கவிதையின் படிமங்களை உள்வாங்கிக்கொள்ள சொல்லொன்னா நேரமும் பிடித்தது! அடுத்தடுத்த தீர்க்கமான வாசிப்பில், வரிக்குவரி மின்னிய வார்த்தைகளின் ஜாலங்களில் மனம் தத்தித்தத்தி தாவியது.

மறந்தும் நீங்கள், உடலை வானமாகவோ, வானத்தை பச்சையாகவோ கற்பனை செய்திருக்க முடியாது! ஆனால் பாருங்கள் கவிஞர் அனார், உடலை 'பச்சை வானம்என்றிருக்கிறார்! யோசிக்கிற போது, உயிர்கொண்ட ஜீவராசிகளின் பருவம் தகிக்கும் உடல்கள் பச்சைவானம்தான்! அந்த இரண்டு தொகுதிகளில் உள்ள பெரும்பாலான கவிதைகள் 'பச்சை வான உடலை' மெய்ப்பிப்பதாகவே இருக்கிறது! உடல் கூற்றுப்படிக்கும், இயற்கைக்கு இசையவும் பருவம் படரவிடும் கிளர்ச்சிகளை, அது தரும் அனுபவ நெகிழ்ச்சிகளை கிஞ்சித்தும் மறைக்காமல் பதிவு கண்டிருக்கும் கவிஞரது துணிவு பாராட்டுக்குரியது!

இரவு/ பகல்/ குளிர்/ மழை/ கடல்/ ஒளி/ நிழல்/ கனவு/ மண் புழு/ வண்ணத்துப் பூச்சி/ தனிமை/ தகிப்பு/ தவிப்பு/ ஏக்கம்/ புலம்பல்/ பசலை மற்றும் சுயம் கொள்ளும் நம்பிக்கை, அவநம்பிக்கை என்பதான பற்பல குறியீடுகளின் வழியாக, படிமங்களின் ஊடாக அவர் நிகழ்த்தியிருக்கும் நுட்பக் கவிதைகளின் பயணம், வாசகனை அவனது நிலையிலிருந்து இன்னொரு தளத்திற்கு இட்டு செல்லக்கூடியதாக இருக்கிறது. அங்கே அவன் கண்டுணரும், தனது வசந்தகால நெகிழ்ச்சிகளின் வழியே, கவிஞரின் அனுபவப் பதிவை மறுக்க முடியாத சத்தியமென அறிவான்!

பரந்துபட்ட அளவில் காதலையும் காமத்தையும் கவிஞர் தன் கவிதைகளில் கையாண்டிருக்கிறார் என்றாலும், அவற்றை நேர்கோட்டில் அடிபிசகாது, எல்லை தாண்டாது  நிகழ்த்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத் தகுந்தது. காதலித்து கைப்பிடித்தவனையே தன் கவிதைகளின் நாயகனாக உருவகப்படுத்தி, ரசம்சொட்டச் சொட்ட படைப்பு கண்டிருக்கும் நேர்த்தி கவனம் கொள்ளத்தக்கது. காதலையும் காமத்தையும் சளிக்கச் சளிக்க சொன்ன எத்தனையோ கவிஞர்களின் 'எல்லை தாண்டிய' கவிதைகள், நம் முகச்சுழிப்பில் விழுந்து மறைந்ததை இங்கே நாம் நினைவுகொள்ள கூடுமெனில், அனார் சாதித்திருக்கும் சுத்தத் தெளிவின் விசேசம் புரியும்! 

*
'சுயபலம் பொருந்திய தேவதைகள் விடுதலை பெற்ற பரவச வாழ்வொன்றை அதனோடு இணைந்ததாக கனவும் வேட்கையும் அழகும் அனாரின் கவிதை உலகத்தின் சிறப்பான வரைப்படங்களாக உள்ளன.' -எனக்குக் கவிதை முகம் தொகுப்பின் முன்னுரையில், அனாரின் கவிதை உலகம் குறித்து கவிஞர் சேரன் இப்படியானதோர் உட்சப்பட்ச மதிப்பீட்டை பதிந்திருக்கிறார்! என்னுடைய பார்வையிலும், அனாரின் கவிதைகள் அத்தகைய பாராட்டுதலுக்குரியதே!

// நீ வரைந்து காட்டு/ என் மறைந்துள்ள முகத்தை/ நீ வரைந்து காட்டு/ அடைய முடியாத அந்த இரவை/ இன்னும் வெளிப்படாத கனவை/ பூக்க விரும்புகின்ற கவிதையை/ மலையடிவாரத்தே/ பசுந் தாவரங்களின் மத்தியில்/ இட்டு வைத்திருக்கும் பொன் முட்டையை/ கண்டெடுப்பதற்கான திசையினைச் சொல்லிக்கொடு பறவைக்கு/ அருவியின் மடியில்/ அபூர்வ ராகங்களுடன் புதைந்து போயுள்ள (எவராலும் பூரணமாக இசைக்க முடியாமற்போன)/ இசைக் கருவியை மூழ்கி எடு/ பொக்கிசங்களே உடலாகி/ நர்த்தனம் பெருகும் சிற்பம் ஒளிந்துள்ள/ பெருங்குகை வாயிலில் ஏற்றப்படாத சுடரை/ ஒளிர விடு/ மேகங்களுக்கு மேலேறி சென்று/ நிலவின் கதவைத் திறந்து/ எடுத்துக் கொள்/ கொஞ்சமும் குறையாத என்னை.//

'பூக்க விரும்புகின்ற கவிதை' தலைப்பின் கீழ் உள்ள கவிதையைத்தான் மேலே வாசித்தீர்கள். மீண்டும் ஒருமுறை அந்தக் கவிதையையும், அதன் தலைப்பையும் நீங்கள் வாசிக்கக் கூடுமெனில் கவிதையின் நேரடியான சுகந்தத்தில் திளைப்பீர்கள்! வேட்கை கொள்கிற கவிதைவயமான பெண் உடல், இன்னும் வெளிப்படாத மிஞ்சிய கனவோடான பாலியல் ஆசைகளை ஆற்றுப்படுத்த தனதானவனிடம் வைக்கும் கோரிக்கைப் பாங்கையும், 'நீ வரைந்து காட்டு/ என் மறைந்துள்ள முகத்தை' என்று தொடங்கி, கவிதையின் மொத்த வரிகள் தரும் அழுத்தத்தை கண்டுணரும் நாழியில், வேர் பிடித்திருக்கும் நம் உணர்வுகளும் சிலிர்க்கும். தப்புதல் இயலாது. 

தலைவன் தலைவிக்கிடையேயான ஊடல், கூடல், களிப்பு, போன்ற பாலியல் ரசங்களை பேசிய சங்க காலத்துப் பாடல்களின் வரிகளுக்கு ஒப்பான, அல்லது அதனையும் விஞ்சும் வரிகளை, 'பிச்சி' கவிதை வரிகளில் காணுங்கள். தலைவனின் கூடல் குறித்த, வேட்கைகளின் தாபங்கள் குறித்த ஊடல்கள் அத்தனையும், உங்களை மீறி உங்களை மயக்கும்! அப்படியானதோர் மந்திரமொழியை பாரம்பரியத்திடமிருந்து கவிஞர் கற்றுத் தேர்ந்திருக்கிறாரோ என்கிற வியப்பும் ஒருசேர எழும்!

// கடல் திறக்கும் கள்ளச் சாவிகளென/ பத்து விரல்கள்/ நிலவு நனையும் உயரத்தில்/ தெறிக்கின்றது மா கடல்/ மரம் முழுக்க கனிகள் குலுங்கும்/ உச்சாணிக் கொம்பில்/ மயக்கி படமெடுத்தாடுகிறாய்/ பாரம்பரியம் கொண்டாடும் பாணனின் இசை/ புலன்களை ஸ்பரிசிக்கின்றது/ புற்றிலிருந்து வெளியாகின்றேன்/ காற்றின் அதிர்வுகளில் பளிச்சிடுகிற மயக்க இழைகள்/ விரிகின்றன ஒவ்வொன்றாய்/ குளிர்ந்து, இறுகப்பற்றி/ உதடுகள் தீட்டுகின்ற மாயத் திசையில்/ பனிப்பறவைகளின் குலாவுகை/ கனவின் கத்திகள் பாய்ந்த கவிதையை/ ருசிக்கின்றோம் மிச்சம் வைக்காமல்/ வானம் பூனைக் குட்டியாகி/ கடலை நக்குகின்றது.// காமம் கொள்ளும் உடம்பை வானமாகவும், வானத்தைப் பூனைக்குட்டியாகவும் உருவகப்படுத்தி, கடலளவான காமத்தை பூனைக்குட்டி நக்க முனைவதாக அவர் காட்டும் சித்திரம் அசாதாரணமானது.

காதல் கணவன்/ அவனோடான கூடல்/ அதன் உச்சம் என்பனவற்றை தீர பேசும், 'மின்னல்களைப் பரிசளிக்கும் மழை' கவிதையில் இருந்து சில வரிகள். // ஓயாத பரவசமாய்/ கோடை மழை/ பின் அடை மழை/ அளவீடுகளின்றித் திறந்துகிடக்கும் இடங்கள் எங்கிலும்/ பித்துப்பிடித்து பாட்டம் பாட்டமாய்/ மழை திட்டங்களுடன் வருகின்றது/ ஒவ்வொரு சொல்லாகப் பெய்கின்றது/ தாளமுடியாத ஓர் கணத்தில் எனக்கு/ மின்னல்களைப் பரிசளிக்கின்றது/ அது அதன் மீதே காதல்கொண்டிருக்கிறது/ எப்போதும் மழையின் வாடை உறைந்திருக்கும்/ ராஜவனமென/ பசுமையின் உச்சமாகி நான் நிற்கிறேன்/ வேர்களின் கீழ் வெள்ளம்/ இலைகளின் மேல் ஈரம்/ கனவுபோல பெய்கின்ற உன் மழை //

காதல் கொண்ட பெண், தன் காதலனை நினைத்து விசனம் கொள்வது ஒருவகை காதல் பெருக்கு அல்லது நோய்! தான்கொண்ட அத்தகைய அனுபவ யதார்த்தத்தை அனார் பதிவு செய்திருக்கும் வீச்சும், அந்த யுக்தியும் கனவின் பெருக்கே என்றாலும், இத்தகைய கற்பனை இன்னொரு கவிஞனுக்கு அத்தனை சீக்கிரம் தகையாது. மலரை வண்ணத்துப் பூச்சி வட்டமிடுவதைத்தான் நீங்களும் நானும் கண்டிருக்கிறோம். இங்கே வண்ணத்துப் பூச்சியை மலர் வட்டமிடுவதை 'வண்ணத்துப்பூச்சியின் கனாக்காலக் கவிதை' யில்.ரசியுங்கள். // உன் தந்திரத்தின் மாயம் அளவற்றது/ உள்ளே பாடல்போல மிதக்கின்ற வண்ணத்துப்பூச்சி/ வெளியே பிடித்துவைக்க முடியாத கனா/ பைத்தியம் பிடித்திருக்கும் இந்நாட்களிலெல்லாம்/ வண்ணத்துப்பூச்சியை மொய்க்கின்ற மலராக/ பறந்து கொண்டே யிருக்கிறேன்.//

கவிஞர், இந்தத் தொகுப்பில் வாழ்வுசார்ந்த மனவழுத்தங்களை, அதன் துயரங்களை, இம்சிக்கும் வலிகளை பேசவே இல்லையா? என்றால், பேசியிருக்கிறார். சகமனிதர்களின் இரத்தம் சிதறுபட, காணுமிடமெல்லாம் அதன் சுவடுகள் அச்சம் தர, நிகழ்ந்தேறிய அவர்களின் உள் நாட்டுப் போரைப் பேசும் 'மேலும் சில இரத்தக் குறிப்புகள்'/ இயற்கையோடு இழைந்த அழகிய கற்பனை வளங்களோடு கவிஞர் பதிந்திருக்கும் 'எட்ட முடியாத அண்மை'/ கலாச்சாரத்தை முன் வைத்து பெண் இரண்டாம் பட்ச பிரஜையாக கணக்கிடும் சமுதாயத்தின் மீதான கோபமாக 'பெண்பலி'/ வாழ்வில் பலவிதான நிலைகளை எதிர் கொள்ளும் பெண்களிடமிருந்து தன் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தி, சமூக மாற்றத்தை காணப் பிறந்தவளாக தன்னை பிரகடனம் படுத்தும் 'அரசி' போன்ற கவிதைகள் இத்தொகுப்பில் இருந்தாலும், பருவம், காதல், உடல், வேட்கை, ஊடல், கூடல் பற்றியதான கவிதைகளின் தொகுப்பே 'எனக்குக் கவிதை முகம்'! 

*
'எனக்குக் கவிதை முகம்' தொகுப்பில் உள்ள கவிதைகளின் வெளிப்பாட்டுக் கிளர்ச்சிகளை கடந்து வந்தக் கவிதைகளின் தொகுப்பாக 'உடல் பச்சை வானம்' ஏற்றம் பெற சிறப்பு கொள்கிறது. தவிர, அவரின் கவிச்செறிவின் முதிர்ச்சியும் கொண்டதான இத்தொகுப்பின் கவிதைகளை கவிஞரின் அடுத்தகட்டக் கவிதைகளாக கணிக்க முடியும்.
 
கருவுற்றிருந்தக் கால நினைவு/ தனது குட்டி பையன்/ மூத்த சகோதரி/ காதலுக்கு அருகான்மையிலிருந்த பரபுருஷன்/ யுத்தக் கேடுகள்/ பயணப்பட்ட மலைவாசஸ்தலங்கள்/ ரசித்த பௌத்த பீடங்கள்/ ரசம் சொட்டும் சிற்பங்களின் அழகென, புதியதள செய்திகள் பல கொண்ட கவிதைகள் இத்தொகுப்பில் தாராளப்பட்டிருக்கிறது!

இந்தத் தொகுப்பின், விசேசமான கவிதைத் தேர்வாக நான் காண்பது, வாழ்வை முன்வைத்து, தலைவி தலைவனிடம் கொள்ளும் கோபதாபக் கவிதைகளையே! அந்தக் கோபத்தாபங்கள், நயம் மிளிர கவிதைக்குள் பதிவாகி இருப்பது கவனிக்கத் தக்கதாகவே இருக்கிறது.

// நீ இவ்வளவு பனிக் காலத்தில்
என்னைத் தேடி வராதே
எல்லாமே குளிரில் ஒடுங்கி
இரத்த ஓட்டமற்றுவிட்ட பிறகு
நெருப்புப் பொறிகளை உருவாக்கும்விதம்
முத்தங்களைச் சொரிய முடியாது //  
(உறைபனிக்காலம்)

*
// இசை பாறையாகிவிட்டது
காலம் நிசப்தமாகிவிட்டது
அன்பின் உணர்வுகளில்
தூறல் சொட்டும் குரலில்
மறைந்திருக்கிறது கொலைவாள்
நமக்கிடையே
தூக்குமேடைக்குமேல் தொங்கும் கயிறு
அல்லது
ஆலகால விசம் //
(நிசப்தத்தில் குளிரும் வார்த்தை)

*
// கண்ணில் படாத ஒரு சாகசநிழலில்
ஸ்தம்பித்துப் போயிருந்த கடலில்
சிறு துண்டை வெட்டி உன் வாயுள் வைக்கிறேன்
நீ 'பூப்போல' என்கிறாய்
..............................
உப்புச் சுவையாய் இரு உடல்கள் மாறினோம்
அலைகளை எழுப்பி எழுப்பிக் கடல் ஆகினோம் .//
(வித்தைகள் நிகழ்த்தும் கடல்)

*
// கனத்த பனிமூட்டம்
பாதையை மறித்து நிற்கிறது
தொலைவில் அந்த உருவம்
வந்துக் கொண்டிருக்கிறதா
போய்க்கொண்டிருக்கிறதா
எனத் தெளிவாகத் தெரியவில்லை //
(அழைப்புகள் வராத செல்போன்)

*
// கொதிநிலை விதிக்கப்பட்டிருக்கும்
எரிமலைநெருப்பு உங்கள் முன்
மெழுகுவர்த்திகளில் ஏற்றப்பட்டும்
ஊதுபத்திகளில் புகையவிடப்பட்டும்
அவமானத்துக்குள்ளாவதன் சித்திரவதை நான் //
(வெளியேற்றம்)


மேலே தந்திருக்கும் அத்தனைக் கவிதை வரிகளும் 'உடல் பச்சை வானம்' தொகுப்பின் ஐந்து பெரிய கவிதைகளிலிருந்து நறுக்கப்பட்ட வரிகள்! வாழ்வினூடான கசப்பான நிகழ்வுகளை அதன் வலியோடு மனசஞ்சலங்களோடு இக்கவிதைகளில் தீர பதிவு கண்டிருக்கிறார். அதன் நிதர்சனத்தை, உங்கள் பார்வைக்கு விரிக்கும் பொருட்டே அந்தச் சில கவிதைகளிலிருந்து இந்தச் சில வரிகள்! .

தாம்பத்தியத்தில் கொண்ட சலிப்பு குறித்து 'உறைபனிக்காலம்'த்திலும்/ தலைவியின் மனம் பாறையாக இறுக, மரண முனைக்கு வாழ்வு நகர்வதாக 'நிசப்தத்தில் குளிரும் வார்த்தை'யிலும்/ மீண்டும் கிளைத்த காதலையும் கூடலையும் முன் வைத்து, தலைவியும் தலைவனும் கூடி மகிழ்வதை 'வித்தைகள் நிகழ்த்தும் கடல்'லிலும் / கூடலுக்குப் பின் அவர்களிடையே துளிர்த்து வளர்ந்த மீண்டுமான அன்பு, தலைவிக்கு கேள்விக் குறியாவதை 'அழைப்புகள் வராத செல்போன்'னிலும்/ பாழ்பட்டுப்போனதாக தன் வாழ்வின் நிலைக்குறித்து தலைவி கொள்ளும் விசத்தின் கொதிநிலை, 'வெளியேற்றம்' கவிதை வரிகளிலும் நீங்கள் காணமுடியும். இதனையொட்டிய பூரணத்திற்கு மேற்குறிப்பிட்ட அந்த ஐந்து கவிதைகளையும் நீங்கள் தேடி வாசித்தறிவது சிறப்பாக இருக்கும்.

'உடல் பச்சை வானம்' தொகுப்பில் 'நிருபரின் அறிக்கை' என்கிற அரசியல் சார்ந்த கவிதையொன்று உண்டு. அதன் கட்டுமானம் புதிய கோணம் கொண்டது. கவிஞரின் புனைவு திறனில் இதுவோர் மையில்கல்!  நிருபர் ஒருவர் தான்சார்ந்த பத்திரிகைக்கு தரும் அறிக்கையினை ஒத்த அந்தக் கவிதையின் செய்திகளும், அது வெளிப்படுத்தும் நயதெறிப்புகளும் அசாத்தியமானது. கீழே அந்தக் கவிதையில் இருந்து....

// இறந்தவனின் கண்கள் மூடியிருக்கின்றன/ அந்த கண்களின் இறுதி எதிரொலி/ எவருடைய ஆன்மாவிலும் மோதவில்லை/ மூங்கில் பற்றைக்குள் வீசப்பட்டவனை/ காற்றும் சூரியனும் அளைகின்றன... / இரண்டொரு இலைகள் விழுந்து அவனுக்கு/ இறுதி மரியாதை செய்கின்றது/ மர்ம மனிதன்/ கொலை புரிந்த களைப்பில்/ எங்கேனும் பீர் குடித்துக் கொண்டிருக்கலாம்/ அல்லது தலைவனுக்கு தகவல் சொல்ல/ sms செய்துகொண்டிருக்கலாம்/ முற்றாக பழுதுபட்ட 'இயந்திரம்' புகைவிடத் தொடங்கி/ தேசத்தின் முகம் இனங்காண முடியாதவாறு/ கரி அப்பிக்கிடக்கின்றது/ உயிரோடிருக்கின்றது குற்றம்/ உயிர் விட்டிருக்கின்றது நீதி/ நிலத்தில்... வாழ்க்கையில்.../ தன்னுடைய நம்பிக்கையில்... பிணம்/ உணர்வற்றுத்துக் கிடக்கிறது... //

நவீன தமிழ் இலக்கியத்தில் ஈடுப்பாடு காட்டும் ஈழ/ இலங்கை சார்ந்த விமர்சகர்களில் சிலர், அனாரின் கவிதைகளை சிறப்பாக வரவேற்று விமர்சனம் செய்திருக்கிறார்கள். ஆனாலும் பாருங்கள் கவிஞரின் அரசியல் சார்ந்த கவிதைகளுக்கே அவர்களது வரவேற்ப்பில் முன்னுரிமை அதிகம்! மேலும், கவிஞரின் அரசியல் கவிதைகளை தாங்கள் சார்ந்த கொள்கை நிலைப்பாட்டிற்கு நெருக்கமாகவும் வைத்துப் பார்க்கின்றார்கள்.

விமர்சனத்திற்கு நான் எடுத்துக் கொண்ட இரு கவிதைத் தொகுப்புகளிலும், கவிஞரின் அரசியல் சார்ந்தக் கவிதைகள் என்பது குறைவிலும் குறைவு! தவிர, எழுதப்பட்டிருக்கும் அந்த ரக கவிதைகளும் கூட, அமைப்பு சாரா நிலைப்பாட்டைக் கொண்ட கவிதைகளாகவே காண்கிறேன். ரத்தம்சிந்த அழிபடும் சக மானிதர்களின் உயிர்களுக்காக மனிதநேயம் கொண்ட இன்னொரு உயிர், கவிதையின் வழியே சஞ்சலம் கொள்கிறது. அவ்வளவுதான்! இங்கே ஈழ/ இலங்கை விமர்சகர்கள் பெரும்பாலும், கவிஞரது மதம் சார்ந்த பின்புலத்தையும், அவரது கிழக்கு இலங்கை சார்ந்த பின் புலத்தையும் கருத்தில் கொண்டு அவரது அரசியல் கவிதைகளை மதிப்பீடு செய்திருக்கின்றார்கள்! அப்படியாக மதிப்பீடு செய்வதென்பதற்கும், கவிதையை கவிதையாக விமர்சனம் செய்வதென்பற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.

'எனக்குக் கவிதை முகம்'/ 'உடல் பச்சை வானம்' இவ்விரு தொகுப்புகளில் உள்ள கவிதைகளில் அவர் உபயோகிக்கும் குறியீட்டுச் சொற்கள், படிமங்கள், தேர்ந்த சில வார்த்தைகள், மற்றும் சில காட்சிகளும் கூட திரும்பத் திரும்ப வருவதாக இருக்கிறது. இருட்டு, இரவு என்கிற வார்த்தைப் பிரயோகம், படிமங்களாக நெடுகிலும் உபயோகப் படுத்தப்பட்டிருக்கிறது. 'இரவை தின்னக் கொடுக்கும்' குறியீட்டின் ஆதிக்கமும், கவிஞர் தன்னை கவிதையாக உருவகப்படுத்தி உபயோகிக்கும் 'கவிதை' என்கிற வார்த்தையின் ஆளுமையும் அநியாயத்திற்கு அதிகம்!

கனவு யுக்திகள் மூலம் கதை எழுதுவதையோ, கவிதைகள் படைப்பதையோ தேர்ந்த இலக்கியவாதிகள் ஏற்பதில்லை. ஆரம்பகாலப் படைப்பாளிகளின் கையடக்க யுக்தியாக மட்டுமே அதனைப் பார்க்கிறார்கள். தரையில் கால்ப்பதிய நடக்கும் நடைதான்... நடை. யதார்த்தமும் அதுதான். கவிஞர் யோசிக்க வேண்டும். தவிர, இந்த இரண்டு கவிதைத் தொகுப்பிலும் ஆணாதிக்கத்தை சாடும் தேவையான சமூக நோக்குக் கொண்ட பெண்ணின் குரல் பெரிதாகப் பதிவாகவில்லை. சமூகத்தில் நிலவும் ஆணாதிக்க அராஜகம் கவிஞரின் அனுபவத்தில் இடரவில்லையோ என்னவோ!

அனாரின் ஆரம்பகாலக் கவிதைகளில், வானம், பூமி, கடல், காற்று, மழை, மின்னல், முன் இரவு, பின் இரவு, முன்பனி, பின்பனி, நட்சத்திரங்கள், இறுகிய பாறை என்பதான மஹா விரிவு கொண்ட குறியீடுகள் சர்வசாதாரணமாகப் புழங்கப்பட்டிருக்கிறது. புஞ்சையான மனிதச் செயல்பாடுகளுக்கு இத்தகைய பிரமாண்டங்களை குறியீடாக்குவது பற்றி கவிஞர் யோசிக்கணும். இப்படியான பிரமாண்ட வார்த்தைகளின் மொத்த குத்தகைக்காரரான சினிமாக் கவிஞர் வைரமுத்து வேறு கோபித்துக் கொள்வார்!  

நல்ல கவிதைகள் என்பது இன்னும் எழுதப்படாத கவிதைகளே! என்பதாக ஒரு சொல் வழக்கு உண்டு. அத்தகைய கவிதைகளை எழுதும் எல்லா நுட்பமும், திறனும் கவிஞர் அனாருக்கு இருக்கிறது. நம்புகிறேன். அவரது முயற்சிகளுக்கும் பழுதில்லை. சாதிப்பார். வாழ்த்துக்கள்.



Monday, 17 October 2011

அம்பாரை மாவட்ட சமகாலக் கவிதைகளில் பெண் 

அனாரின் “எனக்குக் கவிதை முகம்" - ஓர் வாசிப்பு 


- எம். எம். சௌதியா 

(தமிழ் விஷேடதுறை, தென்கிழக்குப் பல்கலைக்கழகம், ஒலுவில்) 

---------------------------------------------------------------------------------------------------------

பெண் சமூகத்தின் உளத்துடிப்பு, சமூக அசைவுக்குகம் அவளுக்குமான தொடர்பு ஆழமானது. இருந்த போதிலும் பெண்ணிலை வாதம் ஏன் தோன்றியது, அது நாளுக்கு நாள் தீவிரமடைந்து செல்ல என்ன காரணம் என்ற வினாக்கள் ஒட்டுமொத்த சமூதாயத்தின் முன்னும் தொடர்ந்தும் எழுகின்ற வினாக்கள் இன்று தீவிரமடைந்து செல்லும் இப்பிரச்சினைக்கு பல வழிகளிலும் தீர்வு தேடிக் கொண்டிருக்கிறது, சமூகம். அவ்வழிகளுள் பெறுமதி மிக்க ஒரு வழிமுறையாகவே எழுத்துத் துறை குறிப்பாக கவிதைத் துறை காணப்படுகின்றது. 


பெண்ணை மையப்படுத்திய பல கவிதைத் தொகுதிகள் இக்காலத்தே வெளிவருகின்றன. அந்த அடிப்படையில் அம்பாரை மாவட்டத்தைப்பற்றிய தனியான அலசலில் குறிப்பிடத்தக்க ஒரு கவிஞராக அனார் காணப்படுகிறார். இவரும் ஒரு பெண் என்பது இங்கு சிறப்பான கவனத்திற்குரியதாக அமைகிறது. அனார் எனும் புனைப் பெயர் கொண்ட இவரது இயற்பெயர் இஸ்ஸத் ரீஹானா முஹம்மட் அஸீம். கிழக்கிலங்கையில் சாய்ந்தமருதில் பிறந்தவர். “எனக்குக் கவிதை முகம்"  இவரது இரண்டாவது தொகுதி. 


அம்பாரை மாவட்ட சமகாலக் கவிதைகள், குறிப்பிடக் கூடியளவு பெண் பற்றிப் பேசுகின்றன என்று கருத முடியும். இவற்றுள்ளே ஒரு வித்தியாசமான பார்வையாக அனாரின் கவிதைகள் அமைந்துள்ளன. இவ்வகை வித்தியாசமான உணர்வு நிலைப்பட்ட பல கவிதைகளை இத்தொகுப்பினுள்ளே காணக்கிடக்கிறது. இவர் ஒரு பெண் என்ற ரீதியில் பெண்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் பற்றியும், அவர்களுக்கெதிரான வன்முறைகள் பற்றியும் பேசும் போது இவரது பாடு பொருளும், மொழிக் கையாளுகையும், கவிதை ஏற்படுத்துகின்ற உணர்வு நிலையும், கோர்க்கப்பட்டுள்ள சொற்களும் கூர்மையான அர்த்தத்துடனும், புதுமையான சிந்தனைத் தொனியுடனும் ஓங்கி நிற்பதை இவரது கவிதைகளிற் காண முடிகிறது. 


இத்தொகுப்புள்ளே இடம் பெற்றுள்ள “அரசி" என்ற கவிதையை வாசிக்கும் போது எம்முள்ளே இத்தொனி உயர்ந்து ஒலிப்பதை எம்மால் உணர முடியும். 


“உன் கனவுகளில் 

நீ காண விரும்புகின்றபடியே 

நான் அரசி 

...................... 

அடிபணிய அல்ல 

கட்டளையிடப் பிறந்தவள் 

ஆணையிடுகிறேன் சூரியனுக்கு” 


என்று சூரியனுக்கு கட்டளையிட்டு மூதாட்டிகளின் பாரித்த பெருமூச்சுக்களை வருடி விடுமாறு பறவைகளை பணிக்கும் இப்பெண்ணரசி பெண்களுக்கெதிரான கொடுமைகளுக்கு முடிவு கட்ட தன் வாளை கூர் தீட்டுகிறாள். அப்போதுதான் சுயபலம் பொருந்திய தேவதைகளாக பெண்கள் மாறி பேரிகைகளாய் குலவையிட்டு விடுதலை பெறுகிறார்கள். இனி, 


“நான் 

நான் விரும்புகின்றபடியான பெண் 

நான் எனக்குள் வசிக்கும் அரசி"


என ஆசிரியர் பெண்ணின் சுதந்திரத்தை பெண்ணின் கையிலேயே ஒப்படைத்துவிடுகிறார். 


பொதுவாக எல்லாக் கவிஞர்களினதும் உணர்ச்சி, கற்பனைகளிலிருந்தும் வித்தியாசப்பட்டு நிற்கிறது. “பெண்பலி" என்ற கவிதை கவிஞர்கள் சந்தோசம் இழையோட உணர்ச்சி பூர்வமாக வர்ணிக்கும் ஆண், பெண் உறவுத் தருணத்தில் ஒரு பெண் பலிபீடம் ஏற்றப்படுகிறாள் என்பதாக அனாரின் நோக்கு அமைகிறது. இத்தருணம், ஒவ்வொரு பெண்ணும் ஆசைகளுடன் சேமிக்கும் கனவு என்றுகூட சொல்லலாம். ஆனாலும் சில பெண்களுக்கு அத்தருணம் பலிபீடமாக அமைகின்ற சூழலும் இச்சமூதாயத்தே இல்லாமலில்லை. இதனை மிக நுணுக்கமான முறையில் உரைக்கிறது இக்கவிதை. 


“அது போர்க்களம் 

................................ 

அது பலிபீடம் 

அது பெண்ணுடல் 

............................... 

என் முன்தான் நிகழ்கிறது 

என் மீதான கொலை"


உள்ளக் குமுறல், உளத்துடிப்பு இருபாலாருக்கும் ஒரே விதமானதுதான் என்றாலும் பெண்ணுடையது என்பதால் மரியாதை இருப்பதில்லை என்ற இக்கவிதைக் குரல் சமூகத்தில் காணப்படும் பல பெண்களின் முறைப்பாட்டுக் குரலே. 


இத்தொகுப்பில் இடம்பிடித்துள்ள “நான் பெண்" என்ற கவிதை பெண்ணின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி எடுத்துரைப்பதாக அமைந்துள்ளதை உணர முடிகிறது. ஒரு பெண்ணானவள் உலகத்தின் மனித உயிர்களை தன் மடியேந்திய பின் தான் இந்தப்பூமி ஏந்த வைக்கிறாள். எல்லா மனிதர்களுக்கும் மூலமான பெண்ணின் மகத்துவத்தை பறைசாற்றுவதாக இக்கவிதை அர்த்தமிக்க சொற்கள் கோர்க்கப்பட்டு பின்னப்பட்டுள்ளமை சிறப்பு. 


“ஒரு காட்டாறு 

ஒரு பேரருவி 

ஓர் ஆழக்கடல் 

ஓர் அடை மழை 

நீர் நான்


உடல் காலம், உள்ளம் காற்று, கண்கள் நெருப்பு, நானே ஆகாயம், நானே அண்டம் ஆகையால் எனக்கென்ன எல்லைகள், 


நான் இயற்கை 

நான் பெண்"


என நிமிர்ந்து நிற்கிறாள். பாரதியின் புதுமைப் பெண்ணை ஞாபகப்படுத்திவிடுகிறது இக்கவிதைத்தொனி. வாசிக்கும் ஒவ்வொருவர் உணர்விலும் பெண்ணின் சிறப்பை கொட்டிவிடுவதாக அமையும் இக்கவிதையின் உணர்வுநிலை ஒவ்வொரு பெண்ணுக்கும் நிமிர்வைத் தருவதாக அமைகிறது. 


பெண்ணின் கனவுகள் புறக்கணிக்கப்படும் போதுதான் அவள் தாக்கப்படுகிறாள். கனவுகள் அவளது உரிமை. ஆனால் இன்றைய சமூகச் சூழலில் பல பெண்கள் தங்கள் கனவுகளை அடுப்புச் சாம்பலுக்குள் புதைத்து வாழ்கிறார்கள். இவ்வாறான பெண்களின் உள்ளக் குமுறல்களை இலகுவான மொழிநடையில் தீட்டிக் காட்டுவதாக “ அறைக்கு வெளியே அலையும் உறக்கம்" என்ற கவிதையை உணர முடிகிறது. இரவு, துணிகளை மடித்து அலுமாரியில் அடுக்கி வைத்தாயிற்று, அறை விளக்குகளை குறைத்தாயிற்று, மறக்காமல் இரு தலையணைகளையும் அருகருகே இணைத்தாயிற்று. இனி, 


“விசமேறிய இரவின் பானம் 

என் தாகத்தின் முன் உள்ளது. 

ருசிகள் ஊறிய கனவுகளுடன் 

என் உறக்கம் 

அறைக்கு வெளியே அலைகிறது"


இவ்வாறுதான் இன்று பல பெண்கள் தங்கள் திறமைகளை மறைத்தும் மறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 


சமூகத்தின் சாபக்கேடு சீதனம். அதனது எச்சம் முதிர் கன்னிகள். இச்சமூகப் பிரச்சினை பற்றி உள்ளடங்கிய ரீதியில் என்றாலும் தெளிவாகப் பேசுகிறது “பூக்க விரும்புகின்ற கவிதை" ஒரு கன்னியே “என்னை எடுத்துக்கொள்" என வேண்டுவதாக அமையும் இக்கவிதை முதிர் கன்னிகளின் உச்சக்கட்ட மனக் குமுறல்களின் பிரதிபலிப்பாக அமைகிறது. 


“மேகங்களுக்கு மேலேறிச் சென்று 

நிலவின் கதவைத் திறந்து 

எடுத்துக் கொள் 

கொஞ்சமும் குறையாமல் என்னை"


இவ்வாறு பரந்துபட்ட ரீதியில் அல்ல என்றாலும் முக்கியமான பல பெண்கள் சார் பிரச்சினைகளை பற்றிப் பேசுகின்ற அனைத்துக் கவிதைகளுக்குப் பின்னாலும் ஒரு தீவிர நிலையை உணர முடிகிறது. அனாரும் ஒரு பெண் என்ற ரீதியில் அவரால் உணர்வு ரீதியாக புரிந்து எழுத முடிந்திருக்கலாம். கற்பனை, உயர்ந்த குறிக்கோள், உண்மையான உணர்வுகள் போன்றவற்றை தன்னகத்தே கொண்டுள்ள படைப்பான இக்கவிதைத் தொகுதி அம்பாரை மாவட்ட சமகால வெளியீடுகளில் கவனத்திற்குரியது. அதே நேரம் இவ்வாசிப்பு நேரிய அம்சங்களையே கவனயீர்ப்புச் செய்திருக்கிறது. எதிர் நிலை கருத்துக்களுக்கும் நிறையவே இடமிருக்கிறது. 


( மரங்கொத்தி – தமிழ்ச் சங்கம், தெ.கி.ப. , ஒலுவில், இலங்கை )

---------------------------------------------------------------------------------------------------------

அனாரின் “எனக்குக் கவிதை முகமும்“ 

கட்டவிழ்க்கப்பட்ட ஆண்களின் முகமும் 


- திசேரா (இலங்கை) 

------------------------------------------------------------------------------------------------------

“என் உலகமே 

துயர்களைத் தாங்கிய பாலைவனம் 

வாழத் துடிக்கும் நானோ 

விடியலை விழுங்கிய மலட்டு இரவுபோல் 

மௌனமாய் மல்லுக்கட்டுகிறேன்”

( ஊமைக்காவியம் – ஓவியம் வரையாத தூரிகை) 

ஒவ்வொருவருக்கும் ஒரு முகம் மட்டும் இருப்பதாய்த்தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால் உள்ளுணர்வுகளும், நிறைவேறாத இலட்சியங்களும், இலக்குகளும், வெளிப்படுத்த நினைக்கும் மன ஆதங்கங்களும் ஒவ்வொருமுகமாய் பல முகங்களை தோற்றுவித்துக் கொண்டே இருக்கும். இதில் பல சூக்கும உலகில் சஞ்சரிப்பவை. 


மற்றவர் முகங்கள் (உணர்வு வெளிப்பாட்டுத்தளம்-முகம்) நோக்கப்படுதலை, அறிய முனைதலை பெரும்பாலு தவிர்த்துக் கொண்டே வருகிறோம். இதில் சில செளகர்யங்களும் இருக்கின்றன. மன உளைச்சல்களும், தாக்கங்களும் நம்மை பீடித்துவிடக்கூடும் என்ற எச்சரிக்கை உணர்வாகக்சகூட இருக்கலாம். 


உணர்வில் இருந்துவிரியும் கவிதை முகம் பல உளைச்சலை எண்ண வியாபகத்தை இன்னமும் கூடுதலாக ஏற்படுத்திக் கொண்டே இருக்கக் கூடிய பல் படிமங்களைக் கொண்டிருக்கும். வெளிப்பாட்டு மொழி – சொல்லல் முறை பலதிசைப்பட்ட இயக்கத்தை தோற்றுவிக்கும். இத்தகைய மொழி நடையுடைய கவிதைகள் தனி இடத்தை ஆக்கிரமித்துக் கொள்வதுடன் வாசக மன உலகை வசீகரிப்புச் செய்யக் கூடியது. 


அனாரின் கவிதை முகம் தனிமையின் விரக்தியை வெளிக்காட்டி நின்றாலும், அத்தனிமை உணர்வு காலத்தைத் தாண்டிய ஒரு வெளியை உருவாக்கி இருக்கின்றது. இவை உண்டாக்கும் மன அதிர்வுகள் தொடர்ந்தும், ஒன்றிலிருந்து ஒன்றாக நீர்வட்ட அலைகளை உற்பத்தி செய்துகொண்டே செல்லக்கூடிய மொழியை தன்வசம் கொண்டிருப்பது ஈழத் தமிழ்க் கவிதைக்கான வீச்சம் ( சேரன் கூறுவதுபோல ). ஆண்மையச் சமூகம் பெண்களை விளிம்பு நிலைக்கு தள்ளி நிறுத்தி இருக்கின்றது. அவர்களின் இருப்பு-சூழல் உணர்வுகள் மறுவாசிப்புச் செய்யப்படாமல் அதனதன் நிலைகளில் கிடக்கின்றன. தமிழ்ச் சூழலுக்குள் அம்பையின் வருகையும் அதன் பின்னரான மாலதி மைத்ரி, குட்டிரேவதி, சல்மா, உமா மஹேஸ்வரி, லீனா மணிமேகலை, சுகிர்தராணி போன்றோரின் வருகைகள் தம் நிலைப்படுத்தலுக்கான போராட்ட களமாக கவிதை, புனைவுகள் மாறிவந்து கொண்டிருக்கும் நிலையில், ஈழம் அத்தகையதொரு பெண்ணியம் சார் போராட்ட இலக்கியங்களை முற்றாக எதிர்கொள்ளவில்லை. சில அமைப்புகள் மூலம் இவை செயல்வடிவத்துடன் முன்னெடுக்கப்பட்டாலும் பெண் வன்முறைக்கான பல பக்கங்கள் பார்க்கப்படாமலேயே கிடக்கின்றன. இப்பக்கங்கள் அருவருப்பான குரூரமானதாக இருப்பினும் அவர்களுக்கெதிரான ஒடுக்கு முறையும், ஒதுக்குமுறையும் உடைக்கப்பட வேண்டியது. 


சித்திரவதைகளும், சித்திரிப்புகளும், அழகுபடுத்தலும்-அவதானிப்பு, சிதைப்பு என உடல் பலதரப்பட்ட நிலைகளில் பிரதானப்படுத்தப்படுகின்றபோது பெண்ணுடலின் மீதான வன்முறையும், அவமானமும் பேசப்படுவதில் பயம் நிலவிக் கொண்டே இருக்கின்றது. 


அனாரின் “மேலும் சில இரத்தக் குறிப்புகள்” கவிதையில் மாத உதிரம் பற்றி பூடகமாக வரிகள் இடம்பெற்றதற்கே முஸ்லீம் ஆண் கவிஞர்கள் சிலர் வானத்துக்கும் பூமிக்குமாய் குதித்ததை தோழி ஒருத்தி சொன்னபோது அதிரவேண்டி இருந்தது. பிச்சி கவிதை பிரசுரமானபோது “சல்மா மாதிரியே அனாரும்” என்கிற ரீதியில் எத்தனை கதைகள் உலாவின -பெருவெளி. 


தீராநதி- ஏப்ரல் 2005 சுகிர்தராணியின் பேட்டி “நான் எழுதத் தொடங்கிய காலகட்டத்தில் ஏதோ எழுதுகிறது என்று விட்டு விட்டவர்கள், ஊக்கப்படுத்தியவர்கள் இப்போது தடைவிதிக்கிறார்கள். எழுதுவதை நிறுத்திவிடச் சொல்லி தொடர்ந்து என் வீட்டில் வற்புறுத்தி வருகிறார்கள்”. இது தமிழ்ச் சூழலுக்குள் நிகழும் அடக்குமுறை. “ஆண் எழுதினால் அவனுடைய அனுபவமா எனக்கேட்பதில்லை பெண் எழுதினால்... லீனா மணிமேகலையின் பேட்டி.... 


இது புனைவுகளை விளங்காத-உணராத தன்மை. பெண் என்பவளை தோலுரித்துப் பார்க்கும் கூரிய பார்வையை, படைப்பை-உணர்வை புரிய பயன்படுத்துவதில்லை. இவ் அபத்தம் அனாரின் கவிதை முகத்துக்கும் நேர்ந்துவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது. கட்டவிழ்த்தல்-பிரதியை மறுவாசிப்புக்கு உட்படுத்தல் என புறம்பானதொரு தளத்தில் அணுகவும் முடியும். 


தனிமையின் சிந்தனையும் இருப்பை புரியப் பண்ணவேண்டிய தேவையும் சிறந்த வெளிப்பாட்டுத்தியை கொணரும் இத்தனிமை தன் சூழல் மையத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டதினாலும் விளிம்பு நிலைப்படுத்தப்பட்டதினாலும் இருக்கலாம். வேதனை-விரக்தி-புரியப்படாத உணர்வு. காதல் வெடித்து சிதறுகையில் பெருகும் குழம்பு, புறக்கணிக்கப்பட்ட மலையில் வீரியத்தை-வியாபகத்தை புரியச் செய்யும். தான் மட்டும் வளர்வதாய், வளர வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த மரத்தை-மனிதனை வேதனைப்படுத்தும் தனக்குள்ளேயே அவமானம் கொள்ளச் செய்யும். 


தனிமைதான் பலம், தனிமைதான் சிந்தனை, தனிமைதான் குழப்பம், தனிமைதான் எல்லாமும். அறிவின் பலமும் நம்மை-பிறவற்றை உணரப் பண்ணுவதும் அதுதான். இத்தனிமையின் முகம் பல நினைவலைகளை எழுப்பும். அதிலும் பெண்ணுக்கான இத்தன்மை ஆழ்மன உணர்வு தொடர்பிலான பல கற்களை நீருள் எறியும் ஒவ்வொரு கல்லும் எண்ணற்ற அலைகளை உருவாக்கும் தனிமை உயிரிக்கும் வாசகபுலத்துக்கும். இதைத் தான் கண்களும் முகமும் சித்திரிக்கும். 


“எவ்விதமாகவும் 

நான் தோன்றியிருக்கக் கூடும் 

உனக்கெதிரில் 

எவ்வேளையும் பிசகாமல் 

நீ இருக்கிறாய் என்முன் 

எப்போதும் இல்லாத ஒன்றென”


எவ்விதமாகவும் நான் தோன்றியிருக்கக் கூடும். அது அவரவர் உளநிலையை பொறுத்தது. இதையிதை இப்படித்தான் இப்படி மட்டுந்தான் பார்க்க வேண்டுமென்ற வரையறை இல்லை. இப்பார்வைப் புலத்தை அறிவும் எண்ணமும் சிந்தனை அனுபவம் ஒன்றிணைந்து தீர்மானிக்கும். 


பிச்சியும், மேலும் சில இரத்தக் குறிப்புகளும் பெண்ணுடலைப் பேசுதல் குறித்தான அதே பின்னணியில் நோக்கினால் அதைவிடச் சாட வேண்டிய துரும்புகள் தொகுப்பினுள்ளேயே கிடைத்திருக்கும். விலகி நிற்பவன், நிழலின் அலறல், ஒளியில்லாத இடங்கள் தங்கள் உடற் பற்றி பெண்கள் பேசக்கூடாதா ? அல்லது முஸ்லீம் பெண்கள் பேசக்கூடாதா ? புனிதம் பெண்களால் மட்டுந்தான் காப்பாற்றப்பட வேண்டுமா ? 


ஒரு முகம் வெளிப்படுத்தும் விடயங்கள் ஆயிரம். அழகு-காதல்-ஏக்கம்-காமம்-சிந்தனை-கவலை-ரசனை. இம்முக அழகியலை உணர சமாந்தரத் தன்மையுடன் பயணிக்கக்கூடிய அவற்றுடன் ஊடாடக்கூடிய முற் சொன்ன அறிவு-எண்ண-அனுபவ, சிந்தனைக் கூறுகள் பொருந்தியமைய வேண்டும். 


கவிதை முகத்தின் தனிமை எங்கும் அழைத்துச் செல்லும் எதையும் காட்டும் அது தனி உலகாக இங்கும். அங்கு 


“பாட்டம் பாட்டமாய் 

பெண்கள் குலவையிடும் ஓசை 

பெரும் பேரிகைகளாய் கேட்கின்றன 

நான் சாம்ராஜ்ஜியத்திலிருந்தபடியே 

கைகளிரண்டையும் 

மேலுயர்த்திக் கூவுகிறேன் 

நான் 

நான் விரும்புகின்ற படியான பெண் 

நான் எனக்குள் வசிக்கும் அரசி”



( தினக்குரல் – 04 மே 2008 )

------------------------------------------------------------------------------------------------------

Wednesday, 28 September 2011

“ஓவியம் வரையாத தூரிகை“ தொகுப்பிலிருந்து சில கவிதைகள் :
-----------------------------------------------------------------------------------------------------

ஓவியம்


ஒவ்வொரு வர்ணமாய்ப் பிரித்து
தரையில் கரைத்து
சிந்தும் ஓவியம் இது
இதன் இதயத்திலரும்பிய
கவிதைகளும் பாவப்பட்டவைதான்
வெறும் ஓவியத்தின் வாழ்வில்
என்ன அர்த்தமிருக்கமுடியும்
அசையமுடியாக் கைளும்
நகரமுடியாக் கால்களும்
பேசமுடியா உதடுகளும்
சந்தேகமே இல்லை
வாயில்லா ஜீவன்
ஆடாதசையாது
சுவரில் மாட்டப்பட்டிருந்தது
பல்லிகள் எச்சில் படுத்துவதையும் எதிர்க்காமல்
வருகிறவர்களுக்கென்ன
வரைந்தவனை
வாழ்த்திவிட்டுப் போகிறார்கள்
சட்டங்களால்
சிலுவையறையப்பட்டிருக்கும்
ஓவியத்தைப் பார்த்து
உண்மை தெரியாதவர்கள்
உயிரோவியம் என்றார்கள்

-----------------------------------------------------------------------------------------------------

யாருக்கும் கேட்பதேயில்லை


நிறுத்தாத சாட்டையின் விசையும்
ஓவியங்களின் பாடலும்
கேட்டபடியே தான் இருக்கின்றன
கடும் பாறைகளில் மோதி
ஓய்ந்து விடுகின்றது
ஆக்கிரமிப்பிலிருந்து
தப்பிச் செல்ல விரையும் அலைகள்
வாழ்க்கையின் நிழல்வரை
துயிலற்ற இருப்பின் பிண நெடி
மீட்சி பெறமுடியாக் காரிருளில்
இருண்ட சேற்றுப் பாதையைச் சமீபிக்கின்ற
அதிசயம் மிகு ஒளிச்சாரல்
இரட்சிக்குமென்ற ஆவலில்தான்
நால் திசைகளும்
திரும்பி மண்டியிட்டிருக்கின்றன
இருந்த போதிலும்
யாருக்கும் கேட்பதேயில்லை
துளைகள் அடைபட்ட
புல்லாங் குழலினுள்
செத்துக் கொண்டிருக்கிற கீதம்

-----------------------------------------------------------------------------------------------------

தாமரைக் குளத்துக் காதலி


உன் உள்ளங்கைக்குள் பொத்தும் 
தாமரைப் பூவின் அளவுதான் என் இதயம்              
குளிரில் கொடுகும் சிறு அணிற்பிள்ளை ஜீவன்
'சூ' என விரசுப்பட்டு(ம்)
நெல்மணி களவாடி
உனக்கு ஊட்ட
வரப்பில் வட்டமடிக்கும் சிட்டுக்குருவி நேசகி
உப்பு மூட்டை பிள்ளையென
உன் முதுகுச் சவாரிக்கேங்கும்
கனவுகளுக்குச் சொந்தக்காரி
கொச்சிக்காய் கடித்த உதடுகளாக
வாழ்க்கை எரிகையிலும்
உனக்காக பொறுத்திருக்கும் தனிமை எனது
தோளுரசிப் போகவும்
இறுக்கமாய் விரல் கோர்த்து
கரைகளை மிதிக்கவுமாய் ஆசை
மின்மினி வெளிச்சத்தில் விருந்து வைக்க
தூங்காமல் விழித்திருக்கும் தூக்கணாங் குருவி
நான்  தான்
உன் தூண்டிலில் மாட்டிய மான் குட்டி
நான் தான் நீ மயங்கி மூழ்கிய
உன் தாமரைக் குளத்துக் காதலி

-----------------------------------------------------------------------------------------------------

மலட்டுச் சித்திரங்கள்

பூக்களேயில்லாத சூன்ய வெளியில்
ஏன்  அலைகிறது இந்த வண்ணத்துப் பூச்சி
நிலவினில் உலர்ந்த கீதங்கள் பாதியில் அறுந்தன
வஸந்தங்கள் அழிந்து போன சுவடுகளில்
துளிர் விடுகின்றது கண்ணீர்
தழும்புகளைச் செதுக்கிடும் உளிகளின் சப்தங்களும்
கருநீல இருளிற் தெறித்து விழுகின்றது
ஆகாயத் தெருவினில்
வெறும் மலட்டுச் சித்திரங்களை
எழுதி எழுதித் தேய்கிறது
ஒரு வெண்ணிறப் பறவை
இரக்கமற்ற திசைகளின் மேல் தவறாமல் இயற்றப்படுகின்ற
வைகறை ஒவ்வொன்றும் பூசி வருகிறது
கண்விரிந்த வாழ்வின்
தீய்ந்து கருகும் அதே ஏக்கங்களை

-----------------------------------------------------------------------------------------------------

 ஓவியச் சிலந்திக் கூடு


ஒவ்வொரு நூலையும் நிறங்களாக்கி
சிரத்தையுடன் கீறிய கூடு
வாழ்வின் துடிப்புகளால்
வசித்தலுக்கான பிரயத்தனங்களால்
கால நூல் இழுத்து
கனவுச் சிலந்தி
காற்றில் கட்டியது
அது இரையின் தேடலினால்
வரைந்த பசியின் வலை
கண்ணீர்த் துளியிலிருந்து
பெருத்து விரிந்திட்ட முகம்
மௌனத் துயரினால் பூசி மெழுகப்பட்ட உதடுகள்
தன் இதயக் கற்பத்தில் தூரிகையைச் சுமந்தபடி
அபாயத்தை நோக்கி நகர்கிறது ஓவியச் சிலந்தி
அழிவுக்காகவே இட்ட அழகுக் கோலமது
ஏளனங்களாய் வர்ணங்களுக்குள் கரைந்தோடும்
அதன் வாழ்வின் பிம்பம்
மௌனச் சுமைக்குள்
ஜீவித வெடிப்புகளுக்கிடையில்
கூடு பின்னிய ஓவியச் சிலந்தி நானும்

-----------------------------------------------------------------------------------------------------